நாலடியார்

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

நான்மணிக்கடிகை

நான்மணிக்கடிகை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள், ஒன்று. இது ஒரு நீதி நூல். விளம்பி நாகனார் என்னும்

இனியவை நாற்பது

பூதஞ்சேந்தனார் இயற்றியது இனியவை நாற்பது. 40 வெண்பாக்களைக் கொண்டது. நான்கு பாடல்களில் இன்பம் தருவன

இன்னா நாற்பது

இன்னா நாற்பதில் கடவுள் வாழ்த்து நீங்கலாக நாற்பது பாடல்கள் உள்ளன. ஒவ்வொரு பாடலிலும் நான்கு கருத்துக்களைக் கொண்டு

திரிகடுகம்

திரிகடுகம் என்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். இந்நூல் நல்லாதனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகும். திரிகடுகம் என்பது

ஆசாரக் கோவை

மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத ஆசாரங்களை அதாவது ஒழுக்கங்களை எடுத்துக்கூறும் ஒரு நூல் ஆசாரக்கோவை. பண்டைக்காலத்

சிறுபஞ்சமூலம்

சிறுபஞ்சமூலம் என்பது ஐந்து சிறிய வேர்கள் என்று பொருள்படும். அவையாவன சிறுவழுதுணை வேர், நெருஞ்சி வேர், சிறுமல்லி வேர், பெருமல்லி வேர்

முதுமொழிக்காஞ்சி

முதுமொழி என்பது பழமொழி என்னும் சொற்பொருளோடு தொடர்புடையது. காஞ்சி என்பது மகளிர் இடையில் அணியும் ஒருவகை அணிகலக் கோவையையும்

பழமொழி நானூறு

பழமொழி நானூறு சங்கம் மருவிய காலத் தமிழ் நூல் தொகுப்பான பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. அதன் சிறப்புப் பாயிரத்தையும், கடவுள்

ஏலாதி

'ஏலாதி' என மருத்துவ நூல்களில் கூறப்படுவது ஏலம் ஆதியான ஆறு பொருள்கள் சேர்ந்த ஒரு வகைச் சூர்ணம். ஏலம் ஒரு பங்கு, இலவங்கப்பட்டை இரண்டு பங்கு,

திருக்குறள்

திருக்குறள் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் வரிசையில் "முப்பால்" என்னும் பெயரோடு விளங்குகின்றது. அறம், பொருள், இன்பம்

கார் நாற்பது

கார் நாற்பது அகப்பொருள் பற்றிய கீழ்க்கணக்கு நூல்களில் சிறியது. கார் காலத்தின் தோற்றம் ஒவ்வொரு செய்யுளிலும் கூறப்படுகின்றமையாலும்,

ஐந்திணை ஐம்பது

'ஐந்திணை ஐம்பது' முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல் என்ற ஐந்திணைக்கும் பத்துப் பாடல்களைப் பெற்றுள்ளமையால் 'ஐந்திணை ஐம்பது' எனப் பெயர் பெற்றது.

திணைமொழி ஐம்பது

திணைமொழி ஐம்பது குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்னும் ஐந்திணைகளுக்கும் பத்துப் பாடல்கள் வீதம் உள்ளன. அதனால் இந்நூல்

ஐந்திணை எழுபது

ஐந்திணை எழுபது ஐந்திணைகளில் ஒவ்வொன்றிற்கும் பதினான்கு பாடல்களைக் கொண்டு, எழுபது பாடல்களில் இந்நூல் அமைந்துள்ளது. இந் நூலின் முதலில் விநாயகரைக்

திணைமாலை நூற்றைம்பது

திணைமாலை நூற்றைம்பது பண்டைத் தமிழ் நூற் தொகுப்பான பதினெண்கீழ்க்கணக்கில் அடங்கியது. 153 பாடல்களைக் கொண்ட இது ஒரு அகப்பொருள் சார்ந்த நூல்.

கைந்நிலை

'கை' என்பது ஒழுக்கம் என்றும் பொருள்படும். ஐந்திணை ஒழுக்கம் பற்றியதே இந்நூலாகும். ஒவ்வொரு திணைக்கும் பன்னிரண்டு பாடலாக அறுபது பாடல்கள் இந் நூலில் உள்ளன.

களவழி நாற்பது

களவழி நாற்பது போர்க்களம் பற்றிய பாடல்களின் தொகுதியாகும். இந் நூலில் உள்ள பாடல்கள் எல்லாம் களத்து என்ற சொல்லை இறுதியில் கொண்டு முடிதல் கவனிக்கத் தக்கது.

