புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

புறநானூறு: 164

வளைத்தாயினும் கொள்வேன்!


வளைத்தாயினும் கொள்வேன்!

பாடியவர் :

  பெருந்தலைச் சாத்தனார்.

பாடப்பட்டோன் :

  குமணன்.

திணை :

  பாடாண்.

துறை :

  பரிசில் கடாநிலை.


பாடல் பின்னணி:

தன் குடும்பத்தின் வறுமையையும் தன் மனைவி படும் துயரத்தையும் குமணனிடம் எடுத்துரைக்கின்றார் புலவர் பெருந்தலைச் சாத்தனார். பிற விவரங்களுக்கு அடுத்த பாடலைப் பார்க்கவும்.

ஆடு நனி மறந்த கோடு உயர் அடுப்பின்
ஆம்பி பூப்பத் தேம்பு பசி உழவாப்
பாஅல் இன்மையின் தோலொடு திரங்கி
இல்லி தூர்த்த பொல்லா வறு முலை
சுவைத்தொறும் அழூஉம் தன் மகத்துவம் நோக்கி . . . . [05]

நீரொடு நிறைந்த ஈர் இதழ் மழைக் கண் என்
மனையோள் எவ்வம் நோக்கி நினைஇ
நிற் படர்ந்திசினே நற்போர்க் குமண
என் நிலை அறிந்தனை ஆயின் இந்நிலைத்
தொடுத்தும் கொள்ளாது அமையலென் அடுக்கிய . . . . [10]

பண் அமை நரம்பின் பச்சை நல் யாழ்
மண் அமை முழவின் வயிரியர்
இன்மை தீர்க்கும் குடிப் பிறந்தோயே.

பொருளுரை:

எங்கள் இல்லத்தில் சமையலை மிகவும் மறந்த, பக்கங்கள் உயர்ந்த அடுப்பில், காளான் பூத்திருக்கின்றது. மெலியும் பசியால் வருந்தி, பால் இல்லாததால், தோலுடன் தளர்ந்து துளை மூடிய பொல்லாத வற்றிய முலையைச் சுவைக்கும் பொழுதெல்லாம், அழும் தன்னுடைய குழந்தையின் முகத்தை நோக்கி, கண்ணீருடன் ஈரம் படிந்த கண்களைக் கொண்டவளாக இருக்கின்றாள் என் மனைவி. அவளுடைய துன்பத்தை நினைத்து நினைத்து உன்னை நாடி வந்தேன், நல்ல முறையில் போரிடும் குமணா! என்னுடைய நிலைமையை நீ அறிவாய் ஆயின், இந்த நிலையில் உன்னிடம் பரிசில் பெறாமல் விடமாட்டேன், அடுக்கப்பட்ட இசை அமைந்த நரம்பினையுடைய தோலினால் போர்த்தப்பட்ட நல்ல யாழையும் மார்ச்சுனைப் பூசிய மத்தளத்தையுடைய, கூத்தர்களின் வறுமையைப் போக்கும் குடியில் பிறந்தவனே!

குறிப்பு:

சின் - மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம். சொல்லதிகாரம். இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை - ச. பாலசுந்தரம் உரை), அவற்றுள், இகுமும் சின்னும் ஏனை இடத்தொடும் தகு நிலை உடைய என்மனார் புலவர் (தொல்காப்பியம், இடையியல் 27). உழவா - உழந்து என்பது பொருள். செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது.

சொற்பொருள்:

ஆடு நனி மறந்த - அடுதலை மிகவும் மறந்த, சமையலை மிகவும் மறந்த, கோடு உயர் அடுப்பின் - பக்கங்கள் உயர்ந்த அடுப்பில், ஆம்பி பூப்ப - காளான் பூக்க, தேம்பு பசி உழவா - மெலியும் பசியால் வருந்தி, பாஅல் இன்மையின் - பால் இல்லாததால் (பாஅல் - அளபெடை), தோலொடு திரங்கி - தோலுடன் தளர்ந்து, இல்லி தூர்த்த - துளை மூடிய, பொல்லா வறு முலை சுவைத்தொறும் - பொல்லாத வற்றிய முலையைச் சுவைக்கும் பொழுதெல்லாம் அழூஉம் தன் மகத்துவம் நோக்கி - அழும் தன்னுடைய குழந்தையின் முகத்தை நோக்கி, நீரொடு நிறைந்த ஈர் இதழ் மழைக் கண் என் மனையோள் - கண்ணீருடன் ஈரம் படிந்த கண்களைக் கொண்ட என் மனைவி, எவ்வம் நோக்கி - துன்பத்தை நோக்கி, நினைஇ நிற் படர்ந்திசினே - நினைந்து உன்னை நாடி வந்தேன் (நினைஇ - அளபெடை, படர்ந்திசினே - சின் தன்மை அசை), நற்போர்க் குமண - நல்ல முறையில் போரிடும் குமணா, என் நிலை அறிந்தனை ஆயின் - என்னுடைய நிலைமையை நீ அறிவாய் ஆயின், இந்நிலைத் தொடுத்தும் கொள்ளாது அமையலென் - இந்த நிலையில் உன்னிடம் பரிசில் பெறாமல் விடமாட்டேன், அடுக்கிய - அடுக்கப்பட்ட, பண் அமை நரம்பின் பச்சை நல் யாழ் - இசை அமைந்த நரம்பினையுடைய தோலினால் போர்த்தப்பட்ட நல்ல யாழ், மண் அமை முழவின் - மார்ச்சுனைப் பூசிய மத்தளத்தையுடைய, வயிரியர் இன்மை தீர்க்கும் - கூத்தர்களின் வறுமையைப் போக்கும், குடிப் பிறந்தோயே - குடியில் பிறந்தவனே.