நாலடியார்

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

நான்மணிக்கடிகை

நான்மணிக்கடிகை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள், ஒன்று. இது ஒரு நீதி நூல். விளம்பி நாகனார் என்னும்

இனியவை நாற்பது

பூதஞ்சேந்தனார் இயற்றியது இனியவை நாற்பது. 40 வெண்பாக்களைக் கொண்டது. நான்கு பாடல்களில் இன்பம் தருவன

இன்னா நாற்பது

இன்னா நாற்பதில் கடவுள் வாழ்த்து நீங்கலாக நாற்பது பாடல்கள் உள்ளன. ஒவ்வொரு பாடலிலும் நான்கு கருத்துக்களைக் கொண்டு

திரிகடுகம்

திரிகடுகம் என்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். இந்நூல் நல்லாதனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகும். திரிகடுகம் என்பது

ஆசாரக் கோவை

மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத ஆசாரங்களை அதாவது ஒழுக்கங்களை எடுத்துக்கூறும் ஒரு நூல் ஆசாரக்கோவை. பண்டைக்காலத்

சிறுபஞ்சமூலம்

சிறுபஞ்சமூலம் என்பது ஐந்து சிறிய வேர்கள் என்று பொருள்படும். அவையாவன சிறுவழுதுணை வேர், நெருஞ்சி வேர், சிறுமல்லி வேர், பெருமல்லி வேர்

முதுமொழிக்காஞ்சி

முதுமொழி என்பது பழமொழி என்னும் சொற்பொருளோடு தொடர்புடையது. காஞ்சி என்பது மகளிர் இடையில் அணியும் ஒருவகை அணிகலக் கோவையையும்

பழமொழி நானூறு

பழமொழி நானூறு சங்கம் மருவிய காலத் தமிழ் நூல் தொகுப்பான பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. அதன் சிறப்புப் பாயிரத்தையும், கடவுள்

ஏலாதி

'ஏலாதி' என மருத்துவ நூல்களில் கூறப்படுவது ஏலம் ஆதியான ஆறு பொருள்கள் சேர்ந்த ஒரு வகைச் சூர்ணம். ஏலம் ஒரு பங்கு, இலவங்கப்பட்டை இரண்டு பங்கு,

திருக்குறள்

திருக்குறள் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் வரிசையில் "முப்பால்" என்னும் பெயரோடு விளங்குகின்றது. அறம், பொருள், இன்பம்

கார் நாற்பது

கார் நாற்பது அகப்பொருள் பற்றிய கீழ்க்கணக்கு நூல்களில் சிறியது. கார் காலத்தின் தோற்றம் ஒவ்வொரு செய்யுளிலும் கூறப்படுகின்றமையாலும்,

ஐந்திணை ஐம்பது

'ஐந்திணை ஐம்பது' முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல் என்ற ஐந்திணைக்கும் பத்துப் பாடல்களைப் பெற்றுள்ளமையால் 'ஐந்திணை ஐம்பது' எனப் பெயர் பெற்றது.

திணைமொழி ஐம்பது

திணைமொழி ஐம்பது குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்னும் ஐந்திணைகளுக்கும் பத்துப் பாடல்கள் வீதம் உள்ளன. அதனால் இந்நூல்

ஐந்திணை எழுபது

ஐந்திணை எழுபது ஐந்திணைகளில் ஒவ்வொன்றிற்கும் பதினான்கு பாடல்களைக் கொண்டு, எழுபது பாடல்களில் இந்நூல் அமைந்துள்ளது. இந் நூலின் முதலில் விநாயகரைக்

திணைமாலை நூற்றைம்பது

திணைமாலை நூற்றைம்பது பண்டைத் தமிழ் நூற் தொகுப்பான பதினெண்கீழ்க்கணக்கில் அடங்கியது. 153 பாடல்களைக் கொண்ட இது ஒரு அகப்பொருள் சார்ந்த நூல்.

கைந்நிலை

'கை' என்பது ஒழுக்கம் என்றும் பொருள்படும். ஐந்திணை ஒழுக்கம் பற்றியதே இந்நூலாகும். ஒவ்வொரு திணைக்கும் பன்னிரண்டு பாடலாக அறுபது பாடல்கள் இந் நூலில் உள்ளன.

