ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

ஐங்குறுநூறு: 23

குறிஞ்சி - அம்மவழிப் பத்து (கபிலர்)


குறிஞ்சி - அம்மவழிப் பத்து (கபிலர்)

அம்ம வாழி தோழி என்று அழைத்துக் கூறும் பாடல்கள் பத்து இதில் உள்ளன.

பாடல் : 221
அம்ம வாழி தோழி கதலர்
பாவை யன்னஎன் ஆய்கவின் தொலைய
நன்மா மேனி பசப்பச்
செல்வல் என்பதம் மலைகெழு நாடே. . . . .[221]

பொருளுரை:

தலைவி தோழிக்கு... அம்ம வாழி, தோழி! என் காதலர் தெய்வப் பொம்மை போன்ற என் மேனி அழகு தொலைய மாமை நிறம் கொண்ட மேனி பசக்க அவர் மலை நாட்டுக்குப் “போகிறேன்” என்று சொல்கிறாரே.

பாடல் : 222
அம்ம வாழி தோழி நம்மூர்
நனிந்துவந்து உறையும் நறுந்தண் மார்வன்
இன் இனி வாரா மாறுகொல்
சின்னிரை ஓதிஎன் நுதல்பசப் பதுவே. . . . .[222]

பொருளுரை:

தலைமகள் தோழியிடம்... அம்ம வாழி, தோழி! நம் ஊருக்கு வந்து செல்லும் மார்பன் மணக்கும் மார்பன் இதமாகத் தழுவும் மார்பன் இனி தம் ஊருக்கு வரமாட்டாரோ என்று என் நெற்றி பசக்கிறது போலும்.

பாடல் : 223
அம்ம வாழி தோழி நம்மலை
வரையாம் இழியக் கோடல் நீடக்
காதலர்ப் பிரிந்தோர் கையற நலியும்
தண்பனி வடந்தை அச்சிரம்
முந்துவந்த் தனர்நம் காத லோரே. . . . .[223]

பொருளுரை:

தோழி தலைமகளிடம்... அம்ம வாழி, தோழி! நம் மலையில் ஊற்று நீர் வழிகிறது. கோடல் மலர் பூத்திருக்கிறது. பிரிந்து வருந்தும் நம் துன்பம் போக்க வடக்குக் காற்று வீசிப் பனி பொழியும் அற்சிரப் பருவத்துக்கு முன்பே திரும்பி வருகிறார்.

பாடல் : 224
அம்ம வாழி தோழி நம்மலை
மணிநிறங் கொண்ட மாமலை வெற்பில்
துணீநீர் அருவி நம்மோடு ஆடல்
எளிய மன்ஆல் அவர்க்கினி
அரிய ஆகுதல் மருண்டனென் யானே. . . . .[224]

பொருளுரை:

தலைவி தோழியிடம்... அம்ம வாழி, தோழி! நம் மலை மணி போல் நிறம் கொண்டு விளங்கும் மாமலை. அதில் வெள்ளைத் துணி போல் நீர் ஒழுகும் அருவியில் நீராடல் அவருக்கு எளிது. இனி, அது முடியாதோ என மருள்கிறேன். தாய் இல்லத்தில் இருத்திவிட்டாள்.

பாடல் : 225
அம்ம வாழி தோழி பைஞ்சுனைப்
பாசடை நிவந்த பனிமலர்க் குவளை
உள்ளகங் கமழும் கூந்தல் மெல்லியல்
ஏர்திகழ் ஒண்ணுதல் பசத்தல்
ஓரார் கொல்நம் காத லோரே. . . . .[225]

பொருளுரை:

தோழி தலைவியிடம்... அம்ம வாழி, தோழி! இலைகள் அடைந்து பச்சை நிறத்தில் தோன்றும் சுனையில் பூத்திருக்கும் குவளை மலர் போல் கூந்தலுக்குள் மணம் வீசும் மெல்லியலே அழகொழுகும் உன் நெற்றி பசந்து போவதை அவர் சினைத்துக் கூடப் பார்க்கவில்லை.

