ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

ஐங்குறுநூறு: 36

பாலை - வரவுரைத்த பத்து (ஓதலாந்தையார்)


பாலை - வரவுரைத்த பத்து (ஓதலாந்தையார்)

பொருளீட்டச் சென்ற தலைவன் மீண்டான். தலைவி மகிழ்கிறாள். தோழி சொல்கிறாள். தலைவன் சொல்கிறான்.

பாடல் : 351
அத்த பலவின் வெயில்தின் சிறுகாய்
அருஞ்சுரம் செல்வோர் அருந்தினர் கழியும்
காடுபின் ஒழிய வந்தனர் தீர்கினிப்
பல்லிதல் உண்கண் மடந்தைநின்
நல்லெழில் அல்குல் வாடிய நிலையே. . . . .[351]

பொருளுரை:

வழியில் பலாப்பழம் வெயிலில் வெம்பியிருக்கும். அந்த வழியாகச் செல்வோர் அதனைத் தின்றுகொண்டு செல்வர். அப்படிச் சென்றவர் காடுகளைக் கடந்து வந்துவிட்டார். மலரிதழ் போன்ற கண்ணை உடையவளே உன் அல்குல் வாட்டம் தீரும்.

பாடல் : 352
விழுத்தொடை மறவர் வில்லிடத் தொலைந்தோர்
எழுத்துடை நடுகிஅல் அன்ன விழுப்பிணர்ப்
பெருங்கை யானை இருஞ்சினம் உறைக்கும்
வெஞ்சுரம் அரிய என்னார்
வந்தனர் தோழிநம் காத லோரே. . . . .[352]

பொருளுரை:

தோழி, வில்லாற்றல் மிக்க மறவர் வில்லில் அம்பு விடத் தொலைந்தவருக்கு பெயர் எழுதி நடப்பட்ட நடுகல் போலச் சுற்றிக்கொண்டிருக்கும் குடிகளை அறுக்கும் யானை தோற்றமளிக்கும் காட்டு வழியில் சென்ற காதலர் வந்துள்ளார்.

பாடல் : 353
எரிக்கொடி கலை இய செவ்வரை போலச்
சுடர்ப்பூண் விளங்கும் எந்தெழில் அகலம்
நீ இனிது முயங்க வந்தனர்
மாயிருஞ் சோலை மலையிறந் தோரே. . . . .[353]

பொருளுரை:

எரி என்பது செந்நிறம் கொண்ட ஒருவகைக் கொடி. அது மண்டிச் சிவப்பு நிறத்தில் தோன்றும் மலை போல மார்பு கொண்ட உன் காதலர் – இருண்ட சோலையை உடைய மலையைக் கடந்து சென்றவ்வர் – நீ தழுவுமாறு வந்துள்ளார்.

பாடல் : 354
ஈர்ம் பிணவு புணர்ந்த செந்நாய் ஏற்றாஇ
மறியுடை மான்பிணை கொள்ளாது கழியும்
அரிய சுரன்வந் தனரே
தெரியிழை அரிவைநின் பண்புதர விரைந்தே. . . . .[354]

பொருளுரை:

குட்டிகளை உடைய பெண் செந்நாயைப் புணர்ந்த ஆண் செந்நாய் குட்டியை உடைய மானைப் பிடிக்காமல் செல்லும் காடு அது. அந்தக் காட்டு வழியாகச் சென்றவர் வந்துள்ளளார். அந்தப் பண்பைப் பின்பற்றுவார்.

பாடல் : 355
திருந்திழை அரிவை நின்னலம் உள்ளி
அருஞ்செயல் பொருட்பிணி பெருந்திரு உறுகெனச்
சொல்லாது பெயர்தந் தேனே பல்பொறிச்
சிறுகண் யானை திரிதரும்
நெறிவிலங்கு அதர கானத் தானே. . . . .[355]

பொருளுரை:

திருந்திய இழையணி கொண்டவளே... பெருஞ்செல்வத்தை நீ அடையவேண்டும் என்று உன் நலத்துக்காகப் பொருள் ஈட்டிக்கொண்டு வர, உன்னிடம் சொல்லாமல் சென்றவர், பல புள்ளிகள் கொண்ட முகமும், சிறிய கண்ணும் கொண்ட யானை திரிந்துகொண்டிருக்கும் சென்று பெரும்பொருளுடன் வந்துள்ளார்.