களவழி நாற்பது

களவழி நாற்பது போர்க்களம் பற்றிய பாடல்களின் தொகுதியாகும். இந் நூலில் உள்ள பாடல்கள் எல்லாம் களத்து என்ற சொல்லை இறுதியில் கொண்டு முடிதல் கவனிக்கத் தக்கது.

பழமொழி நானூறு
பதினெண் கீழ்க்கணக்கு

பழமொழி நானூறு சங்கம் மருவிய காலத் தமிழ் நூல் தொகுப்பான பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. அதன் சிறப்புப் பாயிரத்தையும், கடவுள் வணக்கத்தையும் சேர்த்து நாலடியால் அமைந்த நானூற்றொரு (401) பாடல்களைக் கொண்டது.

பழமொழி நானூறு


23. நன்றியில் செல்வம்

பாடல் : 213
அல்லது செய்வார் அரும் பொருள் ஆக்கத்தை
நல்லது செய்வார் நயப்பவோ? - ஒல் ஒலி நீர்
பாய்வதே போலும் துறைவ! கேள்; - தீயன
ஆவதே போன்று கெடும். . . . .[213]

பொருளுரை:

ஒல்லென்று ஒலிக்கும் நீர் கற்பாறைமீது பாய்வதே போன்று விளங்கும் கடற்றுறையை உடையவனே! கேட்பாயாக தீச்செயல்களால் உண்டாகிய செல்வம் பெருகுவதே போன்று தோற்றுவித்துத் தன்னெல்லையைக் கடந்து கெட்டுப்போகும் (ஆதலால்) தீவினை செய்வாரது அரிய பொருளாகிய ஈட்டத்தை நல்வினையைச் செய்வார் விரும்புவரோ? (விரும்புதலிலர்.)

கருத்து:

நல்லோர், தீயது செய்வார் செல்வ நிலையாமையை அறிந்து அதனைப் பொருளாக மதித்தலிலராகலின், தீவினை செய்து பொருளீட்டலாகாது என்பதாம்.

பாடல் : 214
தொன்மையின் மாண்ட துணிவு ஒன்றும் இல்லாதார்
நன்மையின் மாண்ட பொருள் பெறுதல், - இன் ஒலி நீர்
கல் மேல் இலங்கு மலை நாட! - மாக் காய்த்துத்
தன்மேல் குணில் கொள்ளுமாறு. . . . .[214]

பொருளுரை:

இனிய ஒலியினையுடைய அருவிநீர் கற்பாறைமேல் இழியா நின்று விளங்கும் மலைநாடனே! பழைய நூல்களில் மாட்சிமைப்பட்ட துணிவு ஒரு சிறிதும் இல்லாதவர்கள் நலங்களில் மாட்சிமைப்பட்ட பொருளினை முயன்று உடையராதல் மாமரமானது காய்ப்புற்று அதனால் தன்மேல் பிறரெறியும் கல்லை ஏற்றுக்கொள்ளுதல் போலும்.

கருத்து:

அறிவிலார் பெற்ற செல்வம் அவர்க்கே துன்பத்தினை விளைக்கும்.

பாடல் : 215
பெற்றாலும் செல்வம், பிறர்க்கு ஈயார், தாம் துவ்வார்,
கற்றாரும் பற்றி இறுகுபவால்; - கற்றா
வரம்பிடைப் பூ மேயும் வண் புனல் ஊர!
மரம் குறைப்ப மண்ணா, மயிர். . . . .[215]

பொருளுரை:

கன்றினை உடைய பசு வரம்பின்கண் உள்ள பூவினை உண்கின்ற வளமையுடைய புனல் நாடனே! மரங்களை வெட்டும் வாள் முதலிய கருவிகள் பழைய நூல்களின் துணிவைக் கற்றாரும் செல்வம் பெற்றாலும் - செல்வத்தை ஒருகாற் பெற்றாலும் வேண்டுவார்க்கு ஒன்றைக் கொடுத்தலுமிலர் தாமுந் துய்த்தலுமிலராகி பற்றுள்ள முடையவராய் நெகிழாது இறுகப்பிடிப்பர்; இஃது என்னோ என்றவாறு.

கருத்து:

கற்றவர்கள் ஈதலுந் துய்த்தலுமின்றி இறுகப்பிடித்தல் அடாத செய்கையாம்.

