குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 098

முல்லை - தலைவி கூற்று


முல்லை - தலைவி கூற்று

பாடல் பின்னணி:

தலைவன் தான் கூறிச்சென்ற பருவத்தே வாராமையால் வருந்திய தலைவி, “யான் பசலையுற்ற நிலையையும் பருவம் வந்தமையையும் யாரேனும் தலைவரிடம் சென்று அறிவுறுத்தினால் நலமாகும்” என்று தோழிக்குக் கூறியது

இன்னள் ஆயினள் நன்னுதல் என்று அவர்த்
துன்னச் சென்று செப்புநர்ப் பெறினே
நன்று மன் வாழி தோழி நம் படப்பை
நீர் வார் பைம்புதல் கலித்த
மாரிப் பீரத்து அலர் சில கொண்டே . . . . [05]
- கோக்குள முற்றனார்.

பொருளுரை:

தோழி! நம் தோட்டத்தில் உள்ள நீர் வடிகின்ற பசுமையான புதர்களில் படர்ந்துள்ள மழைக் காலப் பீர்க்கையின் மலர்கள் சிலவற்றை எடுத்துக் கொண்டு தலைவரிடம் சென்று, “நல்ல நெற்றியையுடைய உன் தலைவி இந்த மலர்களைப் போல் பசலையை அடைந்தாள்” என்று கூறுபவரைப் பெற்றால் மிகவும் நன்றாக இருக்கும்.

குறிப்பு:

ஏகாரங்கள் - அசை நிலைகள். வாழி - அசைச் சொல், நன்னுதல் - அன்மொழித்தொகை. உ. வே. சாமிநாதையர் உரை - செப்புவார் உளரேல் அவர்கள் வாழ்வாராக என்பதும் பொருந்தும். நற்றிணை 197 - நுதலே பீர் இவர் மலரின் பசப்பு ஊர்ந்தன்றே, கலித்தொகை 53 - நுதல் பீர் அலர் அணி கொண்டு. மன் (3) - உ. வே. சாமிநாதையர் உரை - மிகுதியை உணர்த்தியது, பெற்றிலேன் எனலுமாம், பொ. வே. சோமசுந்தரனார் உரை - ஒழியிசைப் பொருட்டாய் அது கைகூடப் பெற்றிலேம் என்பது. மன் - கழிவே ஆக்கம் ஒழியிசைக் கிளவி என்று அம் மூன்று என்ப மன்னைச் சொல்லே (தொல்காப்பியம், இடையியல் 4).

சொற்பொருள்:

இன்னள் ஆயினள் - இவ்வாறு ஆகி விட்டாள், நன்னுதல் - நல்ல நுதல், அழகிய நெற்றியை உடையவள், என்று - என்று, அவர் துன்னச் சென்று - தலைவரிடம் நெருங்கிச் சென்று, செப்புநர்ப் பெறினே - சொல்லுவாரைப் பெற்றால், நன்று மன் - மிகவும் நல்லது (மன் - அசைச்சொல், மிகுதியை உணர்த்தியது), வாழி - அசைச் சொல், வாழ்வார்களாக, தோழி - தோழி, நம் படப்பை - நம் தோட்டம், நீர் வார் - நீர் வடிகின்ற, பைம் புதல் கலித்த - பசுமையான புதர்களில் தழைத்துப் படர்ந்த, மாரிப் பீரத்து - மழைக் கால பீர்க்கையின், அலர் சில கொண்டே - சில மலர்களை எடுத்துக் கொண்டு