குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 060

குறிஞ்சி - தலைவி கூற்று


குறிஞ்சி - தலைவி கூற்று

பாடல் பின்னணி:

தலைவனின் பிரிவை ஆற்றாத தலைவி, வருந்தித் தோழியிடம் கூறியது.

குறுந்தாள் கூதளி ஆடிய நெடுவரைப்
பெருந்தேன் கண்ட இருக்கை முடவன்
உள் கைச் சிறுகுடை கோலிக் கீழிருந்து
சுட்டுபு நக்கியாங்குக் காதலர்
நல்கார் நயவார் ஆயினும், . . . . [05]

பல் கால் காண்டலும் உள்ளத்துக்கு இனிதே.
- பரணர்.

பொருளுரை:

குறுகிய அடியையுடைய கூதளஞ் செடி அசைந்த உயர்ந்த மலையில் பெரிய தேனடையைக் கண்டு அமர்ந்திருந்த முடவன் தன் உள்ளங்கையாகிய சிறிய குவிந்த பாத்திரத்தை கீழே இருந்தபடியே தேனடையைச் சுட்டிக் காட்டி நக்கினாற்போல், என்னுடைய காதலர் அருள் செய்யாராயினும் என்னை விரும்பாராயினும், பலமுறை அவரைக் காண்பது என் நெஞ்சத்திற்கு இனிமை தருகின்றது.

குறிப்பு:

அகநானூறு 255 - கூதள மூது இலைக் கொடி. குறுந்தாள் (1) - பொ. வே. சோமசுந்தரனார் உரை - குறுந்தாளை முடவனுக்கேற்றுக. குறுந்தாளுடைமையின் நிற்றலாற்றாது இருத்தலொன்றே உடைய முடவன். குறுகிய தாளையுடைய கூதளஞ்செடி என்பாருமுளர், இரா. இராகவையங்கார் உரை - தாளின் குறுமையால் எழுந்து நிற்க இயலாமல் இருத்தலையுடைய முடவன், உ. வே. சாமிநாதையர் உரை - குறிய அடியையுடைய கூதளஞ்செடி. இனிதே - ஏகாரம் அசை நிலை.

சொற்பொருள்:

குறுந்தாள் கூதளி - குறுகிய அடியையுடைய கூதளஞ் செடி, ஆடிய - அசைந்த, நெடுவரைப் பெருந்தேன் கண்ட இருக்கை முடவன் - உயர்ந்த மலையில் பெரிய தேனடையைக் கண்டு அமர்ந்திருந்த முடவன், உள் கைச் சிறுகுடை கோலிக் கீழிருந்து சுட்டுபு நக்கியாங்கு - உள்ளங்கையாகிய சிறிய குவிந்த பாத்திரத்தை கீழே இருந்தபடியே தேனடையைச் சுட்டிக் காட்டி நக்கினாற்போல் (கோலி - குழித்து), காதலர் நல்கார் நயவார் ஆயினும் - காதலர் அருள் செய்யாராயினும் என்னை விரும்பாராயினும், பல் கால் காண்டலும் உள்ளத்துக்கு இனிதே - பலமுறை அவரைக் காண்பது என் நெஞ்சத்திற்கு இனிமை தருகின்றது