பாடல் : 216
வழங்கலும் துய்த்தலும் தேற்றாதான் பெற்ற
முழங்கு முரசுடைச் செல்வம், - தழங்கு அருவி
வேய் முற்றி முத்து உதிரும் வெற்ப! - அது அன்றோ,
நாய் பெற்ற தெங்கம்பழம். . . . .[216]

பொருளுரை:

முழங்குகின்ற அருவிகளையுடைய மூங்கில் முதிர்ந்து முத்துக்களைக் கொட்டுகின்ற மலையை யுடையவனே! பிறர்க்கீதலும் தான் அடைதலும் முதலியன அறியாதான் கொண்டிருக்கின்ற முழக்குகின்ற முரசினை உடைய செல்வம் நாய்பெற்ற தேங்காயை அஃது ஒக்குமல்லவா?

கருத்து:

ஈதல் துய்த்தல் இல்லாதான் பெற்ற மிகுந்த செல்வம் பயனின்றிக் கழியும்.

பாடல் : 217
முழவு ஒலி முந்நீர் முழுதுடன் ஆண்டார்
விழவு ஊரில் கூத்தேபோல் வீழ்ந்து அவிதல் கண்டும்,
'இழவு' என்று ஒரு பொருள் ஈயாதான் செல்வம்,
அழகொடு கண்ணின் இழவு. . . . .[217]

பொருளுரை:

முழவு போன் றொலிக்கும் கடலாற் சூழப்பட்ட உலகமுழுதையும் ஆண்ட அரசர்கள் திருவிழா நடந்த ஊரில் ஆடிய கூத்தைப்போலப் பொலி வின்றி செல்வம் கெட்டொழிவதைப் பார்த்திருந்தும் நாமும்ஒருநாளில் இப் பொருளை இழந்து நிற்போம் என்று நினைத்து இரந்தவர்க்கு ஒருபொருளையும் கொடாதவனது செல்வம் வடிவும் அழகும் உடையா னொருவன் கண்ணிழந்து நிற்றலை யொக்கும்.

கருத்து:

செல்வம் ஈகையின்றி விளங்குதலில்லை.

பாடல் : 218
நாவின் இரந்தார் குறை அறிந்தும் தாம் உடைய
மாவினை மாணப் பொதிகிற்பார், தீவினை
அஞ்சில் என்? அஞ்சாவிடில் என்? - குருட்டுக் கண்
துஞ்சில் என்? துஞ்சாக்கால் என்?. . . . .[218]

பொருளுரை:

நாவினால் ஒருபொருளை இரந்தாரது குறைவினை அறிந்து தம்மிடத்தில் உள்ள செல்வத்தை மாட்சிமைப்படக் கரத்தலைச் செய்வார் தீய செயல்களுக்கு அஞ்சினால் அவர்கள் அடையும் நன்மையாது? அஞ்சா தொழியின் அவர்கள் அடையும் தீமை யாது? பார்வை இல்லாத கண் மூடியிருந்தா லென்ன தீமை மூடியிராது திறந்திருந்தாலென்ன நன்மை?

கருத்து:

இரப்பார்க்கு கரக்கும் தீவினையே ஏனைய அறங்கள் எல்லாவற்றையும் அழிக்கும் ஆற்றல் மிக்கது. தீவினையாயவற்றுள்ளும் தலை சிறந்தது.

பாடல் : 219
படரும் பிறப்பிற்கு ஒன்று ஈயார், பொருளைத்
தொடரும் தம் பற்றினால் வைத்து, இறப்பாரே,
அடரும், பொழுதின்கண், இட்டு, குடர் ஒழிய,
மீ வேலி போக்குபவர். . . . .[219]

பொருளுரை:

அடுத்து வருகின்ற பிறப்பிற்கு உதவும்படி ஒரு பொருளையும் கொடாராய் பிறவிகள் தோறும் தொடர்ந்து வருகின்ற தமது பற்றால் ஈதலுந் துய்த்தலுமுடைய பொருளை அதனால் தாமும் பிறரும் பயன் கொள்ளாதவாறு பயனின்றி வைத்துவிட்டு இறந்துபோவார்; அடரும் பொழுதின்கண் - பகைவர்களோடு போர் செய்யும் பொழுது குடர் சரிந்ததாக வேறொன்றினை உள்ளேயிட்டு மேலே கட்டுக்கட்டி வைத்திருப்பவரோடு ஒப்பர்.

கருத்து:

அறிவிலார் பொருளால் தாமும் பிறரும் பயன் கொள்ளாதவாறு ஈட்டிவைத் திழப்பர்.

