நெடுநல்வாடை
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
திருமுருகாற்றுப்படை
பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்
பொருநராற்றுப்படை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
சிறுபாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
பெரும்பாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
முல்லைப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
மதுரைக்காஞ்சி
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
குறிஞ்சிப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
பட்டினப்பாலை
பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
மலைபடுகடாம்
சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.
நெடுநல்வாடை

பாடியவர்:- மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரர்
பாடப்பட்டவன்:- தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்
திணை:- வாகை திணை
துறை:- கூதிர்ப்பாசறை
பாவகை:- அகவல்பா (ஆசிரியப்பா)
மொத்த அடிகள்:- 188
சங்கத்தமிழ்ச் செயலியைத் தரவிறக்கம் செய்ய கீழே சொடுக்கவும்
சங்கத்தமிழ்
நெடுநல்வாடை

பாடியவர்:- மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரர்
பாடப்பட்டவன்:- தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்
திணை:- வாகை திணை
துறை:- கூதிர்ப்பாசறை
பாவகை:- அகவல்பா (ஆசிரியப்பா)
மொத்த அடிகள்:- 188
பாண்டிய மன்னன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு மதுரையைச் சேர்ந்த நக்கீரர் என்னும் புலவரால் இயற்றப்பட்டதே நெடுநல்வாடை என்னும் நூல். இது சங்கத் தமிழ் இலக்கியத் தொகுப்பான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றாகும். நூலுள் எடுத்தாளப்பட்டுள்ள நிகழ்வுகள் வாடைக்காலத்தில் நிகழ்வதாலும், தலைவனைப் பிரிந்து வாடும் தலைவிக்கு இது நீண்ட (நெடு) வாடையாகவும், போர் வெற்றியைப் பெற்ற தலைவனுக்கு இது ஒரு நல்ல வாடையாகவும் அமைந்தது குறித்தே இது நீண்ட நல்ல வாடை என்னும் பொருளில் நெடுநல்வாடை எனப் பெயர் பெற்றதாகக் கூறுவர்.
இது ஒரு புறப்பொருள் நூலாகக் கொள்ளப்படினும் இதில் பெருமளவு அகப்பொருள் அம்சங்கள் பொதிந்துள்ளன. இந் நூல் அகப் பொருளையே பேசினாலும் புறப்பொருள் நூல்கள் வரிசையில் வைக்கப்பட்டுள்ளது. பொதுவாக தமிழ்ப் புலவர்(கள்) தம் அகப் பாடல்களில் தலைவன் தலைவி ஆகியோரின் அடையாளத்தை வெளிப்படுத்தாத கண்ணியத்தைக் காத்து வந்தனர். புறவாழ்வை அனைவருக்கும் கூறலாம். அகவாழ்வை அகிலமே அறியச்செய்வது அறிவுடைமை அன்று என்பது அவர்தம் அறிவுமுடிவாய் இருந்திருக்கிறது. ஆனால் நெடுநல்வாடையில் பாண்டியனின் அடையாளச் சின்னமாகிய வேம்பு நக்கீரரால் சுட்டப்பட்டுள்ளது. ஆகவே தான் தலைவன் பாண்டிய மன்னனாய்க் கொள்ளப்பட்டான். இந்நூலும் புறப் பொருள் நூலாயிற்று.
- 01. கோவலர் வாடையால் துன்புறுதல் (001-008)
- 02. கூதிர்க்காலத்தின் தன்மை (009-012)
- 03. ஊரினது செழிப்பு (013-028)
- 04. தெருக்களில் திரியும் மக்கள் (029-035)
- 05. கடவுளை வழிபடும் பெண்கள் (036-044)
- 06. கூதிர்க்காலம் நிலைபெற்றமையால் நேர்ந்த விளைவுகள் (045-072)
- 07. அரண்மனையை உருவாக்கிய முறை (073-078)
- 08. அரண்மனை வாயில் (079-088)
- 09. முற்றம் (089-092)
- 10. அரண்மனையின் ஓசைகள் (093-100)
- 11. அந்தப்புரத்தின் அமைப்பு (101-114)
- 12. தலைவியின் கட்டில் (115-123)
- 13. கட்டிலின் ஒப்பனை (124-135)
- 14. தலைவியின் நிலை (136-147)
- 15. சேடியரும் செவிலியரும் தலைவியைத் தேற்றுதல் (148-156)
- 16. தேறாத் தலைவி (157-168)
- 17. அரசனின் நிலை (169-188)
பொய்யா வானம் புதுப் பெயல் பொழிந்தென
ஆர்கலி முனைஇய கொடுங்கோல் கோவலர்,
ஏறுடை இன நிரை வேறு புலம் பரப்பிப்
புலம் பெயர் புலம்பொடு கலங்கிக் கோடல் . . . .[05]
நீடு இதழ்க் கண்ணி நீர் அலைக் கலாவ,
மெய்க்கொள் பெரும் பனி நலியப் பலருடன்
கைக்கொள் கொள்ளியர் கவுள் புடையூஉ நடுங்க . . . .[001 - 008]
பொய்யா வானம் புதுப்பெயல் பொழிந்தென
ஆர்கலி முனைஇய கொடுங்கோற் கோவலர்
ரேறுடை யினநிரை வேறுபுலம் பரப்பிப்
புலம்பெயர் புலம்பொடு கலங்கிக் கோட . . . .[05]
னீடிதழ்க் கண்ணி நீரலைக் கலாவ
மெய்க்கொள் பெரும்பனி நலியப் பலருடன்
கைக்கொள் கொள்ளியர் கவுள்புடையூஉ நடுங்க
பொருளுரை:
மழை பொழிந்துகொண்டிருக்கிறது. கோவலர் தம் ஆனிரைகளை வேறு நிலப்பரப்பில் மேயவிட்டுக்கொண்டு புலம்புகின்றனர். அவர்கள் தலையில் வெண்காந்தள் பூவைச் சூடிக்கொண்டுள்ளனர். பனியோடு சேர்ந்து வாடைக்காற்று வீசுகிறது. தம் கைகளைக் கன்னத்தில் வைத்துக்கொண்டு நடுங்கிக்கொண்டிருக்கின்றனர்.
