ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

ஐங்குறுநூறு: 17

நெய்தல் - சிறுவெண் காக்கைப் பத்து (அம்மூவனார்)


நெய்தல் - சிறுவெண் காக்கைப் பத்து (அம்மூவனார்)

பெருங் கடற்கரையது சிறு வெண் காக்கை – என்று எல்லாப் பாடல்களும் தொடங்குகின்றன. இந்தக் காக்கை வாழும் துறைவன் அவன். தலைவியும் தோழியும் அவன் இயல்புகளைப் பழித்தும் போற்றியும் கூறும் செய்திகள் இதில் உள்ளன.

பாடல் : 161
பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை
கருங்கோட்டுப் புன்னைத் தங்கும் துறைவற்குப்
பயந்தநுதல் அழியச் சாஅய்
நயந்த நெஞ்சம் நோய்ப்பா ல்தே. . . . .[161]

பொருளுரை:

துறைவனுக்காக ஏங்கிக்கொண்டு என் நெற்றி அழகு இழந்து பசப்பு ஊறிக் கிடக்கிறதே! நெஞ்சம் அவனையே விரும்பிக்கொண்டு இருக்கிறதே! என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லையே! – என்று தலைவி தோழியிடம் தன்னையே நொந்துகொள்கிறாள். -- வெண்காக்கை புன்னைமரத்தில் தங்கும் துறை.

பாடல் : 162
பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை
நீத்துநீர் இருங்கழி இரைதேர்ந்து உண்டு
பூக்கமழ் பொதும்பர்ச் சேக்கும்
துறைவன் சொல்லோ பிறவா யினவே. . . . .[162]

பொருளுரை:

சிறுவெண்காக்கை பெரிய உப்பங்கழியில் இரை தேடி உண்டுவிட்டு பூஞ்சோலையில் நிம்மதியாகத் தங்கும் துறைவன் அவன். அவனும் காக்கை போலவே என்னை உண்டு மகிழ்ந்துவிட்டுத் திரும்பவும் வராமல் தங்கிவிட்டானே.

பாடல் : 163
பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை
இருங்கழித் துவலை ஒலியில் துஞ்சும்
துறைவன் துறந்தெனத் துறந்துஎன்
இறையேர் முன்கை நீக்கிய வளையே. . . . .[163]

பொருளுரை:

துறைவன் விட்டுவிட்டான் என்று என் கையில் இருக்கும் வளையல்களும் கழன்று நழுவுகின்றனவே. சிறுவெண்காக்கை கழியில் எழும் அலைத்துளியின் ஒலியைக் கேட்டுக்கொண்டே உறங்கும் துறை.

பாடல் : 164
இருங்கடற் கரையது சிறுவெண் காக்கை
இருங்கழி மருங்கின் அயிரை ஆரும்
தண்ணந் துறைவன் தகுதி
நம்மோடு அமையாது அலர்பயந் தன்றே. . . . .[164]

பொருளுரை:

துறைவன் உறவு நமக்கு மட்டுந்தான் தெரியும் என்று எண்ணியிருந்தேன். ஊரெல்லாம் பேசிக்கொள்கிறதே. சிறுவெண்காக்கை கழியில் அயிரை மீனை உண்ணும் துறை.

பாடல் : 165
பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை
ஆருகழிச் சிறுமீன் ஆர மாந்தும்
துறைவன் சொல்லிய சொல்என்
இறையோர் எல்வளை கொண்டுநின் றதுவே. . . . .[165]

பொருளுரை:

துறைவன் ஏதேதோ சொல்லி என்னை நம்ப வைத்தான். அவன் சொற்கள் இப்போது என் வளையல்களைக் கழன்று விழச் செய்ததுதான் மிச்சம். நீர் வற்றும் கழியில் சிறுவெண்காக்கை சிறுமீன்களை பற்றி விழுங்கும் துறை.

பாடல் : 166
பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை
வரிவெண் தாலி வலைசெத்து வெரூஉம்
மெல்லம் புலம்பன் தேறி
நல்ல வாயின நல்லோள் கண்ணே. . . . .[166]

பொருளுரை:

புலம்பன் தனக்காகத் தொலைவில் காத்திருப்பதைப் பார்த்த தலைவியின் கண் களைதட்டியது. சிறுவெண்காக்கை தாலி வளையைப் பார்த்ததும் நடுங்கும் புலம்புநிலம் (நெய்தல்-நிலம்) தாலி = உடும்பு. இங்கு வரிக்கோடுகளை உடைய வெள்ளைநிற உடும்பு சொல்லப்படுகிறது.

பாடல் : 167
பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை
இருங்கழி இனக்கெடிறு ஆரும் துறைவன்
நல்குவன் போலக் கூறி
நல்கான் ஆயினும் தொல்கே என்னே. . . . .[167]

பொருளுரை:

துறைவன் உனக்கு என்னைத் தருவேன் என்று கூறிவிட்டு, தராமல் இருந்தாலும் என் நட்புக்காதலன்-தான் – தலைவி சொல்கிறாள். சிறுவெண்காக்கை கழியில் கெடிறு (கெழுத்தி) மீனை வயிறார உண்ணும் துறை அது.

பாடல் : 168
பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை
துறைபடி யம்பி அகமனை ஈனும்
தண்ணந் தூறைவன் நல்கி
ஒள்நுதல் அரிவை பாலா ரும்மே. . . . .[168]

பொருளுரை:

துறைவன் திருமணக் கொடையால் அரிவை பெண்மைப் பாலில் நிறைவு கொள்வாள். (கருவுறுவாள்) சிறுவெண்காக்கை துறையில் நிறுத்தப்பட்டிருக்கும் அம்பிக்கு அடியில் முட்டையிடும். – தோழி சொல்கிறாள்.

பாடல் : 169
பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை
பொன்னிணார் ஞாழல் முனையில் பொதியவிழ்
புன்னையம் பூஞ்சினைச் சேக்கும் துறைவன்
நெஞ்சத்து உண்மை யறிந்தும்
என்செயப் பசக்கும் தோழியென் கண்ணே. . . . .[169]

பொருளுரை:

அங்கும் இங்கும் இருத்தல் துறைவன் இயல்புதான். இது தெரிந்திருந்தும் என் கண் அவனைக் காணப் பசபசக்கிறதே! என்ன செய்யப்போகிறது. சிறுவெண்காக்கை ஞாழல் பூத்திருக்கும் கிளை பிடிக்கவில்லை என்றால் பூத்திருக்கும் புன்னைக் கிளைக்குச் சென்று தங்கிக்கொள்ளும் துறை.

பாடல் : 170
பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை
இருங்கழி நெய்தல் சிதைக்குந் துறைவன்
நல்லன் என்றி யாயின்
பல்லிதழ் உண்கண் பசத்தல்மற் றெவனோ. . . . .[170]

பொருளுரை:

துறைவன் நல்லவன் என்றால் என் கண் அவனைக் காணப் பசபசக்கிறதே! ஏன்? – தலைவி தோழியைக் கேட்கிறாள். சிறுவெண்காக்கை கழியில் இருக்கும் நெய்தல் பூக்களைச் சிதைக்கும் துறை.