பெரும்பாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

பட்டினப்பாலை

பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

நெடுநல்வாடை

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

மதுரைக்காஞ்சி

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

மலைபடுகடாம்

சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.

திருமுருகாற்றுப்படை

பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்

பொருநராற்றுப்படை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

சிறுபாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

முல்லைப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

குறிஞ்சிப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

பெரும்பாணாற்றுப்படை


எயினரது அரணில் பெறும் பொருள்கள்

பாடல் வரிகள்:- 117 - 133

.............................. பருந்து பட
ஒன்னா தெவ்வர் நடுங்க ஓச்சி
வை நுதி மழுங்கிய புலவு வாய் எஃகம்
வடி மணி பலகையொடு நிரைஇ முடி நாண் . . . .[120]

சாபம் சார்த்திய கணை துஞ்சு வியல் நகர்
ஊகம் வேய்ந்த உயர் நிலை வரைப்பின்
வரை தேன் புரையும் கவை கடை புதையொடு
கடும் துடி தூங்கும் கணை கால் பந்தர்
தொடர் நாய் யாத்த துன் அரும் கடி நகர் . . . .[125]

வாழ் முள் வேலி சூழ் மிளை படப்பை
கொடு நுகம் தழீஇய புதவின் செம் நிலை
நெடு நுதி வய கழு நிரைத்த வாயில்
கொடு வில் எயின குறும்பில் சேப்பின்
களர் வளர் ஈந்தின் காழ் கண்டு அன்ன . . . .[130]

சுவல் விளை நெல்லின் செ அவிழ் சொன்றி
ஞமலி தந்த மனவு சூல் உடும்பின்
வறை கால்யாத்தது வயின்தொறும் பெறுகுவிர்

பொருளுரை:

முன்னிரவு வேட்டை வாய்க்காமல் போனால் பின்னிரவில் கானவன் முயல் வேட்டையில் ஈடுபடுவது வழக்கம். முயலின் காது தாமரை இதழ் போல இருக்கும். கானவர் வேட்டைநாயோடு முயல் வேட்டைக்குச் செல்வார்கள். இரண்டு வேலிகளுக்கு இடையே வலையைத் தொடுத்துக் கட்டுவார்கள். கருங்கண் என்பது கானவரின் கூர்மையான கண்ணைக் குறிக்கும். கடறு கூட்டுண்ணல் என்பது பலராகக் கூடி வழிமறித்துக் கொள்ளுதலைக் குறிக்கும்.முயல் தப்பிப் போக முடியாதவாறு கானவர் பலராகக் கூடி வேட்டையாடுவர். (இப்பகுதியில் கவனமுடன் கடந்து செல்ல வேண்டும்.) கானவரின் குடிசைப் பகுதிகளைக் கொடுவில் எயினக் குறும்பு என்று பாடல் குறிப்பிடுகின்றது. வேட்டையாடும் காட்டுப் பகுதியைத் தாண்டிச் சென்றால் வீட்டுப்பகுதி வரும். உயர்நிலை வரைப்பு அங்கே ஈட்டி, கேடயம், வில், அம்பு ஆகியவை கூரையில் சார்த்தப்பட்டுத் தூங்கிக் கொண்டிருக்கும். எஃகம் என்பது ஈட்டி. ஒவ்வாத பகைவர்கள் நடுங்கும்படியாக வீசியதால் கூர் மழுங்கிப்போய் புலவு வாயுடன் அந்த ஈட்டிகள் சார்த்தப்பட்டிருக்கும். இது நிகழ்ந்த போரிலும் ஈட்டிகள் சார்த்தப்பட்ட பகுதிகளிலும் பருந்துகள் வட்டமிடும். போரிடும்போது மார்புக் கவசமாக அணியப்படுவது பலகை. இதில் மணிகள் கோக்கப்பட்டிருக்கும். போர் முடிந்த பின்னர் அதுவும் வீட்டுக் கூரையில் ஈட்டியோடு சேர்த்துச் சார்த்தப்பட்டிருக்கும். உயரமாக ஊகம் புல்லால் வேயப்பட்ட குடிசைகள் அவை. அந்த வரைப்புக் குடிசைகளின் முன்புறம் பந்தல். பருத்த கால்களை நட்டுப் போடப்பட்ட பந்தல் அது. பந்தலில் பண்டங்களை வைத்துப் பாதுகாக்கும் புதைப்பகுதிகள் உண்டு. அப் புதைப்பகுதிக்கு முன்புறம் உடுக்கு தொங்கும். பந்தர்க்காலில் சங்கிலித் தொடரால் பாதுகாப்புக்காகக் கட்டப்பட்ட நாய் இருக்கும். வீட்டுப் பகுதிக்கு வெளியே தழைத்திருக்கும் முள்வேலியும், அதனைச் சுற்றி மிளைக் காடும் (புதர்முள் காடு), அதனை அடுத்து படப்பையும் (தோட்டம்) இருக்கும். தோட்டத்துக்கு வேலி. வேலியில் வாயில். வாயிலில் புதவு. (கதவு). புதவானது வேல்கள் பலவற்றை நிறுத்திச் செய்யப்பட்டது. குறுக்குமர நுகப் புதவுகளில் (துளைகளில்) வேல்களைச் செருகி அதனைச் செய்திருப்பர். எயினக் குறும்பில் விருந்து செந்நெல் அரிசி கொண்டு சமைத்த சோறு. முள்ளம்பன்றிக் கறிக்குழம்பு. உடும்புக்கறி வறுவல். இந்த விருந்தினை ஆங்காங்கே போகுமிடமெல்லாம் நீங்கள் பெறுவீர்கள். செந்நெல் (சிவப்பரிசி நெல்) ஒரு புன்செய்ப் பயிர். மேட்டு நிலத்தில் மழைநீரைக் கொண்டு விளையும். களர் நிலத்தில் வளர்ந்து காய்த்துப் பழுக்கும் ஈச்சம்பழம் போல இருக்கும். மனவு என்னும் முள்ளம் பன்றியும், உடும்பும் ஞமலி என்னும் வேட்டைநாய் பிடித்துத் தந்தவை.