ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

ஐங்குறுநூறு: 32

பாலை - செலவுப் பத்து (ஓதலாந்தையார்)


பாலை - செலவுப் பத்து (ஓதலாந்தையார்)

தலைமகன் பொருள் ஈட்டிவரச் சென்றபோது தலைவி கலங்கும் செய்திகள் இந்தப் பாடல்களில் கூறப்பட்டுள்ளன.

பாடல் : 311
வேங்கை கொய்யுநர் பஞ்சுரம் விளிப்பினும்
ஆரிடைச் செல்வோர் ஆறுநனி வெரூஉம்
காடுஇறந் தனரே காதலர்
நீடுவர் கொல்என நினையும்என் நெஞ்சே. . . . .[311]

பொருளுரை:

தலைவி தோழியிடம் சொல்கிறாள்... வேங்கைப் பூ பறிப்போர் பஞ்சுரம் என்னும் பண்ணைப் பாடிக்கொண்டே பறிப்பர். அந்த ஒலி வழியில் செல்வோரை அச்சுறுத்தும். அத்தகைய காட்டு வழியில் அவர் சென்றுள்ளார். அவர் திரும்பக் காலம் நீட்டிப்பாரோ என்று என் நெஞ்சு கலங்குகிறது.

பாடல் : 312
அறஞ்சா லியரோ அறஞ்சா லியரே
வறனுண் டாயினும் அறஞ்சா லியரோ
வாள்வனப் புற்ற அருவிக்
கோள்வல் என்னையை மறிந்த குன்றே. . . . .[312]

பொருளுரை:

தலைவி தான் தன் காதலனுடன் செல்லும் குன்ற வழியை வேண்டுகிறாள்... அறநெறி மிக்கதாக விளங்குவாயாக. வறட்சிக் காலத்திலும் அறநெறி மிக்கதாக விளங்குவாயாக. வளைந்து வளைந்து அழகாகச் செல்லும் அருவியுடன் என்னை என் காதலன் அழைத்துச் செல்லும் வழியை என் பெற்றோருக்குத்தஃ தெரியாவண்ணம் மறைத்த குன்றே நீ அறநெறி மிக்கதாக விளங்குவாயாக.

பாடல் : 313
தெறுவது அம்ம நும்மகள் விருப்பே
உறுதுயர் அவலமொடு உயிர்செலச் சாஅய்ப்
பாழ்படு நெஞ்சம் படர் அடக் கலங்க
நாடுஇடை விலங்கிய வைப்பின்
காடுஇறந் தனள்நம் காத லோனே . . . .[313]

பொருளுரை:

தலைவி தலைவனுடன் சென்றபோது தோழி செவிலியிடம் சொல்கிறாள்... உன் மகள் விருப்பம் மிகக் கொடியது. நாம் பெருந் துன்பமும் அவலமும் கொண்டு வருந்துகிறோம். பாழாய்ப் போன நம் நெஞ்சம் துன்பத்தில் கலங்குகிறது. நம் அன்புக்கு உரியவள் நாடு விட்டு நாடு தாண்டிப் போய்விட்டாள். காட்டு வழியில் சென்றுவிட்டாள்.

பாடல் : 314
அவிர்தொடி கொட்பக் கழுதுபுகவு அயரக்
கர்ங்கண் காக்கையொடு கழுகுவிசும்பு அகலச்
சிறுகண் யானை ஆள்வீழ்துத் திரித்ரும்
நீளிடை அருஞ்சுரம் என்பநம்
தோளிடை முனிநர் சென்ற ஆறே. . . . .[314]

பொருளுரை:

தலைவி தன் தோழியிடம் சொல்கிறாள்... அவர் பிரிவை எண்ணி என் வளையல்கள் கழல்கின்றன. அவர் சென்ற காட்டில் சிறிய கண்ணை உடைய யானை ஆளை வீழ்த்தும். விழுந்த ஆளை கருமையான கண் கொண்ட காக்கையும், கழுதுப் பேயும் உணவாக்கிக்கொண்டு உண்டு திரியும். என் தோளை வெறுத்துவிட்டு அவர் சென்ற பாலைநில வழி அப்படிப்பட்டது என்கின்றனர்.

பாடல் : 315
பாயல் கொண்ட பனிமலர் நெடுங்கண்
பூசல் கேளார் சேயர் என்ப
விழைநெகிழ் செல்லல் உறீஇக்
கழைமுதிர் சோலைக் காடுஇறந் தோரே. . . . .[315]

பொருளுரை:

தோழி தலைவியிடம் சொல்கிறாள்... அவர்மீது ஆவலுடன் பாயும் கண் உன்னுடைய கண். பனித்துளி தேங்கி நிற்கும் கண்ணாக மாறிவிட்டது. நீ அவரை எண்ணி அரற்றுகிறாய். உன் அணிகலன்க்கள் கழல்கின்றன. இப்படி உனக்குத் துன்பம் உண்டாக்கிவிட்டு அவர் மூங்கில் அடர்ந்த காட்டு வழியில் சென்றுவிட்டார்.