பறவை படிவன வீழக் கறவை . . . .[10]
கன்று கோள் ஒழியக் கடிய வீசி,
குன்று குளிர்ப்பன்ன கூதிர்ப் பானாள் . . . .[009 - 012]
பறவை படிவன வீழக் கறவை . . . .[10]
கன்றுகோ ளொழியக் கடிய வீசிக்
குன்றுகுளிர்ப் பன்ன கூதிர்ப் பானாட்
பொருளுரை:
வாடைக்காற்றின் குளிர் தாக்குவதால் பசுக்கள் சரியாக மேயவில்லை. மரத்தில் இருக்கும் மந்திக் குரங்குகள் கூம்பிய நிலையில் அமர்ந்துகொண்டிருக்கின்றன. பறவைகள் பறக்காமல் நிலத்தையே விரும்புகின்றன. கன்றுக்குட்டிகள் கூடக் கறவை மாடுகளில் பால் குடிக்கவில்லை. இப்படிக் கடுமையான வாடைக்காற்று வீசுகிறது. இந்தக் காலத்தில் ஒருநாள் நள்ளிரவு.
பொன் போல் பீரமொடு புதல் புதல் மலரப்
பைங்கால் கொக்கின் மென்பறைத் தொழுதி . . . .[15]
இருங்களி பரந்த ஈர வெண்மணல்
செவ்வரி நாரையொடு எவ்வாயும் கவரக்
கயல் அறல் எதிரக் கடும் புனல் சாஅய்ப்
பெயல் உலந்து எழுந்த பொங்கல் வெண் மழை
அகல் இரு விசும்பில் துவலை கற்ப, . . . .[20]
அங்கண் அகல் வயல் ஆர் பெயல் கலித்த
வண் தோட்டு நெல்லின் வரு கதிர் வணங்க,
முழு முதல் கமுகின் மணி உறழ் எருத்தின்
கொழு மடல் அவிழ்ந்த குழூஉக்கொள் பெருங்குலை
நுண் நீர் தெவிள வீங்கிப் புடை திரண்டு . . . .[25]
தெண் நீர் பசுங்காய் சேறு கொள முற்ற,
நளி கொள் சிமைய விரவு மலர் வியன் காக்
குளிர் கொள் சினைய குரூஉத் துளி தூங்க . . . .[013 - 028]
பொன்போற் பீரமொடு புதற்புதன் மலரப்
பைங்காற் கொக்கின் மென்பறைத் தொழுதி . . . .[15]
யிருங்களி பரந்த வீர வெண்மணற்
செவ்வரி நாரையோ டெவ்வாயுங் கவரக்
கயலற லெதிரக் கடும்புனற் சாஅய்ப
பெயலுழந் தெழுந்த பொங்கல் வெண்மழை
யகலிரு விசும்பிற் றுவலை கற்ப . . . .[20]
வங்க ணகல்வய லார்பெயற் கலித்த
வண்டோட்டு நெல்லின் வருகதிர் வணங்க
முழுமுதற் கமுகின் மணியுற ழெருத்திற்
கொழுமட லவிழ்ந்த குழூஉக்கொள் பெருங்கலை
நுண்ணீர் தெவிள வீங்கிப் புடைதிரண்டு . . . .[25]
தெண்ணீர்ப் பசுங்காய் சேறுகொள முற்ற
நனிகொள் சிமைய விரவுமலர் வியன்காக்
குளிர்கொள் சினைய குரூஉத்துளி தூங்க
பொருளுரை:
முசுண்டைக் கொடியில் பொறிப்பொறியாக வெண்ணிறப் பூக்கள் பூத்துக் கிடக்கின்றன. அதனோடு புதர் வேலிலியில் பீர்க்கம் பூ பொன் நிறத்தில் பூத்துக் கிடக்கிறது. ஈர மணலில் இருக்கும் பசுமை நிறக் கால்களை உடைய கொக்கு, சிவந்த கால்களை உடைய நாரை ஆகியவை எளிமையாகக் கவர்ந்துண்ணும்படி கயல் மீன்களை ஆற்று வெள்ளம் அடித்துவந்தது. பெயல் நின்றதும் வெண்மேகம் படர்ந்துவரும் மூடுபனி. வயலில் விளைந்திருக்கும் நெற்கதிர் வளைந்து தொங்குகிறது. பாக்கு மரத்தில் காய்கள் சதைப் பிடிப்புடன் முற்றித் தொங்குகின்றன. காட்டில் பூத்திருக்கும் குளிர்கால மலர்களில் பனித்துளிகள் தூங்குகின்றன.
ஆறு கிடந்தன்ன அகல் நெடுந்தெருவில், . . . .[30]
படலைக் கண்ணி பரு ஏர் எறுழ் திணி தோள்
முடலை யாக்கை முழு வலி மாக்கள்
வண்டு மூசு தேறல் மாந்தி மகிழ் சிறந்து
துவலைத் தண் துளி பேணார், பகல் இறந்து
இரு கோட்டு அறுவையர் வேண்டுவயின் திரிதர, . . . .[029 - 035]
ராறுகிடந் தன்ன வகனெடுந் தெருவிற் . . . .[30]
படலைக் கண்ணிப் பரேரெறுழ்த் திணிதோண்
முடலை யாக்கை முழுவலி மாக்கள்
வண்டுமூசு தேறன் மாந்தி மகிழ்சிறந்து
துவலைத் தண்டுளி பேணார் பகலிறந்
இருகோட்டுஅறுவையர்வேண்டு வயின்திரிதர . . . .[35]
பொருளுரை:
பழமையான ஊர். வளமான ஊர். ஓங்கிய மாடமாளிகைகள். ஆறு போல் அகன்ற தெருக்கள். முழு வலிமை பெற்று முறுக்கான உடல் கொண்ட மக்கள். காவல் புரியும் மக்கள். படலைப் பூ மாலை தலையில் சூடியவர்கள். குளிரில் முதுகு கூனி முடக்கத்துடன் நடமாடிக்கொண்டிருக்கின்றனர். அவர்கள் வண்டு மொய்க்கும் தேறல் பருகியிருக்கிறார்கள். பனித் துவலைகளை அவர்கள் பொருட்படுத்தவில்லை. இரட்டைத் துணியால் போர்த்துக்கொண்டிருக்கின்றனர். பகல் அல்லாத இரவிலும் விரும்பிய இடங்களிலெல்லாம் திரிகின்றனர்.
