ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

ஐங்குறுநூறு: 24

குறிஞ்சி - தெய்யோப் பத்து (கபிலர்)


குறிஞ்சி - தெய்யோப் பத்து (கபிலர்)

“தெய்யோ” என்று முடியும் 10 பாடல்கள் இதில் உள்ளன. “ஐயோ” \ “அய்யோ” என்பது அழுகை ஒலிக்குறிப்பு. “தெய்யோ” என்பது மகிழ்ச்சி ஒலிக்குறிப்பு.

பாடல் : 231
யாங்குவல் லுநையோ ஓங்கல் வெற்ப
இரும்பல் கூந்தல் திருந்திழை அரிவை
திதலை மாமை தேயப்
பசலை பாயப் பிரிவு தெய்யோ. . . . .[231]

பொருளுரை:

தோழி பிரிந்திருந்து மீண்ட தலைவனிடம்... ஓங்கிய மலை நாட்டின் தலைவனே, எப்படி இந்த வல்லமையைப் பெற்றாய்? இவள் இருண்ட பல்கிய கூந்தலை உடையவள். திருந்திய அணுகலன் பூண்டவள். அரிவை பருவத்தவள். இவள் மேனியில் இருந்த அழகிய திதலை மாமை நிறம் தேய்ந்து பசலை நிறம் கொள்ளுமாறு பிரிய எங்குக் கற்றாய்?

பாடல் : 232
போதார் கூந்தல் இயலணி அழுங்க
ஏதி லாளனை நீபிரிந் ததற்கே
அழவிர் மணிப்பூண் அனையப்
பெயலா னாஎன் கண்ணே தெய்யோ. . . . .[232]

பொருளுரை:

தோழி பிரிந்திருந்து மீண்ட தலைவனிடம்... இயல்பாகப் பூ சூடிக்கொள்ளும் இவள் பூ சூடிக்கொள்ளவில்லை. உறவேதும் இல்லாதவள் ஆக்கிவிட்டு நீ பிரிந்துவிட்டாய். இவள் முலையில் தீ பற்றி எரிவது போல அணிகலன் அணிந்திருந்தாள். அது நனையும்படிக் கண்ணீர் விட்டுக்கொண்டிருந்தாள் அவளுக்காக நானும் கண்ணீர் விட்டுக்கொண்டிருந்தேன்.

பாடல் : 233
வருவை யல்லை வாடைநனி கொடிதே
அருவரை மருங்கின் ஆய்மணி வரன்றி
ஒல்லென இழிதரும் அருவிநின்
கல்லுடை நாட்டுச் செல்லல் தெய்யோ. . . . .[233]

பொருளுரை:

தோழி தலைவனிடம்... சென்றால் திரும்பி வரும் எண்ணம் இருக்காது. வாடைக் காற்று இவளை வாட்டும். உன் மலையில் மணிக் கற்களை உருட்டிக்கொண்டு ‘ஒல்’ என்னும் ஓசையுடன் அருவி இறங்கும். அந்த நாட்டுக்கு நீ செல்ல வேண்டாம். மணந்துகொண்டு செல்

பாடல் : 234
மின்னவிர் வயங்கிழை ஞெகிழச் சாஅய்
நன்னுதல் பசத்த லாவது துன்னிக்
கனவிற் காணும் இவளே
நனவிற் காணாள்நின் மார்பே தெய்யோ. . . . .[234]

பொருளுரை:

தலைவன் கேட்கிறான்... மின்னல் போல் ஒளிறும் அணிகலன்களை அணிந்த இவள் உடல் நெகிழ்ந்து மெலிகிறாள். நெற்றி பசலை கொள்கிறது. ஏன்? தோழி விளக்குகிறாள். உன் மார்பைக் கனவில் கண்டு அணைக்கிறாள். நனவில் பெற முடியவில்லை. அதனால்தான்.

பாடல் : 235
கையுற வீழ்ந்த மையில் வன்மொடு
அரிது காதலர்ப் பொழுதே அதனால்
தெரியிழை தெளிர்ப்ப முயங்கிப்
பிரியலம் என்கமோ எழுகமோ தெய்யோ. . . . .[235]

பொருளுரை:

தோழி தலைவியிடம் வினவுகிறாள்... வானம் தாங்கிக்கொள்ள முடியாமல் எல்லா மழையையும் கொட்டித் தீர்த்துவிட்டது. இப்போது எங்கும் மேகமே இல்லாமல் தூய்மையாக உள்ளது. உன் காதலர் உன்னை உடன் கொண்டு செல்ல வந்திருக்கிறார். அதனால், அவரிடம் சென்று உன் அணிகலன்கள் ஒலிக்கும்படி தழுவிப் “பிரியமாட்டேன்” என்று சொல்லப் போகிறாயா? அல்லது அவருடன் செல்லப் போகிறாயா?

