பெரும்பாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
பட்டினப்பாலை
பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
நெடுநல்வாடை
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
மதுரைக்காஞ்சி
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
மலைபடுகடாம்
சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.
திருமுருகாற்றுப்படை
பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்
பொருநராற்றுப்படை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
சிறுபாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
முல்லைப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
குறிஞ்சிப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
பெரும்பாணாற்றுப்படை

பாணர்க்கு விருப்புடன் உணவளித்தல்
பாடல் வரிகள்:- 465 - 480
நில்லா உலகத்து நிலைமை தூக்கி
அ நிலை அணுகல் வேண்டி நின் அரை
பாசி அன்ன சிதர்வை நீக்கி
ஆவி அன்ன அவிர் நூல் கலிங்கம்
இரும் பேர் ஒக்கலொடு ஒருங்கு உடன் உடீஇ . . . .[470]
கொடு வாள் கதுவிய வடு ஆழ் நோன் கை
வல்லோன் அட்ட பல் ஊன் கொழும் குறை
அரி செத்து உணங்கிய பெரும் செந்நெல்லின்
தெரி கொள் அரிசி திரள் நெடும் புழுக்கல்
அரும் கடி தீம் சுவை அமுதொடு பிறவும் . . . .[475]
விருப்பு உடை மரபின் கரப்பு உடை அடிசில்
மீன் பூத்து அன்ன வான் கலம் பரப்பி
மகமுறை மகமுறை நோக்கி முகன் அமர்ந்து
ஆனா விருப்பின் தான் நின்று ஊட்டி
மங்குல் வானத்து திங்கள் ஏய்க்கும் . . . .[465 - 480]
நில்லா வுலகத்து நிலைமை தூக்கி
யந்நிலை யணுகல் வேண்டி நின்னரைப்
பாசி யன்ன சிதர்வை நீக்கி
யாவி யன்ன அவிர்நூற் கலிங்க
மிரும்பே ரொக்கலொ டொருங்குட னுடீஇக் . . . .[470]
கொடுவாள் கதுவிய வடுவாழ் நோன்கை
வல்லோ னட்ட பல்லூன் கொழுங்குறை
யரிசெத் துணங்கிய பெருஞ்செந் நெல்லின்
தெரிகொ ளரிசித் திரணெடும் புழுக்க
லருங்கடித் தீஞ்சுவை யமுதொடு பிறவும் . . . .[475]
விருப்புடை மரபிற் கரப்புடை யடிசின்
மீன்பூத் தன்ன வான்கலம் பரப்பி
மகமுறை மகமுறை நோக்கி முகனமர்ந்
தானா விருப்பிற் றானின் றூட்டி
மங்குல் வானத்துத் திங்க ளேய்க்கு . . . .[480]
பொருளுரை:
இளந்திரையன் உணவு, உடை, பரிசில் தந்து பேணும் பாங்கு இப்பகுதியில் கூறப்படுகிறது. தன்னைத் தானே சீர்தூக்கிப் பார்த்துக்கொண்டான். உலகம் ஒரு நிலையில் நிற்பதில்லை. பொருள்களும் எண்ணங்களும் மாறி மாறி உருண்டோடிக் கொண்டே இருக்கும். உலகில் நிலையானது என்பது ஒருவனது செயலால் பிறருக்கு விளைவதை எண்ணிப் பார்க்கும் புகழோ, இகழோதான். இளந்திரையன் தனக்கு நற்பெயர் உலகில் அழிவு இல்லாமல் நிற்க வேண்டும் என்று விரும்பினான். அதற்காகத் தன் செயல்களைத் தானே சீர்தூக்கிப் பார்த்துக் கொண்டான். புத்தாடை - கிணற்றுப் பாசி போல் அழுக்குப் படிந்து கிழிந்துள்ள உங்களது ஆடைகளை நீக்கிவிட்டு, நீராவி போல் மென்மையும் தூய்மையும் கொண்ட புத்தாடைகளை உடுத்திக் கொள்ளச் செய்வான். சென்ற நீங்கள் மட்டுமல்லாமல் ஊரில் வாழும் உங்களது சுற்றத்தாரும் உடுத்திக் கொள்ளுமாறு தந்து உதவுவான். புழுக்கல் (பிரியாணி) - பலவகையான புலவுகளைச் சேர்த்துப் புழுங்கச் செய்த உணவை அவனே உங்கள்முன் நின்று கொண்டு ஊட்டுவான். எவ்வளவுதான் உண்டாலும் எப்படித்தான் சுவைத்துச் சாப்பிட்டாலும் இன்னும் இன்னும் என்று சொல்லிப், பின்னும் உண்ணச் செய்ய வேண்டும் என்று எண்ணும் நிறைவுறாத ஆசையோடு ஊட்டுவான். கொடிய வாளைப் பிடித்துப் பிடித்து அதன் அழுத்தத்தால் காப்புக் காய்த்துப்போன தன் வலிமை மிக்க கைகளால் ஊட்டுவான். சமையல் தொழிலில் வல்லவன் செந்நெல் அரிசியொடு பலவகையான புலால் துண்டுகளைச் சேர்த்துச் சமைத்த புழுக்கலை ஊட்டுவான். அறுத்துப் போட்ட அரியிலேயே நன்றாக முற்றி விளைந்து தெரித்திருக்கும் நெல்லிலிருந்து உண்டாக்கிய அரிசியில் சமைத்த புழுக்கல் அது. விளையாத காரரிசிப் புழுக்கல் அன்று. அமுது என்பது குழம்பு. நல்ல மணமும், இனிய சுவையும் கொண்டது அந்த அமுது. உண்டவர் மீண்டும் மீண்டும் உண்ண விரும்பும் வகையில் வழி வழியாகச் சமைத்துப் பழகிய கைப்பக்குவத்தை உள்ளடக்கிப் புழுக்கிய உணவு அது. வானத்தில் மீன்கள் பூத்துக் கிடப்பது போல் பரந்த இடத்தில் உண்கல வட்டில்களைப் பரப்பிப் புழுக்கல் இட்டு ஊட்டுவான்.