பெரும்பாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

பட்டினப்பாலை

பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

நெடுநல்வாடை

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

மதுரைக்காஞ்சி

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

மலைபடுகடாம்

சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.

திருமுருகாற்றுப்படை

பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்

பொருநராற்றுப்படை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

சிறுபாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

முல்லைப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

குறிஞ்சிப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

பெரும்பாணாற்றுப்படை


இளந்திரையன் மந்திரச் சுற்றத்தொடு அரசு வீற்றிருக்கும் காட்சி

பாடல் வரிகள்:- 436 - 447

பெரும் கை யானை கொடும் தொடி படுக்கும்
கரும் கை கொல்லன் இரும்பு விசைத்து எறிந்த
கூட திண் இசை வெரீஇ மாடத்து
இறை உறை புறவின் செம் கால் சேவல்
இன் துயில் இரியும் பொன் துஞ்சு வியல் நகர் . . . .[440]

பொருளுரை:

அரசன் இளந்திரையனின் அரண்மனை ஓங்கி உயர்ந்த மாடங்களைக் கொண்டது. அதில் புறாக்கள் வாழும். அவற்றில் ஆண்-புறாக்களின் கால்கள் சிவப்புநிறம் கொண்டவை. கொல்லர் போர்-யானைகளின் தந்தங்களுக்கு காப்பு வளையல்கள் செய்வார்கள். அதற்காக அவர்கள் உலைக்கூடத்தில் இரும்பைத் தட்டும் ஓசையைக் கேட்டு அஞ்சி வெருவி அங்குள்ள மாடப் புறாக்களின் சேவல்கள் அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருக்கும். அரண்மனையில் செல்வம் பயன்படுத்த முடியாமல் தூங்கும்.

குண கடல் வரைப்பின் முந்நீர் நாப்பண்
பகல் செய் மண்டிலம் பாரித்து ஆங்கு
முறை வேண்டுநர்க்கும் குறை வேண்டுநர்க்கும்
வேண்டுபவேண்டுப வேண்டினர்க்கு அருளி
இடை தெரிந்து உணரும் இருள் தீர் காட்சி . . . .[445]

கொடை கடன் இறுத்த கூம்பா உள்ளத்து
உரும்பு இல் சுற்றமோடு இருந்தோன் குறுகி . . . .[436 - 447]

பொருளுரை:

உரும்பில் சுற்றம் என்பது அரசனின் உரிமைச் சுற்றம். ஆட்சி உரிமை பெற்ற அலுவலர்களும் இதனுள் அடங்குவர். அவனைப் போலவே அவனது இந்த உரும்பில் சுற்றத்தாரும் கூம்பாமல் மலர்ந்திருக்கும் உள்ளம் படைத்தவர். கொடை வழங்குதலையும் தமது அன்றாடக் கடமையாகக் கொண்டு செயல்படுபவர்கள். அரசன் இளந்திரையன் முறை (நீதி) வேண்டுபவர்களுக்கு முறை வழங்குவான். கீழைக் கடலில் தோன்றி வெளிச்சம் தரும் பகலவன் போல நீதி வழங்குவான். தனக்கு இன்ன குறை உள்ளது, அதனைத் தீர்த்து வைக்க வேண்டும் என்று வேண்டி வந்தவர்களுக்கு அவர்களின் குறையைத் தீர்த்து வைப்பான். மற்றும், யார் எதை வேண்டுகிறார்களோ அவர்களுக்கு அதனை அருளி உதவுவான். உரும்பில் சுற்றத்தோடு காட்சி தரும் அவனிடம் நீங்கள் செல்ல வேண்டும்.