பழமொழி நானூறு
பதினெண் கீழ்க்கணக்கு

பழமொழி நானூறு சங்கம் மருவிய காலத் தமிழ் நூல் தொகுப்பான பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. அதன் சிறப்புப் பாயிரத்தையும், கடவுள் வணக்கத்தையும் சேர்த்து நாலடியால் அமைந்த நானூற்றொரு (401) பாடல்களைக் கொண்டது.

பழமொழி நானூறு


18. கருமம் முடித்தல்

பாடல் : 162
செந்நீரார் போன்று சிதைய மதிப்பார்க்கும்,
பொய்ந்நீரார் போன்று பொருளை முடிப்பார்க்கும்,
அந் நீர் அவரவர்க்குத் தக்காங்கு ஒழுகுபவே
வெந் நீரில் தண்ணீர் தெளித்து. . . . .[162]

பொருளுரை:

செம்மையான நீர்மையுடையாரைப் போன்று தோன்றி உள்ளத்தில் தங்காரியம் சிதையுமாறு நினைக்கின்றவர்களுக்கும் பொய்ம்மையான நீர்மையுடையாரைப் போன்று தோன்றி தாம் நினைத்த செயலை முடிக்கின்ற உள்ள முடையார்க்கும் மிக்க வெம்மையான நீரில் குளிர்ந்த நீரை அளாவிப் பயன்படுத்திக் கொள்ளல்போல அந்த இயல்பினை உடைய அவரவர்களுக்குத் தகுந்த வண்ணம் ஒழுகுவார்கள் காரியத்திற் கண்ணுடையார்.

கருத்து:

காரியத்திற் கண்ணுடையார் நல்லவர்களுக்கு நல்லாரைப் போலவும், தீயார்களுக்குத் தீயாரைப் போலவுமிருந்து தங் கருத்தை நிறைவேற்றுவார்.

பாடல் : 163
தாம் ஆற்றகில்லாதார், தாம் சாரப் பட்டாரைத்
தீ மாற்றத்தாலே பகைப்படுத்திட்டு, ஏமாப்ப
முன் ஓட்டுக்கொண்டு, முரண் அஞ்சிப் போவாரே
உண் ஓட்டு அகல் உடைப்பார். . . . .[163]

பொருளுரை:

தாம் தம்மைச் செவ்வை செய்துகொள்ள முடியாதார் பாதுகாவலாகத் தம்மால் அடையப்பட்டாரை தீயசொற்களால் பகைமையை உண்டாக்கி எதிர்த்து நிற்கவும் பயந்து சேமமாக முன் ஓடுதலை மேற்கொண்டு செல்பவர்கள் தாம் உண்கின்ற ஓடாகிய உண்கலத்தை உடைப்பாரோ டொப்பர்.

கருத்து:

தம்மால் தம்மைப் பாதுகாத்துக்கொள்ள இயலாதார் தமக்குச் சார்பானவரைச் சினந்து கூறாதொழிக.

பாடல் : 164
புரையக் கலந்தவர் கண்ணும் கருமம்
உரையின் வழுவாது உவப்பவே கொள்க!
வரையக நாட! - விரைவிற், கருமம்
சிதையும்; இடர் ஆய்விடும். . . . .[164]

பொருளுரை:

மலைமேலுண்டாகிய நாடனே! உள்ளம் ஒப்ப நட்புக்கொண்டவரிடத்தும் அவரால் உளவாகும் செயலை கூறுஞ் சொற்களில் வழுவாது அவர்கள் மனம் மகிழும்படி செயலை முடித்துக்கொள்க. விரைவில் - தமக்கு வேண்டிய பொழுதே அச் செயலைக் கொள்ள விரைவாயாயின் செயலும் முடிவுறாது இடையிலே அழிந்தொழியும் அங்ஙனம் அழிதலால் தமக்குத் துன்பம் உண்டாகும்.

கருத்து:

மேற்கொண்ட செயலை அமைதியாகச் செய்க. இல்லையாயின் மிகுந்த துன்பங்களை அடைவாய்.