பாடல் : 220
விரும்பி அடைந்தார்க்கும், சுற்றத்தவர்க்கும்,
வருந்தும் பசி களையார், வம்பர்க்கு உதவல்,
இரும் பணை வில் வென்ற புருவத்தாய்! - ஆற்றக்
கரும் பனை அன்னது உடைத்து. . . . .[220]

பொருளுரை:

பெரிய மூங்கிலாகிய வில்லினைத் தனது வடிவத்தால் வென்ற புருவத்தினையுடையாய் உணவிற்கு ஒன்றுமின்மையால் வருந்தி அறிமுக முண்மையால் தன்னை விரும்பி வந்து அடைந்தவர்களுக்கும் தம் உறவினர்க்கும் அவர்களை வருத்துகின்ற பசியினை நீக்காராகி புதிய அயலார்க்கு உதவி செய்தல் மிகவும் (தன்னைப் பாதுகாத்து ஓம்பினார்க்குப் பயன்படாது நெடுங்காலஞ் சென்று பிறர்க்குப் பயன்படும்) கரிய பனைபோலும் தன்மையை உடையது.

கருத்து:

அறிவிலார் தமர் பசித்திருப்பப் பிறர்க்கீவர் இஃது அடாது என்பதாம். 'வருத்தும்' என்பது 'வருந்தும்' என எதுகை நோக்கி மெலிந்து நின்றது.

பாடல் : 221
வழங்கார், வலி இலார், வாய்ச் சொல்லும் பொல்லார்,
உழந்து ஒருவர்க்கு உற்றால் உதவலும் இல்லார்,
இழந்தது இல் செல்வம் பெறுதல், - அதுவே
பழஞ் செய் போர்பு ஈன்று விடல். . . . .[221]

பொருளுரை:

(உணவிற்கு ஒன்று மின்மையால் பசியால் வருந்தி இரந்தார்க்கு) அவர்க்கு வேண்டிய உணவினைக் கொடாராய் கொடுக்கும் ஆற்றல் இலராதலின் சொல்லும் சொற்களாலும் தீயவர்களாய் வருந்தியாகிலும் ஒருவர்க்கு ஓரிடர் வந்துற்ற ஞான்றை உதவிசெய்து அதனை நீக்குதலும் செய்யாதவராகிய இத்தன்மையர். இறந்தது இல் செல்வம் பெறுதலும் - கெடுதலில்லாத செல்வத்தைப் பெற்றிருத்தலும் நெடுநாட்களாக எரு முதலிய உரம் பெற்றுவந்த வயல் உரம் பெறாத இப்பொழுது போர் இடுமாறு கதிர்கள் விடுதலை யொக்கும்.

கருத்து:

ஈதல், இனிய, கூறுதல், உதவி செய்தல் முதலியன இல்லாதவர்கள் செல்வம் பெற்றிருத்தல், முன்செய்த நல்வினையாலே யாம்.

பாடல் : 222
ஒற்கப்பட்டு ஆற்றார் உணர உரைத்தபின்,
நற் செய்கை செய்வார்போல் காட்டி, நசை அழுங்க,
வற்கென்ற செய்கை அதுவால் - அவ் வாயுறைப்
புல் கழுத்தில் யாத்துவிடல். . . . .[222]

பொருளுரை:

வறுமையா லொறுக்கப்பட்டு அதற்கு ஆற்றாதவர்களாய் (ஒருவரையடைந்து) அவர் மனதிற் பதியுமாறு உரைத்தவிடத்து அவர்க்கு நல்ல செய்கையைச் செய்வார் போன்று தோற்றி அதனான் அவர்கொண்ட விருப்பம் கெடுமாறு வலிய செய்கையைச் செய்தொழுகுமது வாயிடத்தில் இடுவதாகக் காட்டிய அந்தப் புற்களை பசுவின் கழுத்தில் கட்டிவிடுவதனோ டொக்கும்.

கருத்து:

தம்பால் ஒன்று இரந்தாரைக் கொடுப்பதாகச் சொல்லி நீட்டித்து அலையவைத்தல் அடாத செய்கையாம்.

