புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

புறநானூறு: 200

பரந்தோங்கு சிறப்பின் பாரி மகளிர்!


பரந்தோங்கு சிறப்பின் பாரி மகளிர்!

பாடியவர் :

  கபிலர்.

பாடப்பட்டோன் :

  விச்சிக்கோ.

திணை :

  பாடாண்.

துறை :

  பரிசில்.


பாடல் பின்னணி:

பாரி இறந்த பின்னர், கபிலர் பாரியின் பெண்களை தன்னுடைய பெண்களாக ஏற்று, அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க எண்ணி குறுநில மன்னனான விச்சிக்கோவை அணுகுகின்றார்.

பனி வரை நிவந்த பாசிலைப் பலவின்
கனி கவர்ந்து உண்ட கருவிரல் கடுவன்
செம்முக மந்தியொடு சிறந்து, சேண் விளங்கி
மழை மிசை அறியா மால் வரை அடுக்கத்துக்
கழை மிசைத் துஞ்சும் கல்லக வெற்ப, . . . . [05]

நிணந்தின்று செருக்கிய நெருப்புத்தலை நெடுவேல்
களங்கொண்டு கனலும் கடுங்கண் யானை
விளங்கு மணி கொடும் பூண் விச்சிக்கோவே,
இவரே பூத்தலை அறாஅப் புனை கொடி முல்லை
நாத் தழும்பு இருப்பப் பாடாது ஆயினும் . . . . [10]

கறங்கு மணி நெடுந்தேர் கொள்கெனக் கொடுத்த
பரந்து ஓங்கு சிறப்பின் பாரி மகளிர்,
யானே பரிசிலன் மன்னும் அந்தணன், நீயே
வரிசையில் வணக்கும் வாள் மேம்படுநன்,
நினக்கியான் கொடுப்பக் கொண்மதி, சினப்போர் . . . . [15]

அடங்கா மன்னரை அடக்கும்,
மடங்கா விளையுள் நாடு கிழவோயே.

பொருளுரை:

குளிர்ந்த மலையில் ஓங்கிய பசுமையான இலைகளையுடைய பலா மரத்தின் பழத்தை உண்ட கருமையான விரலையுடைய ஆண் குரங்கு சிவந்த முகத்தையுடைய தன்னுடைய பெண் குரங்குடன், தொலைவில் விளங்கி முகிலினம் எட்ட முடியாத உயரத்தையுடைய அடுக்கு மலையில், மூங்கிலின் மேல் துயிலும் மலை நாடனே!

கொழுப்பைத் தின்று களித்த நெருப்புப் போலும் தலையையுடைய நீண்ட வேலையும், போர்க்களத்தைத் தனதாக்கிக் கொண்டு சினமடையும் கொடூரமான யானைகளையும் உடைய, ஒளியுடைய மணிகளைக் கொண்ட வளைந்த அணிகலன்களை அணிந்த விச்சிக்கோவே!

இவர்கள், பூவைத் தன்னுடைய தலையில் மாறாது ஒப்பனைச் செய்தாற்போல் கொண்டிருந்த முல்லைக் கொடி, தன்னுடைய நாவில் தழும்பு ஏற்படப் பாடவில்லை என்றாலும், “ஒலிக்கும் மணிகளையுடைய என்னுடைய நெடியத் தேரை நீ கொள்வாயாக” என அதற்குக் கொடுத்த, பரந்து மேம்பட்ட பாரியின் பெண்கள். நான் பரிசில் வேண்டும் நிலைபெற்ற அந்தணன். நீ பகைவரைப் போரில் வென்று பணிய வைக்கும் வாளால் சிறப்படைந்தவன். இந்த மகளிரை உனக்கு நான் கொடுப்ப நீ அவர்களை ஏற்றுக் கொள்வாயாக, அடங்காத பகை மன்னர்களை அடக்கும் குறைவில்லாத மிக்க விளைதலையுடைய நாட்டின் தலைவனே!