மெத்தென் சாயல் முத்து உறழ் முறுவல்,
பூங்குழைக்கு அமர்ந்த ஏந்து எழில் மழைக்கண்
மடவரல் மகளிர் பிடகைப் பெய்த
செவ்வி அரும்பின் பைங்கால் பித்திகத்து . . . .[40]
அவ்விதழ் அவிழ் பதம் கமழப் பொழுது அறிந்து
இரும்பு செய் விளக்கின் ஈர்ந்திரி கொளீஇ,
நெல்லும் மலரும் தூஉய், கைதொழுது,
மல்லல் ஆவணம் மாலை அயர . . . .[036 - 044]
மெத்தென் சாயன் முத்துறழ் முறுவற்
பூங்குழைக் கமர்ந்த வேந்தெழின் மழைக்கண்
மடவரன் மகளிர் பிடகைப் பெய்த
செவ்வி யரும்பின் பைங்காற் பித்திகத்து . . . .[40]
தவ்வித ழவிழ்பதங் கமழப் பொழுதறிந்
திரும்புசெய் விளக்கி னீர்ந்திரிக் கொளீஇ
நெல்லு மலருந் தூஉய்க்கை தொழுது
மல்ல லாவண மாலை யயர
பொருளுரை:
மகளிர். பருத்த மார்பகத் தோள். வள்ளிக்கொடி எழுதப்பட்ட தோள். வெள்ளி நிறத்தில் வள்ளிக்கொடி எழுதப்பட்ட தோள். மெத்தென்ற உடம்பு. அழகு. முத்துப் போன்ற புன்னகை. காதுத் தொங்கல் குழையை விரும்பிப் பாய்வது போன்ற நீண்ட கண்கள். மழை போல் ஈரமான கண்கள். எழிலான கண்கள். இவற்றைக் கொண்ட மடவரல் மகளிர். மடப்பத் தன்மை உடைய மகளிர். இவர்கள் மாலைப் பொழுது என்று கணித்து அறிந்துகொள்கின்றனர். பூக்கூடையில் உள்ள பூ மலர்வதால் தெரிந்துகொள்கின்றனர். இரும்பால் செய்யப்பட்ட விளக்கில் திரியைத் திரித்து விட்டு விளக்கு ஏற்றுகின்றனர். நெல்லும் மலரும் தூவி வழிபடுகின்றனர். மாலைக்காலத்தை வழிபடுகின்றனர்.
இன்புறு பெடையொடு மன்று தேர்ந்து உண்ணாது,
இரவும் பகலும் மயங்கி கையற்று,
மதலைப் பள்ளி மாறுவன இருப்ப,
லின்புறு பெடையொடு மன்றுதேர்ந் துண்ணா
திரவும் பகலு மயங்கிக் கையற்று
மதலைப் பள்ளி மாறுவன விருப்பக்
பொருளுரை:
வீட்டுப் புறாக்கள். இணை புறாக்கள். செங்கால் புறாக்கள். ஆணும் பெண்ணுமாகச் சேர்ந்தே மேயும் பழக்கம் கொண்ட புறாக்கள். மன்ற வெளிகளில் மெயும் புறாக்கள். குளிர் மிகுதியால் அவை மேயவில்லை. மதலைப் பள்ளியில், மாட இருக்கையில் இடம் மாறி மாறி உட்காருகின்றன. இரவிலும் பகலிலும் ஒன்றை ஒன்று பார்த்துக்கொண்டு மயங்கிக் கிடக்கின்றன.
கொள் உறழ் நறுங்கல் பலகூட்டு மறுக, . . . .[50]
வடவர் தந்த வான் கேழ் வட்டம்
தென் புல மருங்கில் சாந்தொடு துறப்பக்
கூந்தல் மகளிர் கோதை புனையார்,
பல் இருங் கூந்தல் சில் மலர் பெய்ம்மார்,
தண் நறுந் தகர முளரி நெருப்பு அமைத்து . . . .[55]
இருங்காழ் அகிலொடு வெள் அயிர் புகைப்பக்
கை வல் கம்மியன் கவின் பெறப் புனைந்த
செங்கேழ் வட்டஞ் சுருக்கிக் கொடுந் தறிச்
சிலம்பி வான் நூல் வலந்தன தூங்க,
வான் உற நிவந்த மேனிலை மருங்கின் . . . .[60]
வேனில் பள்ளித் தென் வளி தரூஉம்
நேர் வாய்க் கட்டளை திரியாது, திண் நிலைப்
போர் வாய் கதவம் தாழொடு துறப்பக்
கல்லென் துவலை தூவலின், யாவரும்
தொகு வாய்க் கன்னல் தண்ணீர் உண்ணார், . . . .[65]
பகு வாய்த் தடவில் செந்நெருப்பு ஆர
ஆடல் மகளிர் பாடல் கொளப் புணர்மார்,
தண்மையின் திரிந்த இன் குரல் தீம் தொடை
கொம்மை வரு முலை வெம்மையில் தடைஇ,
கருங்கோட்டுச் சீறியாழ் பண்ணு முறை நிறுப்ப . . . .[70]
காதலர்ப் பிரிந்தோர் புலம்ப பெயல் கனைந்து
கூதிர் நின்றன்றால் போதே மாதிரம் . . . .[045 - 072]
கொள்ளுறழ் நறுங்கற் பலகூட்டு மறுக . . . .[50]
வடவர் தந்த வான்கேழ் வட்டந்
தென்புல மருங்கிற் சாந்தொடு துறப்பக்
கூந்தன் மகளிர் கோதை புனையார்
பல்லிருங் கூந்தற் சின்மலர் பெய்ம்மார்
தண்ணறுந் தகர முளரி நெருப்பமைத் . . . .[55]
திருங்கா ழகிலொடு வெள்ளயிர் புகைப்பக்
கைவல் கம்மியன் கவின்பெறப் புனைந்த
செங்கேழ் வட்டஞ் சுருக்கிக் கொடுந்தறிச்
சிலம்பி வானூல் வலந்தன தூங்க
வானுற நிவந்த மேனிலை மருங்கின் . . . .[60]
வேனிற் பள்ளித் தென்வளி தரூஉம்
நேர்வாய்க் கட்டளை திரியாது திண்ணிலைப்
போர்வாய் கதவந் தாழொடு துறப்பக்
கல்லென் றுவலை தூவலின் யாவருந்
தொகுவாய்க் கன்னற் றண்ணீ ருண்ணார் . . . .[65]
பகுவாய்த் தடவிற் செந்நெருப் பார
வாடன் மகளிர் பாடல்கொளப் புணர்மார்
தண்மையிற் றிரிந்த வின்குரற் றீந்தொடை
கொம்மை வருமுலை வெம்மையிற் றடைஇக்
கருங்கோட்டுச் சீறியாழ் பண்ணுமுறை நிறுப்பக் . . . .[70]
காதலர்ப் பிரிந்தோர் புலம்பப் பெயல்கனைந்து
கூதிர்நின் றன்றாற் போதே மாதிரம்
பொருளுரை:
செல்வர் மாளிகை. பாதுகாப்பாளர் இருக்கும் மாளிகை. பணியாளர்கள் கொள்ளுப் போன்ற வட்டமான கல்லில் மணக்கூட்டுப் பொருள்களை அரைக்கின்றனர். (வெப்பம் தரும் மணக்கூட்டுப் பொருள் அது) வடநாட்டு மக்கள் தந்த வட்டமான சந்தனக் கல்லும், தென்னாட்டுச் சந்தனக் கட்டையும் அரைக்கப்படாமல் தூங்குகின்றன. (சந்தனம் குளுமைக்காகப் பூசப்படுவது ஆகையால் குளிர் காலத்தில் பயனற்றுக் கிடக்கிறது) மகளிர் நிறைந்த பூக்கள் கொண்ட மாலைகளைத் தோளில் அணிந்துகொள்ளவில்லை. சிலவாகிய ஒரிரு பூக்களையே தலையில் செருகிக்கொண்டனர். அதனைச் சூடிக்கொள்வதற்கு முன்பு தகரம் பூசிக் குளித்தனர்.
