ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

ஐங்குறுநூறு: 29

குறிஞ்சி - கிள்ளைப் பத்து (கபிலர்)


குறிஞ்சி - கிள்ளைப் பத்து (கபிலர்)

கிளிகள் மிகுந்த மலையின் தலைவன் தலைவியின் காதலன். கிளியின் செயல்கள் தலைவனின் செயல்களோடு ஒப்புமை உடையனவாக, - உள்ளுறை உவமையாக – காட்டப்பட்டுள்ள பத்துப் பாடல்கள் இதில் உள்ளன.

பாடல் : 281
வெள்ள வரம்பின் ஊழி போகியும்
கிள்ளை வாழிய பலவே ஒள்ளிழை
இரும்பல் கூந்தல் கொடிச்சி
பெருந்தோள் காவல் காட்டி யவ்வே. . . . .[281]

பொருளுரை:

தலைவியை விரும்பும் தலைவன் சொல்கிறான்... வெள்ளம் என்னும் எண்ணின் அளவு ஊழிக் காலமாகக் கிளிகள் வாழ்கின்றன. இந்தக் கிளிகள் வாழ்க. இவை விளைந்திருக்கும் தினையைக் கவர்வதால் தானே அந்தக் கிளிகளை ஓட்டும் பொருட்டு என் காதலி கொடிச்சி தினைப்புனம் காவலுக்கு வந்துள்ளாள். அவளது பருத்த தோள் எனக்குக் கிடைப்பதாயிற்று.

பாடல் : 282
சாரல் புறத்த பெருங்குரல் சிறுதினைப்
பேரமர் மழைக்கண் கொடிச்சி கடியவும்
சோலைச் சிறுகிளி உன்னு நாட
அரிருள் பெருகின வாரல்
கோட்டுமா வாழங்கும் காட்டக நெறியே. . . . .[282]

பொருளுரை:

தோழி தலைவனிடம் சொல்கிறாள்... மலைச்சாரலில் பருத்த கதிர்களுடன் தினை விளைந்திருக்கிறது. அவற்றை உண்ணும் கிளிகளை என் தலைவி கொடிச்சி ஓட்டுகிறாள். விரும்பும் கண்களோடு ஓட்டுகிறாள். அப்படிக் கொடிச்சி ஓட்டவேண்டும் என்று தலைவன் விருப்பத்தோடு நினைக்கிறான். இப்படி நினைக்கும் மலைநாடனே நிறைந்த இருளில் என் தலைவியை அடையும் பொருட்டு வரவேண்டாம். கொம்புகளை உடைய காட்டு யானை நடமாடும்எ வழி அது. துன்பம் நேரலாம் அல்லவா?

பாடல் : 283
வன்கண் கானவன் மென்சொல் மடமகள்
புன்புல மயக்கத்து உழுத ஏஅனல்
பைம்புறச் சிறுகிளி கடியும் நாட
பெரிய கூறி நீப்பினும்
பொய்வலைப் படூஉம் பெண்டுதவப் பலவே. . . . .[283]

பொருளுரை:

மகளிரின் மனப்பாங்கைத் தோழி கூறுகிறாள்... புன்செய் நிலத்தை உழுது விதைத்த தினையைக் கவர வரும் கிளியைக் கானவன் மகள் ஓட்டுவாள். கானவன் கொடூரமான கண்ணோட்டம் உள்ளவன். இத்தகைய நாட்டின் தலைவன் நீ. எவ்வளவோ பெருமளவில் நான் என் தலைவிக்கு எடுத்துரைத்தேன். அவளோ உன் பொய் வலையில் விழுந்து உன்னைத் தழுவுகிறாள். பெண் புத்தி பின் புத்தி அல்லவா?

பாடல் : 284
அரிய தாமே செவ்வாய்ப் பைங்கிளி
குன்றக் குறவர் கொய்தினைப் பைங்கால்
இருவை நீள்புனங் கண்டும்
பிரிதல் தேற்றாப் பேரன் பினவே. . . . .[284]

பொருளுரை:

தலைவி கிளியைப் பார்த்துப் பேசுகிறாள்... தலைவன் புரிந்துகொள்ளவேண்டும் என்பது கருத்து சிவந்த வாயை உடைய பச்சைக்கிளி இரங்கத் தக்கது. குன்றக் குரவர் தினையைக் கொய்துகொண்டு சென்றுவிட்டனர். எனினும் அவை கதிர் இல்லாத இருவித் தட்டையில் அமர்ந்திருக்குன்றன. அவற்றைப் பிரிய முடியாத பேரன்பினவாக உள்ளன.

