ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

ஐங்குறுநூறு: 31

பாலை - செலவு அழுங்குவித்த பத்து (ஓதலாந்தையார்)


பாலை - செலவு அழுங்குவித்த பத்து (ஓதலாந்தையார்)

பொருள் தேடும் நோக்கோடு தலைவியைப் பிரியும் தலைவனைத் தோழி தடுத்து நிறுத்துப் பாடல்கள் இதில் உள்ளன.

பாடல் : 301
மால்வெள் ளோத்திரத்து மையில் வாலிணர்
அருஞ்சுரம் செல்வோர் சென்னிக் கூட்டும்
அவ்வரை யிறக்குவை யாயின்
மைவரை நாட வருந்துவள் பெரிதே. . . . .[301]

பொருளுரை:

தோழி தலைவனிடம் சொல்கிறாள்... வெள்ளோத்திரம் மாசில்லா வெண்மையான மலர். ஆசை கொள்ளச் செய்யும் மலர். பாலைக் காட்டு வழியில் செல்வோர் அதனைத் தலையில் சூடிகொகொள்வர். அத்தகைய மலையில் செல்வாயாயின், மை நிற மலைநாட்டின் தலைவனே, இவள் – என் தலைவி – உன் காதலி - பெரிதும் வருந்துவாள்.

பாடல் : 302
அரும்பெருள் செய்வினை தப்பற்கும் உரித்தே
பெருந்தோள் அரிவை தகைத்தற்கும் உரியள்
செல்லாய் அயினோ நன்றே
மல்லம் புலம்ப இவள்அழப் பிரிந்தே. . . . .[302]

பொருளுரை:

தோழி தலைவனிடம் சொல்கிறாள்... தேடும் பொருள் கிடைக்காமலும் போகலாம். அகன்ற தோளை உடைய இவள் பிரிவதற்கும் உரியவள்-தான். நீ செல்லாமல் இருந்தால் நல்லது. மென்மையான நிலத்தின் தலைவனே, இவள் அழும்படி விட்டுவிட்டுப் பிரியலாமா?

பாடல் : 303
புதுக்கலத் தன்ன கனிய ஆலம்
போகில்தனைத் தடுக்கும் வேனில் அருஞ்சுரம்
தண்ணிய இனிய வாக
எம்மொடுஞ் சென்மோ விடலை நீயே. . . . .[303]

பொருளுரை:

தலைவி தலைவனை வேண்டுகிறாள்... சுடப்படாத மண்பாண்டம் போன்றது ஆலம் பழம். பறந்து செல்லும் பறவைகள் போகில். பாலை நில வழியில், வேனில் காலத்தில் ஆலம்பழம் போகில் பறவைகளைத் தடுத்து உண்ணச் செய்யும். காளை போன்றவலாகிய விடலை அல்லவா நீ. செல்வதாயின் என்னையும் உடன் அழைத்துச் செல்.

பாடல் : 304
கல்லாக் கோவலர் கோலின் தோண்டிய
ஆன்நீர்ப் பத்தல் யானை வெளவும்
கல்லதர்க் கவலை செல்லின் மெல்லியல்
புயல்நெடுங் கூந்தல் புலம்பும்
வயமான் தோன்றல் வல்லா தீமே. . . . .[304]

பொருளுரை:

தோழி தலைவனிடம் சொல்கிறாள்... கோவலர் கற்காதவர்கள் என்றாலும் தன் பசுவினம் நீர் உண்ணுவதற்காகக் தன் கையிலுள்ள கோலால் பத்தல் தோண்டுவர். அந்தப் பத்தலில் உள்ள நீரை யானை குடித்துவிடும். அப்படிப்பட்ட வழியில், வலிமை மிக்க சிங்கம் போன்றவனே செல்ல வேண்டாம். மென்மையான இயல்பினையும், மழைமேகம் போன்ற கூந்தலையும் உடைய இவள் உன்னை நினைத்துக்கொண்டு புலம்புவாள்.

பாடல் : 305
களிறு பிடிதழீஇப் பிறபுலம் படராது
பசிதின வருத்தம் பைதறு குன்றத்துச்
சுடர்தொடிக் குறுமகள் இனைய
எனப்பயஞ் செய்யுமோ விடலைநின் செலவே. . . . .[305]

பொருளுரை:

தோழி தலைவனுக்குக் கூறுகிறாள்... பசுமை இல்லாமல் போன காட்டில் ஆண்யானை தன் பெண்யானையை அழைத்துக்கொண்டு வேறு காட்டுக்குச் செல்லாது. பசியுடன் அந்தக் காட்டிலையே வருந்தும். சுடரும் வளையல் அணிந்த உன் குறுமகள் வருந்தும்படி விட்டுவிட்டு அப்படிப்பட்ட காட்டில் வீரக் காளையே நீ செல்வதால் என்ன பயன் விளையுமோ?