பாடல் : 316
பொன்செய் பாண்டில் பொலங்கலம் நந்தத்
தேரகல் அல்குல் அவ்வரி வாட
இறந்தோர் மன்ற தாமே பிறங்குலைப்
புல்லரை ஓமை நீடிய
புலிவழங்கு அதர கானத் தானே. . . . .[316]

பொருளுரை:

தோழி தலைவியிடம் கூறுதல்... பொன்னை ஈட்டிக்கொண்டு வரும் வண்டி பொன்னணிகளைக் கொண்டுவந்து பெருகும்படிச் செய்திருக்கிறது. ஆனால், தேர் போன்று அகன்றுள்ள உன் அல்குல் உறுப்பில் உள்ள வரிக் கோடுகள் வாடுகின்றன. இப்படி வாடும்படி விட்டுவிட்டு அவர் பிரிந்து சென்றிருக்கிறார். ஓமை மரங்கள் மிகுதியாக விளங்கும் காட்டு வழியில் அவர் சென்றிருக்கிறார். புலிகள் திரியும் காட்டு வழியில் சென்றிருக்கிறார். என்ன செய்வது?

பாடல் : 317
சூழ்கம் வம்மோ தோழி பாழ்பட்டுப்
பைதற வெந்த பாலை வெங்காட்டு
அருஞ்சுரம் இறந்தோர் தேஎத்துச்
சென்ர நெஞ்சம் நீடிய பொருளே. . . . .[317]

பொருளுரை:

தோழி தலைவியிடம் சொல்கிறாள்... எண்ணிப் பார்க்கலாம் வா, தோழி. பச்சை நிறமே இல்லலாமல் வெந்துபோன பாலை நிலக் கொடிய காடு. அந்தக் காட்டு வழியில் அவர் சென்றுள்ளார். அவர் நெஞ்சத்தில் இருக்கும் பொருளைப் பற்றி நாம் எண்ணிப் பார்க்கலாம், வா.

பாடல் : 318
ஆய்நலம் பசப்ப அரும்படர் நலிய
வேய்மருள் பணைத்தோள் வில்லிலை நெகிழ
நசைநனி கொன்றோர் மன்ற இசைநிமிர்ந்து
ஓடெரி நடந்த வைப்பின்
கோடுயர் பிறங்கல் மலை இறந் தோரே. . . . .[318]

பொருளுரை:

தலைவி தோழியிடம் சொல்கிறாள்... சிறந்த மேனி அழகில் பசப்பு ஊர்கிறது. பிரிவுத் துன்பம் வாட்டுகிறது. மூங்கில் போல் பருத்த என்ஐ தோள்களில் ஒளி விடும் அணிகலன் நழுவுகிறது. என் ஆணையை அவர் கொன்றுவிட்டார். அவர் சென்ற காட்டில் ‘விசை’ மரங்கள் ஓங்கியுள்ளன. அவற்றில் தீ பற்றி எரியுமாம். இப்படிப்பட்ட முகடுகளைக் கொண்ட மலை வழியில் அவர் செல்கிறாரே.

பாடல் : 319
கண்பொர விளங்கிய கதிர்தெறு வைப்பின்
மண்புரை பெருகிய மரம்முளி கானம்
இறந்தன ரோநம் காதலர்
மறந்தன ரோதில் மறவா நம்மே. . . . .[319]

பொருளுரை:

தலைவி தோழியிடம் கூறுகிறாள்... கண்ணை விழித்துப் பார்க்க முடியாத வெயில் காய்ச்சும் நிலம். அதில் பொறிந்துபோன மண். அங்குக் காய்ந்து போன மரங்கள். அந்த வழியில் என் காதலர் சென்றுள்ளாரார். அவர் என்னை மறந்திருப்பாரோ? என்னால் மறக்க முடியவில்லை.

பாடல் : 320
முள்ளரை இலவத்து ஒள்ளினர் வான்பூ
முழங்கல் அசைவளி எடுப்ப வானத்து
உருமுப்படு கனலின் இருநிலத்து உறைக்கும்
கவலை அருஞ்சுரம் போயினர்
தவலில் அருநோய் தலைதந் தோரே. . . . .[320]

பொருளுரை:

தலைவி தோழியிடம் சொல்கிறாள்... முள் இருக்கும் அடிமரம் கொண்ட இலவமரம். வானை நோக்கிப் பூத்திருக்கும் அதன் செந்நிறப் பூக்கள். தீயைப் போல் பூத்திருக்கும் பூக்கள். கடுமையான காற்று வீசும்போது அவை உதிர்கின்றன. இடியில் தோன்றும் மின்னல் தரையில் விழுவது போல் உதிர்கின்றன. இத்தகைய காட்டுப் பாதையில் அவர் சென்றுள்ளார். நீங்காத பிரிவு நோயை எனக்குத் தந்துவிட்டு அவர் சென்றுள்ளார்.