புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

புறநானூறு: 101

பலநாளும் தலைநாளும்!


பலநாளும் தலைநாளும்!

பாடியவர் :

  அவ்வையார்.

பாடப்பட்டோன் :

  அதியமான் நெடுமான் அஞ்சி.

திணை :

  பாடாண்.

துறை :

  பரிசில் கடாநிலை.


பாடல் பின்னணி:

ஔவையாரின் மீது மிக்க மதிப்பும், அவரது பாடல்கள் மீது மிகுந்த விருப்பமும் கொண்டவன் அதியமான் நெடுமான் அஞ்சி. ஒருமுறை, ஒளவையார் அதியமானிடம் பரிசில் வேண்டி அவனிடம் சென்று பாடினார். அதியமான் பரிசிலை உடனே வழங்காது காலம் தாழ்த்தினான். காலதாமதம் ஆனாலும் அதியமான் நிச்சயம் பரிசளிப்பான் என்று தன் நெஞ்சிடம் கூறுகின்றார் ஔவையார்.

ஒரு நாள் செல்லலம், இரு நாள் செல்லலம்,
பல நாள் பயின்று பலரொடு செல்லினும்,
தலை நாள் போன்ற விருப்பினன் மாதோ,
அணி பூண் அணிந்த யானை இயல் தேர்
அதியமான் பரிசில் பெறூஉங் காலம் . . . . [05]

நீட்டினும் நீட்டாது ஆயினும், யானை தன்
கோட்டு இடை வைத்த கவளம் போலக்
கையகத்தது, அது பொய் ஆகாதே,
அருந்த ஏமாந்த நெஞ்சம்
வருந்த வேண்டா, வாழ்க அவன் தாளே . . . . [10]

பொருளுரை:

ஒரு நாள் அல்ல, இரண்டு நாட்கள் அல்ல, யாம் பலரோடு கூடிப் பல நாட்கள் தொடர்ந்து சென்ற போதும் முதல் நாள் போல அன்பு செய்தவன் அவன். அழகிய அணிகலன்கள் அணிவிக்கப்பட்ட யானையையும், நன்கு புனையப்பட்ட தேரையும் கொண்ட அதியமான் அஞ்சியிடமிருந்து பரிசில் பெறும் காலம் நீண்டதாக இருந்தாலும், இல்லாவிட்டாலும் யானையின் தந்தங்களுக்கு இடையில் வைக்கப்பட்ட உணவுக் கவளம் எப்படித் தவறாமல் யானைக்கு உணவாகச் சென்று சேருமோ அதுபோல் அதியமானின் பரிசிலும் தவறாமல் நம் கைகளை வந்து அடையும். அதை விருப்பத்துடன் எதிர் நோக்கி இருக்கும் நெஞ்சே! நீ வருந்த வேண்டாம்! அதியமானின் முயற்சி வாழ்க!

குறிப்பு:

ஏமாந்த (9) - ஒளவை துரைசாமி உரை - ஏமாத்தல் = ஆசைப்படுதல். மலைபடுகடாம் 565-566 - தலைநாள் அன்ன புகலொடு வழி சிறந்து பல நாள் நிற்பினும் பெறுகுவிர். மாதோ - மாது, ஓ - அசைநிலைகள், ஆகாதே - ஏகாரம் அசைநிலை, தாளே - ஏகாரம் அசைநிலை, பெறூஉம் - அளபெடை. செல்லலம் - தன்மைப் பன்மை வினைமுற்று.

சொற்பொருள்:

ஒருநாள் - ஒருநாள், செல்லலம் - செல்லவில்லை யாம், இருநாள் - இரண்டு நாட்கள், செல்லலம் - செல்லவில்லை யாம், பல நாள் - பல நாட்கள், பயின்று - தொடர்ந்து சென்று, பலரொடு செல்லினும் - பலருடன் சென்றாலும், தலை நாள் - முதல் நாள், போன்ற - போன்று, விருப்பினன் - அன்பு செய்தான், மாதோ - அசைச் சொல், அணி - அழகிய, பூண் - அணிகலன், அணிந்த - சூடிய, யானை - யானை, இயல் தேர் - நன்கு புனையப்பட்ட தேர், இயலும் தேர், அதியமான் - அதியமான் நெடுமான் அஞ்சி, பரிசில் - பரிசு, பெறூஉங் காலம் - பெறும் காலம், நீட்டினும் - நீண்டாலும், நீட்டாது - நீண்டு இல்லாது, ஆயினும் - ஆனாலும், யானை தன் - யானை தன்னுடைய, கோட்டு - தந்தங்களின், இடை - இடையே, வைத்த - வைத்த, கவளம் - யானையின் உணவுக் கவளம், போல - போல, கையகத்து - கையினுள் உள்ள, அது - அப்பரிசு, பொய் ஆகாதே - பொய் ஆகாது, அருந்த - உண்ண, பெற்றுக் கொள்ள, ஏமாந்த - விரும்பிய, நெஞ்சம் - நெஞ்சம், மனது, வருந்த வேண்டா - வருத்தம் அடைய வேண்டாம், வாழ்க - வாழ்க, அவன் - அதியமான், தாளே - முயற்சி