குறிப்பு:

மன்னும் அந்தணன் (13) - ஒளவை துரைசாமி உரை - பெண் பேசுதற்கும், கொடுத்தற்கும், தூது போதலும், காதலர் இருவருள் ஒருவர்க் கொருவரது காம நிலை உரைத்தலும், இவை போல்வன பிறவும் செய்தலும் பார்ப்பனர்க்கு அமையுமெனத் தொல்காப்பியம் முதலிய பண்டைத் தமிழ் நூல்கள் கூறுதலின் ‘மன்னும் அந்தணன்’ என்றார். மதி - மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம். சொல்லதிகாரம். இடையியல் 26).

சொற்பொருள்:

பனி வரை நிவந்த - குளிர்ந்த மலையில் ஓங்கிய, பாசிலைப் பலவின் கனி கவர்ந்து உண்ட - பசுமையான இலைகளையுடைய பலா மரத்தின் பழத்தை உண்ட, கருவிரல் கடுவன் - கருமையான விரல் ஆண் குரங்கு, செம்முக மந்தியொடு - சிவந்த முகத்தையுடைய பெண் குரங்குடன், சிறந்து சேண் விளங்கி - தொலைவில் விளங்கி, மழை மிசை அறியா - முகிலினம் அறியாத உயரம், மால் வரை அடுக்கத்துக் கழை மிசைத் துஞ்சும் - உயர்ந்த அடுக்கு மலையில் மூங்கிலின் மேல் துயிலும், கல்லக வெற்ப - மலை நாடனே, நிணந் தின்று - கொழுப்பைத் தின்று, செருக்கிய நெருப்புத்தலை நெடுவேல் - களித்த நெருப்பு போலும் தலையையுடைய நீண்ட வேல், களங்கொண்டு - போர்க்களத்தை தனதாக்கிக் கொண்டு, கனலும் கடுங்கண் யானை - சினமுடைய கொடூரமான யானைகள், விளங்கு மணி கொடும் பூண் விச்சிக்கோவே - ஒளியுடைய மணிகளை உடைய வளைந்த அணிகலன்களை அணிந்த விச்சிக்கோவே, இவரே - இவர்களே (ஏகாரம் அசைநிலை), பூத்தலை அறாஅப் புனை கொடி முல்லை - பூவை தன்னுடைய தலையில் மாறாது ஒப்பனைச் செய்தாற்போலும் முல்லைக் கொடி (அறாஅ - அளபெடை), நாத் தழும்பு இருப்பப் பாடாது ஆயினும் - தன்னுடைய நாவில் தழும்பு ஏற்பட பாடவில்லை என்றாலும், கறங்கு மணி நெடுந்தேர் கொள்கெனக் கொடுத்த - ஒலிக்கும் மணிகளையுடைய உயர்ந்த தேரை நீ கொள்வாயாக எனக் கொடுத்த, பரந்து ஓங்கு சிறப்பின் பாரி மகளிர் - பரந்து சிறப்புற்ற பாரியின் பெண்கள், யானே பரிசிலன் மன்னும் அந்தணன் - நானே பரிசில் வேண்டும் நிலைபெற்ற அந்தணன் (யானே - ஏகாரம் அசைநிலை), நீயே வரிசையில் வணக்கும் வாள் மேம்படுநன் - நீயே பகைவரைப் போரில் வென்று பணிய வைக்கும் வாளால் சிறப்படைந்தவன் (நீயே - ஏகாரம் அசைநிலை), நினக்கியான் கொடுப்பக் கொண்மதி - உனக்கு நான் கொடுப்ப நீ கொள்வாயாக (மதி - முன்னிலையசை), சினப்போர் அடங்கா மன்னரை அடக்கும் - அடங்காத பகை மன்னர்களை அடக்கும், மடங்கா விளையுள் நாடு கிழவோயே - குறையாத மிக்க விளைதலையுடைய நாட்டின் தலைவனே (கிழவோயே - ஏகாரம் அசைநிலை)