பெரும்பாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
பட்டினப்பாலை
பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
நெடுநல்வாடை
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
மதுரைக்காஞ்சி
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
மலைபடுகடாம்
சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.
திருமுருகாற்றுப்படை
பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்
பொருநராற்றுப்படை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
சிறுபாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
முல்லைப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
குறிஞ்சிப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
பெரும்பாணாற்றுப்படை

கோவலர் குடியிருப்பு
பாடல் வரிகள்:- 148 - 168
செற்றை வாயில் செறி கழி கதவின்
கற்றை வேய்ந்த கழி தலை சாம்பின் . . . .[150]
அதளோன் துஞ்சும் காப்பின் உதள
நெடும் தாம்பு தொடுத்த குறும் தறி முன்றில்
கொடு முக துருவையொடு வெள்ளை சேக்கும்
இடு முள் வேலி எரு படு வரைப்பின்
நள் இருள் விடியல் புள் எழ போகி . . . .[155]
செற்றை வாயிற் செறிகழிக் கதவிற்
கற்றை வேய்ந்த கழித்தலைச் சாம்பி . . . .[150]
னதளோன் றுஞ்சுங் காப்பி னுதள
நெடுந்தாம்பு தொடுத்த குறுந்தறி முன்றிற்
கொடுமுகத் துருவையடு வெள்ளை சேக்கு
மிடுமுள் வேலி யெருப்படு வரைப்பி
னள்ளிருள் விடியற் புள்ளெழப் போகிப் . . . .[155]
பொருளுரை:
முல்லைநிலத்தில் செல்லும்போது வழியில் இரவில் எங்கும் பாதுகாப்பாக உறங்கலாம். அதளோன், தோலை விரித்து அதன்மேல் உறங்குவான். அவன் துஞ்சும் காப்புதான் அந்தப் பாதுகாப்பான இடம். காப்பு என்பது கதவு உள்ள வீடு. அன்று, வீட்டுக்குத் தூணாக நடப்பட்ட உயரமில்லாத பந்தர்க்காலில் பசுந்தழைகள் கட்டப்பட்டிருந்தன. அது குரம்பை (கூரைவீடு) அதன் வாயில் கதவு தட்டைக்குச்சி போன்ற செத்தைகளையும் , மூங்கில் கழிகளையும் சேர்த்துக் கட்டிச் செய்யப்பட்டது. இந்தக் கதவை மூடிக்கொண்டு சாம்பின்மேல் (கட்டிலைப் போன்ற பரண்) தோலை விரித்து அதன்மேல் வீட்டுக்காரன் உறங்கினான். (அன்று அவன், நானும் அவ்வாறு உறங்க இடம் தந்தான். நீங்கள் சென்றால் உங்களுக்கும் தருவான்.) இந்த வீட்டுக்கு அப்பால் தொலைவிலுள்ள முற்றத்தில் ஆட்டுக்கிடை இருக்கும். மூங்கில் தட்டிகளைத் (தறிகள்) தாம்புக் கயிற்றால் கட்டிக் கிடையை அமைத்திருப்பார்கள். அதில் துருவை என்னும் செம்மறி ஆடுகளும், வெள்ளாடுகளும் அடைக்கப் பட்டிருக்கும். அதற்கும் அப்பால் வேலிப்பக்கத்தில் ஆட்டு எருக்களைக் கொட்டி வைத்திருப்பார்கள். பறவைகள் எழும்பிப் பறக்கும் விடியற் காலத்திலேயே இருள் இருக்கும் கருக்கல் நேரத்திலேயே எழுந்து இவற்றைத் தாண்டிச் செல்லவேண்டும்.