பாடல் : 165
'நிலைஇய பண்பு இலார் நேர் அல்லர்' என்று, ஒன்று
உளைய உரையாது, உறுதியே கொள்க!
வளை ஒலி ஐம்பாலாய்! - வாங்கியிருந்து,
தொளை எண்ணார், அப்பம் தின்பார். . . . .[165]

பொருளுரை:

சுருண்டு தழைத்த ஐந்து பகுதியாகிய கூந்தலையுடையாய் அப்பத்தை உண்ண விரும்பினவர்கள் அதைக் கையில் வாங்கிய பின்னர்த் தொளைகள் இருக்கின்றன வென்று குற்றங்கூறி அவற்றை நீக்குவாரில்லை நிலைபெற்ற பண்பில்லாதவர் நடுவு நிலைமையை உடையவர் அல்லர் என்று மனம் வருந்தத்தக்க ஒரு சொல்லும் சொல்லாது.உறுதியே கொள்க - அவரிடத்தில் தாம் கொள்ள நினைத்த உறுதியாகிய பயனையே கொள்க.

கருத்து:

நமது காரியத்தை முடிக்கவல்லாரது குறைகளைக் கூறித் திரிய வேண்டாம். காரியம் முடியுமாற்றையே நோக்குக.

பாடல் : 166
அன்பின் நெகிழ வழிபட்டுக் கொள்ளாது,
நின்ற பொழுதின் முடிவித்துக் கொள்வது
கன்று விட்டு ஆக் கறக்கும் போழ்தில் கறவானாய்,
அம்பு விட்டு ஆக் கறக்குமாறு. . . . .[166]

பொருளுரை:

தாம்பூண்ட அன்பினால் ஒருவன் நெகிழுமாறு அவனை வழிபட்டுத் தமது செயலை முடித்துக் கொள்ளாது நினைத்த அப்பொழுதிலேயே கடியன கூறிமுடித்துக் கொள்ளுதல் கன்றினைச் செலுத்தி ஆவினைக் கறக்க இருக்கும்போது அங்ஙனங் கறவாதவனாகி அம்பினைச் செலுத்தி ஆவினைக் கறக்க நினைக்குமாற்றை ஒக்கும்.

கருத்து:

தமது செயலைச் செய்வோரிடத்தில் அன்பாகவும் விரைவின்றியு மிருந்து செயலை முடித்துக்கொள்க.

பாடல் : 167
மடியை வியங்கொள்ளின், மற்றைக் கருமம்
முடியாத வாறே முயலும்; - கொடி அன்னாய்!
பாரித்தவனை நலிந்து தொழில் கோடல்,
மூரி உழுது விடல். . . . .[167]

பொருளுரை:

கொடிபோன்ற இடையை உடையாய்! சோம்பலுடையானை ஒருசெயலைச் செய்ய ஏவின் அவனைச் செய்ய ஏவிய அச்செயல் முடியாத விதமாக முயற்சி செய்வான் சோம்பலுடையான் சோம்பலாற் பெருத்தவனைத் துன்புறுத்திக் காரியத்தைக் கொள்ளுதல் கிழ எருதினைக் கொண்டு நிலத்தை உழுது பயன்கோடல் ஒக்கும்.

கருத்து:

சோம்பலுடையானைக் கொண்டு ஒரு காரியம் செய்வித்தலாகாது; நலிந்து செய்விப்பினும் அதனால் பயன் உண்டாகாது.

பாடல் : 168
ஆணியாக் கொண்ட கருமம், பதிற்றாண்டும்
பாணித்தே செய்ய, வியங்கொள்ளின் - காணி
பயவாமல் செய்வார் ஆர்? தம் சாகாடேனும்
உயவாமல் சேறலோ இல். . . . .[168]

பொருளுரை:

தம்முடைய சகடமேயாயினும் உயவு நெய் இடாவிடில் செல்லுதல் இல்லை. (அதுபோல) ஆணியைப்போல உறுதியாகத் தாம் கொண்ட செயலை ஒன்றும் கொடாமல் சிலரை ஏவினால் பத்து ஆண்டாயினும் காரியத்தின்கண் விரைவின்றியே செய்வார்கள் காணியளவு பொருளாயினும் பயனாகப் பெறாமல் செயலைச் செய்வார் யார் உளர்? இல்லை.

கருத்து:

பொருளுதவி செய்து செயலைச் செய்வித்துக் கொள்க.

பாடல் : 169
விட்டுக் கருமம் செயவைத்த பின்னரும்,
முட்டாது அவரை வியங்கொளல் வேண்டுமால்
தொட்டக்கால் மாழ்கும் தளிர்மேலே நிற்பினும்,
தட்டாமல் செல்லாது, உளி. . . . .[169]

பொருளுரை:

தொட்டக்கால் மாழ்கும் தளிர்மேலே நிற்பினும் உளியானது தன்னை வேறொருவன் தட்டாமல் அத்தளிரை அறுத்துச் செல்லாது. (அதுபோல) காரியத்தின் பொறுப்பை அவர்களிடத்தே விட்டு அவர்களையே செய்யுமாறு செய்த பின்னரும் இடையீடின்றி அவரைஏவி ஆராய்தல் வேண்டும்.

