ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

ஐங்குறுநூறு: 42

முல்லை - கிழவன் பருவம் பாராட்டுப் பத்து (பேயனார்)


முல்லை - கிழவன் பருவம் பாராட்டுப் பத்து (பேயனார்)

வீட்டுக்கு உரிய தலைவன் பருவ காலத்தைப் பாராட்டி காலத்திற்கு ஏற்றவாறு நடந்துகொள்ளுதல்.

பாடல் : 411
ஆர்குரல் எழிலி அழிதுளி சிதறிக்
கார்தொடங் கின்றால் காமர் புறவே
வீழ்தரு புதுப்புனல் ஆடுகம்
தாழிருங் கூந்தல் வம்மடி விரைந்தே. . . . .[411]

பொருளுரை:

ஆரவார இடிக்குரல் எழுப்பும் மேகம் மழை பொழிந்து கார்காலம் நம் முல்லை நிலத்தில் தொடங்கிவிட்டது. முல்லை நிலம் காட்சிக்கு இனிதாக விளங்குகிறது. கொட்டும் அருவியில் நீராடலாம். நீண்டு தாழ்ந்த கூந்தல் அழகியே வருக.

பாடல் : 412
காயா கொன்றை நெய்தல் முல்லை
போதவிழ் தளவொடு பிடவலர்ந்து கவினிப்
பூவணி கொண்டன்றால் புறவே
பேரமர்க் கண்ணி ஆடுகம் விரைந்தே. . . . .[412]

பொருளுரை:

காயா, கொன்றை, நெய்தல், முல்லை, தளவம், பிடவு முதலான பூக்கள் மலர்ந்து முல்லைநிலம் அழகாகத் திகழ்க்கிறது. இவற்றையெல்லாம் பெரிதும் விரும்பும் கண்ணினை உடையவளே விளையாடுவோம் விரைந்து வருக.

பாடல் : 413
நின்னுதல் நாறும் நறுந்தண் புறவின்
நின்னே போல மஞ்ஞை யாலக்
கார்தொடங் கின்றால் பொழுதே
பேரியல் அரிவை நாநயத்தகவே. . . . .[413]

பொருளுரை:

உன் நெற்றியைப் போல முல்லை நிலம் மணக்கிறது. உன்னைப் போல மயில் ஆடுகிறது. கார்காலம் தொடங்கிவிட்டது. அரிவைப் பருவம் கனிந்தவளே நாம் விரும்பி நுகர்வோம் வருக.

பாடல் : 414
புள்ளும் மாவும் புணர்ந்தினது உகளக்
கோட்டவும் கொடியவும் பூப்பல பழுனி
மெல்லியல் அரிவை கண்டிகு
மல்லல் ஆகிய மணங் கமழ் புறவே. . . . .[414]

பொருளுரை:

பறவைகளும் விலங்குகளும் இனிதே கூடித் துள்ளி விளைநாடித் திளைக்கின்றன. கிளைகளிலும், கொடிகளிலும் பூக்கள் பல்கிக் கிடக்கின்றன. மெல்லிய இயல்பினை உடைய அரிவைப் பருவத்தவளே இவற்றையெல்லாம் கண்டு களிக்கலாம் மணம் கமழும் முல்லை நில அழகினைக் காண வருக.

பாடல் : 415
இதுவே மடந்தைநாம் மேவிய பொழுதே
உதுவே மடந்தைநாம் உள்ளிய புறவே
இனிதுடன் கழிக்கின் இளமை
இனிதால் அம்ம இனிஅவர்ப் புணர்வே. . . . .[415]

பொருளுரை:

மடந்தையே இதுதான் நாம் விரும்பிய பருவ காலம். அதுதான் நாம் நினைத்த முல்லை நிலம் இருவரும் சேர்ந்து இதனைப் பயன்படுத்திக்கொண்டால் நம் இளமை இனிதாகும் இனியவர் சேர்ந்திருப்பதுதான் இன்பம்.

