நாலடியார்

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

நான்மணிக்கடிகை

நான்மணிக்கடிகை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள், ஒன்று. இது ஒரு நீதி நூல். விளம்பி நாகனார் என்னும்

இனியவை நாற்பது

பூதஞ்சேந்தனார் இயற்றியது இனியவை நாற்பது. 40 வெண்பாக்களைக் கொண்டது. நான்கு பாடல்களில் இன்பம் தருவன

இன்னா நாற்பது

இன்னா நாற்பதில் கடவுள் வாழ்த்து நீங்கலாக நாற்பது பாடல்கள் உள்ளன. ஒவ்வொரு பாடலிலும் நான்கு கருத்துக்களைக் கொண்டு

திரிகடுகம்

திரிகடுகம் என்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். இந்நூல் நல்லாதனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகும். திரிகடுகம் என்பது

ஆசாரக் கோவை

மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத ஆசாரங்களை அதாவது ஒழுக்கங்களை எடுத்துக்கூறும் ஒரு நூல் ஆசாரக்கோவை. பண்டைக்காலத்

சிறுபஞ்சமூலம்

சிறுபஞ்சமூலம் என்பது ஐந்து சிறிய வேர்கள் என்று பொருள்படும். அவையாவன சிறுவழுதுணை வேர், நெருஞ்சி வேர், சிறுமல்லி வேர், பெருமல்லி வேர்

முதுமொழிக்காஞ்சி

முதுமொழி என்பது பழமொழி என்னும் சொற்பொருளோடு தொடர்புடையது. காஞ்சி என்பது மகளிர் இடையில் அணியும் ஒருவகை அணிகலக் கோவையையும்

பழமொழி நானூறு

பழமொழி நானூறு சங்கம் மருவிய காலத் தமிழ் நூல் தொகுப்பான பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. அதன் சிறப்புப் பாயிரத்தையும், கடவுள்

ஏலாதி

'ஏலாதி' என மருத்துவ நூல்களில் கூறப்படுவது ஏலம் ஆதியான ஆறு பொருள்கள் சேர்ந்த ஒரு வகைச் சூர்ணம். ஏலம் ஒரு பங்கு, இலவங்கப்பட்டை இரண்டு பங்கு,

திருக்குறள்

திருக்குறள் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் வரிசையில் "முப்பால்" என்னும் பெயரோடு விளங்குகின்றது. அறம், பொருள், இன்பம்

கார் நாற்பது

கார் நாற்பது அகப்பொருள் பற்றிய கீழ்க்கணக்கு நூல்களில் சிறியது. கார் காலத்தின் தோற்றம் ஒவ்வொரு செய்யுளிலும் கூறப்படுகின்றமையாலும்,

ஐந்திணை ஐம்பது

'ஐந்திணை ஐம்பது' முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல் என்ற ஐந்திணைக்கும் பத்துப் பாடல்களைப் பெற்றுள்ளமையால் 'ஐந்திணை ஐம்பது' எனப் பெயர் பெற்றது.

திணைமொழி ஐம்பது

திணைமொழி ஐம்பது குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்னும் ஐந்திணைகளுக்கும் பத்துப் பாடல்கள் வீதம் உள்ளன. அதனால் இந்நூல்

ஐந்திணை எழுபது

ஐந்திணை எழுபது ஐந்திணைகளில் ஒவ்வொன்றிற்கும் பதினான்கு பாடல்களைக் கொண்டு, எழுபது பாடல்களில் இந்நூல் அமைந்துள்ளது. இந் நூலின் முதலில் விநாயகரைக்

திணைமாலை நூற்றைம்பது

திணைமாலை நூற்றைம்பது பண்டைத் தமிழ் நூற் தொகுப்பான பதினெண்கீழ்க்கணக்கில் அடங்கியது. 153 பாடல்களைக் கொண்ட இது ஒரு அகப்பொருள் சார்ந்த நூல்.

