புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

புறநானூறு: 155

ஞாயிறு எதிர்ந்த நெருஞ்சி!


ஞாயிறு எதிர்ந்த நெருஞ்சி!

பாடியவர் :

  மோசி கீரனார்.

பாடப்பட்டோன் :

  கொண்கானங்கிழான்.

திணை :

  பாடாண்.

துறை :

  பாணாற்றுப்படை

வணர் கோட்டுச் சீறியாழ் வாடு புடைத் தழீஇ,
உணர்வோர் யார் என் இடும்பை தீர்க்க எனக்
கிளக்கும் பாண! கேள் இனி! நயத்தின்
பாழ் ஊர் நெருஞ்சிப் பசலை வான் பூ
ஏர்தரு சுடரின் எதிர் கொண்டு ஆஅங்கு, . . . . [05]

இலம்படு புலவர் மண்டை, விளங்கு புகழ்க்
கொண்பெருங்காலத்துக் கிழவன்
தண் தார் அகலம் நோக்கின, மலர்ந்தே.

பொருளுரை:

வளைந்த தண்டினையுடைய சிறிய யாழினை மெலிந்த இடையில் தழுவி, அறிந்தவர்கள் யார் என் துன்பத்தைத் தீர்க்க என்று விருப்பத்துடன் சொல்லும் பாணனே! இப்பொழுது நான் கூறுவதைக் கேட்பாயாக! பாழான ஊரில் நெருஞ்சி மலரின் பொன்னிறத்தை உடைய தூய மலர்கள் எழுகின்ற கதிரவனை எதிர்கொண்டாற் போல, ஆங்கு வறுமையுற்ற புலவர்களின் கிண்ணங்கள், விளங்கும் புகழைக் கொண்ட கொங்கானத்தின் தலைவனின் குளிர்ந்த மாலையை அணிந்த மார்பை மலர்ந்து நோக்கின.

சொற்பொருள்:

வணர் கோட்டுச் சீறியாழ் - வளைந்த தண்டினையுடைய சிறிய யாழ், வாடு புடைத் தழீஇ - மெலிந்த பக்கத்தில் தழுவி (தழீஇ - அளபெடை), உணர்வோர் யார் என் இடும்பை தீர்க்க என - அறிந்தவர்கள் யார் என் துன்பத்தைத் தீர்க்க என்று, கிளக்கும் பாண - சொல்லும் பாணனே, கேள் இனி - இப்பொழுது கேட்பாயாக, நயத்தின் - விருப்பத்துடன், பாழ் ஊர் நெருஞ்சிப் பசலை வான் பூ - பாழான ஊரில் நெருஞ்சி மலரின் பொன்னிறத்தை உடைய தூய மலர்கள், ஏர்தரு சுடரின் எதிர் கொண்டு - எழுகின்ற கதிரவனை எதிர்கொண்டாற் போல (சுடரின் - ஒளவை துரைசாமி உரை - இன் சாரியை, அது தோற்றம் வேண்டாத் தொகுதிக்கண் வந்தது. அன்றி, ஐகாரம் விகாரத்தால் தொக்கது எனவும் அமையும்), ஆஅங்கு - ஆங்கு (அளபெடை), இலம்படு புலவர் மண்டை - வறுமையுற்ற புலவர்களின் கிண்ணங்கள், விளங்கு புகழ்க் கொண்பெருங்காலத்துக் கிழவன் - விளங்கும் புகழைக் கொண்ட கொங்கானத்தின் தலைவன், தண் தார் அகலம் நோக்கின - குளிர்ந்த மாலையை அணிந்த மார்பை நோக்கின, மலர்ந்தே - மலர்ந்து (ஏகாரம் அசைநிலை).