மதுரைக்காஞ்சி

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

மலைபடுகடாம்

சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.

திருமுருகாற்றுப்படை

பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்

பொருநராற்றுப்படை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

சிறுபாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

பெரும்பாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

முல்லைப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

நெடுநல்வாடை

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

குறிஞ்சிப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

பட்டினப்பாலை

பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

மதுரைக்காஞ்சி


விடியல்காலத்தில் மதுரை மாநகர்

பாடல் வரிகள்:- 654 - 686

போதுபிணி விட்ட கமழ்நறும் பொய்கைத்
தாதுண் தும்பி போது முரன்றாங் . . . .[655]

கோத லந்தணர் வேதம் பாடச்
சீரினிது கொண்டு நரம்பினி தியக்கி
யாழோர் மருதம் பண்ணக் காழோர்
கடுங்களிறு கவளங் கைப்ப நெடுந்தேர்ப்
பணைநிலைப் புரவி புல்லுணாத் தெவிட்டப் . . . .[660]

பல்வேறு பண்ணியக் கடைமெழுக் குறுப்பக்
கள்ளோர் களிதொடை நுவல இல்லோர்
நயந்த காதலர் கவவுப்பிணித் துஞ்சிப்
புலர்ந்துவிரி விடிய லெய்த விரும்பிக்
கண்பொரா வெறிக்கு மின்னுக்கொடி புரைய . . . .[665]

ஒண்பொ னவிரிழை தெழிப்ப இயலித்
திண்சுவர் நல்லிற் கதவங் கரைய
உண்டுமகிழ் தட்ட மழலை நாவிற்
பழஞ்செருக் காளர் தழங்குகுரல் தோன்றச்
சூதர் வாழ்ந்த மாகதர் நுவல . . . .[670]

வேதா ளிகரொடு நாழிகை இசைப்ப
இமிழ்முர சிரங்க ஏறுமாறு சிலைப்பப்
பொறிமயிர் வாரணம் வைகறை இயம்ப
யானையங் குருகின் சேவலொடு காமர்
அன்னங் கரைய அணிமயில் அகவப் . . . .[675]

பிடிபுணர் பெருங்களிறு முழங்க முழுவலிக்
கூட்டுறை வயமாப் புலியொடு குழும
வான நீங்கிய நீனிற விசும்பின்
மின்னுநிமிர்ந் தனைய ராகி நறவுமகிழ்ந்து
மாணிழை மகளிர் புலந்தனர் பரிந்த . . . .[680]

பரூஉக்கா ழாரஞ் சொரிந்த முத்தமொடு
பொன்சுடு நெருப்பி னிலமுக் கென்ன
அம்மென் குரும்பைக் காய்படுபு பிறவுந்
தருமணன் முற்றத் தரிஞிமி றார்ப்ப
மென்பூஞ் செம்மலொடு நன்கலஞ் சீப்ப . . . .[685]

இரவுத்தலைப் பெயரு மேம வைகறை . . . .[654 - 686]

பொருளுரை:

அந்தணர் வேதம் பாடினர். யாழோர் மருதம் பாடினர். காழோர் யானைகளுக்கு கவளம் ஊட்டினர். தேர்க் குதிரைகளுக்குப் புல்லுணவு போட்டனர். பண்ணியம் விற்போர் கடையை மெழுகினர். கள்ளை விலை கூறி விற்றனர். காதலர் கட்டியணைத்தபடி தூங்கிக் கொண்டிருந்தனர். கதவுகள் திறக்கும் ஓசை கேட்டது. கள்ளுண்டவர்கள தழங்கு குரலில் பேசினர். சூதர் அரசனுக்கு வாழ்த்துப் பாடினர். மாகதர் அரசனின் பழம்புகழை எடுத்துப் பேசினர். வேதாளிகர் காலம் கணித்துச் சொன்னார்கள். அரண்மனை முரசு முழங்கிற்று. அதன் எதிரொலியாக யானை முழங்கிற்று. சேவல் கூவிற்று ஆண், பெண் குருகுகள் யானை போல் கரைந்தன. அன்னங்கள் ஆசைகொண்டு கரைந்தன. அணிமயில் அகவிற்று. பிடியோடு உறவு கொள்ளும் பெருங்களிறு முழங்கிற்று. கூட்டில் வளர்க்கப்பட்ட ஆண், பெண் புலிகள் குழுமின. இல்லத்தரசியர் புலவி நிகழ்ந்தது. வண்டுகளின் ஆரவாரம் கேட்டது. முற்றத்தில் பழம்பூக் களைந்து புதுப்பூ வைக்கப்பட்டது. இந்த விடியல் ‘ஏம வைகறை’ ஆயிற்று. உள்விளக்கம் குளத்துப் பூவில் தேன் உண்ணும் தும்பி பாடுவது போல் வேதம் ஓதும் அந்தணர் மூக்கொலியோடு பாடினர். மருதப்பண் ஊடலோடு தொடர்புடையது. யாழ் மீட்டுவதற்கு முன் அதன் நரம்பின் சீரை இனிதாக்கிக் கொண்டு பண்ணிசைப்பர். யானைக்குச் சோற்றுக் கவளத்தை வேண்டா என்று அதற்கு கைத்துப்போகும் அளவுக்கு ஊட்டுவர். குதிரைக்கும் அவ்வாறே புல்லைத் தெவிட்டும் அளவுக்குப் போடுவர். பண்ணியம் என்பது பலசரக்கு என்று முன்பே கூறப்பட்டது. நயந்த காதல் என்பது விரும்ப விரும்ப விருப்பம் கூடிக்கொண்டேயிருக்கும் காதல். கதவு திறக்கும் பெண்கள் மின்னல் போல் ஒளிரும் அணிகலன்களுடன் மெதுவாக வந்தனர். கள்ளுண்டவர் என்று மேலே கூறியதற்குப் பதிலாக பழஞ்சோற்று நீராரம் உண்டவர்கள் என்றும் கூறலாம். புலியின் ஒலியைக் குழுமுதல் என்பது மரபு. வானம் நீங்கிய விசும்பு என்பது மழைமேகம் இல்லாத ஆகாயம். விடியலில் வந்த கணவனோடு ஊடும் மகளிர் நறவு அருந்தி மகிழ்ந்திருந்தனர் போலும். மணல் கொண்டுவந்து பரப்பப்பட்ட முற்றத்தில் முத்தாரத்தின் முத்துக்கள் சிதறிக்கிடந்தன. இது விடியலில் வாசல் பெருக்கும் போது உதிர்ந்தவை என்க. நெருப்பில் நீலமணியை நனைப்பதுபோல் முற்றத்தை அடுத்த குளத்தில் நீலமலர்கள் பூத்துக் கிடந்தன. அல்லது மார்கழி மாதத்தில் முற்றத்தில் பூ வைப்பதுபோல் மணல்முற்றத்தில் பூ வைத்து விருந்தினரை வரவேற்றனர். செம்மல் = பழம்பூக்கள்