நாலடியார்

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

நான்மணிக்கடிகை

நான்மணிக்கடிகை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள், ஒன்று. இது ஒரு நீதி நூல். விளம்பி நாகனார் என்னும்

இனியவை நாற்பது

பூதஞ்சேந்தனார் இயற்றியது இனியவை நாற்பது. 40 வெண்பாக்களைக் கொண்டது. நான்கு பாடல்களில் இன்பம் தருவன

இன்னா நாற்பது

இன்னா நாற்பதில் கடவுள் வாழ்த்து நீங்கலாக நாற்பது பாடல்கள் உள்ளன. ஒவ்வொரு பாடலிலும் நான்கு கருத்துக்களைக் கொண்டு

திரிகடுகம்

திரிகடுகம் என்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். இந்நூல் நல்லாதனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகும். திரிகடுகம் என்பது

ஆசாரக் கோவை

மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத ஆசாரங்களை அதாவது ஒழுக்கங்களை எடுத்துக்கூறும் ஒரு நூல் ஆசாரக்கோவை. பண்டைக்காலத்

சிறுபஞ்சமூலம்

சிறுபஞ்சமூலம் என்பது ஐந்து சிறிய வேர்கள் என்று பொருள்படும். அவையாவன சிறுவழுதுணை வேர், நெருஞ்சி வேர், சிறுமல்லி வேர், பெருமல்லி வேர்

முதுமொழிக்காஞ்சி

முதுமொழி என்பது பழமொழி என்னும் சொற்பொருளோடு தொடர்புடையது. காஞ்சி என்பது மகளிர் இடையில் அணியும் ஒருவகை அணிகலக் கோவையையும்

பழமொழி நானூறு

பழமொழி நானூறு சங்கம் மருவிய காலத் தமிழ் நூல் தொகுப்பான பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. அதன் சிறப்புப் பாயிரத்தையும், கடவுள்

ஏலாதி

'ஏலாதி' என மருத்துவ நூல்களில் கூறப்படுவது ஏலம் ஆதியான ஆறு பொருள்கள் சேர்ந்த ஒரு வகைச் சூர்ணம். ஏலம் ஒரு பங்கு, இலவங்கப்பட்டை இரண்டு பங்கு,

திருக்குறள்

திருக்குறள் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் வரிசையில் "முப்பால்" என்னும் பெயரோடு விளங்குகின்றது. அறம், பொருள், இன்பம்

கார் நாற்பது

கார் நாற்பது அகப்பொருள் பற்றிய கீழ்க்கணக்கு நூல்களில் சிறியது. கார் காலத்தின் தோற்றம் ஒவ்வொரு செய்யுளிலும் கூறப்படுகின்றமையாலும்,

ஐந்திணை ஐம்பது

'ஐந்திணை ஐம்பது' முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல் என்ற ஐந்திணைக்கும் பத்துப் பாடல்களைப் பெற்றுள்ளமையால் 'ஐந்திணை ஐம்பது' எனப் பெயர் பெற்றது.

திணைமொழி ஐம்பது

திணைமொழி ஐம்பது குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்னும் ஐந்திணைகளுக்கும் பத்துப் பாடல்கள் வீதம் உள்ளன. அதனால் இந்நூல்

ஐந்திணை எழுபது

ஐந்திணை எழுபது ஐந்திணைகளில் ஒவ்வொன்றிற்கும் பதினான்கு பாடல்களைக் கொண்டு, எழுபது பாடல்களில் இந்நூல் அமைந்துள்ளது. இந் நூலின் முதலில் விநாயகரைக்

திணைமாலை நூற்றைம்பது

திணைமாலை நூற்றைம்பது பண்டைத் தமிழ் நூற் தொகுப்பான பதினெண்கீழ்க்கணக்கில் அடங்கியது. 153 பாடல்களைக் கொண்ட இது ஒரு அகப்பொருள் சார்ந்த நூல்.

