ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

ஐங்குறுநூறு: 15

நெய்தல் - ஞாழற் பத்து (அம்மூவனார்)


நெய்தல் - ஞாழற் பத்து (அம்மூவனார்)

மணல்மேட்டு ஞாழல் மரத்தடி உறவால் விளைந்த ஏங்கலையும், இனிமையையும் தோழியும், தலைவியும், தலைவனும் எடுத்துரைக்கும் பாடல்கள் இதில் உள்ளன.

பாடல் : 141
எக்கர் ஞாழல் செருந்தியொடு கமழத்
துவலைத் தண்துளி வீசிப்
பயலை செய்தன பனிபடு துறையே. . . . .[141]

பொருளுரை:

மணல்மேட்டில் ஞாழல் பூ செருந்திப் பூவோடு மலரும் துறைதான் அவன் வராமையால் என்னைப் பசலை நிறம் கொள்ளச் செய்திருக்கிறது.

பாடல் : 142
எக்கர் ஞாழல் இறங்கு இணர்ப் படுசினைப்
புள்இறை கூரும் துறைவனை
உள்ளேன் தொழி படீஇயர்என் கண்ணே. . . . .[142]

பொருளுரை:

மணல்மேட்டில் இறங்கியிருக்கும் ஞாழல் கிளையில் புள்ளினம் தங்கியிருக்கும் துறைவன் அவன் (துறையில் என்னோடு விளையாடியவன்). அவனை நினைக்காதிருந்தால் என் கண் உறங்கிவிடும்.

பாடல் : 143
எக்கர் ஞாழல் புள்ளிமிழ் அகன்துறை
இனிய செய்த நின்றுபின்
முனிவு செய்தஇவள் தடமெல் தோளே. . . . .[143]

பொருளுரை:

மணல் மேட்டில் பறவைகள் வாழும் துறை அது. அங்குதான் அவன் எனக்கு இன்பம் தந்தான். பின்பு அவன் வராமையால் என் அகன்ற தோள் என்மீது சினம் கொண்டு இளைத்துவிட்டது.

பாடல் : 144
எக்கர் ஞாழல் இணர்படு பொதும்பர்த்
தனிக்குரு உறங்கும் துறைவற்கு
இனிப்பசந் தன்றுஎன் மாமைக் கவினே. . . . .[144]

பொருளுரை:

மணல்மேட்டில் ஞாழல் பூக்கள் கொட்டிக் கிடக்கும் மரச்சோலையில் தன்னந்தனியை குருகு உறங்கும் துறை அது. இங்கு தானும் தனிமைப்பட்டுவிட்டதால் என் மேனிநிற மாந்தளிர் அழகு பச்சை நிறம் ஆகிவிட்டது.

பாடல் : 145
எக்கர் ஞாழல் சிறியிலைப் பெருஞ்சினை
ஓதம் வாங்கும் துறைவன்
மாயோள் பசலை நீக்கினன் இனியே. . . . .[145]

பொருளுரை:

மணல்மேட்டில் சிறிய இலைகளை உடைய ஞாழல் மரத்தின் தாழ்ந்த கிளைகளை கடலலை மோதி இழுக்கும் துறை அது. அங்கு அவன் மீண்டும் வந்தான். அதனால் அவள் மேனியிலிருந்த பசலைநிறம் மாறி மாமைநிறம் மலர்ந்துவிட்டது.

பாடல் : 146
எக்கர் ஞாழல் அரும்புமுதிர் அவிழிணர்
நறிய கமழும் துறைவற்கு
இனிய மன்றஎன் மாமைக் கவினே. . . . .[146]

பொருளுரை:

மணல்மேட்டில் அரும்பு விரிந்து ஞாழல் பூத்து இனிய நறுமணம் கமழும் துறைவனுக்கு இன் மாமைநிற அழகு இனிக்கும்.

பாடல் : 147
எக்கர் ஞாழல் மலரின் மகளிர்
ஒள்தழை அயரும் துறைவன்
தண்தழை விலையென நல்கினன் நாடே. . . . .[147]

பொருளுரை:

மணல்மேட்டில் ஞாழல் பூத்தால் அதன் கொத்துகளால் மகளிர் தழையாடை செய்து அணிந்துகொள்வர். அந்தத் தழையாடையைத் தான் அவிழ்ப்பதற்கு விலையாக அதன் துறைவன் தன் நாட்டையே விலையாகத் தந்தான். (திருமணப் பரிசமாகத் தந்தான்).

பாடல் : 148
எக்கர் ஞாழல் இகந்துபடு பெருஞ்சினை
வீஇனிது கமழும் துறைவனை
நீயினிது முயங்குதி காத லோயே. . . . .[148]

பொருளுரை:

மணல்மேட்டு ஞாழல் மரத்திலிருந்து உதிர்ந்த பூக்கள் வெளியிடங்களுக்கெல்லாம் ஓடி எங்கும் மணக்கிறது. அந்தத் துறவனை நீ தழுவிக்கொள். – தோழி இவ்வாறு தலைவியிடம் கூறுகிறாள்.

பாடல் : 149
எக்கர் ஞாழல் பூவின் அன்ன
சுணங்குவளர் இளமுலை மடந்தைக்கு
அணங்குவளர்த்து அகறல் வல்லா தீமோ. . . . .[149]

பொருளுரை:

மணல்மேட்டில் மலர்ந்திருக்கும் ஞாழல் மலர் போல இவளது இளமையான முலையில் சுணங்கு என்னும் சுருக்க அழகு இருக்கிறது. அந்த முலைக்குத் துன்பம் தந்துவிட்டு, பிரியாதிருப்பாயாக – தோழி தனைவனிடம் இவ்வாறு கூறுகிறாள்.

பாடல் : 150
எக்கர் ஞாழல் நறுமலர்ப் பெருஞ்சினைப்
புணரி திளைக்கும் துறைவன்
புணர்வின் இன்னான் அரும்புணர் வினனே. . . . .[150]

பொருளுரை:

மணல்மேட்டில் ஞாழல் கிளைகளை அலை வந்து மோதி மகிழும். அவன் என்னோடு உடலுறவு கொள்ளும்போது இன்பத் துன்பம் தருபவனாக இருக்கிறான். அது கிடைத்தற்கு அரிய உடலின்ப உறவு – தலைவி இப்படிச் சொல்லி மகிழ்கிறாள்.