பாடல் : 223
அடையப் பயின்றவர் சொல் ஆற்றுவராக் கேட்டால்,
உடையது ஒன்று இல்லாமை ஒட்டின், - படை வென்று
அடைய அமர்த்த கண் பைந்தொடி! - அஃதால்,
இடையன் எறிந்த மரம். . . . .[223]

பொருளுரை:

வேலினது தன்மையைப் பெற்று. முகம் முழுதும். அமர்த்த கண் பைந்தொடி - நிறைந்திருக்கின்ற கண்களையும் பசிய தொடியையும் உடையாய் மிகவும் நெருங்கிப் பழகியவர்கள் தமக்கொன்று வேண்டியதாகக் கூறுஞ் சொற்களைக் கேட்டால் தன்னிடத்திலில்லாத அப்பொருளை உடையது ஒன்று தன்னிடத்துள்ளது ஒன்றாகவும் அதனைச் செய்வாராகவும் உறுதியாகக் கூறினால் அங்ஙனம் கூறுதல் இடையனால் வெட்டப்பட்ட மரத்தினை யொக்கும்.

கருத்து:

முடியாத செயலை முடியும் என்று கூறற்க.

பாடல் : 224
மரம்போல் வலிய மனத்தாரை முன் நின்று
இரந்தார் பெறுவது ஒன்று இல்லை; - குரங்கு ஊசல்
வள்ளியின் ஆடும் மலை நாட! - அஃது அன்றோ,
பள்ளியுள் ஐயம் புகல். . . . .[224]

பொருளுரை:

குரங்கு வள்ளியில் ஊசல் ஆடும் மலைநாட குரங்குகள் வள்ளிக்கொடியின்கணிருந்து ஊசலாடுகின்ற மலைநாட்டைஉடையவனே! மரத்தைப்போல வலிய கன்னெஞ் சுடையாரை. அவர்முன்பு நின்று இரப்பவர் பெறக்கடவதொரு பொருளுமில்லை; அஃது - அவர் முன்பு நின்று இரத்தல் சமணப் பள்ளியுள் இரக்கப்புகுதலை யொக்கும்.

கருத்து:

இரக்க முடையாரிடத்து இரப்பாயாக.

பாடல் : 225
இசைவ கொடுப்பதூஉம், 'இல்' என்பதூஉம்,
வசை அன்று; வையத்து இயற்கை; அஃது அன்றி,
பசை கொண்டவன் நிற்க, பாத்து உண்ணான் ஆயின்,
நசை கொன்றான் செல் உலகம் இல். . . . .[225]

பொருளுரை:

தன்னால் கொடுக்கக் கூடியவற்றைக் கொடுத்தலும் கூடாதவற்றை இல்லை யென்று கூறுதலும் ஒருவனுக்குக் குற்றமாகாது அவை பெரியோர்களது செயல்களாம் அவ்வியற்கையின்றி கொடுப்பான் என்று மனதின்கண் விரும்பி நின்றான் நிற்க தன்னிடத் துள்ளதைப் பகுத்துக் கொடுத்து உண்ணாதவனானால் நிற்பானது விருப்பத்தைக் கெடுத்தானாதலால் செல்லுகின்ற மறுமை உலகத்தின்கண் இன்பம் அடைதல் இல்லை.

கருத்து:

தன்னிடத்துள்ளதைக் கொடாதவனுக்கு மறுமையுலகத்தின்கண் இன்பம் இல்லை. உலகம் : ஆகுபெயர்.

பாடல் : 226
தமராலும் தம்மாலும் உற்றால், ஒன்று ஆற்றி,
நிகராகச் சென்றாரும் அல்லர்; - இவர் திரை
நீத்த நீர்த் தண் சேர்ப்ப! - செய்தது உவவாதார்க்கு
ஈத்ததை எல்லாம் இழவு. . . . .[226]

பொருளுரை:

பரந்த அலைகள் வெள்ளம்போல் பரக்கும் நீரையுடைய குளிர்ந்த கடல் நாடனே! தம்முடைய சுற்றத்தாராலும் தம்மாலும் ஒருவருக்கு ஓரிடர் வந்து பொருந்தியவிடத்து ஒரு பொருளுதவி அவர் மனமொப்ப ஒழுகினாருமல்லர். (அதுவன்றி) செய்ததைக்கொண்டு மனம் மகிழாதவர்களுக்கு கொடுத்த பொருள்கள் எல்லாம் இழந்த பொருள்களேயாம்.

கருத்து:

பெற்றதைக் கொண்டு மனம் உவவாதார்க்குப் பொருள்கொடுத்தல் ஆகாது.