கைந்நிலை

'கை' என்பது ஒழுக்கம் என்றும் பொருள்படும். ஐந்திணை ஒழுக்கம் பற்றியதே இந்நூலாகும். ஒவ்வொரு திணைக்கும் பன்னிரண்டு பாடலாக அறுபது பாடல்கள் இந் நூலில் உள்ளன.

களவழி நாற்பது

களவழி நாற்பது போர்க்களம் பற்றிய பாடல்களின் தொகுதியாகும். இந் நூலில் உள்ள பாடல்கள் எல்லாம் களத்து என்ற சொல்லை இறுதியில் கொண்டு முடிதல் கவனிக்கத் தக்கது.

பழமொழி நானூறு
பதினெண் கீழ்க்கணக்கு

பழமொழி நானூறு சங்கம் மருவிய காலத் தமிழ் நூல் தொகுப்பான பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. அதன் சிறப்புப் பாயிரத்தையும், கடவுள் வணக்கத்தையும் சேர்த்து நாலடியால் அமைந்த நானூற்றொரு (401) பாடல்களைக் கொண்டது.

பழமொழி நானூறு


20. தெரிந்து தெளிதல்

பாடல் : 183
ஆஅம் எனக்கு எளிது என்று உலகம் ஆண்டவன்,
மேஎந் துணை அறியான், மிக்கு நீர் பெய்து, இழந்தான்;
தோஒம் உடைய தொடங்குவார்க்கு இல்லையே,
தா அம் தர வாரா நோய். . . . .[183]

பொருளுரை:

உலகத்தினை அரசுசெய்த மாவலி தன்னோடு பொருந்தியிருக்கும் அமைச்சன் கூறியவற்றை அறியாதவனாய் மூவடி நிலம் கொடுப்பது எனக்கு எளிய செயலாகும் என்று சொல்லி செருக்கின்கண் மிக்கு தானமாக நீர்வார்த்துக் கொடுத்து உலகமெல்லாம் இழந்தான். (ஆதலால்) குற்றமுடைய காரியங்களைத் தொடங்குகின்றவர்களுக்கு தாமே தமக்குத் தேடவாராத துன்பங்கள் இல.

கருத்து:

குற்றமுள்ள காரியத்தைச் செய்யத் தொடங்குவார் தாமே தமக்குத் துன்பங்களை விளைவித்துக் கொள்வாராவர்.

பாடல் : 184
நற்பால கற்றாரும் நாடாது சொல்லுவர்
இற்பாலர் அல்லார் இயல்பு இன்மை நோவது என்?
கற்பால் கலங்கு அருவி நாட! - மற்று யாரானும்
சொல் சோரா தாரோ இலர். . . . .[184]

பொருளுரை:

மலைகளிடத்து விளங்கிய அருவிகள் பாயும் மலை நாடனே! நல்ல குடியின்கட் பிறந்து நல்லனவற்றைக் கற்றாரும் (சில நேரங்களில்) ஆராய்தலிலராய்ப் பிழைபடச் சொல்லுவார்கள் நல்ல - குடியின்கட் பிறவாதார் (சொற்களிலுள்ள) இன்னாமையும் பிழைகளுமாகிய இயல்பின்மையை நினைந்து வருந்துவது எதுபற்றி? யாவரே யாயினும் சொல்லின்கண் சோர்வுபடாதார் இலர்.

கருத்து:

யாவர் மாட்டும் சொற்சோர்வு உண்மையான் கருத்து ஒன்றனையே நோக்குக.

