நாலடியார்

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

நான்மணிக்கடிகை

நான்மணிக்கடிகை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள், ஒன்று. இது ஒரு நீதி நூல். விளம்பி நாகனார் என்னும்

இனியவை நாற்பது

பூதஞ்சேந்தனார் இயற்றியது இனியவை நாற்பது. 40 வெண்பாக்களைக் கொண்டது. நான்கு பாடல்களில் இன்பம் தருவன

இன்னா நாற்பது

இன்னா நாற்பதில் கடவுள் வாழ்த்து நீங்கலாக நாற்பது பாடல்கள் உள்ளன. ஒவ்வொரு பாடலிலும் நான்கு கருத்துக்களைக் கொண்டு

திரிகடுகம்

திரிகடுகம் என்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். இந்நூல் நல்லாதனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகும். திரிகடுகம் என்பது

ஆசாரக் கோவை

மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத ஆசாரங்களை அதாவது ஒழுக்கங்களை எடுத்துக்கூறும் ஒரு நூல் ஆசாரக்கோவை. பண்டைக்காலத்

சிறுபஞ்சமூலம்

சிறுபஞ்சமூலம் என்பது ஐந்து சிறிய வேர்கள் என்று பொருள்படும். அவையாவன சிறுவழுதுணை வேர், நெருஞ்சி வேர், சிறுமல்லி வேர், பெருமல்லி வேர்

முதுமொழிக்காஞ்சி

முதுமொழி என்பது பழமொழி என்னும் சொற்பொருளோடு தொடர்புடையது. காஞ்சி என்பது மகளிர் இடையில் அணியும் ஒருவகை அணிகலக் கோவையையும்

பழமொழி நானூறு

பழமொழி நானூறு சங்கம் மருவிய காலத் தமிழ் நூல் தொகுப்பான பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. அதன் சிறப்புப் பாயிரத்தையும், கடவுள்

ஏலாதி

'ஏலாதி' என மருத்துவ நூல்களில் கூறப்படுவது ஏலம் ஆதியான ஆறு பொருள்கள் சேர்ந்த ஒரு வகைச் சூர்ணம். ஏலம் ஒரு பங்கு, இலவங்கப்பட்டை இரண்டு பங்கு,

திருக்குறள்

திருக்குறள் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் வரிசையில் "முப்பால்" என்னும் பெயரோடு விளங்குகின்றது. அறம், பொருள், இன்பம்

கார் நாற்பது

கார் நாற்பது அகப்பொருள் பற்றிய கீழ்க்கணக்கு நூல்களில் சிறியது. கார் காலத்தின் தோற்றம் ஒவ்வொரு செய்யுளிலும் கூறப்படுகின்றமையாலும்,

ஐந்திணை ஐம்பது

'ஐந்திணை ஐம்பது' முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல் என்ற ஐந்திணைக்கும் பத்துப் பாடல்களைப் பெற்றுள்ளமையால் 'ஐந்திணை ஐம்பது' எனப் பெயர் பெற்றது.

திணைமொழி ஐம்பது

திணைமொழி ஐம்பது குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்னும் ஐந்திணைகளுக்கும் பத்துப் பாடல்கள் வீதம் உள்ளன. அதனால் இந்நூல்

ஐந்திணை எழுபது

ஐந்திணை எழுபது ஐந்திணைகளில் ஒவ்வொன்றிற்கும் பதினான்கு பாடல்களைக் கொண்டு, எழுபது பாடல்களில் இந்நூல் அமைந்துள்ளது. இந் நூலின் முதலில் விநாயகரைக்

திணைமாலை நூற்றைம்பது

திணைமாலை நூற்றைம்பது பண்டைத் தமிழ் நூற் தொகுப்பான பதினெண்கீழ்க்கணக்கில் அடங்கியது. 153 பாடல்களைக் கொண்ட இது ஒரு அகப்பொருள் சார்ந்த நூல்.

கைந்நிலை

'கை' என்பது ஒழுக்கம் என்றும் பொருள்படும். ஐந்திணை ஒழுக்கம் பற்றியதே இந்நூலாகும். ஒவ்வொரு திணைக்கும் பன்னிரண்டு பாடலாக அறுபது பாடல்கள் இந் நூலில் உள்ளன.

