மதுரைக்காஞ்சி
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
மலைபடுகடாம்
சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.
திருமுருகாற்றுப்படை
பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்
பொருநராற்றுப்படை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
சிறுபாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
பெரும்பாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
முல்லைப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
நெடுநல்வாடை
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
குறிஞ்சிப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
பட்டினப்பாலை
பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
மதுரைக்காஞ்சி

கடல்வளம் மிகுந்த சாலியூரைக் கொண்ட வெற்றி
பாடல் வரிகள்:- 075 - 088
பேஎம் நிலைஇய இரும் பெளவத்துக்
கொடும் புணரி விலங்கு போழக்
கடுங் காலொடு கரை சேர
நெடுங் கொடிமிசை இதை யெடுத்து
இன் னிசைய முரச முழங்கப . . . .[80]
பொன் மலிந்த விழுப் பண்டம்
நா டார நன் கிழிதரும்
ஆடி யற் பெரு நாவாய்
மழை முற்றிய மலை புரையத்
துறை முற்றிய துளங் கிருக்கைத் . . . .[85]
தெண் கடற் குண் டகழிச்
சீர் சான்ற உயர் நெல்லின்
ஊர் கொண்ட உயர் கொற்றவ! . . . .[75 - 88]
பேஎநிலைஇய விரும்பௌவத்துக்
கொடும்புணரி விலங்குபோழக்
கடுங்காலொடு கரைசேர
நெடுங்கொடிமிசை யிதையெடுத்
தின்னிசைய முரசமுழங்கப் . . . .[80]
பொன்மலிந்த விழுப்பண்ட
நாடார நன்கிழிதரு
மாடியற் பெருநாவாய்
மழைமுற்றிய மலைபுரையத்
துறைமுற்றிய துளங்கிருக்கைத் . . . .[85]
தெண்கடற் குண்டகழிச்
சீர்சான்ற வுயர்நெல்லி
னூர்கொண்ட வுயர்கொற்றவ
பொருளுரை:
‘நெல்லின் ஊர்’ என்பது சாலியூர். நெடுஞ்செழியன் இவ்வூரை வென்று தனதாக்கிக் கொண்டான். ‘விலங்கு’என்றால் வளைவு. சாலியூரில் கடல் வளைந்திருந்தது. காற்றால் செலுத்தப்படும் பெரும்பெரும் நாவாய்க் கப்பல்கள் இங்குப் பொன்னை இறக்கின. பொருள்களை ஏற்றின. அப்போதெல்லாம் முரசு முழங்கிற்று. நாவாயின் பாய்மரம் ‘இதை‘. இதில் நாட்டின் அடையாளக் கொடி கட்டப்பட்டிருந்தது. நாவாய் கடலலையில் ஆடியது. நாவாய் மலை போலவும், அதன் பாய்மரம் மலையில் மேயும் மழைமேகம் போலவும் தோன்றியது. இப்படிப் பல நாவாய்கள். இந்தத் துறைமுக நகரைச் சுற்றிலும் ஆழமான அகழிகள் இருந்தன. வானத்தைத் தொடுவது போன்ற பெருங்கடல். மேகங்கள் போல் நுரைதள்ளும் பேரலைகள். இந்த வளைந்த புணரிக் கடல்தான் உட்குழிவாக நிலப்பகுதியில் நுழைந்திருந்தது. (இந்தச் சாலியூர் இக்காலத்துத் தனுஷ்கோடியின் ஒரு பகுதியாய் இருந்து கடலால் கொள்ளப்பட்டது.) ‘புணரி’ என்று இங்குக் குறிப்பிடப்படுவது இராமேஸ்வரத்துக்கு மேற்கில் வடபால் தென்பால் கடல்நீர்கள் புணர்வதை உணர்த்துகிறது.