பாடல் : 185
பூந்தண் புனல் புகார்ப் பூமி குறி காண்டற்கு
வேந்தர் வினாயினான், மாந்தரை - சான்றவன்,
கொண்டதனை நாணி, மறைத்தலால், - தன் கண்ணின்
கண்டதூஉம் எண்ணிச் சொலல்!. . . . .[185]

பொருளுரை:

அழகிய குளிர்ந்த நீரை உடைய புகாரின்கண் உள்ள பூமியது அளவை அறியும்பொருட்டு சோழவரசன் மக்களைக் கேட்டான் அறிவு சான்ற ஒருவன் ஒருவன் களவினால் ஆண்டுவருகின்ற நிலத்தை எடுத்துக் கூற நாணி அதனை மறைத்து இத்துணையென்று வரையறுத்துக் கூறினானாதலால் தன் கண்ணாற் கண்டு தெளிய அறிந்ததனையும் ஆராய்ந்து சொல்லுக.

கருத்து:

கண்ணாற் கண்டவற்றையும் அவற்றது நன்மை தீமை கூறுபாடு அறிந்தே கூறுக.

பாடல் : 186
ஒருவன் உணராது, உடன்று எழுந்த போருள்,
இருவரிடை நட்பான் புக்கால், பெரிய
வெறுப்பினால் பேர்த்துச் செறுப்பின், தலையுள்
குறுக் கண்ணி ஆகிவிடும். . . . .[186]

பொருளுரை:

ஒருவன் ஆராயாது மாறுபட்டுச் சினந்து எழுந்தபோரின் கண் அவ்விருவருக்கும் இடையே நட்பாக்கும் பொருட்டுப் புகுந்தால் தன் சொற்களைக் கேளாது மிக்க வெறுப்பினால் மீண்டும் போர் தொடுக்கும் உள்ளத்தராயின் எருதின் தலையிலுள்ள குறிய கயிற்றைப்போல் திருத்த முடியாதாம்.

கருத்து:

தன்சொல் கேளாதவரைத் திருத்தப் புகலாகாது.

பாடல் : 187
எனைப் பலவே ஆயினும், சேய்த்தாப் பெறலின்,
தினைத் துணையேயானும் அணிக் கோடல் நன்றே
இனக் கலை தேன் கிழிக்கும் ஏகல் சூழ்வெற்ப!
பனைப் பதித்து, உண்ணார் பழம். . . . .[187]

பொருளுரை:

இனமாகிய ஆண் குரங்குகள் தேன் கூடுகளைக் கிழிக்கும் ஓங்கிய கற்கள் சூழ்ந்திருக்கின்ற மலைநாட்டை உடையவனே எனைப் பலவேயாயினும் - எத்துணைப் பலவேயாயினும் சேய்த்தாற் பெறலின் நெடுநாட்களுக்குப்பின் பெறுதலைவிட தினையளவிற்றாயினும் அணித்த நாட்களுக்குள் பெறுதல் நல்லது பனம்பழத்தை நட்டுவைத்துப் பனை பழுத்தால் அப்பழத்தை உண்போம் என்றிருப்பார் யாருமில்லையாதலான்.

கருத்து:

பயன் சிறியதேயாயினும் அணித்தே வருவதைக் கொள்க.

பாடல் : 188
மனம் கொண்டக்கண்ணும் மருவு இல செய்யார்,
கனம் கொண்டு உரைத்தவை காக்கவே வேண்டும்;
சனங்கள் உவப்பன, செய்யாவும், செய்க!
இனம் கழு ஏற்றினார் இல். . . . .[188]

பொருளுரை:

(ஒரு காரியத்தைச் செய்ய) மனம் விரும்பிய இடத்தும் அது வழக்கத்தில் வராவாயின் அதனைச் செய்யார் அறிவுடையோர் நூல்கள் ஆகாவென் றுரைத்தனவற்றை உறுதிகொண்டு அவற்றைக் காத்தல் வேண்டும். நூல்கள் ஆகாவென உரைத்தனவும் மக்களால் விரும்பப்படுவனவாயின் அவற்றைச் செய்தல் வேண்டும். இனங் கழுவு ஏற்றினார் இல் - நூல்களோடு மாறுபட்டுக் கூறுகின்றனர் என்று மக்களைக் கழுவின்கண் ஏற்றினார் உல்கத்தில் இல்லை ஆதலான்.