களவழி நாற்பது

களவழி நாற்பது போர்க்களம் பற்றிய பாடல்களின் தொகுதியாகும். இந் நூலில் உள்ள பாடல்கள் எல்லாம் களத்து என்ற சொல்லை இறுதியில் கொண்டு முடிதல் கவனிக்கத் தக்கது.

பழமொழி நானூறு
பதினெண் கீழ்க்கணக்கு

பழமொழி நானூறு சங்கம் மருவிய காலத் தமிழ் நூல் தொகுப்பான பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. அதன் சிறப்புப் பாயிரத்தையும், கடவுள் வணக்கத்தையும் சேர்த்து நாலடியால் அமைந்த நானூற்றொரு (401) பாடல்களைக் கொண்டது.

பழமொழி நானூறு


24. ஊழ்

பாடல் : 227
எவ்வம் துணையாப் பொருள் முடிக்கும் தாளாண்மை,
தெய்வம் முடிப்புழி, என் செய்யும், மொய் கொண்டு?
பூப் புக்கு வண்டு ஆர்க்கும் ஊர்! - குறும்பு, இயங்கும்
கோப்புக்குழி, செய்வது இல். . . . .[227]

பொருளுரை:

பூவின்கண் புகுந்து வண்டுகள் ஒலிக்கின்ற வயல்நாடனே! (எந்நாட்டின் கண்ணும் தடையின்றிச் செல்ல வல்ல ஆணையையுடைய) பேரரசன் (போர் செய்யப்) புகுந்த இடத்து குறுநிலத்தை ஆளுமரசன் எதிர்த்துச் செய்வது ஒன்றுமில்லை (அவன் ஆளுகையின் கீழ் அடங்கியிருப்பான்); (அதுபோல) துன்பமே துணையாக தான் கருதிய பொருளை முடித்தற்குரிய முயற்சி இழவூழே (எதிர்த்து நின்று முடியாதவாறு) முடிக்கின்றவிடத்து முயற்சி அதனை எதிர்த்து வலிந்து என்ன செய்ய முடியும்? (கீழ்ப்பட்டேயிருத்தல் வேண்டும்.)

கருத்து:

இழவூழ் எதிர்த்து நிற்குமிடத்துச் செய்யும் முயற்சியாற் பயனில்லையாம்.

பாடல் : 228
சுட்டிச் சொலப்படும் பேர் அறிவினார்கண்ணும்,
பட்ட விருத்தம் பலவானால், பட்ட
பொறியின் வகைய, கருமம் அதனால்,
அறிவினை ஊழே அடும். . . . .[228]

பொருளுரை:

குறித்துச் சொல்லப்படும் மிகுந்த அறிவு உடையாரிடத்தும் உளவாய குற்றங்கள் பலவானால் (அதற்குக் காரணம்) பட்டபொறியின் வகைய கருமம் பொருந்தியிருக்கின்ற பழவினையின் இருக்கும் செயல்கள் என்பதறியப்படும் வழிப்பட்டனவாய் ஆகையால் நல்லறிவினை முன் செய்த ஊழே பேதைமையாக்கும்.

கருத்து:

மிகுந்த அறிவுடையாரிடத்தும் குற்றங் காணப்படுதல் ஊழானாயது என்பதாம்.

பாடல் : 229
அம் கண் விசும்பின் அகல் நிலாப் பாரிக்கும்
திங்களும், தீங்குறுதல் காண்டுமால்; - பொங்கி,
அறைப் பாய் அருவி அணி மலை நாட!
உறற்பால யார்க்கும் உறும். . . . .[229]

பொருளுரை:

மிகுந்து கற்பாறையின்கண் பாயாநின்ற அருவிகளையுடைய மலை நாடனே! அழகிய இடமகன்ற ஆகாயத்தினின்று மிகுந்த வெண்மையான கிரணங்களை வீசுகின்ற மதியும் கோளாற் றீமை யடைதலைக் காண்கின்றோம். (ஆதலால்) உறற்பால யார்க்கும் உறும் - தமக்கு வரக்கடவ துன்பங்கள் தம்மை மாற்றும் இயல்புடையாரே யெனினும் விடாது அவரைச் சென்று பற்றி நிற்கும்.

