ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

ஐங்குறுநூறு: 05

மருதம் - புலவிப் பத்து (ஓரம்போகியார்)


மருதம் - புலவிப் பத்து (ஓரம்போகியார்)

மனைவியைப் பிரிந்து பலநாள் விலைமகளோடு வாழ்ந்த கணவன் மீண்டும் வீடு திரும்பியபோது மனைவி ஊடும் செய்திகள் இந்தப் பத்துப் பாடலில் அடுக்கப்பட்டுள்ளன. மீனுக்கு நிகர் பயறோ, நெல்லோ கொடுத்துப் பண்டம் மாற்றிக்கொண்ட அக்கால வாழ்க்கை முறைகள் இவற்றில் சுட்டப்பட்டுள்ளன.

பாடல் : 041
தன்பார்ப்புத் தின்னும் அன்புஇல் முதலையொடு
வெண்பூம் பொய்கைத்து அவனூர்என்ப அதனால்
தன்சொல் உணர்ந்தோர் மேனி
பொன்போல் செய்யும் ஊர்கிழ வோனே. . . . .[041]

பொருளுரை:

முதலை தான் முட்டையிட்டுப் பொறிந்த குஞ்சுகளையே தின்னும் பழக்கம் கொண்டது. அப்படிப்பட்ட முதலை வாழும் பொய்கைகளைக் கொண்ட ஊரன் அவன். என் உடம்பு பொன்னிறம் பெற்று வாட விட்டுவிட்டு வேறு பெண்களுடன் வாழும் அவன் சொல்வழி வாழ்பவர்கள் எப்படி இருப்பார்கள்? அந்த முதலைகள் போலத்தானே இருப்பார்கள். – தலைவனை ஏற்றுக்கொள்ளுமாறு வாயில்கள் கூறியபோது தலைவி இப்படிச் சொல்கிறாள்.

பாடல் : 042
மகிழ்மிகச் சிறப்ப மயங்கினள் கொலோ
யாணர் ஊரநின் மானிழை யரிவை
காவிரி மலிர்நிறை யன்னநின்
மார்புநனி விலக்கல் தொடங்கி யோளே. . . . .[042]

பொருளுரை:

ஊர! காவிரியில் நீராடுவது போன்ற இன்பம் தருவது உன் மார்பு. அப்படி உன் மார்போடு ஆடி விலக்கிவிட்டாளோ அந்த ஒப்பனைக்காரி? (யாணர் = புதுப்புது வருவாய்) – கணவன் பரத்தையிடமிருந்து மீண்டபோது மனைவி இப்படிச் சொல்லி ஊடுகிறாள்.

பாடல் : 043
அம்பணத் தன்ன யாமை யேறிச்
செம்பின் அன்ன பார்ப்புப் பலதுஞ்சும்
யாணர் ஊர நின்னினும்
பாணன் பொய்யன் பல்சூ ளினனே. . . . .[043]

பொருளுரை:

ஆமை மீது ஏறி அதன் பல குஞ்சுகள் உறங்கும். பரணி மீது செம்புப் பாத்திரங்கள் கவிழ்த்து வைத்திருப்பது போல உறங்கும். அந்த ஆமைக் குஞ்சுகள் போலப் பரத்தையர் பலர் உன் மார்பில் உறங்கினர். அதனை உன்னை விட பாணன் இல்லை என்று சூள் உரைக்கிறான். (சத்தியம் செய்கிறான்) – தலைவி இப்படிச் சொல்லிக் கணவனிடம் ஊடுகிறாள்.

பாடல் : 044
தீம்பெரும் பொய்கை யாமை இளம்பார்ப்புத்
தாய்முகம் நோக்கி வளர்ந்திசின் ஆஅங்கு
அதுவே ஐயநின் மார்பே
அறிந்தனை ஒழுகுமதி அறனுமார் அதுவே. . . . .[044]

பொருளுரை:

தாய் முகத்தைப் பார்த்துக்கொண்டே ஆமைக் குஞ்சுகள் வளரும். அதுபோல உன் முகத்தைப் பார்த்துக்கொண்டு நான் வாழ்கிறேன். உன் மார்பும் எனக்கு வேண்டும். அதுதான் எனக்கும் உனக்கும் அறம். – பரத்தையிடமிருந்து மீண்டுவந்த கணவனிடம் மனைவி இப்படிச் சொல்கிறாள்.

பாடல் : 045
கூதிர் ஆயின் தன்கலிழ் தந்து
வேனில் ஆயின் மணிநிறங் கொள்ளும்
யாறுஅணிந் தன்றுநின் ஊரே
பச்ப்பணிந் தனவால் மகிழ்நஎன் கண்ணே. . . . .[045]

பொருளுரை:

ஊர! உன் ஊரிலுள்ள ஆறு குளிர் காலத்தில் கலங்கி ஓடுகிறது. கோடை காலத்தில் தெளிந்து ஓடுகிறது. நீயும் அப்படிப் பரத்தையருக்கே பயன்படுகிறாய். எப்போது இங்கு வருவாய் என்று பார்த்துப் பார்த்து என் கண்கள் பசந்துகிடக்கின்றன. – தலைவியின் சார்பாகத் தோழி சொல்கிறாள். இதுவும் ஊடல் நெறி.