கருத்து:

உலக நடையினை யறிந்து அதற்கொப்ப ஒழுகுக.

பாடல் : 189
கடுப்பத் தலைக் கீறி, காலும் இழந்து,
நடைத் தாரா என்பதூஉம் பட்டு, முடத்தோடு
பேர் பிறிதாகப் பெறுதலால், போகாரே
நீர் குறிதாகப் புகல். . . . .[189]

பொருளுரை:

நீர் சுருங்கி இறங்கிப் போகலாம் படி அளவுபட்டிருக்க அந்நெறியில் இறங்கிப் போதலை ஒழித்து தலை மிகவும் கிழிபட்டு கால்களும் வலி இழந்து நடத்தலைச் செய்யா வென்றும் சொல்லப்பட்டு முடம் என்ற பெயரோடு வேறு பெயர்களையும் அடைதலால் (அத்தகைய நெறியின்கண்) அறிவுடையார் செல்லுதலிலர்.

கருத்து:

தம்உயிர்க்கு ஏதம்பட வருவன செய்யாதொழிக.

பாடல் : 190
சிறிது ஆய கூழ் பெற்று, செல்வரைச் சேர்ந்தார்,
பெரிது ஆய கூழும் பெறுவர்; - அரிது ஆம்
இடத்துள் ஒருவன் இருப்புழிப் பெற்றால்,
கிடப்புழியும் பெற்றுவிடும். . . . .[190]

பொருளுரை:

பெறுதற்கரிய ஒருவன் இருக்க இடம் பெற்றால் படுத்தற்குரிய இடத்தையும் பெற்றுவிடுவான்; (அதுபோல) செல்வரை அடைந்தவர்கள் முன்னர்ச் சிறிய அளவிற்றாய கூழினைப் பெற்று பின்னர் மிகுந்த அளவிற்றாய உணவினையும் பெறுவர்.

கருத்து:

தக்கவர்களைச் சார்ந்தொழுகின் மிகுந்த பயனை அடையலாம்.

பாடல் : 191
புன் சொல்லும் நன் சொல்லும் பொய் இன்று உணர்கிற்பார்,
வன் சொல் வழியராய் வாழ்தலும் உண்டாமோ?
புன் சொல் இடர்படுப்பது அல்லால், ஒருவனை
இன் சொல் இடர்ப்படுப்பது இல். . . . .[191]

பொருளுரை:

ஒருவனை வன்சொல் இடருட் படுத்துவதல்லது இனியசொல் இடருட் படுத்துவது இல்லை. (ஆகவே) இன்னாத சொல்லாலும் இனிய சொல்லாலும் வரும் பயனைக் குற்றமின்றி அறியவல்லார் வன்சொற் சொல்லி அதன் வழியே ஒழுகுபவராய் வாழ்ந்திருத்தலும் உண்டோ.

கருத்து:

இனிய சொற்களைச் சொல்லுக.

பாடல் : 192
மெய்ந் நீரர் ஆகி விரியப் புகுவார்க்கும்,
பொய்ந் நீரர் ஆகிய பொருளை முடிப்பார்க்கும்,
எந் நீரர் ஆயினும் ஆக! - அவரவர்
தம் நீரர் ஆதல் தலை. . . . .[192]

பொருளுரை:

உண்மையான நீர்மையை உடையராகித் தமது குண மேம்பாடுகள் விரிந்து நிற்கக் காரியத்தின்கண் புகுகின்றவர்களுக்கும் பொய்ம்மையான நீர்மை உடையராகித் தாங் கருதிய பொருளை முடிப்பார்க்கும் அவர்கள் காரியம் முடிக்கும்பொருட்டு எந்த நீர்மை உடையராய் ஒழுகினும் ஒழுகுக ஏனைய காலங்களில் ஒவ்வொருவரும் தத்தமக்குரிய ஒழுக்கினராய் ஒழுகுதல் தலைசிறந்தது.