பாடல் : 236
அன்னையும் அறிந்தனள் அலரும் ஆயின்று
நன்மனை நெடுநகர் புலம்புகொள உறுதரும்
இன்னா வாடையும் மலையும்
நும்மூர்ச் செல்கம் எழுகமோ தெய்யோ. . . . .[236]

பொருளுரை:

தலைவி சொல்வதாகத் தோழி தலைவனிடம் சொல்கிறாள்... களவு ஒழுக்கம் தாய்க்கும் தெரிந்துவிட்டது. ஊரும் அலர் தூற்றுகிறது. வீட்டில் உள்ளவர் எல்லாரும் புலம்பித் துன்புறுகின்றனர். துன்புறுத்தும் வாடைக் காற்றும் வீசுகிறது. உன் ஊருக்குச் செல்லலாமா? புறப்படலாமா?

பாடல் : 237
காமம் கடவ உள்ளம் இனைப்ப
யாம்வந்து காண்பதோர் பருவம் ஆயின்
ஓங்கித் தோன்றும் உயர்வரைக்கு
யாங்கெனப் படுவது நும்மூர் தெய்யோ. . . . .[237]

பொருளுரை:

தலைவி சொல்வதாகத் தோழி தலைவனிடம் சொல்கிறாள்... காம உணர்வு என்னைத் துரத்துகிறது. உள்ளம் துன்புறுகிறது. நீ வர நான் வந்து காண்பது ஏதோ ஒரு பருவமாக அருகி வருகிறது. இப்படி இருந்தால் எப்படி? ஓங்கித் தோன்றும் உன் உயர்ந்த மலை எங்கு உள்ளது? உன் ஊர் எங்கு உள்ளது? உடன் வருகிறேன்.

பாடல் : 238
வாய்க்கோட்டு வயத்தகர் வாராது மாறினும்
குரூஉமயிர்ப் புருவை ஆசையின் அல்கும்
ஆஅல் அருவித் தண்மெருஞ் சிலம்ப
நீஇவன் வரூஉம் காலை
மேவரும் மாதோஇவள் நலனே தெய்யோ. . . . .[238]

பொருளுரை:

தோழி தலைவனிடம் சொல்கிறாள்... நீண்ட கொம்பை உடைய ஆட்டுக்கடா வராவிட்டாலும், வரும் என்னும் நப்பாசையுடன் சிவந்த மயிர் கொண்ட செம்மறி ஆடு காத்துக்கொண்டிருக்கும் மலைக்காட்டுந் தலைவன் நீ. பெரிய அருவி பாயும் மலைக் காட்டுத் தலைவன் நீ. நீ வரும் காலம் எப்போது என்று இவள் மேனி அழகு ஆவலோடு காத்துக்கொண்டிருக்கும்.

பாடல் : 239
சுரும்புணக் களித்த புகர்முக வேழம்
இரும்பிணர்த் துறுகல் பிடிசெத்துத் தழூநின்
குன்றுகெழு நன்னாட்டுச் சென்ற பின்றை
நேரிறைப் பணைத்தோள் ஞெகிழ
வாரா யாயின் வாழேம் தெய்யோ. . . . .[239]

பொருளுரை:

தோழி தலைவனிடம் சொல்கிறாள்... ஒழுகும் மத நீரில் வண்டுகள் மொய்க்கும் ஆண்யானை கொடிகள் பின்னிக் கிடக்கும் பாறாங்கல்லைந் தன் பெண்யானை என்று மயக்கத்தில் தழுவும் குன்றுகள் நிறைந்தது உன் நாடு. உன் நாட்டுக்குச் சென்ற பின்னர் இவளிடம் நீ வராவிட்டால் இவள் உயிர் வாழமாட்டாள்.

பாடல் : 240
அறியோம் அல்லேம் அறிந்தனம் மாதோ
பொறிவரிச் சிறைய வண்டினம் மொய்ப்பச்
சாந்தம் நாறும் நறியோள்
கூந்தல் நாறும்நின் மார்பே தெய்யோ. . . . .[240]

பொருளுரை:

தோழி தலைவனிடம் சொல்கிறாள்... நாங்கள் ஒன்றும் தெரியாதவர்கள் அல்லோம். எங்களுக்கு எல்லாம் தெரியும். வரிக் கோடுகளை உடைய வண்டுகள் மணக்கும் இவள் கூந்தலை மொய்க்கும். உன் மார்புச் சந்தனம் இவள் மேனியில் மணக்கும்.