புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

புறநானூறு: 046

அருளும் பகையும்!


அருளும் பகையும்!

பாடியவர் :

  கோவூர் கிழார்.

பாடப்பட்டோன் :

  சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்.

திணை :

  வஞ்சி.

துறை :

  துணை வஞ்சி.


பாடல் பின்னணி:

சோழ மன்னன் கிள்ளிவளவன் தன் பகைவனான மலையமான் திருமுடிக்காரியின் குழந்தைகளை யானையின் காலின் கீழே இட்டுக் கொலை செய்ய முயன்றான். கோவூர்கிழார், கிள்ளிவளவனைத் தடுத்து, அவனது மனதை மாற்ற இயற்றிய பாடல் இது.

கடையெழு வள்ளல்களில் ஒருவன் குறுநில மன்னன் மலையமான். இந்தப் பாடலில் சோழர்கள் புறாவின் துன்பத்தை நீக்கிய சிபிச்சக்கரவர்த்தியின் மரபினர் என்று கோவூர் கிழார் கூறுகின்றார்.

நீயே புறவின் அல்லல் அன்றியும் பிறவும்
இடுக்கண் பலவும் விடுத்தோன் மருகனை,
இவரே புலன் உழுது உண்மார் புன்கண் அஞ்சித்
தமது பகுத்து உண்ணும் தண்ணிழல் வாழ்நர்,
களிறு கண்டு அழூஉம் அழாஅல் மறந்த . . . . [05]

புன்தலைச் சிறாஅர் மன்று மருண்டு நோக்கி
விருந்திற் புன்கண் நோவுடையர்,
கேட்டனையாயின் நீ வேட்டது செய்ம்மே.

பொருளுரை:

நீ தான் புறாவின் துன்பம் மட்டுமல்லாமல் மற்ற துன்பங்கள் பலவற்றையும் நீக்கிய சோழ மரபின் வழித்தோன்றல். இச்சிறுவர்களின் மூதாதையர், கற்றவர்களது வறுமையைக் கண்டு அஞ்சி, தமது உணவைப் பங்கிட்டு உண்டு, அவர்களுக்குக் குளிர்ந்த நிழலாக விளங்கி வாழ்ந்தவர்கள்.

ஆனால் இங்கே, கொல்ல வரும் யானையைக் கண்டு அழுது, பின்பு அழுகையை மறந்து, பொலிவிழந்த தலையுடைய இச்சிறுவர்கள், மன்றத்தை மருண்டு நோக்கி வாழ்வில் முன்பு அறியாத புதிய துன்பத்தை அடைந்திருக்கின்றனர். நான் கூறிய அனைத்தையும் நீ கேட்டாய் என்றால், இனி நீ விரும்பியதைச் செய்.

சொற்பொருள்:

நீயே - நீ தான், புறவின் அல்லல் - புறாவின் துன்பம், அன்றியும் - மட்டும் அல்லாது, பிறவும் - பிறவும், இடுக்கண் பலவும் - துன்பம் பலவற்றையும், விடுத்தோன் - நீக்கியவன், மருகனை - வழித்தோன்றல் நீ (சோழ மரபின் வழித்தோன்றல்), இவரே - இவர்கள் தான், புலன் உழுது உண்மார் - அறிவால் உழுது உண்பவர்கள், புன்கண் - வறுமை, அஞ்சி - அச்சம் கொண்டு, தமது - தங்களது, பகுத்து உண்ணும் - பங்கிட்டு உண்ணும், தண் நிழல் - குளிர்ந்த நிழல், வாழ்நர் - வாழ்ந்தவர்கள் (இச்சிறுவர்களின் மூதாதையர்), களிறு - யானை, கண்டு - கண்டு, அழூஉம் - அழும் (அழூஉம் - அளபெடை), அழாஅல் - அழல் மறந்த, அழுகை மறந்த (அழாஅல் - அளபெடை), புன்தலை - பொலிவிழந்த தலை, குறைவாக முடியுடைய தலை, சிறாஅர் - சிறுவர்கள் (சிறாஅர் - அளபெடை), மன்று - மன்றம், மருண்டு - அச்சம் கொண்டு, நோக்கி - நோக்கி, விருந்திற் புன்கண் - புதியதான துன்பம், நோவுடையர் - துன்பத்தை உடையவர்கள், கேட்டனையாயின் - இதைக் கேட்டாய் என்றால், நீ வேட்டது - நீ விரும்பியதை, செய்ம்மே - செய்வாயாக (செய்ம்மே - ஈற்று மிசை உகரம் கெட்ட செய்யுமென் முற்றன்று, ஏவற் பொருட்டு வந்தது)