குறிஞ்சிப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
மலைபடுகடாம்
சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.
திருமுருகாற்றுப்படை
பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்
பொருநராற்றுப்படை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
சிறுபாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
பெரும்பாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
முல்லைப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
மதுரைக்காஞ்சி
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
நெடுநல்வாடை
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பட்டினப்பாலை
பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
குறிஞ்சிப்பாட்டு

தொடர்ந்தது தோன்றலின் உறவு!
பாடல் வரிகள்:- 237 - 245
அன்றை அன்ன விருப்பொடு, என்றும்
இரவரல் மாலையனே, வருதோறும்
காவலர் கடுகினும், கத நாய் குரைப்பினும், . . . .[240]
நீ துயில் எழினும், நிலவு வெளிப்படினும்,
வேய் புரை மென் தோள் இன்துயில்
பெறாஅன், பெயரினும், முனியல் உறாஅன்,
இளமையின் இகந்தன்றும் இலனே, வளமையின்
தன் நிலை தீர்ந்தன்றும் இலனே.......... . . . .[237 - 245]
டன்றை யன்ன விருப்போ டென்று
மிரவரன் மாலைய னேவரு தோறுங்
காவலர் கடுகினுங் கதநாய் குறைப்பினு . . . .[240]
நீதுயி லெழினு நிலவுவெளிப் படினும்
வேய்புரை மென்றோ ளின்றுயி லென்றும்
பெறாஅன் பெயரினு முனிய லுறாஅ
னிளமையி னிகந்தன்று மிலனே வளமையிற்
றன்னிலை தீர்ந்தன்று மிலனே கொன்னூர் . . . .[245]
பொருளுரை:
அப் புணர்ச்சி தொடங்கி, முதல் நாளில் கொண்ட விருப்பத்துடன் என்றும் இரவில் வரும் தன்மையுடையவன் அவன். அவ்வாறு அவன் வரும்பொழுதெல்லாம், காவலர் விரைந்துக் காவல் காப்பினும், சினம் மிகுந்த நாய்கள் குரைத்தாலும், தூக்கத்திலிருந்து நீ விழித்தாலும், நிலா ஒளியைப் பரப்பினும், தலைவியைக் காணாது அவளது மூங்கில் போன்ற மென்மையான தோளில் இனிய துயிலைப் அவன் பெறாவிட்டாலும், குறி இல்லாததை தலைவன் செய்தக் குறியாகக் கருதிச் சென்று மீண்டு மனையில் புகுந்தாலும் வெறுத்தலைச் செய்யான். அவன் இளமையைக் கடந்தவன் இல்லை. தன் செல்வத்தின் செருக்கால், நல்ல குடியில் பிறந்த தனக்குரிய நல்ல செயல்களிலிருந்து விலகியவனும் இல்லை.
குறிப்பு:
இர (239) - பொ. வே. சோமசுந்தரனார் உரை - இரா, இறுதியினின்ற ஆகாரம் குறுகி ‘இர’ என நின்றது. குறி எனப்படுவது இரவினும் பகலினும் அறியக் கிளந்த ஆற்றது என்ப (தொல்காப்பியம், களவியல் 38). அகநானூறு 122 - இரும்பிழி மாரி அழுங்கல் மூதூர் விழவு இன்றாயினும் துஞ்சாது ஆகும், மல்லல் ஆவணம் மறுகுடன் மடியின் வல் உரைக் கடும் சொல் அன்னை துஞ்சாள், பிணி கோள் அருஞ்சிறை அன்னை துஞ்சின் துஞ்சாக் கண்ணர் காவலர் கடுகுவர், இலங்கு வேல் இளையர் துஞ்சின் வை எயிற்று வலஞ்சுரித் தோகை ஞாளி மகிழும், அரவவாய் ஞமலி மகிழாது மடியின் பகலுரு உறழ நிலவுக் கான்று விசும்பின் அகல்வாய் மண்டிலம் நின்று விரியும்மே, திங்கள் கல் சேர்வு கனை இருள் மடியின் இல் எலி வல்சி வல்வாய்க் கூகை கழுது வழங்கு யாமத்து அழிதகக் குழறும், வளைக் கண் சேவல் வாளாது மடியின் மனைச் செறி கோழி மாண் குரல் இயம்பும். மாலை (239) - தன்மை. மாலை இயல்பே.(தொல்காப்பியம், உரியியல் 17).
சொற்பொருள்:
அதற்கொண்டு - அப் புணர்ச்சி தொடங்கி, அன்றை அன்ன - முதல் நாள் போன்ற, விருப்பொடு - முதல் நாளில் உள்ள விருப்பத்துடன், என்றும் - என்றும், இரவரல் மாலையனே - இரவில் வரும் தன்மையுடையவன் (இர - இரா, இறுதியினின்ற ஆகாரம் குறுகி இர என நின்றது), வருதோறும் - வரும்பொழுதெல்லாம், காவலர் கடுகினும் - காவலர் விரைந்து காவல் காப்பினும், கத நாய் குரைப்பினும் - சினம் மிகுந்த நாய்கள் குரைத்தாலும், நீ துயில் எழினும் - தூக்கத்திலிருந்து நீ விழித்தாலும், நிலவு வெளிப்படினும் - நிலா ஒளியைப் பரப்பினும், வேய் புரை மென் தோள் இன்துயில் என்றும் பெறாஅன் - மூங்கில் போன்ற மென்மையான தோளில் இனிய துயிலைப் அவன் பெறுவதில்லை, பெயரினும் - குறி இல்லாததை தலைவன் செய்த குறியாக கருதிச் சென்று மீண்டு மனையில் புகுந்தாலும், முனியல் உறாஅன் - வெறுத்தலைச் செய்யான், இளமையின் இகந்தன்றும் இலனே - இளமையைக் கடந்தவன் இல்லை, வளமையில் - தன்னுடைய செல்வத்தால், தன் நிலை தீர்ந்தன்றும் இலன் - தனக்குரிய நல்ல செயல்களிலிருந்து விலகியவனும் இல்லை