குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 209

பாலை - தலைவன் கூற்று


பாலை - தலைவன் கூற்று

பாடல் பின்னணி:

பொருள் முற்றி மீளும் தலைவன் தோழிக்கு உரைப்பானாய்த் தலைவிக்கு தன் அன்பின் நிலைமையை உணர்த்தியது.

அறம் தலைப்பட்ட நெல்லியம் பசுங்காய்
மறப்புலிக் குருளை கோள் இடம் கறங்கும்
இறப்பு அருங்குன்றம் இறந்த யாமே,
குறுநடை, பல உள்ளலமே, நெறி முதல்
கடற்றில் கலித்த முடச் சினை வெட்சித் . . . . [05]

தளை அவிழ் பல் போது கமழும்
மை இரும் கூந்தல் மடந்தை நட்பே.
- பாலை பாடிய பெருங்கடுங்கோ.

பொருளுரை:

குறுகிய அடியிட்டு நடக்கும் பெண்ணே! பாதையில் செல்வோர்க்கு உதவும்படி மரத்திலிருந்து கீழே உதிரும் அழகிய பசுமையான நெல்லிக்கனிகளை உடைய இடமான, வலுவான புலிக்குட்டிகள் கொள்ளக்கூடிய பாதையில், கடத்தற்கரிய மலைகளைக் கடந்து சென்ற நான் வரும்பொழுது, பலவற்றைப் பற்றி எண்ணவில்லை. வளைந்த கிளைகளையுடைய வெட்சி செடிகளின் அரும்பு அவிழ்ந்து மலரும் பொழுது உள்ள நறுமணத்தை உடைய கருமையான அழகிய கூந்தலை உடைய இளம் பெண்ணின் நட்பைப் பற்றி மட்டுமே நினைத்தேன்.

குறிப்பு:

யாமே - ஏகாரம் அசை நிலை, உள்ளலமே - ஏகாரம் அசை நிலை, தன்மைப் பன்மை, நட்பே - பிரிநிலை ஏகாரம். பொ. வே. சோமசுந்தரனார் உரை - நெல்லிக்கனி நீர் வேட்கை தணிக்கும் இயல்புடையது. ஆதலின், பாலை நிலத்தே ஆறு செல்வோர் தம் நீர் வேட்கை தணிக்கும் நெல்லியினது காய் என்பான் ‘அறந்தலைப்பட்ட நெல்லியம் பசுங்காய்’ என்றான். குறுநடை (4) - உ. வே. சாமிநாதையர் உரை - குறுக அடியிட்டு நடக்கும் தோழி, பொ. வே. சோமசுந்தரனார் உரை - குறிய நடையினுடைய தோழி கேள், திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை - குறுநடையை உடைய தலைவி, இரா. இராகவையங்கார் உரை - குறுநடை கொண்டு வழி நெடிதாதல் கண்டவன் மீளும்போது நட்பே நினைந்து பெருநடைக் கொண்டு வழி குறிதாதல் தேர்ந்து கூறியவாறாம். கறங்கும் (2) - உ. வே. சாமிநாதையர் உரை - உதிர்ந்து உருளுகின்ற, கீழே உதிர்ந்து ஒலிக்கும் என்பதுமாம்.

சொற்பொருள்:

அறம் தலைப்பட்ட - கொடுப்பதில் சிறந்த, நெல்லி அம் பசுங்காய் - நெல்லி மரத்தினது அழகிய பசுமையான நெல்லிகாய், மறப்புலிக் குருளை - வலுவான புலிக்குட்டிகள், கோள் இடம்- பாய்ந்து கொள்ளும் இடம், கறங்கும் - உதிரும், உதிர்ந்து ஒலிக்கும், இறப்பு - கடத்தல், அருங்குன்றம் - கடினமான மலைகள், இறந்த யாமே - நான் கடக்கும் பொழுது, குறுநடை - குறுகிய அடியிட்டு நடக்கும் தோழியே, பல உள்ளலமே - பலவற்றை எண்ணவில்லை, நெறி முதல் - பாதையில், கடற்றில் - காட்டில், கலித்த - செம்மையாக வளரும், முடச் சினை வெட்சி - வளைந்த கிளைகளையுடைய வெட்சி செடிகள், தளை அவிழ் பல் போது - மலரும் பல அரும்புகள், கமழும் - நறுமணமுடைய, மை இரும் கூந்தல் - கருமையான கூந்தல், மடந்தை நட்பே - இளம் பெண்ணின் நட்பு