நெருப்பில் அகில் கட்டைத் துகள்களையும், வெண்ணிற அயிரையும் (சாம்பிராணியையும்) போட்டுப் புகைத்து உலர்த்திக்கொண்டனர். கைத்தொழில் கலைஞன் கம்மியன் செய்து தந்த செந்நிற வட்ட விசிறி விரிக்கப்படாமல் சுருக்கித் தொங்கவிடப்பட்டிருந்தது. அதில் சிலந்திப் பூச்சி கூடு கட்டும் அளவுக்குப் பயன்படுத்தப்படாமல் கிடந்தது. மேல்மாடத்தில் தென்றல் வீசும் கட்டளை(சன்னல்) திறக்கப்படாமல் தாழிட்டு அடைத்து வைக்கப்பட்டிருந்தது. வாடைக்காற்றின் நீர்த் துவலை தூவிக்கொண்டே இருந்ததால் யாரும் கூம்பிய கன்னல் சொம்பில் குளிர்ந்த நீரைப் பருகவில்லை.
மாறாக அகன்ற வாயை உடைய தடவில் (தடா வட்டி) சுடச்சுட வெந்நீரைப் பருகினர். ஆடல் மகளிர்க்குப் பாட்டுப் பாடவேண்டிய நிலை வந்தபோது, பாடலுக்கு யாழிசை கூட்டவேண்டிய நிலையில், யாழ் நரம்பு குளிர் ஏறிக் கிடந்ததால், அவற்றைச் சூடாக்கும் பொருட்டு, யாழ் நரம்புகளை மகளிர் தம் குவிந்து திரண்ட முலை முகடுகளில் தேய்த்துச் சூடேற்றிக் கொண்டனர். காதலனைப் பிரிந்திருக்கும் மகளிர் புலம்பிக்கொண்டிருந்தனர். பெருமழையோடு கூதிர்க் குளிர் வீசிக்கொண்டிருந்தது.
விரி கதிர் பரப்பிய வியல் வாய் மண்டிலம்
இரு கோல் குறி நிலை வழுக்காது குடக்கு ஏர்பு
ஒரு திறம் சாரா அரை நாள் அமயத்து, . . . .[75]
நூல் அறி புலவர் நுண்ணிதின் கயிறு இட்டு,
தேஎம் கொண்டு தெய்வம் நோக்கி,
பெரும் பெயர் மன்னர்க்கு ஒப்ப மனை வகுத்து . . . .[073 - 078]
விரிகதிர் பரப்பிய வியல்வாய் மண்டில
மிருகோற் குறிநிலை வழுக்காது குடக்கேர்
பொருதிறஞ் சாரா வரைநா ளமயத்து . . . .[75]
நூலறி புலவர் நுண்ணிதிற் கயிறிட்டுத்
தேஎங் கொண்டு தெய்வ நோக்கிப்
பெரும்பெயர் மன்னர்க் கொப்ப மனைவகுத்
பொருளுரை:
அரசிக்கு மனை அரண்மனைக்கு ஒப்பாக அமைக்கப்பட்டது. கட்டடக்கலை நூலில் தேர்ச்சி பெற்ற கலைஞன் அரசிக்கு மனை வகுத்தான். கயிறு கட்டி மனையைப் பிரித்துக் காட்டினான். நிறுத்தியும் கிடத்தியும் ஒரே கோலை மடித்து வைத்து சூரியனின் நிழல் ஒன்றன் நிழல் மற்றொன்றின்மீது படும்படி நிறுத்துவது இருகோல் குறிநிலை. ஏறும் பொழுதாகவும், இறங்கும் பொழுதாகவும் இல்லாத நண்பகலில் இருகோல் குறிநிலை நிறுத்தி அவன் நிலத்தின் திசையைக் கணித்துக்கொண்டான். திசைமுகத்துக்கு ஏற்பக் கயிறு கட்டி, சுவர் அமைக்க அடிக்கோடு போட்டுக்கொண்டான். (மூலைப்பக்கம் நோக்காமல் கட்டடம் கட்டுவது அக்கால மரபு). தெய்வத்தை வாழ்த்திய பின்னர் மனையை வகுத்துக் காட்டினான்.
பரு இரும்பு பிணித்து, செவ்வரக்கு உரீஇ, . . . .[80]
துணை மாண் கதவம் பொருத்தி, இணை மாண்டு
நாளொடு பெயரிய கோள் அமை விழு மரத்து
போது அவிழ் குவளைப் புதுப் பிடி கால் அமைத்து,
தாழொடு குயின்ற போர் அமை புணர்ப்பில்
கை வல் கம்மியன் முடுக்கலின் புரை தீர்ந்து . . . .[85]
ஐயவி அப்பிய நெய்யணி நெடு நிலை
வென்று எழு கொடியொடு வேழம் சென்று புக,
குன்று குயின்றன்ன ஓங்கு நிலை வாயில் . . . .[079 - 088]
பருவிரும்பு பிணித்துச் செவ்வரக் குரீஇத் . . . .[80]
துணைமாண் கதவம் பொருத்தி யிணைமாண்டு
நாளொடு பெயரிய கோளமை விழுமரத்துப்
போதவிழ் குவளைப் புதுப்பிடி காலமைத்துத்
தாழொடு குயின்ற போரமை புணர்ப்பிற்
கைவல் கம்மியன் முடுக்கலிற் புரைதீர்ந் . . . .[85]
தையவி யப்பிய நெய்யணி நெடுநிலை
வென்றெழு கொடியொடு வேழஞ் சென்றுபுகக்
குன்றுகுயின் றன்ன வோங்குநிலை வாயிற்
பொருளுரை:
வளைந்த முகடுகளை உடைய மனை. அதில் யானை வெற்றிக் கொடியுடன் புகும் அளவுக்கு உயர்ந்தோங்கிய நிலைவாயில். குன்றைக் குடைந்தது போல் தோன்றும் நிலைவாயில். அதில் இரட்டைக் கதவு. கதவைத் தாங்கும் இரும்பு ஆணி. அரக்கு சேர்த்துப் பிணித்த மரக்கதவு. அதற்கு ‘உத்தரம்’ என்னும் நாள்மீனின் பெயர் கொண்ட நிலை. நிலையில் குவளைப்பூவின் மொட்டு போல் கலைத்திற வேலைப்பாடுகள். கதவுக்குத் தாழ்ப்பாள். இவற்றையெல்லாம் செய்தமைத்தவன் ‘கைவல் கம்மியன்’. தாழ்ப்பாளும், கதவைத் தாங்கும் இரும்பாணியும் எளிதாக இயங்கும் பொருட்டு ஐயவி என்னும் வெண்சிறு கடுகு எண்ணெய்ப் பூச்சு. – இப்படி அந்த வாயில் அமைக்கப்பட்டிருந்தது.