பாடல் : 416
போதார் நறுந்துகள் கவினிப் புறவில் தாதார்ந்து
களிச்சுரும்பு அரற்றும் காமர் புதலின்
மடப்பிடி தழீஇய மாவே
சுடர்த்தொடி மடவரல் புணர்ந்தனம் யாமே. . . . .[416]

பொருளுரை:

முல்லை நிலத்தில் மொட்டு விரிந்து பூந்துகள்கள் கொட்டிக் கிடக்கின்றன தேனை உண்டு வண்டுகள் பாடுகின்றன கண்ணுக்ககினிய புதர்கள் தன் பெண்ணோடு உறவு கொள்ளும் ஆண்யானையைப் பார் சுடரும் அணிகலன் அணிந்தவள்ளே நாமும் யானையைப் போல இருக்கலாமே.

பாடல் : 417
கார்கலந் தன்றால் புறவே பலவுடன்
நேர்பரந் தனவால் புனமே ஏர்கலந்து
தாதார் பிரசம் மொய்ப்பப்
போதார் கூந்தல் முயங்கினள் எம்மே. . . . .[417]

பொருளுரை:

முல்லை நிலத்தில் கார் காலம் வந்துவிட்டது. காடே கவின் பெற்றுள்ளது பிரசம் என்னும் தேனீக்கள் தேனை உண்கின்றன பூ அணிந்த கூந்தலை உடையவள் என்னை அணைத்துக்கொண்டாள்.

பாடல் : 418
வானம் பாடி வறங்களைந்து ஆனாது
அழிதுளி தலைஇய புறவின் காண்வர
வானர மகளா நீயே
மாண்முலை அடைய முயங்கி யோயே. . . . .[418]

பொருளுரை:

இந்தத முல்லை நிலத்தில் மழைத்துளிகள் விழுகின்றன வானம்பாடிப் பறவைகள் அவற்றை உண்டு மகிழ்கின்றன நீ என்ன வானர மகளா? அழகிய முலை அமுங்க அணைக்கிறாயே.

பாடல் : 419
உயிர்கலந்து ஒன்றிய செயிர்தீர் கேண்மைப்
பிரிந்துறல் அறியா விருந்து கவவி
நம்போல் நயவரப் புணர்ந்தன
கண்டிகு மடவரல் புறவின் மாவே. . . . .[419]

பொருளுரை:

நம் உயிரும் உயிரும் கலந்து ஒன்றாகிக் கிடக்கின்றன குற்றமற்ற நட்பு இது இந்த நட்பிற்குப் பிரியத் தெரியாது விருந்து போல ஒன்றை ஒன்று கவ்விக்கொண்டன இப்படி நாம் புணர்ந்திருப்பது போல பெண்ணே அங்கே பார் முல்லை நில விலங்குகளும் புணர்ந்து வாழ்கின்றன.

பாடல் : 420
பொன்னெனமலர்ந்த கொன்றை மணியெனத்
தேம்படு காயா மலர்ந்த தொன்றியொடு
நன்னலம் எய்தினை புறவே நின்னைக்
காணிய வருதும் யாமே
வாள்நுதல் அரிவையொடு ஆய்நலம் படர்ந்தே. . . . .[420]

பொருளுரை:

கொன்றை பொன்னைப் போல மலர்ந்திருக்கிறது காயா மணி போல் மலர்ந்திருக்கிறது தோன்றி மலரும் பூத்திருக்கிறது முல்லை நிலமே நல்ல நலம் பெற்றுத் திகழ்கிறது அதனால் நான் உன்னைக் காண வந்ததுள்ளேன் ஒளிரும் முகம் கொண்ட அரிவையே உன் அழகெல்லாம் எனக்கு வேண்டும் அதை நினைத்துக்கொண்டுதான் வந்துள்ளேன்.