பாடல் : 306
வெல்போர்க் குருசில்நீ வியன்சுரம் இறப்பின்
பல்கழ் அல்குல் அவ்வரி வாடக்
குழலினும் இனைகுவள் பெரிதே
விழவொலி கூந்தல் மாஅ யோளே. . . . .[306]

பொருளுரை:

தோழி தலைவனுக்குக் கூறுகிறாள்... ஐய, நீ வெல்லும் போர்த்திறம் மிக்க குருசில் அகன்ற காட்டு வழியில் நீ சென்றால், பல வயிரங்கள் பதித்த அணிகலன் பூண்டிருக்கும் இவளது அல்குலில் இருக்கும் அழகிய வரிக் கோடுகள் வாடும். மெலும் புல்லாங்குழல் போன்று மென்மையான இசையுடன் இவள் அழுவாள். விழாக் காலம் போன்று ஒப்பனை செய்யப்பட்டிருக்கும் கூந்தலை உடைய மாமை நிறம் கொண்டவள் அழுவாள்.

பாடல் : 307
ஞெலிகை முழங்கழல் வயமா வெரூஉம்
குன்றுடை அருஞ்சுரம் செலவயர்ந் தனையே
நன்றில் கொண்கநின் பொருளே
பாவை யன்னநின் துணைபிரிந்து வருமே. . . . .[307]

பொருளுரை:

தோழி தலைவனுக்குக் கூறுகிறாள்... மூங்கிலில் தீ பற்றி எரியும்போது வலிமை மிக்க சிங்கம்-கூட அஞ்சும். அப்படிப்பட்ட காட்டு வழியில் நீ செல்ல நினைக்கிறாய். நல்லது அன்று. இவளைக் கொண்ட தலைவனே நீ கருதிய பொருள் நல்லது அன்று. பொம்மை போன்ற நல்லழகு பெற்ற உன் துணைவி பிரிவால் வருந்துவாள்.

பாடல் : 308
பல்லிருங் கூந்தல் மெல்லிய லோள்வயின்
பிரியாய் ஆயினும் நன்றே விரியிணர்க்
கால் எறுழ் ஒள்வி தாஅய
முருகமர் மாமலை பிரிந்தெனப் பிரிமே. . . . .[308]

பொருளுரை:

தோழி தலைவனிடம் கூறுகிறாள்... பல்கி இருண்ட கூந்தலும், மெல்லிய இயல்பும் கொண்டவள் இவள். நீ இவளைப் பிரியாமல் இருந்தால் நல்லது. நீ பிரிந்தால் இந்த மலையே உன்னை விட்டுப் பிரிந்துவிட்டது என நினைத்துக்கொள். இவள் உயிருடன் இருக்கமாட்டாள். விரிந்த கொத்துகளுடன் கால் கொண்டிருக்கும் எறுழம் பூ கொட்டிக்கிடக்கும் மலை இது. முருகப் பெருமானே விரும்பும் மலை இது.

பாடல் : 309
வேனில் திங்கள் வெஞ்சுரம் இறந்து
செலவுஅயர்ந் தனையால் நீயே நன்று
நின்னயந்து உறைவி கடுஞ்சூல் சிறுவன்
முறுவல் காண்டலின் இனிதோ
இறுவரை நாடநீ இறந்துசெய் பொருளே. . . . .[309]

பொருளுரை:

தலைவனுக்குத் தோழி சொல்கிறாள்... வெயில் கொளுத்தும் மாதத்தில் கொடுமையான காட்டு வழியில் நீ சென்றால், உன்னை நினைத்து வாழ்ந்துகொண்டிருப்பவள் கருவுற்று நிறைமாதப் பெண்ணாய் இருப்பவள் மகன் பிறந்து சிரிக்கும்போது இன்பம் கொள்ள முடியுமா? மலையைக் கடந்து சென்று நீ ஈட்டிவரும் பொருள் உன் மகன் சிறிப்பை விட இனிக்குமா?

பாடல் : 310
பொலம்பசும் பாண்டில் காசுநிரை அல்குல்
இலங்குவளை மெல்தோள் இழைநிலை நெகிழப்
பிரிதல் வல்லுவை ஆயின்
அரிதே விடலை இவள் ஆய்நுதற் கவினே. . . . .[310]

பொருளுரை:

தோழி தலைவனுக்குச் சொல்கிறாள்... பொன்னாலான பசுமை நிறப் பாண்டிலும், பல காசுகளும் இருக்கும் அணிகலன்களை அல்குலில் அணிந்தவள் இவள். தோளில் ஒளி வீசும் அணிகலன் பூண்டவள். இந்த அணிகலன்கள் நழுவும்படி இவளை ஏங்க வைத்துவிட்டு நீ பொருள் தேடப் பிரிந்து செல்வாய் ஆயின் வீரக் காளையே இவள் முகத்தின் அழகை நீ பார்க்க முடியாது.