குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 050

மருதம் - தலைவி கூற்று


மருதம் - தலைவி கூற்று

பாடல் பின்னணி:

தலைவன், ஊடியிருந்த தலைவியின் ஊடலை நீக்கத் தூது விட்டபொழுது, அத்தூதுவரிடம், ‘தலைவன் தகாத முறையில் ஒழுகினான்’ எனத் தலைவி கூறியது.

ஐயவி அன்ன சிறு வீ ஞாழல்,
செவ்வீ மருதின் செம்மலொடு தாஅய்த்
துறை அணிந்தன்று அவர் ஊரே, இறை இறந்து
இலங்கு வளை ஞெகிழச் சாஅய்ப்
புலம்பு அணிந்தன்று அவர் மணந்த தோளே . . . . [05]
- குன்றியனார்.

பொருளுரை:

வெள்ளைச் சிறு கடுகைப் போன்ற மலர்களையுடைய ஞாழல் மரத்தின் சிவந்த மலர்கள் மருத மரத்தின் பழைய மலர்களோடு சேர்ந்துப் பரந்து, அவருடைய நீர்த் துறையை அழகு செய்தன. என்னுடைய விளங்கும் வளையல்கள் மூட்டுவாய்ச் சந்தைக் கடந்து நெகிழும்படி, அவர் அணைத்த என்னுடைய தோள்கள் மெலிந்து, தனிமையைப் பெற்றுள்ளன.

குறிப்பு:

ஊரே - ஏகாரம் அசை நிலை, தோளே: ஏகாரம் அசை நிலை. உ. வே. சாமிநாதையர் உரை - தானும் அவனும் ஒன்றுபட்டு வாழும் கற்புக்காலத்தில் அவனூரே தனது ஊராகவும், ‘அவர் ஊரே’ என்று பிரித்துச் சொன்னது அவன்பால் உள்ள புலவி பற்றி. ‘துறை அணிந்தன்று அவர் ஊரே’ என்றது அவன் பரத்தையரோடு அத்துறைக்கண் விளையாடினான் என்பதை அறிந்தமையைக் குறிப்பிட்டது. இறைச்சி - திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை - அவர் ஊரிடத்துத் துறையை ஞாழல் மருதின் பூவொடு தாஅய் அழகு செய்தது; அவர் மணந்த தோள் மெலிந்து துயரைத் தங்கியது; இஃது ஒரு வியப்பு இருந்தவாறு என்னை! என்பதாம்.

சொற்பொருள்:

ஐயவி அன்ன சிறு வீ ஞாழல் - வெள்ளைச் சிறு கடுகைப் போன்ற மலர்களையுடைய ஞாழல் மரத்தின், செவ் வீ - சிவந்த மலர்கள், மருதின் - மருத மரத்தின், செம்மலொடு - பழம் பூக்களுடன், தாஅய் - பரந்து, துறை அணிந்தன்று - நீர்த் துறையை அழகு செய்தது, அவர் ஊரே - அவருடைய ஊரில், இறை இறந்து - மூட்டுவாய்ச் சந்தைக் கடந்து, இலங்கு வளை - விளங்கும் வளையல்கள், ஞெகிழ - நெகிழும்படி, சாஅய் - மெலிந்து, புலம்பு அணிந்தன்று - தனிமையை பெற்றது, அவர் மணந்த தோளே - அவர் அணைத்த என் தோள்