தரு மணல் ஞெமிரிய திரு நகர் முற்றத்து . . . .[90]
நெடு மயிர் எகினத் தூ நிற ஏற்றை
குறுங்கால் அன்னமொடு உகளும் முன்கடை . . . .[089 - 092]
றருமணன் ஞெமிரிய திருநகர் முற்றத்து . . . .[90]
நெடுமயி ரெகினத் தூநிற வேற்றை
குறுங்கா லன்னமோ டுகளு முன்கடைப்
பொருளுரை:
அரசி அரண்மனைக்குத் ‘திருநகர்’ என்று பெயர். அதன் முன்புறமும் பின்புறமும் முற்றம். வெளியிலிருந்து கொண்டுவரப்பட்ட மணல் பரப்பப்பட்டுள்ள முற்றம். அதில் வெண்ணிற எகினமும், அன்னமும் துள்ளி விளையாடிக்கொண்டிருந்தன.
புல் உணாத் தெவிட்டும் புலம்பு விடு குரலொடு
நிலவுப் பயன் கொள்ளும் நெடு வெண் முற்றத்து, . . . .[95]
கிம்புரிப் பகுவாய் அம்பணம் நிறைய
கலிழ்ந்து வீழ் அருவிப் பாடு விறந்து அயல,
ஒலி நெடும் பீலி ஒல்க மெல் இயல்
கலி மயில் அகவும் வயிர் மருள் இன் இசை
நளி மலைச் சிலம்பின் சிலம்பும் கோயில் . . . .[093 - 100]
புல்லுணாத் தெவிட்டும் புலம்புவிடு குரலொடு
நிலவுப்பயன் கொள்ளு நெடுவெண் முற்றத்துக் . . . .[95]
கிம்புரிப் பகுவா யம்பண நிறையக்
கலிழ்ந்துவீ ழருவிப் பாடுவிறந் தயல
வொலிநெடும் பீலி யொல்க மெல்லியற்
கலிமயி லகவும் வயிர்மரு ளின்னிசை
நளிமலைச் சிலம்பிற் சிலம்புங் கோயில் . . . .[100]
பொருளுரை:
கட்டிக் கிடப்பதை விரும்பாத குதிரைகள் புல் உணவைத் தெவிட்டும் புலம்பல் ஒலி. நிலா-முற்றத்தில் மகரமீன் வாயிலிருந்து நீர் விழுவது போல் அமைக்கப்பட்டிருந்த கிம்புரிப் பகுவாய். அதன் வழியாக ‘அம்பணம்’ என்னும் தொட்டியில் விழும் அருவி-நீரின் ஒலி. அருகே தோகை-மயில் கொம்பூதும் ஒலி போல் சிலம்பும் ஒலி. – இப்படிப்பட்ட ஓசை அந்த மனைக்கோயிலில் கேட்டுக்கொண்டிருந்தன.
கை ஏந்தும் ஐ அகல் நிறைய நெய் சொரிந்து,
பரூஉத்திரி கொளீஇய குரூஉத்தலை நிமிர் எரி
அறு அறு காலை தோறு அமைவரப் பண்ணிப்
பல் வேறு பள்ளி தொறும் பாய் இருள் நீங்க, . . . .[105]
பீடு கெழு சிறப்பின் பெருந்தகை அல்லது
ஆடவர் குறுகா அருங்கடி வரைப்பின்
வரை கண்டன்ன தோன்றல, வரை சேர்பு
வில் கிடந்தன்ன கொடிய பல் வயின்,
வெள்ளி அன்ன விளங்கும் சுதை உரீஇ, . . . .[110]
மணி கண்டன்ன மாத்திரள் திண் காழ்
செம்பு இயன்றன்ன செய்வுறு நெடுஞ்சுவர்,
உருவப் பல் பூ ஒருகொடி வளைஇ,
கருவொடு பெயரிய, காண்பு இன் நல் இல் . . . .[101 - 114]
கையேந் தையக னிறையநெய் சொரிந்து
பரூஉத்திரி கொளீஇய குரூஉத்தலை நிமிரெரி
யறுவறு காலைதோ றமைவரப் பண்ணிப்
பல்வேறு பள்ளிதொறும் பாயிரு ணீங்கப் . . . .[105]
பீடுகெழு சிறப்பிற் பெருந்தகை யல்ல
தாடவர் குறுகா வருங்கடி வரைப்பின்
வரைகண் டன்ன தோன்றல வரைசேர்பு
வில்கிடந் தன்ன கொடிய பல்வயின்
வெள்ளி யன்ன விளங்குஞ் சுதையுரீஇ . . . .[110]
மணிகண் டன்ன மாத்திரட் டிண்காழ்ச்
செம்பியன் றன்ன செய்வுறு நெடுஞ்சுவ
ருருவப் பல்பூ வொருகொடி வளைஇக்
கருவொடு பெயரிய காண்பி னல்லிற்
பொருளுரை:
அரசியின் கருவறையில் பாவை விளக்கு எரிந்துகொண்டிருந்தது. அந்தப் பாவை விளக்கு யவனர் கலைஞர்களால் செய்யப்பட்டது. ஐந்து திரிமுனைகள் கொண்டது. பருமனான திரியிடப்பட்டு அது எரிந்துகொண்டிருந்தது. அது ஒளி மங்கும்போதெல்லாம் எண்ணெய் ஊற்றித் தூண்டப்பட்டது. அங்கே பல்வேறு படுக்கைகள் இருந்தன. அதற்குள் அரசன் தவிர வேறு எந்த ஆணும் செல்வதில்லை. அது மலை போல் தோன்றும் மனை. அதில் மலைமேல் வானவில் கிடப்பது போல் துணிக்கொடிகள் பறந்துகொண்டிருந்தன. அது வெள்ளி போல் சுண்ணாம்பு அடிக்கப்பட்ட வெள்ளை மாளிகை. சுவர் செம்பால் செய்யப்பட்டது போல் இருந்தது. அதில் வளைந்து வளைந்து கொடி படர்வது போல் மணிகள் பதிக்கப்பட்டிருந்தன. அந்த மனைக்குக் கருவறை என்று பெயர்.