பாடல் : 285
பின்னிருங் கூந்தல் நன்னுதல் குறமகள்
மெல்தினை நுவனை யுண்டு தட்டையின்
ஐவனச் சிறுகிளி கடியும் நாட
வீங்குவளை நெகிழப் பிரிதல்
யாங்குவல் லுநையோ ஈங்கிவள் துறந்தே. . . . .[285]

பொருளுரை:

தோழி தலைவனிடம் கூறுகிறாள்... குறவர் மகள் பின்னிய இருண்ட கூந்தலை உடையவள் நல்ல முக அழகு கொண்டவள். (நுதல் > முகம் – ஆகுபெயர்) தினை மாவை உண்பாள் கையில் தட்டையை வைத்துக்கொண்டு தட்டி ஓசை எழுப்பி ஐவன நெல்லில் உள்ள கிளிகளை ஓட்டுவாள். இப்படி ஓட்டும் நாட்டை உடையவன் நீ. இவள் – என் தலைவி – வளையல் நழுவும்படி பிரிவதற்கு வல்லமையை எப்படிப் பெற்றாய்?

பாடல் : 286
சிறுதினை கொய்த இருவை வெண்கால்
காய்த்த அவரைப் படுகிளி கடியும்
யாண ராகிய நன்மலை நாடன்
புகரின்று நயந்தனன் போலும்
கவரும் தோழிஎன் மாமைக் கவினே. . . . .[286]

பொருளுரை:

தலைவி தோழியிடம் சொல்கிறாள்... சிறிய தினையை அறுவடை செய்த பின்னர் நிற்கும் தட்டையில் படர்ந்து காய்த்திருக்கும் அவரையில் கிளிகள் இரை தேடும் வளமான நாட்டின் தலைவன் என் காதலன். அவன் என்மீது கொண்டுள்ள ஆசை குற்றமற்றது போலும். அந்த ஆசை என் மேனி அழகைக் கவர்ந்து சென்றுவிட்டதே!

பாடல் : 287
நெடுவரை மிசையது குறுங்கால் வருடை
தினைபாய் கிள்ளை வெரூஉம் நாட
வல்லை மன்ற பொய்த்தல்
வல்லாய் மன்றநீ அல்லது செயலே. . . . .[287]

பொருளுரை:

திருமணம் செய்துகொள்ளக் காலம் கடத்தும் தலைவனிடம் தோழி கூறியது... உயர்ந்த மலையில் வாழும் வருடை ஆடு கிளி ஆகியவை தினையைக் கவர அஞ்சும் நாட்டை உடையவன் நீ. பொய் சொல்வதில் நீ வல்லவன். நெறி அல்லாத செயல்களைச் செய்வதிலும் வல்லவன்.

பாடல் : 288
நன்றே செய்த உதவி நன்றுதெரிந்து
யாம் எவன் செய்குவம் நெஞ்சே
மெல்லியல் கொடிச்சி காப்பப்
பல்குரல் ஏனல் பாத்தரும் கிளியே. . . . .[288]

பொருளுரை:

தலைவன் மகிழ்ச்சி.. நல்லது செய்தனர். எனக்கு உதவி செய்தனர். நெஞ்சே அவர்களுக்கு நாம் என்ன செய்யக் கடவேம் பல கதிர்களுடன் தினை விளைந்திருக்கிறது. கிளி அதனைக் கிள்ளிக்கொண்டு செல்கிறது. அதனால்தானே கொடிச்சியை – என் காதலியை – தினைப்புனம் காக்க அனுப்பி வைத்துள்ளனர்?

பாடல் : 289
கொடிச்சி இன்குரல் கிளிசெத் தடுக்கத்துப்
பைங்குரல் ஏனல் படர்தரும் கிளியெனக்
காவலும் கடியுநர் போல்வர்
மால்வரை நாட வரைந்தனை கொண்மோ. . . . .[289]

பொருளுரை:

தோழி தலைவனிடம் கூறுகிறாள்... மலையடுக்கத்தில் கிளி தினை உண்ண வரும். அந்தக் கிளி போன்ற கொடிச்சி தினை காக்க வருவாள். இப்படிப்பட்ட மலை நாட்டை உடையவன் நீ. இனி, இவள் தினைப்புனம் காக்க வரமாட்டாள். நீ கொடிச்சியை – என் தலைவியை – திருமணம் செய்து அழைத்துக்கொண்டு செல்.

பாடல் : 290
அறம்புரி செங்கோல் மன்னனின் தாம்நனி
சிறந்தன போலும் கிள்ளை பிறங்கிய
பூக்கமழ் கூந்தல் கொடிச்சி
நோக்கவும் படும்அவள் ஒப்பவும் படுமே. . . . .[290]

பொருளுரை:

தலைவன் கிளியிடம் பேசுவது போல நெஞ்சக் கிடக்கையை வெளிப்படுத்துகிறான்... அறம் செய்யும் செங்கோல் அரசனால் நன்மை விளையும். கிளியே, நீயும் அவன் போல நன்மை செய்கிறாய். என் காதலி கொடிச்சி போல அழகுடன் திகழ்கிறாய். அவள் தினைப்புனம் காக்க வரும்படித் தினையைக் கவர்கிறாய்.