கருத்து:

வருவது வந்தே தீரும். அதை மாற்றுதலும் ஆகாது. அதன்பொருட்டு வருந்துதலும் ஆகாது.

பாடல் : 230
கழுமலத்தில் யாத்த களிறும் கருவூர்
விழுமியோன் மேற்சென்றதனால், விழுமிய
வேண்டினும், வேண்டாவிடினும், உறற்பால
தீண்டா விடுதல் அரிது. . . . .[230]

பொருளுரை:

சீகாழியின்கண் கட்டப்பட்டிருந்த யானையும் கருவூரின்கண் இருந்த சிறப்புடையவனாகிய கரிகாற் சோழனிடத்துச் சென்று அவனைக் கொண்டுவந்து அரசுரிமையை எய்துவித்ததால் சிறந்த பொருள்களை விரும்பினும் விரும்பாதொழியினும் அடைதற்குரியவாய் நின்ற நன்மைகள் அவனை அடையாது நிற்றல் இல்லை.

கருத்து:

தமக்கு வரவேண்டிய நன்மைகள் வந்தே தீரும்.

பாடல் : 231
ஆஅய் வளர்ந்த அணி நெடும் பெண்ணையை,
ஏஎய், இரவு எல்லாம் காத்தாலும், வாஅய்ப்
படற்பாலார்கண்ணே, படுமே பொறியும்
தொடற்பாலார்கண்ணே தொடும். . . . .[231]

பொருளுரை:

தனக்கு ஆகி வளர்ந்த அழகிய நீண்ட பனையை பொருந்தி இரவு முழுதும் காவல் செய்திருப்பினும் வாயின்கண் பொருந்துதற் குரியாரிடத்தே கீழே விழுந்து அவர்க்குப் பயன்படும். (அதுபோல) செல்வமும் தீண்டுதற் குரியாரிடத்தே சென்று தொடாநிற்கும்.

கருத்து:

தனக்கு ஆகாத செல்வத்தைப் பாதுகாப்பினும் நில்லாது.

பாடல் : 232
முன் பெரிய நல்வினை முட்டு இன்றிச் செய்யாதார்,
பின் பெரிய செல்வம் பெறல் ஆமோ? வைப்போடு
இகலிப் பொருள் செய்ய எண்ணியக்கால், என் ஆம்?
முதல் இலார்க்கு ஊதியம் இல். . . . .[232]

பொருளுரை:

முற்பிறப்பின்கண் மிகுந்த நன்மை பயக்கும் அறங்களை தடையில்லாது செய்யாதவர்கள் பிற்பிறப்பின் கண் மிகுந்த செல்வத்தைப் பெறக்கூடுமோ? பிறர் வைத்திருக்கின்ற செல்வத்தோடு மாறுபட்டுப் பொருளினைச் செய்வோம் என்று நினைத்தால் எங்ஙனம் முடியும் வைத்ததொரு முதற்பொருள் இல்லாதவர்களுக்கு (அதனால் வரும்)பயனில்லையாதலால்.

கருத்து:

முன் செய்த நல்வினையில்லார் முயன்றாலும் பொன்னைப் பெற முடியாதாம்.

பாடல் : 233
பல் நாளும் நின்ற இடத்தும், கணி வேங்கை
நல் நாளே நாடி மலர்தலால், - மன்னர்
உவப்ப வழிபட்டு ஒழுகினும், செல்வம்
தொகற்பால போழ்தே தொகும். . . . .[233]

பொருளுரை:

பலநாளும் தானே நின்ற விடத்தும் கணியாகிய வேங்கை தான் பூத்தற்குரிய நல்ல நாளையே அறிந்து பூத்தலால் அரசர் மனமகிழுமாறு வேண்டியன செய்து வழிபட்டு ஒழுகினாலும் செல்வம் ஒருவர்க்குக் கூடும் பொழுதுதான் பல்லாற்றானும் வந்து சேரும்.

கருத்து:

ஒருவனிடம் செல்வம், வருங்காலமறிந்தே வரும்.