இகல்மீக் கூறும் ஏந்து எழில் வரி நுதல்
பொருது ஒழி நாகம் ஒழி எயிறு அருகு எறிந்து,
சீரும் செம்மையும் ஒப்ப வல்லோன்
கூர் உளிக் குயின்ற ஈர் இலை இடை இடுபு,
தூங்கு இயல் மகளிர் வீங்கு முலை கடுப்பப் . . . .[120]
புடை திரண்டிருந்த குடத்த இடை திரண்டு
உள்ளி நோன் முதல் பொருந்தி அடி அமைத்து,
பேர் அளவு எய்திய பெரும் பெயர் பாண்டில் . . . .[115 - 123]
ளிகன்மீக் கூறு மேந்தெழில் வரிநுதற்
பொருதொழி நாக மொழியெயி றருகெறிந்து
சீருஞ் செம்மையு மொப்ப வல்லோன்
கூருளிக் குயின்ற வீரிலை யிடையிடுபு
தூங்கியன் மகளிர் வீங்குமுலை கடுப்பப் . . . .[120]
புடைதிரண் டிருந்த குடத்த விடைதிரண்
டுள்ளி நோன்முதல் பொருத்தி யடியமைத்துப்
பேரள வெய்திய பெரும்பெயர்ப் பாண்டில்
பொருளுரை:
அரசியின் கட்டிலின் கால்கள் 40 ஆண்டுகள் நிறைந்த யானையின் தந்தத்தால் செய்யப்பட்டவை. யானைகள் உணர்வில் மாறுபட்டு ஒன்றோடொன்று போரிடும்போது முரிந்த தந்தங்கள் அவை. அவற்றில் கலைவல்லவன் உளியால் தோண்டி வேலைப்பாடுகளைச் செய்திருந்தான். இரட்டை இலை வேலைப்பாடுகள் அதில் செய்யப்பட்டிருந்தன. மகளிர் முலைகள் போல் குட அமைப்புகளும், வெங்காயம் முளைப்பது போன்ற அமைப்புகளும் அதில் இருந்தன. அந்தக் கட்டிலைப் ‘பாண்டில்’ என்று வழங்கினர்.
முத்துடைச் சாலேகம் நாற்றி குத்துறுத்து, . . . .[125]
புலிப் பொறிக் கொண்ட பூங்கேழ்த் தட்டத்துத்
தகடு கண் புதையக் கொளீஇத் துகள் தீர்ந்து
ஊட்டுறு பல் மயிர் விரைஇ, வய மான்
வேட்டம் பொறித்து, வியன் கண் கானத்து
முல்லைப் பல் போது உறழப் பூ நிரைத்து, . . . .[130]
மெல்லிதின் விரிந்த சேக்கை மேம்படத்
துணை புணர் அன்னத் தூ நிறத் தூவி
இணை அணை மேம்படப் பாய் அணை இட்டு,
காடி கொண்ட கழுவுறு கலிங்கத்துத்
தோடு அமை தூ மடி விரிந்த சேக்கை . . . .[124 - 135]
முத்துடைச் சாலேக நாற்றிக் குத்துறுத்துப் . . . .[125]
புலிப்பொறிக் கொண்ட பூங்கேழ்த் தட்டத்துத்
தகடுகண் புதையக் கொளீஇத் துகடீர்ந்
தூட்டுறு பன்மயிர் விரைஇ வயமான்
வேட்டம் பொறித்து வியன்கட் கானத்து
முல்லைப் பல்போ துறழப் பூநிரைத்து . . . .[130]
மெல்லிதின் விரிந்த சேக்கை மேம்படத்
துணைபுண ரன்னத் தூநிறத் தூவி
யிணையணை மேம்படப் பாயணை யிட்டுக்
காடி கொண்ட கழுவுறு கலிங்கத்துத்
தோடமை தூமடி விரித்த சேக்கை . . . .[135]
பொருளுரை:
சன்னலில் முத்துச் சரங்கள் தொங்கின. மெல்லிய நூல்களில் கோக்கப்பட்டவை அந்த முத்துச் சரங்கள். படுக்கைக் கட்டிலின் தகட்டுத் தளத்தில் புலி உருவப் பூ வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அது புதையும்படி பல்வகை மயிர்களைத் திணித்து உருவாக்கப்பட்ட மெத்தை விரிக்கப்பட்டிருந்தது. மெத்தையின் துணியில் வயமான் (சிங்கம்) வேட்டையாடுவது போலவும், முல்லைப்பூ பூத்திருப்பது போலவும் தையல் வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. - இப்படிப்பட்ட மெத்தை மேல் அரசி இருந்தாள்.
மெத்தையின் மேல் மற்றொரு மெத்தை. மேல்மெத்தையில் அன்னத்தின் தூவிகள் திணிக்கப்பட்டிருந்தன. ஆண் பெண் அன்னங்கள் உறவு கொண்டபோது உதிர்ந்த இறகுத் தூவிகள் அவை. அதன் மேல் துணி விரிப்பு. அது கஞ்சி போட்டுச் செய்த சலவை-மடிப்பு விரித்த துணி.