பாடல் : 046
நினக்கே அன்றுஅது எமக்குமார் இனிதே
நின்மார்பு நய்ந்த நன்னுதல் அரிவை
வேண்டிய குறிப்பினை யாகி
ஈண்டுநீ அருளாது ஆண்டுறை தல்லே. . . . .[046]

பொருளுரை:

உன் மார்பை விரும்பும் பெண்ணோடு வாழ்கிறாய். அவளது குறிப்பறிந்து இங்கு வராமல் அங்கேயே வாழ்கிறாய். அப்படியே இருந்துவிடு. அது உனக்கும் நல்லது. எனக்கும் நல்லது. – தலைவியின் ஊடல்.

பாடல் : 047
முள்ளெயிற்றுப் பாண்மகள் இன்கெடிறு சொரிந்த
அகன்பெரு வட்டி நிறைய மனையோள்
அரிகால் பெரும்பயறு நிறைக்கும் ஊர
மாணிமழை ஆயம் அறியும்நின்
பாணன் போலப் பலபொய்த் தல்லே. . . . .[047]

பொருளுரை:

பாணன் வட்டி நிறைய முள் போன்ற பற்களை உடைய கெடிறு மீன் தரப் பெற்றுக்கொண்ட உழவன் மனைவி அந்த வட்டி நிறைய பயறு தருவாள். இப்படிப்பட்ட பாணன் வாழும் ஊரினன் நீ. பரத்தை உறவை அறியேன் என்று உன் பாணன் போல நீயும் சொல்லும் பொய்யை அந்த ஒப்பனைக்காரியின் (பரத்தையின்) தோழிமார் அறிவர். – இப்படிச் சொல்லி மனைவி ஊடுகிறாள்.

பாடல் : 048
வலைவல் பாண்மகன் வாலெயிற்று மடமகள்
வராஅல் அஒரிந்த வட்டியுள் மனையோள்
யாண்டுகழி வெண்ணெல் நிறைக்கும் ஊர
வேண்டேம் பெருமநின் பரத்தை
யாண்டுச் செய்குறியோடு ஈண்டுநீ வரவே. . . . .[048]

பொருளுரை:

வலை போட்டு மீன் பிடிக்கும் பாண்மகனின் மனைவி வட்டி (வள்ளம் என்று வழங்கப்படும் துகத்தலளவைப் பாத்திரம்) நிறைய வரால் மீனைக் கொடுக்க அதனை வாங்கிக்கொண்டு அந்த வட்டி நிறைய உழத்தி [மனையோள்] நல்ல நெல்லை [வெண்ணெல்] தரும் ஊரன் நீ. உன் பரத்தைக்குக் குறி காட்டிவிட்டு இங்கு நீ வருவதை நான் விரும்பவில்லை – என்று சொல்லி மனைவி ஊடுகிறாள்.

பாடல் : 049
அஞ்சில் ஓதி அசைநடைப் பாண்மகள்
சில்மீன் சொரிந்து பல்நெல் பெறூஉம்
யாணர் ஊரநின் பாண்மகன்
யார்நலம் சிதயப் பொய்க்குமோ இனியே. . . . .[049]

பொருளுரை:

ஊர! உன் பாண்மகன் தலை முடியை விரித்துக்கொண்டு அசைநடை போட்டுக்கொண்டு வந்து சில மீன்களைக் கொடுத்துவிட்டு நெல்லை மிகுதியாகப் பெற்றுக்கொள்வான். அவன் முன்பு என் நலம் சிதைய உன்னைப் பரத்தையரோடு கூட்டுவித்தான். இன்று யார் நலத்தைச் சிதைக்கப் பொய் சொல்கிறானோ – இவ்வாறு சொல்லி மனைவி ஊடுகிறாள்.

பாடல் : 050
துணையோர் செல்வமும் யாமும் வருந்துதும்
வஞ்சி ஓங்கிய யாணர் ஊர
தஞ்சம் அருளாய் நீயேநின்
நெஞ்சம் பெற்ற இவளுமார் அழுமே. . . . .[050]

பொருளுரை:

வஞ்சிமரம் வளம் கொழிக்கும் ஊர! நீ இங்கு வந்துவிட்டால் உனக்குத் துணையாக இருந்த பரத்தையர் செல்வம் இல்லாமல் வருந்துவர். அதனை எண்ணி நானும் வருந்துவேன். நீ அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்காததால் உன் மனைவியும் அழுவாள் – எனத் தலைவி இதுவரை விட்டுக்கொடுத்த இரக்கக் குணத்தைச் சுட்டிக்காட்டித் தோழி தலைவனை உணரவைக்கிறாள்.