பாடல் : 234
குரைத்துக் கொளப்பட்டார் கோள் இழுக்குப்பட்டு,
புரைத்து எழுந்து போகினும் போவர்; அரக்கு இல்லுள்
பொய் அற்ற ஐவரும் போயினார்; - இல்லையே,
உய்வதற்கு உய்யா இடம். . . . .[234]

பொருளுரை:

ஆரவாரித் துரைத்தலின் அவரால் பிணித்துக் கொள்ளப்பட்டார் அவர் எண்ணம் பழுதுபட அவர் பிணிப்பினின்றும் தப்பி எழுந்து உய்ந்து செல்லினும் செல்வர். அரக்கு இல் உள் - அரக்காற் செய்யப்பட்ட மாளிகையினுள்ளே யிருந்த குற்றமற்ற பாண்டவர் ஐவரும் தீயினின்றும் தப்பி நிலவறையின் வழியே சென்றனர். (ஆதலால்) பிழைத்தற்குரிய உயிருக்கு பிழைக்க முடியாதஇடம் என்று ஒன்றும் இல்லை.

கருத்து:

ஊழ்வலியுடையார் எத்தகைய இடையூறுறினும் உய்வர்.

பாடல் : 235
'இது மன்னும் தீது' என்று இயைந்ததூஉம், ஆவார்க்கு
அது மன்னும் நல்லதே ஆகும்; - மது மன்னும்
வீ நாறு கானல் விரி திரைத் தண் சேர்ப்ப!
தீ நாள் திரு உடையார்க்கு இல். . . . .[235]

பொருளுரை:

தேன் ஒழுகுகின்ற குவளைப்பூக்கள் மணம் வீசுகின்ற கடற்சோலையையுடைய விரிந்த அலைகளையுடைய குளிர்ந்த கடல் நாடனே! இவ்வினை இவர்க்குத் தீங்கினை நிலை நிறுத்துவதாம் என்று கருதப்பட்டுப் பொருந்தியதும் செல்வம் உடையராவார்க்கு (பொருளை ஈட்டுவார்க்கு) அவ்வினை (ஊழால்) நல்லதாகவே முடியும் (ஆதலால்) தீய நாட்கள் முன்செய்த நல்வினை உண்டாதலில்லை.

கருத்து:

ஆகூழ் உடையார்க்குத் தீயனவும் நல்லனவாக முடியும்.

பாடல் : 236
ஆற்றும் தகைய அரசு அடைந்தார்க்கு ஆயினும்,
வீற்று வழி அல்லால், வேண்டினும், கைகூடா;
தேற்றார் சிறியர் எனல் வேண்டா; - நோற்றார்க்குச்
சோற்றுள்ளும் வீழும் கறி. . . . .[236]

பொருளுரை:

எல்லாச் செல்வங்களையும் தரவல்ல தகுதியை உடைய அரசுகளை அடைந்தவர்களுக்கே யானாலும் நல்வினையுள்ளவழி அல்லது விரும்பி முயன்றாலும் கருதிய செல்வம் கைகூடுதல் இல்லை. (ஆதலால்) அறிவில்லாதவர்கள் அதனைப் படைத்தல் முதலிய ஆற்றல் இலராகலின் செல்வத்தாற் சிறியர் என்று கருதவேண்டா; தவம் செய்தார்க்கு சோற்றினுள்ளேயும் கறி தானே வந்து விழும்அவர் தவவலிமையால்.

கருத்து:

அறிவிலாராயினும் நல்வினை யுள்ளார்க்குச் செல்வம் உளதாம். அரசர்களேயாயினும் அஃதிலார்க்குக் கருதிய கைகூடுதல் இலவாம்.

பாடல் : 237
ஆகும் சமயத்தார்க்கு ஆள்வினையும் வேண்டாவாம்;
போகும் பொறியார் புரிவும் பயம் இன்றே;
ஏ கல் மலை நாட! - என் செய்து, ஆங்கு என் பெறினும்,
ஆகாதார்க்கு ஆகுவது இல். . . . .[237]

பொருளுரை:

உயர்ச்சியையுடைய மலை நாடனே! செல்வம் ஆக்கும் ஆகூழ்வந்தெய்துங் காலம் நெருங்கியவர்களுக்கு செய்வதொரு முயற்சியும் வேண்டுவதில்லை; போகும் பொறியார் - செல்வம் போக்கும் போகூழ் வந்தெய்துங்காலம் நெருங்கியவர்களுக்கு அவர்கள் நிலைநிறுத்தச் செய்யும் முயற்சியும் பயனில்லை; என் செய்து என் பெறினும் - எத்தகைய முயற்சியைச் செய்து எத்தகைய துணையைப் பெற்றாராயினும் செல்வம் ஆக்கும் ஆகூழ் நெருங்காதவர்க்கு ஆவதொன்றில்லை.