கைந்நிலை

'கை' என்பது ஒழுக்கம் என்றும் பொருள்படும். ஐந்திணை ஒழுக்கம் பற்றியதே இந்நூலாகும். ஒவ்வொரு திணைக்கும் பன்னிரண்டு பாடலாக அறுபது பாடல்கள் இந் நூலில் உள்ளன.

களவழி நாற்பது

களவழி நாற்பது போர்க்களம் பற்றிய பாடல்களின் தொகுதியாகும். இந் நூலில் உள்ள பாடல்கள் எல்லாம் களத்து என்ற சொல்லை இறுதியில் கொண்டு முடிதல் கவனிக்கத் தக்கது.

பழமொழி நானூறு
பதினெண் கீழ்க்கணக்கு

பழமொழி நானூறு சங்கம் மருவிய காலத் தமிழ் நூல் தொகுப்பான பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. அதன் சிறப்புப் பாயிரத்தையும், கடவுள் வணக்கத்தையும் சேர்த்து நாலடியால் அமைந்த நானூற்றொரு (401) பாடல்களைக் கொண்டது.

பழமொழி நானூறு


34. வீட்டு நெறி

பாடல் : 387
எண்ணக் குறைபடாச் செல்வமும், இற்பிறப்பும்,
மன்னருடைய உடைமையும், மன்னரால்
இன்னர் எனல் வேண்டா; இம்மைக்கும் உம்மைக்கும்
தம்மை உடைமை தலை. . . . .[387]

பொருளுரை:

எண்ணுதற்குக் குறைவு இல்லாத செல்வமும் உயர்குடிப் பிறப்பும் மன்னரைத் தம் வயத்தராய் உடைய உரிமையும் அரசர்களால் இத் தன்மையுடையாரெனப் புகழப்படுதலும் விரும்பத்தக்கனவல்ல இப்பிறப்பிற்கும் மறு பிறப்பிற்கும் உறுதியாகிய தம்முடைய தலைவனாகிய கடவுளை உடைமையாகக் கொள்ளுதலே சிறந்தது.

கருத்து:

ஒவ்வொருவரும் கடவுளைஉடைமையாகக் கொள்ளுதலே சிறந்தது.

பாடல் : 388
அடங்கி, அகப்பட்ட ஐந்தினையும் காத்து,
தொடங்கிய மூன்றினால் மாண்டு, ஈண்டு உடம்பு ஒழிய,
செல்லும் வாய்க்கு ஏமம் சிறுகாலைச் செய்யாரே
கொல்லிமேல் கொட்டு வைத்தார். . . . .[388]

பொருளுரை:

துறவறத்திற்கு விதிக்கப்பட்ட நெறியின்கண் தாம் அடங்கி ஒழுகி, ஐம் புலன்களையும் பொறிகள் மேற் சொல்லாதவாறு செறியப் பாதுகாவல் செய்து, தாம் செய்யத் தொடங்கிய துறவற நெறியில், மனம், மொழி, மெய் என்ற மூன்றானுந் தூயராய் மாட்சிமைப்பட்டு, இவ்வுலகத்தின்கண் இவ்வுடம்பு ஒழிந்து நிற்க, இனிச் செல்ல விருக்கும் மறுமைக்கு உறுதியைக் காலம்பெறச் செய்யாதவர்களே, தீயின் மீது நெல்லினைப் பெய்து பொரித்து உண்ணுபவரோ டொப்பர்.

கருத்து:

காலம் பெறத் துறந்து வீடு எய்துக என்றது இது.

பாடல் : 389
நட்டாரை ஆக்கி, பகை தணித்து, வை எயிற்றுப்
பட்டு ஆர் துடியிடை யார்ப் படர்ந்து, ஒட்டித்
தொடங்கினார் இல்லத்து, அதன்பின் துறவா
உடம்பினால் என்ன பயன்?. . . . .[389]

பொருளுரை:

தன்னுடன் நட்புச் செய்து கொண்டவர்களைச் செல்வமுடையவராகச் செய்து பகைவரை அழித்து கூரிய பற்களையும் பட்டுடை பொலியும் உடுக்கை போன்ற இடையினையு முடைய பெண்கள்மீது காதல் கொண்டு பொருந்தி இல்லறத்தைத் தொடங்கிச் செய்தவர்கள் அது முடிந்த பிறகு துறவறத்தில் துறந்து செல்லாத உடம்பினான் என்ன பயனுண்டாம்?