பின் அமை நெடு வீழ் தாழத் துணை துறந்து
நல் நுதல் உலறிய சில் மெல் ஓதி,
நெடு நீர் வார் குழை களைந்தென குறுங்கண்
வாயுறை அழுத்திய வறிது வீழ் காதின், . . . .[140]
பொலந்தொடி தின்ற மயிர் வார் முன் கை
வலம்புரி வளையொடு கடிகை நூல் யாத்து,
வாளைப் பகுவாய் கடுப்ப வணக்குறுத்துச்
செவ்விரல் கொளீஇய செங்கேழ் விளக்கத்துப்
பூந்துகில் மரீஇய ஏந்து கோட்டு அல்குல் . . . .[145]
அம்மாசு ஊர்ந்த அவிர் நூல் கலிங்கமொடு
புனையா ஓவியம் கடுப்ப புனைவு இல் . . . .[136 - 147]
பின்னமை நெடுவீழ் தாழத் துணைதுறந்து
நன்னுத லுலறிய சின்மெல் லோதி
நெடுநீர் வார்குழை களைந்தெனக் குறுங்கண்
வாயுறை யழுத்திய வறிதுவீழ் காதிற் . . . .[140]
பொலந்தொடி தின்ற மயிர்வார் முன்கை
வலம்புரி வளையொடு கடிகைநூல் யாத்து
வாளைப் பகுவாய் கடுப்ப வணக்குறுத்துச்
செவ்விரற் கொளீஇய செங்கேழ் விளக்கத்துப்
பூந்துகின் மரீஇய வேந்துகோட் டல்கு . . . .[145]
லம்மா சூர்ந்த வவிர்நூற் கலிங்கமொடு
புனையா வோவியங் கடுப்பப் புனைவி
பொருளுரை:
அரசியின் முலைமேல் முத்தாரம். அதன் மேல் பின்புறத் தலைப்பின்னலை முன்புறமாக வளைத்துப் போட்டிருந்தாள். அவளது தலைவன் அப்போது அங்கு இல்லை. சில முடிகள் அவள் நெற்றியில் பறந்துகொண்டிருந்தன. குழைகளைக் கழற்றி வைத்துவிட்டதால் வெறுங்காது துளையுடன் காணப்பட்டது. பொன்வளையல்கள் கழன்றுவிட்டதால் வளையல் இருந்த அழுத்தம் தோளில் காணப்பட்டது. முன்கையில் சங்கு-வளையலும், காப்புக்காகக் கட்டிய கடிகைநூலும் இருந்தன. வாளைமீன் வாய் போல் பிளந்திருக்கும் மோதிரத்தை விரல்களில் அணிந்திருந்தாள். சிவப்பு நிறத்தில் விளக்கு எரிந்துகொண்டிருந்தது. இடையிலே உடுத்தியிருந்த அழகிய ஆடை அழுக்குப் பிடித்திருந்தது. மொத்தத்தில் அவள் புனையா ஒவியம் (sketch) போலக் காணப்பட்டாள்.
அம்பணைத் தடைஇய மென் தோள் முகிழ் முலை
வம்பு விசித்து யாத்த வாங்கு சாய் நுசுப்பின், . . . .[150]
மெல் இயல் மகளிர் நல்அடி வருட
நரை விராவுற்ற நறு மென் கூந்தல்
செம்முகச் செவிலியர் கைம்மிகக் குழீஇ,
குறியவும் நெடியவும் உரை பல பயிற்றி,
‘இன்னே வருகுவர் இன் துணையோர்’ என . . . .[155]
உகத்தவை மொழியவும் ஒல்லாள், மிகக் கலுழ்ந்து, . . . .[148 - 156]
னம்பணைத் தடைஇய மென்றோண் முகிழ்முலை
வம்புவிசித் தியாத்த வாங்குசாய் நுசுப்பின் . . . .[150]
மெல்லியன் மகளிர் நல்லடி வருட
நரைவிரா வுற்ற நறுமென் கூந்தற்
செம்முகச் செவிலியர் கைம்மிகக் குழீஇக்
குறியவு நெடியவு முரைபல பயிற்றி
யின்னே வருகுவ ரின்றுணை யோரென . . . .[155]
வுகத்தவை மொழியவு மொல்லாண் மிகக்கலுழ்ந்து
பொருளுரை:
பணிப்பெண்கள் அவளது காலடிகளைத் தடவிக்கொடுத்தனர். அந்தப் பணிப்பெண்கள் தளிர் போன்ற மேனி, அதில் சுணங்கு-மடிப்பின் அழகு, மூங்கிலை வென்ற தோள், பருவத்தில் தோன்றும் முலையில் கச்சு என்னும் வம்பு முடிச்சுக் கட்டுத்துணி, மெல்லிய இடை ஆகியவற்றைக் கொண்டு கட்டழகுடன் காணப்பட்டனர். அவர்களுடன் ஆங்காங்கே நரைமுடி தோன்றும் கூந்தலை உடைய செவிலியர், செந்நெறி இது என முகத்தால் கூறும் செவிலியர் “உன் துணைவர் இப்பொழுதே வந்துவிடுவார்” என்று அவளுக்கு விருப்பமான சொற்களைப் பேசினர். இவற்றைக் கூட அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. கலங்கினாள்.
ஊறா வறு முலை கொளீஇய கால் திருத்திப்
புதுவது இயன்ற மெழுகு செய் படமிசைத்
திண் நிலை மருப்பின் ஆடு தலையாக, . . . .[160]
விண் ஊர்பு திரிதரும் வீங்கு செலல் மண்டிலத்து
முரண் மிகு சிறப்பின் செல்வனொடு நிலைஇய
உரோகிணி நினைவனள் நோக்கி, நெடிது உயிரா,
மா இதழ் ஏந்திய மலிந்து வீழ் அரிப்பனி
செவ்விரல் கடைக்கண் சேர்த்திச் சில தெறியாப் . . . .[165]
புலம்பொடு வதியும் நலங்கிளர் அரிவைக்கு
இன்னா அரும்படர் தீர விறல் தந்து
இன்னே முடிக தில் அம்ம மின் அவிர் . . . .[157 - 168]
லூறா வறுமுலை கொளீஇய காறிருத்திப்
புதுவ தியன்ற மெழுகுசெய் படமிசைத்
திண்ணிலை மருப்பி னாடுதலை யாக . . . .[160]
விண்ணூர்பு திரிதரும் வீங்குசெலன் மண்டிலத்து
முரண்மிகு சிறப்பிற் செல்வனொடு நிலைஇய
வுரோகிணி நினைவன ணோக்கி நெடிதுயிரா
மாயித ழேந்திய மலிந்துவீ ழரிப்பனி
செவ்விரல் கடைக்கண் சேர்த்திச் சிலதெறியாப் . . . .[165]
புலம்பொடு வதியு நலங்கிள ரரிவைக்
கின்னா வரும்படர் தீர விறறந்
தின்னே முடிகதில் லம்ம மின்னவி
பொருளுரை:
அவளது படுக்கைக்கு மேலே விதானம் அமைக்கப்பட்டிருந்தது. அந்த மேல்கட்டியின் கால்கள் முலை வடிவு வேலைப்பாடுகளைக் கொண்டிருந்தது. மேல்கட்டித் துணியில் மெழுகு பூசப்பட்டு அதில் சந்திரன் உரோகினி என்னும் பெண்ணைத் தழுவும் ஓவியம் வரையப்பட்டிருந்தது. அந்த ஓவியத்தைப் பார்த்து அரசி பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்தாள். அப்போது கடைக்கண்ணில் தோன்றிய கண்ணீர்த் துளியைத் தன் செவ்விய விரல்களால் துடைத்துத் தெரித்துக்கொண்டாள்.