கருத்து:

ஆகூழ் நெருங்கியார்க்கும் முயற்சி வேண்டா; போகூழ் நெருங்கியார்க்கும் முயற்சி வேண்டா; போகூழ் நெருங்காதார்க்கும் முயற்சி வேண்டா; ஆகூழ் நெருங்காதார்க்கும் முயற்சி வேண்டா.

பாடல் : 238
'பண்டு உருத்துச் செய்த பழ வினை வந்து, எம்மை
இன்று ஒறுக்கின்றது' என வறியார், துன்புறுக்கும்
மேவலரை நோவது என்? - மின் நேர் மருங்குலாய்!
ஏவலாள் ஊரும் சுடும். . . . .[238]

பொருளுரை:

மின்னலை யொத்த இடையை யுடையாய்! பிறர் ஊரைக் கொளுத்தும் பொருட்டு ஒருவனால் அனுப்பப்பட்ட ஏவலாளன் ஏவியவனது ஊரையும் கொளுத்திவிடுவான். (ஆதலால்) முன்பிறவிகளில் மிகுதியாகத் தாம் செய்த பழைய தீவினை இப்பிறப்பில் வந்து எம்மைத் தண்டிக்கின்றது என்று அறியாராய். துன்புறுக்கும் மேவலரை - ஏவலாளாக நின்று துன்புறச் செய்யும் பகைவரை வெறுப்பது எது கருதி?

கருத்து:

பிறர் தம்மைத் துன்புறுத்துவது தாம் செய்த பழவினைப் பயனே என்றறிந்து அவரை நோவாதொழிதல் வேண்டும்.

பாடல் : 239
சுடப்பட்டு உயிர் உய்ந்த சோழன் மகனும்,
பிடர்த்தலைப் பேரானைப் பெற்று, கடைக்கால்,
செயிர் அறு செங்கோல் செலீஇயினான்; - இல்லை,
உயிர் உடையார் எய்தா வினை. . . . .[239]

பொருளுரை:

பகைவர் மூட்டிய தீயால் கொளுத்தப்பட்டு அதனின்றும் உயிர் பிழைத்துச் சென்ற பராந்தக சோழனின் மகனாகிய காரிகாற் சோழனும் இரும்பிடர்த் தலையார் என்னும் பெயரையுடைய தன் மாமனைத் துணையாகப் பெற்று பிற்காலத்தில் குற்றமற்ற செங்கோலைச் செலுத்தினான்; (ஆதலால்) உயிருடையார் அடையமுடியாததொரு நல்வினைப் பயன் இல்லை.

கருத்து:

தீமையே அடைவார், என்றாயினும் நன்மையையும் அடைவர்.

பாடல் : 240
நனி அஞ்சத்தக்கவை வந்தக்கால், தங்கண்
துனி அஞ்சார் செய்வது உணர்வார்; - பனி அஞ்சி,
வேழம் பிடி தழூஉம், வேய் சூழ், மலை நாட!
ஊழ் அம்பு வீழா, நிலத்து. . . . .[240]

பொருளுரை:

பனியான் வரும் குளிருக்கஞ்சி ஆண்யானை பெண் யானையைத் தழுவுகின்ற மூங்கில்கள் நெருங்கியிருக்கின்ற மலை நாடனே! ஊழ் அம்பு நிலத்து வீழா - ஊழாற் செலுத்தப்படும் அம்புகள் குறிக்கிலக் கானவனைச் சென்று சேர்தலன்றி நிலத்தின் மேல் வீழ்தல் இல மிகவும் அஞ்சத்தக்க அவ்வம்புகள் தம்மீது வந்தால் செய்கின்றதன் நன்மை தீமையை அறிவார் அவற்றால் தமக்கு உண்டாகும் துன்பத்திற்கு அஞ்சுதல் இலர்.

கருத்து:

நன்மை தீமையறிவார் ஊழான் வருந்துன்பத்திற்கு அஞ்சுதல் இலர்.