ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

ஐங்குறுநூறு: 49

முல்லை - தேர் வியங்கொண்ட பத்து (பேயனார்)


முல்லை - தேர் வியங்கொண்ட பத்து (பேயனார்)

போர் வினை முடிந்த பின்னர் தேரில் இல்லம் மீளும் தலைவன் தன் தேர்ப்பாகனுக்குச் சொல்லியது.

பாடல் : 481
சாய்இறைப் பணைத்தோள் அவ்வரி அல்குல்
சேயிழை மாதரை உள்ளி நோய்விட
முள் இட்டு ஊர்மதி வலவநின்
புன்இயல் கலிமாப் பூண்ட தேரே. . . . .[481]

பொருளுரை:

வலவ, மூங்கில் போல் சாயல் கொண்ட தோளும் அழகிய வரிகொண்ட அல்குலும் உடைய உன் மனைவியை நினை. அவளுக்கும் உனக்கும் இருக்கும் காம நோய் தீரவேண்டும். பறவை போல் பறக்கும் உன் குதிரைகளைத் தாற்றுக் கோலைப் பயன்படுத்தி விரைந்து ஓட்டுக.

பாடல் : 482
தெரியிழை அரிவைக்குப் பெருவிருந் தாக
வல்விரைத்து கடவுமதி பாகவெள்வேல்
வென்றடு தானை வேந்தனொடு
நாளிடைச் சேப்பின் ஊழியின் நெடிதே. . . . .[482]

பொருளுரை:

தெரிந்தெடுத்த அணிகலன்களைப் பூண்டவள் உன் மனைவி அரிவை. அவளுக்கு நீ இன்ப விருந்து தரவேண்டும். அதனால், மிகவும் விரைந்து தேரை ஓட்டுக. பாக, வெற்றி வேல் வேந்தன் வரும் வரையில் காத்திருந்தால் அது ஊழிக்காலம் போல நெடிது காலம் ஆகும்.

பாடல் : 483
ஆறுவனப்பு எய்த அலர்தா யினவே
வேந்துவிட் டனனே மாவிரைந் தனவே
முன்னுறக் கடவுமதி பாக
நன்னுதல் அரிவை தன்னலம் பெறவே. . . . .[483]

பொருளுரை:

ஆறு அழகுடன் திகழும்படி மலர்கள் பூத்துக் கிடக்கின்றன. வேந்தன் போர்த்தொழிலை முடித்துக்கொண்டான். குதிரைகள் விரைந்து பாய்கின்றன. நீ நம் தேரை அவற்றிற்கு முன் செல்லும்படி ஓட்டுக. பாக, நல்ல நெற்றி கொண்ட உன் அரிவை மனைவி நலம் பெறவேண்டும் அல்லவா?

பாடல் : 484
வேனில் நீங்கக் கார்மழை தலைஇக்
காடுகவின் கொண்டன்று பொழுது பாடுசிறந்து
கடியக் கடவுமதி பாக
நெடிய நீடினம் நேரிழை மறந்தே. . . . .[484]

பொருளுரை:

வேனில் காலம் கடந்துவிட்டது. கார் காலம் வந்து மழை பொழிகிறது. காடு அழகுடன் திகழ்கிறது. பாக, பெருமிதம் சிறக்க விரைந்து தேரை ஓட்டுக. மனைவியை மறந்து நீண்ட காலம் தங்கிவிட்டோம்.

பாடல் : 485
அரும்படர் அவலம் அவளும் தீரப்
பெருந்தோள் நலம்வர யாமும் முயங்க
ஏமதி வலவ தேரே
மாருண்டு உகளும் மலரணிப் புறவே. . . . .[485]

பொருளுரை:

அவள் நினைவுத் துன்பம் தீரவேண்டும். அவள் பருத்த தோள்களைத் தழுவவேண்டும். வலவ, தேரை ஓட்டுக.. பூத்துக் கிடக்கும் முல்லை நிலத்தில் விலங்கினங்கள் மருண்டு ஓடும்படி ஓட்டுக.

பாடல் : 486
பெரும்புன் மாலை ஆனது நினைஇ
அரும்படர் உழைத்தல் யாவது என்றும்
புல்லி ஆற்றாப் புரையோள் காண
வன்புதெரிந்து ஊர்மதி வலவநின்
புள்ளியல் கலைமாப் பூண்டதேரே. . . . .[486]

பொருளுரை:

பெரிதும் அற்பமான மாலைப் பொழுது இது. இதனைத் தாங்க முடியாத வருத்தத்துடன் பிரிந்திருக்கும் நம்மை நினைத்துக்கொண்டிருப்பாள் உன் மனைவியும், என் மனைவியும். அந்தத் துன்பத்தைப் போக்குவது எப்படி? தழுவி ஆறுதல் பெறாத அந்த மேம்பட்ட பண்புடையவளைக் காண, சாட்டையால் அடித்து ஓட்டு. தேரில் பூட்டிய குதிரைகள் பறவைகளைப் போலப் பறக்கட்டும்.

பாடல் : 487
இதுமன் பிரிந்தோர் உள்ளும் பொழுதே
செறிதொடி உள்ளம் உவப்ப
மதியுடை வலவ ஏமதி தேரே. . . . .[487]

பொருளுரை:

பிரிந்தவர் நினைக்கும் மாலைப் பொழுது இது. நெருங்கிய வளையல்களை அணிந்தவள் மகிழும்படி அறிவுக் கூர்மை உடைய வலவ.. தேரை விரைந்து ஓட்டுக.

பாடல் : 488
கருவி வானம் பெயல் தொடங்கின்றே
பெருவிறல் காதலி கருதும் பொழுதே
விரிஉளை நன்மாப் பூட்டிப்
பருவரல் தீரக் கடவுமதி தேரெ. . . . .[488]

பொருளுரை:

மேகம் திரண்டு வானம் மழை பொழியத் தொடங்கியுள்ளது. பெருமை மிக்க காதலி காதலனை நினைக்கும் காலம் இது. விரிந்த பிடரி மயிர் கொண்டதும் துள்ளிப் பாய்வதுமான நல்ல குதிரையைப் பூட்டி, நம் ஆசைத் துன்பம் தீர, தேரை ஓட்டுக.

பாடல் : 489
அம்சிரை வண்டின் அரியினம் மொய்ப்ப
மெண்புல முல்லை மலரும்மாலைப்
பையுள் நெஞ்சின் தையல் உவப்ப
நுண்புரி வண்கயிறு இயக்கிநின்
வண்பரி நெடுந்தேர் கடவுமதி விரைந்தே. . . . .[489]

பொருளுரை:

அரி என்னும் வண்டினம் அழகிய சிறகுகளை உடையது. அவை மொய்க்கும்படியாக முல்லைப் பூக்கள் மலரும் மாலை வேளை இது. துன்பத்தில் வருந்தும் பெண்ணின் நெஞ்சம் மகிழ வேண்டும். நுண்ணிய புரி முறுக்குக் கொண்ட கடிவாளக் கயிற்றைச் சுண்டி வளம் மிக்க குதிரையை ஓட்டு. தேர் விரைந்து செல்லட்டும்.

பாடல் : 490
அம்தீம் கிளவி தான்தர எம்வயின்
வந்தன்று மாதோ காரே ஆவயின்
ஆய்த்தொடி அரும்படர் தீர
ஆய்மணி நெடுந்தேர் கடவுமதி விரைந்தே. . . . .[490]

பொருளுரை:

அவள் கொஞ்சும் மொழி என் நினைவுக்கு வருகிறது. மணி கட்டிய தேரை விரைந்து செலுத்துக.