கருத்து:

இல்லற நெறியில் நின்று அதன் பின்னர்த் துறவறம் சேர்க.

பாடல் : 390
இல்வாழ்க்கையானும் இலதானும் மேற்கொள்ளார்,
நல் வாழ்க்கை போக, நடுவு நின்று, எல்லாம்
ஒருதலையாச் சென்று துணியாதவரே
இரு தலையும் காக் கழித்தார். . . . .[390]

பொருளுரை:

இல்லறத்தை யாயினும் அஃதின்றி நின்ற துறவறத்தை யாயினும் தாம் மேற்கொண் டொழுகாதவராகி சிறந்த வாணாள் வறிதே கழிய இடை நின்று எல்லாவற்றையும் ஆழ்ந்து உறுதியாகத் துணிந்து ஒருநெறிக்கண் ஒழுகாதவர்களே காவின் இருபக்கத்திலுமுள்ள பொருளை நீக்கித் தண்டினைச் சுமந்து நின்றாரோ டொப்பர்.

கருத்து:

இரு வாழ்க்கையினுள் ஒன்றன் கண்ணும் துணிவோ டொழுகாதவர்கள் இம்மை மறுமை இன்பங்களைப் பெறார்.

பாடல் : 391
வளமையும், தேசும், வலியும், வனப்பும்,
இளமையும், இற்பிறப்பும், எல்லாம் உளவா,
மதித்து அஞ்சி மாறும் அஃது இன்மையால், - கூற்றம்
குதித்து உய்ந்து அறிவாரோ இல். . . . .[391]

பொருளுரை:

செல்வமும், புகழும், இளமையும் என்றிவை யெல்லாம் உளவாக; மதித்து அஞ்சி மாறும் அஃதின்மையால் - அவற்றை மதித்துப் பயந்து நீங்குந்தன்மை கூற்றத்திற்கின்மையால் இயமனினின்றும் பிழைத்துச் சென்றாராக அறியப்படுவார் ஒருவரும் இலர்.

கருத்து:

வளமை, தேசு, முதலியவற்றின் நிலையாமை நோக்கித் துறந்து துறவற நெறியிற் சேர்க.

பாடல் : 392
கொண்டு ஒழுகு மூன்றற்கு உதவாப் பசித் தோற்றம்
பண்டு ஒழுகி வந்த வளமைத்து அங்கு உண்டு, அது
கும்பியில் உந்திச் சென்று எறிதலால், - தன் ஆசை
அம்பாய் உள் புக்குவிடும். . . . .[392]

பொருளுரை:

தான் கொண்டு ஒழுகுகின்ற மூன்றற்கும் உதவி செய்த லில்லாத வேட்கைத் தோற்றம் முன்னர் நல்வினை செய்தமையான் வந்த செல்வத்தை அங்குத்தானே பயன்படுத்திக் கொண்டு அவ்வாசை நரகச் சேற்றில் உதைத்துச் சென்று வீழ்த்தலால் ஒருவனுடைய ஆசையாகிய அம்பு ஆயுளைப் புகுந்து கெடுத்துவிடும்.

கருத்து:

பிறர்க்குதவி செய்தலில்லாத ஆசையே ஒருவனை நரகத்துள் அழுத்தவல்லது.