பாடல் : 356
உள்ளுதற்கு இனிய மன்ற செல்வர்
யானை பிணித்த பொன்புனை கயிற்றின்
ஒள்ளெரி மேய்ந்த சுரத்திடை
உள்ளம் வாங்கத் தந்தநின் குணனே. . . . .[356]

பொருளுரை:

நினைப்பதற்கு இன்பமாக உள்ளது. யானை கட்டி வைத்திருக்கும் இரும்புச் சங்கிலி போலத் தீ பற்றி எரிந்ததால் தோற்றமளிக்கும் காட்டு வழியில் சென்றவர் உன்னை நினைத்துக்கொண்டு கிட்டிய பொருளுடன் மீண்டுள்ளார்.

பாடல் : 357
குரவம் மலர மரவம் பூப்பச்
சுரன்அணி கொண்ட கானம் காணூஉ
அழுங்குக செய்பொருள் செலவுஎன விரும்பிநின்
அம்கலிழ் மாமை கவின
வந்தனர் தோழிநம் காத லோரே. . . . .[357]

பொருளுரை:

குரவம் பூ மலர்ந்து, மரவம் பூ பூத்து, காடே அழகுடன் திவழ்வதைப் பார்த்து, வாக்களித்த வேனில் பருவம் வந்துவிட்டது என்று எண்ணி, பொருள் தேட மேலும் செல்லலாமல், உன் மேனியின் மாமை நிறம் மேலும் பொலிவு பெற அவர் வந்துள்ளார்.

பாடல் : 358
கோடுயர் பன்மலை இறந்தனர் ஆயினும்
நீடவிடுமோ மற்றே நீடுநினைந்து
துடைத்தொறும் துடைத்தொறும் கலங்கி
உடிஅத்தெழு வெள்ள மாகிய கண்ணே. . . . .[358]

பொருளுரை:

முகடுகள் உயர்ந்துள்ள பல மலைகளைத் தாண்டி அவர் சென்றாலும், துடைக்கத் துடைக்கக் கொட்டும் உன் கண்ணீர் வெள்ளம் அவர் நினைவுக்கு வராதா? மேலும் செல்ல விடுமா? திரும்பிவிட்டார்,

பாடல் : 359
அரும்பொருள் வேட்கைய மாகிநின் துறந்து
பெருங்கல் அதரிடைப் பிரிந்த காலைத்
தவநனி நெடிய வாயின இனியே
அணியிழை உள்ளியாம் வருதலின்
அணிய வாயின சுரத்தைடை யாறே. . . . .[359]

பொருளுரை:

அரிய பொருளைத் தேடவேண்டும் என்பது என் பேராவல். அதற்காக உன்னை விட்டுவிட்டு மலைப்பாதை வழியில் சென்றேன். பொருளை ஈட்டினேன். திரும்பி வருவது நீண்ட வழிதான். என்றாலும் உன்னை நினைத்தேன். தொலைவு சிறிதாகிவிட்டது.-- தலைவன் சொல்கிறான்.

பாடல் : 360
எரிகவர்ந் துண்ட என்றூழ் நீளிடை
அரிய வாயினும் எளிய அன்றே
அவவூறு நெஞ்சம் கலவுநனி விரும்பிக்
கடுமான் திண்தேர் கடைஇ
நெடுமான் நோக்கிநின் உள்ளி வரவே. . . . .[360]

பொருளுரை:

தீ பற்றி எரிந்த காட்டடு வழி. கோடைக் காலம். கடத்தற்கு அரியதுதான். என்றாலும் அது எளிமை ஆயிற்று. எதனால்? நெஞ்சில் ஆசை உன்னைக் கட்டி அணைக்கவேண்டும்ஃ என்னும் விருப்பம். என் தேரிலே குதிரைகளைப் பூட்டி விரைந்து வந்துவிட்டேன். மானைப் போல் நெடிது நோக்கும் உன் கண்கள் என் நினைவில் நிற்கின்றன.