குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 036

குறிஞ்சி - தலைவி கூற்று


குறிஞ்சி - தலைவி கூற்று

பாடல் பின்னணி:

தலைவன் வரைவிடை வைத்துப் பிரிய ஆற்றாள் எனக் கவன்ற தோழியிடம் தலைவி கூறியது.

துறுகல் அயலது மாணை மாக்கொடி
துஞ்சு களிறு இவரும் குன்ற நாடன்,
நெஞ்சு களன் ஆக நீயலென் யானென
நற்றோள் மணந்த ஞான்றை மற்று அவன்
தாவா வஞ்சினம் உரைத்தது, . . . . [05]

நோயோ தோழி நின்வயினானே.
- பரணர்.

பொருளுரை:

உருண்டைக் கல்லின் அருகில் உள்ள மாணை என்னும் பெரிய கொடியானது, துயில்கின்ற யானை மீது படரும் மலை நாடன், உன் நெஞ்சு இடமாக இருந்து “நான் பிரியமாட்டேன்” என்று எனது நல்ல தோள்களை அணைத்த பொழுது அவன் கெடாத உறுதிமொழிகளை உரைத்தது, வருந்துவதற்கு காரணமாகுமோ தோழி உன்திறத்து? ஆகாது!

குறிப்பு:

தமிழண்ணல் உரை - மாணைக்கொடி யானை உறக்கம் கலைந்து எழுந்ததும் சிதைவுபடும். தலைவனின் சூளுரையை நம்பியதால் தலைவியின் நிலைமை மாணைக்கொடியின் நிலைமையைப் போன்றது, உ. வே. சாமிநாதையர் உரை - துஞ்சுகின்ற அளவும் துறுகல் என்று தோன்றும் யானையின் மேல் படர்ந்து, துயில் நீங்கி அது சென்ற இடத்துப் பற்றுக்கோடின்றி இருத்தலைப் போல தலைவன் தோள் மணந்து உடன் இருந்த அளவும் கெடாதாக இருந்த வஞ்சினத்தை மெய்யாகக் கருதி மகிழ்ந்த யான் அவன் பிரிய வருந்துவேனாயின். பாறையும் யானையும்: அகநானூறு 57 - இற்றிப் புன்தலை நெடுவீழ் இரும்பிணர்த் துறுகல் தீண்டி வளி பொரப் பெருங்கை யானை நிவப்பின் தூங்கும், அகநானூறு 178 - பிடி மடிந்தன்ன கல், அகநானூறு 269 - பிடி மடிந்தன்ன குறுந்தொகை 13 - மாசு அறக் கழீஇய யானை போலப் பெரும் பெயல் உழந்த இரும் பிணர்த் துறுகல், குறுந்தொகை 36 - துறுகல் அயலது மாணை மாக்கொடி துஞ்சு களிறு இவரும், குறுந்தொகை 111 - கூழை இரும் பிடிக் கை கரந்தன்ன கேழ் இருந்துறுகல், குறுந்தொகை 279 - மழை கழூஉ மறந்த மா இரும் துறுகல் துகள் சூழ் யானையிற் பொலியத் தோன்றும், கலித்தொகை 108 - பிடி துஞ்சு அன்ன அறை, ஐங்குறுநூறு 239 - புகர் முக வேழம் இரும்பிணர்த் துறுகல் பிடி செத்துத் தழூஉம். நெஞ்சு களன் ஆக (3) - உ. வே. சாமிநாதையர் உரை - நின் நெஞ்சு இடமாக இருந்து, இரா. இராகவையங்கார் உரை - தன் நெஞ்சு சான்றாக, தன் நெஞ்சே அறியும் அவைக்களனாக. நோயோ (6) - உ. வே. சாமிநாதையர் உரை - ஓகாரம் எதிர்மறைப் பொருளது, நினக்கு நோயாதற்குக் காரணமில்லை என்றபடி. களன் - களம் என்பதன் போலி, ஞான்றை - ஐ சாரியை, வயினானே - ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்:

துறுகல் அயலது மாணை மாக்கொடி - உருண்டைக் கல்லின் அருகில் உள்ள மாணை என்னும் பெரிய கொடி, துஞ்சு களிறு இவரும் - துயில்கின்ற யானை மீது படரும், குன்ற நாடன் - மலை நாடன், நெஞ்சு களன் ஆக - உன் நெஞ்சில் இருந்து, நீயலென் யானென - நான் பிரியமாட்டேன் என்று, நற்றோள் மணந்த ஞான்றை - எனது நல்ல தோள்களை அணைத்த பொழுது, மற்று அவன் தாவா வஞ்சினம் உரைத்தது - அவன் கெடாத உறுதிமொழிகளை உரைத்தது, நோயோ - வருந்துவதற்கு காரணமாகுமோ, தோழி - தோழி, நின்வயினானே - உன்திறத்து