அந்த அரிவைப்பெண் புலம்பிக்கொண்டு வாழ்கிறாள். அது துன்பம் தரும் நினைவோட்டம். அது தீரவேண்டும். அதற்கு வழி அவளது தலைவன் போரில் வெற்றி பெற வேண்டும். போர் இப்போதே முடியவேண்டும். – இது பாடலின் முடிவு.
நீள் திரள் தடக்கை நில மிசைப் புரள, . . . .[170]
களிறு களம் படுத்த பெருஞ்செய் ஆடவர்
ஒளிறு வாள் விழுப்புண் காணிய, புறம் போந்து,
வடந்தைத் தண் வளி எறிதொறும் நுடங்கித்
தெற்கு ஏர்பு இறைஞ்சிய தலைய நன் பல
பாண்டில் விளக்கில் பரூஉச்சுடர் அழல, . . . .[175]
வேம்பு தலை யாத்த நோன் காழ் எஃகமொடு
முன்னோன் முறை முறை காட்டப் பின்னர்
மணி புறத்து இட்ட மாத்தாள் பிடியொடு
பருமம் களையாப் பாய் பரிக் கலி மா
இருஞ்சேற்றுத் தெருவின் எறி துளி விதிர்ப்ப, . . . .[180]
புடை வீழ் அம் துகில் இடவயின் தழீஇ
வாள் தோள் கோத்த வன் கண் காளை
சுவல் மிசை அமைத்த கையன், முகன் அமர்ந்து,
நூல் கால் யாத்த மாலை வெண் குடை
தவ்வென்று அசைஇ தா துளி மறைப்ப, . . . .[185]
நள்ளென் யாமத்தும் பள்ளி கொள்ளான்,
சிலரொடு திரிதரும் வேந்தன்,
பலரொடு முரணிய பாசறைத் தொழிலே, . . . .[169 - 188]
நீடிர டடக்கை நிலமிசைப் புரளக் . . . .[170]
களிறுகளம் படுத்த பெருஞ்செய் யாடவ
ரொளிறுவாள் விழுப்புண் காணிய புறம்போந்து
வடந்தைத் தண்வளி யெறிதொறு நுடங்கித்
தேற்கேர் பிறைஞ்சிய தலைய நற்பல்
பாண்டில் விளக்கிற் பரூஉச்சுட ரழல . . . .[175]
வேம்புதலை யாத்த நோன்கா ழெஃகமொடு
முன்னோன் முறைமுறை காட்டப் பின்னர்
மணிப்புறத் திட்ட மாத்தாட் பிடியொடு
பருமங் களையாப் பாய்பரிக் கலிமா
விருஞ்சேற்றுத் தெருவி னெறிதுளி விதிர்ப்பப் . . . .[180]
புடைவீ ழந்துகி லிடவயிற் றழீஇ
வாடோட் கோத்த வன்கட் காளை
சுவன்மிசை யமைத்த கையன் முகனமர்ந்து
நூல்கால் யாத்த மாலை வெண்குடை
தவ்வென் றசைஇத் தாதுளி மறைப்ப . . . .[185]
நள்ளென் யாமத்தும் பள்ளி கொள்ளான்
சிலரொடு திரிதரும் வேந்தன்
பலரொடு முரணிய பாசறைத் தொழிலே.
பொருளுரை:
யானை – மின்னி ஒளிரும் யானை ஓடை நெற்றியில் கொண்ட யானை, போர்த்தொழில் திறம் பெற்ற யானை, தன் கையை நிலத்தில் போட்டுக்கொண்டு புரளும்படி, பெருஞ்செய் ஆடவர் – பெருஞ்செய் என்பது போர்க்களம். யானை நிலத்தில் புரளும்படி போரிட்ட ஆடவர், யானையை வீழ்த்திய ஆடவர் வாள்-புண் பட்டுக் கிடப்பதைக் காண அரசன் வெளியே வந்தான். வடக்கிலிருந்து காற்று வீசும்போதெல்லாம் பாண்டில் விளக்கில் எரியும் சுடர் தெற்குப்பக்கமாக வணங்கியது. வேப்பந்தழை கட்டிய வேலுடன் அறிமுகம் செய்யும் முன்னோன் காட்டிக்கொண்டே முன்னே சென்றான்.
அரசன் பெருஞ்செய் ஆடவரைக் கண்டான். முதுகில் மணி தொங்கும் பெண்-யானைகளைக் கண்டான். இருக்கைப் பருமம் களையப்படாத குதிரைகளைக் கண்டான். சேறு பட்டுக் கிடந்த தெருவில் நடந்து கண்டான். விழும் பனித்துளியில் நனைந்துகொண்டே சென்று கண்டான். காற்றில் நழுவும் வேலாடையைத் தன் இடக்கையில் தழுவிக்கொண்டே சென்று கண்டான். வாளைத் தோளில் கோத்துக்கொண்டிருந்த மெய்க்காப்பாளனின் தோளில் கையை வைத்துக்கொண்டு சென்று கண்டான். ஆர்வம் தழுவிய முகத்துடன் கண்டான்.
நூல்-குஞ்சம் தொங்கும் அவனது வெண்கொற்றக்குடை வீசும் வாடைத்துளிகளை மறைத்து அங்குமிங்கும் அசைந்துகொண்டிருந்தது. அது நள்ளிரவு நேரம். அவன் தன் படுக்கையில் இல்லை. சிலரோடு திரிந்துகொண்டிருந்தான். இது அவன் பாசறைத் தொழில். இந்தப் பாசறைத்தொழில் உடனடியாக முற்றுப்பெற வேண்டும். ஆரிவையின் நினைவலைத் துன்பம் தீர முற்றுப்பெற வேண்டும். – இது பாடலின் முடிபு.
பிற்காலத்தில் இந்த நூலின் இறுதியில் சேர்க்கப்பட்டுள்ள தனிப்பாடல் வெண்பா இரங்கல் பாடலாக அமைந்துள்ளது.
ஓடை மழ களிற்றான் உள்ளான்கொல்- கோடல்
முகையோடு அலமர, முற்று எரி போல் பொங்கி,
பகையோடு பாசறை உளான்?
ஓடை மழகளிற்றா னுள்ளான்கொல்- கோடல்
முகையோ டலமர முற்றெரிபோற் பொங்கிப்
பகையோடு பாசறையு ளான்.
பொருளுரை:
வாடைக்காற்று துன்புறுத்திக்கொண்டிருக்கையில், அவள் அவன் தோளை விரும்பிக்கொண்டிருக்கையில், அவன் அவளை நினைக்க மாட்டானோ? கோடல் பூ எரியும் தீ போல் அல்லவா பூத்துக் கிடக்கிறது. பாசறையில் அல்லவா அவன் இருக்கிறான்.