ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

ஐங்குறுநூறு: 21

குறிஞ்சி - அன்னாய் வாழிப் பத்து (கபிலர்)


குறிஞ்சி - அன்னாய் வாழிப் பத்து (கபிலர்)

----------------

பாடல் : 201
அன்னாய் வாழிவேண் டன்னை என்னை
தானும் மலைந்தான் எமக்கும் தழையாயின
பொன்வீ மணியரும் பினவே
என்ன மரம்கொல்அவர் சாரல் அவ்வே. . . . .[201]

பொருளுரை:

தாயே, வாழ்க, உன்னை வேண்டுகிறேன். என் தலைவன் தானும் சூடியிருந்தான். எனக்கும் தழையாடையாகப் புனைந்து தந்தான். பொன் போன்ற இந்த மலர்கள் அரும்பு விட்டிருக்கின்றன. இது என்ன மரம். அவர் மலைச்சாரலிலும் மலர்கின்றனவே! - தலைவி தோழியிடம் கூறுகிறாள்.

அன்னாய் – பெண் பெண்ணை அழைக்கும் விளி – இக்காலத்திலும் ‘தாயே’ என்று விளிப்பர்.
வேண்டு – நான் வேண்டுகிறேன் – தன்மை ஒருமை வினைமுற்று.
பொன் வீ – பொன்னிற மலர் – வேங்கை மலர் – திருமணக் குறிப்பு மலர்

பாடல் : 202
அன்னாய் வாழிவேண் டன்னை நம்மூர்ப்
பார்ப்பனக் குறுமகப் போலத் தாமும்
குடுமித் தலைய மன்ற
நெடுமலை நாடன் ஊர்ந்த மாவே. . . . .[202]

பொருளுரை:

தாயே, வாழ்க, உன்னை வேண்டுகிறேன். நம் ஊர்ப் பார்ப்பனச் சிறுவன் போல அவன் வந்த குதிரைக்கும் தலையில் குடுமி இருக்கிறதே! - தலைவி தோழியிடம் கூறுகிறாள்.

பாடல் : 203
அன்னாய் வாழிவேன் டன்னைநம் படப்பை
தேன்மயங்கு பாலினும் இனிய அவர்நாட்டு
உவலை கூவற் கீழ
மானுண்டு எஞ்சிய கலிழி நீரே. . . . .[203]

பொருளுரை:

தாயே, வாழ்க, உன்னை வேண்டுகிறேன். அவனுடன் சென்றேன். வழியில் பள்ளத்தில் இருந்த கூவல் குழியில் இருந்த நீரை மான் உண்டது. அது உண்டத்து போக எஞ்சியிருந்த கலங்கல் நீரைப் பருகினேன். அது நம் தோட்டத்தில் தேனைக் கலந்து தந்ததாயே பால், அந்தப் பாலைக் காட்டிலும் இனிப்பாக இருந்தது. - தலைவி தோழியிடம் கூறுகிறாள்.

பாடல் : 204
அன்னாய் வாழிவேண் டன்னைஅது எவன்கொல்
வரையர மகளிரின் நிரையுடன் குழீஇப்
பெயர்வழிப் பெயர் வழித் தவிராது நோக்கி
நல்லள் நல்லள் என்ப
தீயேன் தில்ல மலைகிழ வோர்க்கே. . . . .[204]

பொருளுரை:

தாயே, வாழ்க, உன்னை வேண்டுகிறேன். நம் மலையில் விளையாடும் அரமகளிர் போல் தோழிமாருடன் சேர்ந்து நான் நடக்கும்போது என்னைப் பார்த்து நல்லவள், அழகி என்று எல்லாரும் கூறுகின்றனர். ஆனால் என்னை விரும்பும் மலையரசனுக்கு மட்டும் நான் தீயவள் ஆகிவிட்டேனே! (அவன் மீண்டும் வரவில்லையே) - தலைவி தோழியிடம் கூறுகிறாள்.

பாடல் : 205
அன்னாய் வாழிவேண் டன்னையென் தோழி
நனிநான் உடையள் நின்னும் அஞ்சும்
ஒலிவெள் ளருவி ஓங்குமலை நாடன்
மலர்ந்த மார்பின் பாயல்
துஞ்சிய வெய்யள் நோகோ யானே. . . . .[205]

பொருளுரை:

தாயே, வாழ்க, உன்னை வேண்டுகிறேன். என் தோழி மிகவும் நாணம் கொண்டவள். உன்னிடம் உண்மையைச் சொல்ல அஞ்சுகிறாள். மலைநாடன் மார்புப் படுக்கையில் இருக்கப் பெரிதும் விரும்புகிறாள். ஒலிக்கும் வெண்ணிற அருவி கொட்டும் நாடன் அவன். - தோழி தாயிடம் சொல்கிறாள்.