பாடல் : 393
செல்வத் துணையும், தம் வாழ்நாள் துணையும், தாம்
தெள்ளி உணரார், சிறிதினால் செம்மாந்து,
பள்ளிப்பால் வாழார், பதி மகிழ்ந்து வாழ்வாரே,
முள்ளித் தேன் உண்ணுமவர். . . . .[393]

பொருளுரை:

செல்வத்தின் அளவினையும் தம் வாழ்நாளின் அளவினையும் தாம் தெளிய ஆராய்ந்து அறியாராகி சிறிய இல்லற இன்பத்தினாலே தருக்குற்று அருந்தவர்கள் உறையும் பள்ளியினிடத்து வாழாராகி இல்லின்கணிருந்து இன்புற்று வாழுகின்றவர்களே சிறந்த தேனை உண்ணாது முள்ளிச்செடியின் தேனை உண்ணுகின்றவர்களோ டொப்பர்.

கருத்து:

துறவறம் சேர்தலின்றி இல்லறத்திலேயே இருந்து மகிழ்ந்து இருப்பது முள்ளித்தே னுண்பதை யொக்கும்.

பாடல் : 394
வல் நெஞ்சினார் பின் வழி நினைந்து செல்குவை
என் நெஞ்சே! இன்று அழிவாய் ஆயினாய்; செல், நெஞ்சே!
இல் சுட்டி நீயும் இனிது உரைத்துச் சாவாதே
பல் கட்டு, அப் பெண்டிர், மகார். . . . .[394]

பொருளுரை:

எனக்குறுதி சூழும் என் நெஞ்சமே! வலிய நெஞ்சினராய இயமனுடைய வேலையாட்களின் பின்னே செய்த குற்றங்களை நினைத்து அழிந்து செல்வாய் (ஆனால்) இப்பொழுது இழிந்த செயலிற் புகுந்து நின்று செய்கின்றாய் மனைவாழ்க்கையின் பொருட்டு நீயும் இனியவற்றைக் கூறி நின்று இறவாது. செல் துறவறத்திற்குச் செல்வாயாக நெஞ்சமே அம்மனைவியும் மக்களும் பல தளைகளாவராதலின்.

கருத்து:

பெண்டிரும் மக்களும் தளைகளாதலின், அவற்றை யொழித்துத் துறவறம் சேர்க.

பாடல் : 395
சிறந்த தம் மக்களும் செய் பொருளும் நீக்கி,
துறந்தார் தொடரப்பாடு எவன் கொல், - கறங்கு அருவி
ஏனல்வாய் வீழும் மலை நாட! - அஃது அன்றோ,
யானை போய், வால் போகாவாறு. . . . .[395]

பொருளுரை:

ஒலித்துவரும் அருவிகள் தினைப்புனத்தின்கண் வீழும் மலைநாடனே! சிறப்புடைத்தாய தம்முடைய மக்களையும் தாம் ஈட்டிய பொருளையும் பற்றுவிட்டுத் துறந்தவர்கள் தமது உடம்பின்மீது பற்றுக்கொண்டு ஒழுகுதல் எது கருதி ஒரு வாயிலின்கண் யானை போய் அதன் வால் போகாவாற்றை அஃதொக்குமன்றோ.

கருத்து:

துறவறநெறி நின்றார் அகப்பற்றினை முற்ற நீக்குக என்றது இது.

பாடல் : 396
எனைப் பல் பிறப்பினும் ஈண்டி, தாம் கொண்ட
வினைப் பயன் மெய் உறுதல் அஞ்சி, எனைத்தும்,
கழிப்புழி ஆற்றாமை காண்டும்; அதுவே,
குழிப் புழி ஆற்றா குழிக்கு. . . . .[396]

பொருளுரை:

எல்லா வகைப் பிறப்புக்களிலும் ஈட்டித் தாம் மேற்கொண்ட தீவினையின் விளைவு தம்மேற் சார்தலுக்கு அஞ்சி எவ்வளவு சிறிய தீவினையையும் அநுபவிக்கின்ற விடத்துத் துன்பத்தை அடைகின்றோம் அச்செயல் குழியினின்றும் தோண்டப்பட்ட பூழி அக்குழியை நிரப்ப முடியாதவாறு போலும்.

கருத்து:

வினை தம்மா லீட்டப்பட்டதே யாதலின், அதன் விளைவை இயைந்து அநுபவிக்க வேண்டும்.

