புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

புறநானூறு: 095

புதியதும் உடைந்ததும்!


புதியதும் உடைந்ததும்!

பாடியவர் :

  அவ்வையார்.

பாடப்பட்டோன் :

  அதியமான் நெடுமான் அஞ்சி.

திணை :

  பாடாண்.

துறை :

  வாண் மங்கலம்.


பாடல் பின்னணி:

தொண்டை நாட்டை ஆண்டு வந்த தொண்டைமான் என்ற குறுநில மன்னன் அதியமான் மீது பகைமை கொண்டான். அதியமானோடு போர் புரிய எண்ணினான். அதை அறிந்த அதியமான் ஔவையாரை அவனிடம் தூதுவராக அனுப்பினான். தொண்டைமான் தன் படைப் பெருமையை ஒளவையாருக்குக் காட்ட எண்ணித் தன் படைக்கலக் கொட்டிலுக்கு அவரை அழைத்துச் சென்றான். அவன் எண்ணத்தை அறிந்த ஔவையார் தொண்டைமானிடம் இவ்வாறு கூறுகின்றார்.

இவ்வே பீலி அணிந்து மாலை சூட்டிக்
கண் திரள் நோன் காழ் திருத்தி நெய் அணிந்து
கடி உடை வியன் நகர், அவ்வே அவ்வே
பகைவர்க் குத்திக் கோடு நுதி சிதைந்து
கொல் துறைக் குற்றில மாதோ, என்றும் . . . . [05]

உண்டாயின் பதம் கொடுத்து
இல்லாயின் உடன் உண்ணும்
இல்லோர் ஒக்கல் தலைவன்,
அண்ணல் எம் கோமான், வைந்நுதி வேலே.

பொருளுரை:

இங்கே இருக்கும் போர்க்கருவிகள் அனைத்தும் மயில் இறகு அணியப்பட்டு, பூமாலை சூடப்பட்டுத் திரண்ட வலிமையான காம்புகள் அழகுற செய்யப்பட்டு, நெய் பூசப்பட்டுக் காவலுடைய பெரிய அரண்மனையில் உள்ளன. அங்கே அதியமான் அரண்மனையில் இருப்பவையோ, பகைவரைக் குத்தியதால் வேலின் பக்கமும் நுனியும் சிதைந்து, எப்பொழுதும் கொல்லனின் பணியிடமாகிய சிறிய பட்டறையில் கொட்டிக் கிடக்கின்றன. செல்வமும், உணவும் நிறைந்திருக்கும் பொழுது எல்லோருக்கும் உணவளித்த பின் உணவு உண்ணுகின்றவனும், இல்லாத பொழுது உணவை அனைவருக்கும் பங்கிட்டு உடன் சேர்ந்து உண்ணுகின்றவனுமான வறியவர்களின் சுற்றத்திற்குத் தலைவன் எங்கள் மன்னன்.

குறிப்பு:

வேலே - ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்:

இவ்வே - இவை, வேல்கள், போர்க்கருவிகள், பீலி அணிந்து - மயில் இறகு அணியப்பட்டு, மாலை - பூமாலை, சூட்டி - சூடப்பட்டு, கண் திரள் - உடல் பகுதி திரண்ட, நோன்காழ் - வலிமையான காம்பு, திருத்தி - அழகு செய்து, நெய் அணிந்து - நெய் பூசப்பட்டு, கடி உடை - காவல் உடைய, வியன் நகர் - பெரிய வீடு, அரண்மனை, அவ்வே அவ்வே - அவையே அவையே, பகைவர் குத்தி - பகைவரைக் குத்தி, கோடு - வேலின் பக்கம், நுதி சிதைந்து - நுனி சிதைந்து, கொல் துறை - கொல்லனின் பட்டறை, குற்றில - சிறிய இடம், மாதோ - மாது, ஓ அசைநிலைகள், என்றும் - எப்பொழுதும், உண்டாயின் - உண்டு என்றால், பதம் கொடுத்து - உணவு கொடுத்து, இல்லாயின் - இல்லை என்றால், உடன் உண்ணும் - உடன் சேர்ந்து உண்ணும், இல்லோர் - இல்லாதவர்களின், ஒக்கல் - சுற்றம், தலைவன் - தலைவன், அண்ணல் - தலைமையுடையவன், எம் கோமான் - எங்கள் மன்னன், வைந்நுதி - கூர்மையான நுனி, வேலே - வேற்படை, வேல்கள்.