கருத்து:

நமது காரியத்தைப் பொறுப்பாக ஏற்றுக்கொண்டு ஒருவர் செய்வாரேயாயினும் இத்துடன் பொறை கழிந்தது என்றிராது அவரைஅடிக்கடி ஊக்கப்படுத்துதல் வேண்டும்.

பாடல் : 170
காட்டிக் கருமம் கயவர்மேல் வைத்து, 'அவர்
ஆக்குவர் ஆற்ற எமக்கு!' என்று அமர்ந்து இருத்தல்,
மாப்புரை நோக்கின் மயில் அன்னாய்! - பூசையைக்
காப்பிடுதல், புன் மீன் தலை. . . . .[170]

பொருளுரை:

மாவடுவை ஒத்த கண்ணையும் மயிலையொத்த சாயலையுமுடையாய்! செயலினைக் காட்டிக்கொடுத்து கீழ்மக்கள்மேல் காரியத்தைச் செய்துமுடிக்கும் பொறுப்பினை வைத்தவர் எமக்கு மிகவும் செவ்வையாகக் காரியத்தைச் செய்து தருவர் என்று உறுதிசெய்து வாளா இருத்தல் புல்லிய மீன்கள் (உலர்கின்ற) இடத்தில் பூனையைக் காவலாக வைப்பதனோ டொக்கும்.

கருத்து:

தம்முடைய காரியத்தைக் கீழ்மக்களிடம் ஒப்பித்திருப்பவர் ஒருநன்மையும் அடையார்.

பாடல் : 171
தெற்ற அறிவுடையார்க்கு அல்லால், திறன் இல்லா
முற்றலை நாடிக் கருமம் செய வையார்
கற்று ஒன்று அறிந்து, கசடு அற்ற காலையும்,
மற்றதன்பால் தேம்பல் நன்று. . . . .[171]

பொருளுரை:

தெளிவாக அறிந்த அறிவுடையாரைத் தேடிவைப்பதல்லாமல் திறமையில்லாத முதிர்ந்தவர்களை ஆராய்ந்து செயலைச் செய்ய வைக்க மாட்டார்கள். (காரியம் முடியவேண்டுமென்ற கருத்துடையார்) ஒரு பொருளைக் கற்றறிந்து கல்வியின்கண் குற்றமில்லாது ஒருவர் விளங்கிய இடத்தும் குணமில்லையாயின் அவரிடத்துக் கொண்ட நட்பு மெலிதலே நல்லது.

கருத்து:

காரியம் முடியவேண்டுமென்று நினைப்பவர்கள் சிறந்த அறிவு பெற்றவர்களையே அதனைச் செய்ய நிறுத்துதல் வேண்டும்.

பாடல் : 172
உற்றான், உறாஅன், எனல் வேண்டா; ஒண் பொருளைக்
கற்றானை நோக்கியே கைவிடுக! கற்றான்
கிழவன் உரை கேட்கும்; கேளான் எனினும்,
இழவு அன்று, எருது உண்ட உப்பு. . . . .[172]

பொருளுரை:

தமக்கு உறவினன் உறவல்லாதவன் என்று ஆராய வேண்டுவதில்லை காரியம் செய்யும் பொருட்டுக் கொடுக்கும் ஒள்ளிய பொருளைக் கல்வியறிவாற் சிறந்தானை ஆராய்ந்து அவனிடம் கொடுக்க கல்வியறிவாற் சிறந்தான் தனக்குப் பொருள் கொடுத்துதவியவன் சொற்களைக் கேட்டு நடப்பான் கேளா தொழிவா னாயினும் காளை உண்ட உப்பு நட்டமாகாமைபோலப் பயன்கொடா தொழியான்என்பதாம்.

கருத்து:

நமக்கு முடியவேண்டிய செயலையும் அதற்காக நாம் கொடுக்க இருக்கும் பொருளையும் கல்வியறிவு உடையானைத் தேடிக் கொடுக்கவேண்டும் என்பதாம்.