பாடல் : 397
திரியும், இடிஞ்சிலும், நெய்யும், சார்வு ஆக
எரியும், சுடர் ஓர் அனைத்தால்; தெரியுங்கால்,
சார்வு அற ஒடிப் பிறப்பு அறுக்கும்; அஃதேபோல்,
நீர் அற, நீர்ச் சார்வு அறும். . . . .[397]

பொருளுரை:

விளக்கு திரியையும் அகலையும் நெய்யையும் பற்றுக் கோடாகக் கொண்டு அழகாக எரியும்; சார்வுகளின்றேல் எரியாது அது போன்று ஆராயுமிடத்து சார்வாக நின்ற மூவகை வினையும் அற்றுப்போக (அவ்வினையறுதலே) பிறவித் துன்பத்தை நீக்கும் அதைப் போலவே நீர் அற்றுப்போகவே அந்நீரிற் சார்ந்து வாழும் உயிர்களும் இறந்துபோகும்.

கருத்து:

வினையறவே பிறப்பறும்.

பாடல் : 398
ஓத நீர் வேலி உலகத்தார், 'அந் நெறி
காதலர்' என்பது அறிந்து அல்லால், யாது ஒன்றும்
கானக நாட! - பயிலார்; பயின்றதூஉம்
வானகம் ஆகிவிடும். . . . .[398]

பொருளுரை:

காடுகளையுடைய முல்லை நாடனே தீயதாயினும் பழகிய நெறி வானுலகத்தை யொப்ப இன்பம் பயந்து பின்னர் நீங்குதற்கு அரிதாகி விடுமாதலால் ஒளி பொருந்திய கடலை வேலியாகவுடைய இவ்வுலகத்தி லுள்ளவர்கள் தாம் மேற்கொண்டு ஒழுகுகின்ற அந்நெறியை விரும்புகின்றார்கள் என்பதை அறிந்தன்றி யாதொரு நெறியின் கண்ணும் பழகுதலிலர் அறிவுடையார்.

கருத்து:

அறிவுடையார் உலகொப்பிய நெறியை மேற்கொண் டொழுகுவார்கள்.

பாடல் : 399
பரந்தவர் கொள்கைமேல், பல் ஆறும் ஓடார்,
நிரம்பிய காட்சி நினைந்து அறிந்து கொள்க!
வரம்பு இல் பெருமை தருமே; - பரம்பூரி
என்றும் பதக்கு ஏழ் வரும். . . . .[399]

பொருளுரை:

பல்வேறு வகைப்பட விரிந்த சமயத்தார் கொள்கைகள்மீது பல நெறிக்கண்ணும் செல்லாதவர்களாகி நன்மை நிரம்பிய கொள்கையை ஆராய்ந்தறிந்து மேற்கொள்க. பரம்படித்த கூலி எக்காலத்தும் பதக்கு நெல்லே உறுதியாக வரும்; (அதுபோல) கடைப்பிடித் தொழுகிய அக்கொள்கையே எல்லையில்லாத பெருமையை உறுதியாகத் தரும்.

கருத்து:

ஒரு நெறியை உறுதியாகக் கொண்டொழுகுக.

பாடல் : 400
நாணின்றி ஆகாது பெண்மை நயமிகு
ஊணின்றி ஆகா துயிர்வாழ்க்கை - பேணுங்கால்
கைத்தின்றி ஆகா கருமங்கள் காரிகையாய்
வித்தின்றிச் சம்பிரதம் இல். . . . .[400]

பொருளுரை:

அழகுடையாய்! பெண்மைக் குணம் நாணின்றி உண்டாகாது; காப்பாற்றுமிடத்து நலம் மிகுந்த உணவு இல்லாது உயிர் வாழ்ந்திருத்தல் முடியாது; செயல்கள் கைப்பொருள் இல்லாது முடிதல் இல்லை; விதையின்றி விளைவும் இல்லை.

கருத்து:

பெண்களுக்கு நாண் வேண்டும் என்றது இது.