பாடல் : 226
அம்ம வாழி தோழி நம்மலை
நறுந்தண் சிலம்பின் நாறுகுலைக் காந்தன்
கொங்குஉன் வண்டின் பெயர்ந்துபுற மாறிநின்
வன்புடை விறற்கவின் கொண்ட
வன்பி லாளன் வந்தனன் இனியே. . . . .[226]

பொருளுரை:

தோழி தலைவியிடம்... அம்ம வாழி,தோழி! நம் மலையில் நல்ல குளுமையான சோலையில் மணம் பரப்பிக்கொண்டு பூத்திருக்கும் காந்தள் மலரில் தேனை உண்ட பின்னர் அதனை விட்டுவிட்டு ஓடும் வண்டினைப் போல, உன் வலிமையான வீறாப்புக் கொண்ட மேனி அழகினைக் கவர்ந்துகொண்டு அன்பு இல்லாதவனாக மாறிய ‘அன்பிலாளன்’ இப்போது வந்திருக்கிறான்.

பாடல் : 227
அம்ம வாழி தோழி நாளும்
நன்னுதல் பசப்பவௌம் நறுந்தோள் நெகிழவும்
ஆற்றலம் யாம் என மதிப்பக் கூறி
நப்பிரிந்து உறைதோர் மன்றநீ
விட்டனை யோஅவர் உற்ற சூளே. . . . .[227]

பொருளுரை:

தோழி தலைவியிடம்... அம்ம வாழி! தோழி! நெற்றியில் பசப்பு ஊர்கிறது. நல்ல தோள் நெகிழ்ந்து மெலிகிறது. “என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை”. என் பிறர் மதிக்கும்படிக் கூறுகிறாய். காரணம் நம்மை அவர் பிரிந்து வாழ்கிறார் – என்கிறாய். அது சரி. “உன்னைப் பிரியமாட்டேன்” என்று அவர் உன்னிடம் சூள் உரைத்தாரே, அதனை மறந்துவிட்டாயா? அவர் உன்னைக் கைவிட மாட்டார்.

பாடல் : 228
அம்ம வாழி தோழி நம்மூர்
நிரந்திலங்கு அருவிய நெடுமலை நாடன்
இரந்துகுறை யுறாஅன் பெயரின்
என்ஆ வதுகொல்நம் இன்னுயிர் நிலையே. . . . .[228]

பொருளுரை:

தோழி அறத்தொடு நின்றது.... அம்ம வாழி, தோழி! நம் ஊரில் தெளிவாகத் தோன்றும் அருவியை உடைய நாட்டின் தலைவன் அவன். அவன் நம் தாய் தந்தையரிடம் கெஞ்சிக் கேட்டு என்னைப் பெறானாயின் என் உயிர் என்ன ஆகுமோ தெரியவில்லை.

பாடல் : 229
அம்ம வாழி தோழி நாம்அழப்
பன்னாள் பிரிந்த அறனி லாளன்
வந்தன னோமற்று இரவில்
பொன்போல் விறல்கவின் கொள்ளுநின் நுதலே. . . . .[229]

பொருளுரை:

தோழி தலைவியிடம்... அம்ம வாழி, தோழி! நாம் அழும்படி பல நாள் நம்மைப் பிரிந்திருந்த ‘அறனிலாளன்’ வந்திருக்கிறானோ? இந்த இரவில், உன் முகம் பொன் போல் பூத்து அழகுடன் திகழ்கிறதே!

பாடல் : 230
அம்ம வாழி தோழி நம்மொடு
சிறுதினைக் காவல் நாகிப் பெரிதுநின்
மெல்தோள் நெகிழவும் திருநுதல் பசப்பவும்
பொன்போல் விறற்கவின் தொலைத்த
குன்ற நாடற்கு அயர்வர்நன் மணனே. . . . .[230]

பொருளுரை:

தோழி தலைவியிடம்... அம்ம வாழி, தோழி! தினைப் புனம் காத்தபோது நமக்குப் பாதுகாப்பாக இருந்தவன், இல்லாமையால், பெரிதும், உன் மென்மையான தோள் நெகிழ்ந்து மெலிகிறது. உன் நெற்றி பசக்கிறது. பொன் போல் திகழ்ந்த உன் மேனி அழகு தொலைந்துவிட்டது. அந்தக் குன்ற நாடனுக்கு நம் பெற்றோர் மணம் முடித்துத் தருவர். கவலை வேண்டா.