பாடல் : 173
கட்டு உடைத்தாகக் கருமம் செய வைப்பின்,
பட்டு உண்டு ஆங்கு ஓடும் பரியாரை வையற்க!
தொட்டாரை ஒட்டாப் பொருள் இல்லை; இல்லையே,
அட்டாரை ஒட்டாக் கலம். . . . .[173]

பொருளுரை:

கையால் தொட்டவர்களை ஒட்டாத பொருள்கள் இல்லை சமைத்தாரைப் பொருந்திப் பயன்படாத உணவுப்பொருளுமில்லை. (ஆதலால்) பாதுகாவலுடையதாகுமாறு செயலைச் செய்ய ஒருவனை நிறுத்த நினைப்பின் அச்செயலின்கண் பொருந்தி அதனிடத்துள்ள பயன் அனைத்தையும் கைக்கொண்டு உடனே விட்டு நீங்குகின்ற காரியத்தைச் செய்ய வையாதொழிக.

கருத்து:

காரியத்தால் உளதாகும் பயனைக் கைக்கொள்வானை ஒருகாரியத்தையும் செய்ய நியமித்தல் ஆகாது.

பாடல் : 174
நாட்டிக் கொளப்பட்டார் நன்மை இலர் ஆயின்,
'காட்டி, களைதும்' என வேண்டா; - ஓட்டி
இடம்பட்ட கண்ணாய்! - இறக்கும் மை ஆட்டை
உடம்படுத்து வேள்வு உண்டார் இல். . . . .[174]

பொருளுரை:

குழையை அலைத்து (விளங்கும்) அகன்ற கண்களை உடையாய்! இறக்கும் நிலையிலுள்ள காராட்டை உடன்பாடு பெறச்செய்து அதன் சம்மதத்தின்பேரில் குருதிகொண்டார் உலகத்தில்லை. (ஆகையால்) தம்மாலே தங்காரியத்தின் பொருட்டு நாட்டிக் கொள்ளப்பட்டவர்கள் நன்மையைச் செய்தல் இலராயின் அவரிடத்து அதனை எடுத்துக்காட்டி அவர் உடன்பாடுபெற்றுச் செயலினின்றும் நீக்குவோம் என்று நினைக்கவேண்டா.

கருத்து:

தம்மால் நிலைநாட்டப்பட்டார் தமக்கு நன்மை செய்யாராயின் அவரிடம் சொல்லாதே அவரைநீக்குதல் வேண்டும்.

பாடல் : 175
அகம் தூய்மை இல்லாரை ஆற்றப் பெருக்கி,
இகந்துழி விட்டிருப்பின், அஃதால் - இகந்து,
நினைத்து தெரியானாய், நீள் கயத்துள், ஆமை,
'நனைந்து வா' என்று விடல். . . . .[175]

பொருளுரை:

மனத்தின்கண் தூய்மையில்லாதவர்களை மிகவும் பெருக்கிக் கொண்டு சேய்த்தாய இடத்தே தங்காரியம் முடிக்கும்பொருட்டு அவரைச் செல்லவிட்டு இருப்பின் அச்செயல் மனதின்கண் ஆராய்ந்து அறியானாய் (யாமையைப் பிடித்த ஒருவன்) அந்த யாமையை நீண்ட குளத்திற்குப்போய் நீரால் நனையப் பெற்றுத் திரும்பிவா என்று சொல்லிவிடுதலை ஒக்கும்.

கருத்து:

மனத்தூய்மை யில்லாதாரைச் சேய இடத்துள்ள கருமத்தை முடிக்க அனுப்புதல் கூடாது.

பாடல் : 176
உழை இருந்து, நுண்ணிய கூறி, கருமம்,
புரை இருந்தவாறு அறியான், புக்கான் விளிதல்
நிரை இருந்து மாண்ட அரங்கினுள், வட்டு,
கரை இருந்தார்க்கு எளிய, போர். . . . .[176]

பொருளுரை:

வரிசையாக இருந்து மாட்சிமைப்பட்ட அரங்கின்கண் அரங்கின்கண் பொராதே பக்கத்திருந்தார்க்கு எளியதாகத் தோன்றும் வட்டுப்போர் பக்கத்தேயிருந்து நுட்பமான காரியங்களை ஆராய்ந்து கூறினும் நுட்ப உணர்வு இல்லாதும் கருமத்தின்கண் குற்றம் இருந்த நெறியை அறிவதும் செய்யானாய் கருமத்தைச் செய்யப் புகுந்தவன் அழிவினை அடைவான்.

கருத்து:

கருமம் செய்வார்க்கு நுண்ணுணர்வு மிகுதியும் வேண்டப்படுவ தொன்று.