ஆம்பி வான் முகை அன்ன கூம்பு முகிழ்
உறை அமை தீம் தயிர் கலக்கி நுரை தெரிந்து
புகர் வாய் குழிசி பூ சுமட்டு இரீஇ
நாள் மோர் மாறும் நன் மா மேனி . . . .[160]
சிறு குழை துயல்வரும் காதின் பணை தோள்
குறு நெறி கொண்ட கூந்தல் ஆய்மகள்
அளை விலை உணவின் கிளை உடன் அருத்தி
நெய் விலை கட்டி பசும்பொன் கொள்ளாள்
எருமை நல் ஆன் கரு நாகு பெறூஉம் . . . .[165]
மடி வாய் கோவலர் குடி வயின் சேப்பின்
இரும் கிளை ஞெண்டின் சிறு பார்ப்பு அன்ன
பசும் தினை மூரல் பாலொடும் பெறுகுவிர்
யாம்பி வான்முகை யன்ன கூம்புமுகி
ழுறையமை தீந்தயிர் கலக்கி நுரைதெரிந்து
புகர்வாய்க் குழிசி பூஞ்சுமட் டிரீஇ
நாண்மோர் மாறு நன்மா மேனிச் . . . .[160]
சிறுகுழை துயல்வருங் காதிற் பணைத்தோட்
குறுநெறிக் கொண்ட கூந்த லாய்மக
ளளைவிலை யுணவிற் கிளையுட னருத்தி
நெய்விலைக் கட்டிப் பசும்பொன் கொள்ளா
ளெருமை நல்லான் கருநாகு பெறூஉ . . . .[165]
மடிவாய்க் கோவலர் குடிவயிற் சேப்பி
னிருங்கிளை ஞெண்டின் சிறுபார்ப் பன்ன
பசுந்தினை மூரல் பாலொடும் பெறுகுவிர்
பொருளுரை:
ஆயர் மகள் பால், மோரைக் குடும்பம் அருந்தி எஞ்சியதைக் காய்ச்சி வெண்ணெய், நெய் எடுத்து விற்று வரும் பணத்தைப் பொன்னாக வாங்காமல் கறவைக் கன்றுகள் வாங்கப் பயன்படுத்திக்கொள்வாள். ஆய்மகள் தரும் விருந்து - ஆய்மகள் காலையில் எழுந்ததும் மத்தால் தயிர் கடைவாள். தயிர் கடையும் ஓசை புலி உருமுவது போல் கேட்கும். நன்றாக உறைந்திருக்கும் தயிரைக் கடையும்போது காளான் வெள்ளை மொட்டை விரித்துக்கொண்டு பூப்பது போல நுரையிலிருந்து வெண்ணெய் திரண்டு வருகிறது. அன்று அந்த ஆய்மகள் நல்ல மாநிற மேனியுடன் காணப்பட்டாள். காதில் ஊசலாடும் குழை. பருத்த தோள். நெளிவுடன் படிந்திருக்கும் கூந்தல். தலையில் பூஞ்சுமட்டின் மேல் மோர்ப்பானை. வெண்ணெய் மிதக்கும் மோர்ப்பானை. அளை என்பது தயிர். தயிரில் விளைந்தது மோர். மோர் விற்று வந்த வருவாயைக் கொண்டு அவள் குடும்பம் நடத்துகிறாள். சேமிப்பு - வெண்ணெய் நெய் விற்றுவரும் பணத்தை அவள் அவ்வப்போது வாங்கிக் கொள்ளாமல் அவற்றை வாங்குவோரிடமே சேமித்து வைக்கிறாள். சேமித்த பணத்தை அவள் வாங்கிய போதும் அந்தப் பணத்தைக் கொண்டு பொன் அணிகளை அவள் வாங்குவது இல்லை. எருமைக் கன்றுகளும், பசுக் கன்றுகளும் வாங்குவாள். இவள் மடிவாய்க் கோவலர் குடியைச் சேர்ந்தவள். (பசு, எருமை போன்றவற்றின் பால்மடியைக் கொண்டு பிழைப்பவர் மடிவாய்க் கோவலர்) விருந்து - இவர்களது குடும்பத்தில் தங்கினால் நண்டுக்கண் போன்ற தினையரிசிச் சோற்றில் பால் ஊற்றித்தருவார்கள். விருந்துண்டு மேலும் செல்லலாம்.