பாடல் : 206
அன்னாய் வாழிவேண் டன்னை உவக்காண்
மாரிக் குளத்துக் காப்பாள் அன்னன்
தூவலின் நனைந்த தொடலை ஒள்வாள்
பாசி சூழ்ந்த பெருங்கழல்
தண்பனி வைகிய வைக்கச் சினனே. . . . .[206]

பொருளுரை:

தாயே, வாழ்க, உன்னை வேண்டுகிறேன். அங்கே பார். பனித் தூவலில் நனையும் மாலையோடு, கையில் வாளை வைத்துக்கொண்டு, பாசி படிந்த பெரிய கழலைக் காலில் அணிந்துகொண்டு, பனி படிந்த கச்சினை இடையில் உடையவனாக நிற்கிறான். அவன் மழைபொழியும் குன்றத்தைக் காப்பவன் போலக் காணப்படுகிறான். - தலைவியின் காதலன் நிற்பதைத் தோழி தாய்க்குக் காட்டுகிறாள்.

பாடல் : 207
அன்னாய் வாழிவேண் டன்னை நன்றும்
உணங்கல கொல்லோநின் தினையே உவக்காண்
நிணம்பொதி வழுக்கில் தோன்றும்
மழைத்தலை வைத்துஅவர் மணிநெடுங் குன்றே. . . . .[207]

பொருளுரை:

தாயே, வாழ்க, உன்னை வேண்டுகிறேன். உன் வயலிலுள்ள தினை விளையவில்லையா? உச்சியில் கதிர் பொதிந்து காணப்படுகிறதே. கொழுப்புடன் கூடிய கறித்துண்டம் போலக் காணப்படுகிறதே. (தினைப்புனம் காக்கச் செல்ல வேண்டாமா?) - தாயைத் தலைவியோ, தோழியோ வினவுகிறாள்.

பாடல் : 208
அன்னாய் வாழிவேண் டன்னை கானவர்
கிழங்ககழ் நெடுங்குழி மல்க வேங்கைப்
பொன்மலி புதுவீத் தாஅம் அவர் நாட்டு
மணிநிற மால்வரை மறைதொறு
அணிமலர் நெடுங்கண் ஆர்ந்தன பனியே. . . . .[208]

பொருளுரை:

தாயே, வாழ்க, உன்னை வேண்டுகிறேன். மலைமக்கள் கிழங்கை எடுக்கத் தோண்டிய குழி நிறையும்படி நிறையும்படி பொன்னிற வேங்கை மல்லர்கள் கொட்டிக்கிடக்கும் நாடு அவர் நாடு. தினைப்புனம் காத்துவிட்டு இல்லம் திரும்பும் வேளையில் அவர் நாட்டு மலை மறையும்போது படபடக்கும் இவள் கண்களில் பனிநீர் நிறைகிறது. - தாயிடம் தோழி வினவுகிறாள்.

பாடல் : 209
அன்னாய் வாழிவேண் டன்னை நீமற்று
யான்அவர் மறத்தல் வேண்டுதி யாயின்
கொண்டல் அவரைப் பூவின் அன்ன
வெண்டலை மாமழை சூடித்
தோன்றல் அனாதுஅவர் மணிநெடுங் குன்றே. . . . .[209]

பொருளுரை:

தாயே, வாழ்க, உன்னை வேண்டுகிறேன். நான் அவரை மறக்கவேண்டும் என்று நீ சொன்னால் என் நெஞ்சிலிருந்து அவர் மலையின் தோற்றம் மறையவில்லையே. கீழைக்காற்றில் பூக்கும் அவரைப் பூ போல வெள்ளையும் கறுப்புமாக மழைமேகம் உலவும் குன்று அவர் மலை. - தலைவி தோழியிடம் கூறுகிறாள்.

பாடல் : 210
அன்னாய் வாழிவேண் டன்னைநம் படப்பை
புலவுச்சேர் துறுகல் ஏறி அவர்நாட்டுப்
பூக்கெழு குன்றம் நோக்கி நின்று
மணிபுரை வயங்கிழமை நிலைபெறத்
தணிதற்கும் உரித்துஅவள் உற்ற நோயே. . . . .[210]

பொருளுரை:

தாயே, வாழ்க, உன்னை வேண்டுகிறேன். நம் தோட்டத்தில் புலால் நாற்றம் வீசும் பாறாங்கல் இருக்கிறதே அதன் மேல் ஏறி நீலமணி போல் தோன்றும் அவர் குன்றத்தை இவள் பார்த்தால் போதும். அணிகலன்கள் நழுவும்படி மேனி மெலிந்திருக்கும் இவள் நோய் தணிய வாய்ப்பு உண்டு. - தோழி தலைவியின் தாயிடம் சொல்கிறாள்.