கருத்து:

ஒவ்வொருவரும் தத்தமக்குரிய ஒழுக்கினை விடாராய் ஒழுகுதலே தலைசிறந்தது.

பாடல் : 193
யாவரேயானும், இழந்த பொருள் உடையார்,
தேவரே ஆயினும், தீங்கு ஓர்ப்பர்; - பாவை
படத் தோன்றும் நல்லாய்! - நெடு வேல் கெடுத்தான்
குடத்துள்ளும் நாடிவிடும். . . . .[193]

பொருளுரை:

சித்திரப் பாவையது தன்மை பொருந்தித் தோன்றும் நல்லாய்! நீண்ட வேலைத் தொலைத்தா னொருவன் குடத்துள்ளேயும் நாடுவான் (அதுபோல) கெடுத்ததொரு பொருளையுடையார் எத்தகைய சிறந்த அறிவினை யுடையவராயினும் முன்னிற்பார் தேவர்களேயானாலும் தமது பொருளைக் கைக்கொண்டாரெனத் தீமையாக நினைப்பர்.

கருத்து:

பொருளினை இழந்தார் ஆராயாது ஐயுறுவராயின் அது நோக்கி அவரைவெறுக்காது பொறுத்தல் வேண்டும்.

பாடல் : 194
துயிலும் பொழுதே தொடு ஊண் மேற்கொண்டு,
வெயில் விரி போழ்தின் வெளிப்பட்டார் ஆகி,
அயில் போலும் கண்ணாய்! - அடைந்தார்போல் காட்டி,
மயில் போலும் கள்வர் உடைத்து. . . . .[194]

பொருளுரை:

வேலினை ஒக்கும் கண்களை உடையாய்! பித்தரும் உறங்குகின்ற அரையாமத்தில் கதவு முதலியனவற்றைத் தகர்த்தல் செய்து அக்களவான் வரும் உணவினை உண்ணுதலே தொழிலாகக் கொண்டு ஞாயிறு எழுந்து வெயில் விரிந்த பொழுதின்கண் உறக்கம் நீங்கி வெளியே தோன்றினவர்களாகி எல்லார்க்கும் தாம் நட்டார் போன் றறிவித்து (நிற்கும்) மயிலைப் போன்ற கள்வர்களை உடைத்தாயிரா நின்றது இவ்வுலகம்.

கருத்து:

வஞ்சக் கள்வரை மிக உடையது இவ்வுலக மாதலால் அவரை யறிந்து தம்மைப் பாதுகாக்க என்பதாம்.

பாடல் : 195
செல்லற்க, சேர்ந்தார் புலம்புற! செல்லாது
நில்லற்க, நீத்தார் நெறி ஒரீஇ! பல் காலும்
நாடுக, தான் செய்த நுட்பத்தை! - கேளாதே
ஓடுக, ஊர் ஓடுமாறு!. . . . .[195]

பொருளுரை:

தம்மை அடைக்கலமாக அடைந்தார் துன்புற்று அவலிக்குமாறு தீயவழியில் செல்லா தொழிக இருவகைப் பற்றினையும் நீத்தார் அறிவுறுத்திய நெறியின்கண் செல்லாது அதனைவிட்டு நில்லாதொழிக தான் ஆராய்ந்து அறிந்த நுண்ணிய பொருளை பலமுறையும் ஆராய்க உலகத்தார் செல்கின்ற நெறியின் கண்ணே யாரையும் வினவுதலின்றிச் செல்க.

கருத்து:

(1)தம்மை அடைக்கலமாக அடைந்தாரைத் துன்புறுத்தலாகாது. (2) துறவிகள் அறிவுறுத்திய நெறியில் ஒழுகல் வேண்டும். (3) தான்கண்ட நுட்பத்தைப் பலகாலும் ஆராய்க. (4) உலகத்தோ டொத்து வாழ்.