குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 182

குறிஞ்சி - தலைவன் கூற்று


குறிஞ்சி - தலைவன் கூற்று

பாடல் பின்னணி:

தன்னுடைய குறையைத் தோழி மறுத்ததால், “தலைவியும் இரங்கவில்லை. தோழியும் உடன்படவில்லை. ஆகவே நான் மடல் ஏறுவேன்” என்று தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது.

விழுத்தலைப் பெண்ணை விளையல் மாமடல்
மணி அணி பெருந்தார் மரபின் பூட்டி,
வெள் என்பு அணிந்து, பிறர் எள்ளத் தோன்றி,
ஒரு நாள் மருங்கில் பெரு நாண் நீக்கித்
தெருவின் இயலவும் தருவது கொல்லோ . . . . [05]

கலிழ்ந்து அவிர் அசை நடைப் பேதை
மெலிந்திலள் நாம் விடற்கு அமைந்த தூதே?
- மடல் பாடிய மாதங்கீரனார்.

பொருளுரை:

அழகுடன் விளங்கும் அசைந்த நடையையுடைய தலைவி என்மாட்டு நெஞ்சம் நெகிழவில்லை. நான் அவளிடம் விடுவதற்கு ஏற்ற தூது, சிறந்த உச்சியையுடைய பனையின் முதிர்ந்த மடலால் செய்த குதிரைக்கு மணிகள் அணிந்த பெரிய மாலையைச் சூட்டி, வெள்ளை எலும்பினால் செய்த மாலையை நான் அணிந்து கொண்டு, பிறர் இகழும்படி அந்த மடல் குதிரையின் மேல் ஏறி ஒரு நாளில் என் நாணத்தை விட்டு விட்டுத் தெருவில் செல்வது தான். அவ்வாறு சென்றால் நான் அவளை அடைய முடியுமா?

குறிப்பு:

கொல்லோ - ஓகாரம், தூதே - ஏகாரம் அசை நிலை. விழு (விழுமம்) - விழுமம் சீர்மையும் சிறப்பும் இடும்பையும் (தொல்காப்பியம் உரியியல் 57).

சொற்பொருள்:

விழுத்தலைப் பெண்ணை - சிறந்த உச்சியையுடைய பனை, விளையல் மா மடல் - முதிர்ந்த பெரிய மடலால் செய்த குதிரை, மணி அணி பெருந்தார் - மணிகள் அணிந்த பெரிய மாலை, மரபின் பூட்டி - முறைப்படி அணிந்து, வெள் என்பு அணிந்து - வெள்ளை எலும்பை (மாலையை) அணிந்து, பிறர் எள்ள - பிறர் இகழ, தோன்றி - தோன்றி, ஒரு நாள் மருங்கில் - ஒரு நாளில், பெரு நாண் நீக்கி - பெரிய நாணத்தை விட்டு விட்டு, தெருவின் இயலவும் தருவது கொல்லோ - தெருவின் கண் செல்லவும் தருவதோ, கலிழ்ந்து அவிர் அசை நடைப் பேதை - அழகு ஒழுகும் விளங்கும் அசைந்த நடையையுடைய தலைவி, மெலிந்திலள் - நெஞ்சம் நெகிழ்ந்து இலள், நாம் விடற்கு அமைந்த தூதே - நாம் அவளிடம் விடுதற்கு அமைந்த தூது