பெரும்பாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
பட்டினப்பாலை
பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
நெடுநல்வாடை
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
மதுரைக்காஞ்சி
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
மலைபடுகடாம்
சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.
திருமுருகாற்றுப்படை
பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்
பொருநராற்றுப்படை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
சிறுபாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
முல்லைப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
குறிஞ்சிப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
பெரும்பாணாற்றுப்படை

வலைஞர் குடியிருப்பு
பாடல் வரிகள்:- 263 - 274
தாழை முடித்து தருப்பை வேய்ந்த
குறி இறை குரம்பை பறி உடை முன்றில் . . . .[265]
கொடும் கால் புன்னை கோடு துமித்து இயற்றிய
பைம் காய் தூங்கும் பாய் மணல் பந்தர்
இளையரும் முதியரும் கிளையுடன் துவன்றி
புலவு நுனை பகழியும் சிலையும் மான
செ வரி கயலொடு பச்சிறா பிறழும் . . . .[270]
மை இரும் குட்டத்து மகவொடு வழங்கி
கோடை நீடினும் குறைபடல் அறியா
தோள் தாழ் குளத்த கோடு காத்திருக்கும்
கொடு முடி வலைஞர் குடி வயின் சேப்பின் . . . .[263 - 274]
தாழை முடித்துத் தருப்பை வேய்ந்த
குறியிறைக் குரம்பைப் பறியுடை முன்றிற் . . . .[265]
கொடுங்காற் புன்னைக் கோடுதுமித் தியற்றிய
பைங்காய் தூங்கும் பாய்மணற் பந்த
ரிளையரு முதியருங் கிளையுடன் துவன்றிப்
புலவுநுனைப் பகழியுஞ் சிலையு மானச்
செவ்வரிக் கயலொடு பச்சிறாப் பிறழும் . . . .[270]
மையிருங் குட்டத்து மகவொடு வழங்கிக்
கோடை நீடினுங் குறைபட லறியாத்
தோடாழ் குளத்த கோடுகாத் திருக்குங்
கொடுமுடி வலைஞர் குடிவயிற் சேப்பி
பொருளுரை:
குளத்தில் மீன்பிடித்து வாழ்பவர்களைக் கொடுமுடி வலைஞர் என்பர். இவர்களது குரம்பை வீடுகள் தருப்பைப் புல்லால் தாழைநார் முடித்து வேயப்பட்டிருக்கும். வேழம் என்பது கொறுக்கை அல்லது பேய்க்கரும்பு. இதனை நாணாத்தட்டை (நாணல்தட்டை) என்றும் கூறுவர். இந்த வேயம் குறுக்குக் கழிகளாகவும் வெண்கரும்பு என்னும் மூங்கில் நெடுக்குக் கழிகளாகவும் வீட்டுக் கூரைக்குப் பயன்படுத்தப் பட்டிருக்கும். இரண்டையும் தாழைமட்டை நாரால் முடிந்து கட்டியிருப்பார்கள். தருப்பைப் புல் போட்டுக் கூரை வேய்ந்திருப்பர். குறுகிய தாழ்வாரமும் [இறை] அந்த வீட்டுக்கு உண்டு. முற்றங்கள் செப்பனிடப்படாமல் பறிந்து போயிருக்கும். மணல் பரப்பப்பட்ட அந்த முற்றத்தில் புன்னை மரத்தைப் பச்சையாக வெட்டி அதன் காய்கள் தொங்கும்படிப் பந்தல் போட்டிருப்பார்கள். இளையவர்களும் முதியவர்களும் சுற்றத்தாருடன் ஒன்றுகூடிக் குளத்துக்கு மீன் பிடிக்கச் செல்வர். வில்லும் அம்பும் கொண்டு வேட்டையாடி அவர்கள் மீன் பிடிப்பார்கள். அம்பின் நுனி புலவு நாற்றம் அடிக்கும். அந்த வில்லம்புகளைப் போலவே குளத்தில் சிவந்த கோடுகளையுடைய கயல் மீன்களும், இளைய இறால் மீன்களும் குளத்தில் பிறழும். குளங்கள் ஆழமானதால் கருமை நிறத்துடன் காணப்படும். கோடைக்காலம் நீண்டுகொண்டே போனாலும் மீன்கள் தம் குஞ்சு குட்டிகளுடன் எப்போதும் வலைஞர்களுக்கு குறைவின்றித் தம்மை வழங்கிக் கொண்டேயிருக்கும். தோடுகள் நிறைந்த தாமரைப் பூக்கள் வேரோடிக் கிடக்கும் அந்தக் குளத்தின் கரையில் கொடுமுடி வலைஞர்கள் தனித்தனியாக மீன் பிடிக்காமல் ஒன்றாகக் கூடிமீன் பிடிப்பதற்காக காத்திருப்பார்கள். அங்குச் சென்றால் விருந்துணவு பெறலாம்.