குறிஞ்சிப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

மலைபடுகடாம்

சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.

திருமுருகாற்றுப்படை

பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்

பொருநராற்றுப்படை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

சிறுபாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

பெரும்பாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

முல்லைப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

மதுரைக்காஞ்சி

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

நெடுநல்வாடை

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பட்டினப்பாலை

பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

குறிஞ்சிப்பாட்டு


வந்தது மாலைக் காலம்!

பாடல் வரிகள்:- 215 - 230

எல்லை செல்ல ஏழ் ஊர்பு இறைஞ்சிப் . . . .[215]
பல் கதிர் மண்டிலம் கல் சேர்பு மறைய,
மான் கணம் மர முதல் தெவிட்ட, ஆன் கணம்
கன்று பயிர் குரல மன்று நிறை புகுதர,
ஏங்கு வயிர் இசைய கொடு வாய் அன்றில்
ஓங்கு இரும் பெண்ணை அக மடல் அகவப் . . . .[220]

பாம்பு மணி உமிழப் பல் வயின் கோவலர்
ஆம்பல் அம் தீம் குழல் தெள் விளி பயிற்ற,
ஆம்பல் ஆய் இதழ் கூம்புவிட, வள மனைப்
பூந்தொடி மகளிர் சுடர் தலைக் கொளுவி,
அந்தி அந்தணர் அயரக் கானவர் . . . .[225]

விண் தோய் பணவை மிசை ஞெகிழி பொத்த,
வானம் மாமலைவாய் சூழ்பு கறுப்புக் கானம்
கல்லென்று இரட்ட, புள்ளினம் ஒலிப்ப,
சினைஇய வேந்தன் செல் சமம் கடுப்பத்
துனைஇய மாலை துன்னுதல் காணூஉ, . . . .[215 - 230]

பொருளுரை:

பகல் நேரம் போகும்படி ஏழு குதிரைகள் உடைய தேரைச் செலுத்தி பல கதிர்களையுடைய கதிரவன் மலையை அடைந்து மறையவும், மான் கூட்டம் மரத்தின் அடியில் திரளவும், பசுக்கூட்டம் கன்றுகளை அழைக்கும் குரலை உடையவையாய் கொட்டில்கள் நிறையுமாறு புகவும், ஊதுகின்ற கொம்பைப் போல் இசையை உடைய வளைந்த வாயையுடைய அன்றில் பறவை உயர்ந்தக் கரிய பனை மரத்தின் உள் மடலில் இருந்து தன் துணையை அழைக்கவும், பாம்பு மணியைக் கக்கவும், பல இடங்களில் இடையர்கள் ஆம்பல் என்னும் பண்ணினை இனிய குழலில் ஊதவும், ஆம்பல் மலர்களின் அழகிய இதழ்கள் கூம்பவும், செல்வமுடைய இல்லங்களில் உள்ள அழகிய வளையல்களை அணிந்த பெண்கள் விளக்கை ஏற்றவும், அந்தணர்கள் அந்திக் கடனை ஆற்றவும், காட்டில் வாழ்பவர்கள் வானத்தைத் தீண்டும் பரண் மேல் தீக்கடையும் கோலால் நெருப்பைப் பிறப்பித்து எரிக்கவும், முகில்கள் பெரிய மலையிடத்தே சூழ்ந்து கருமை அடையவும், கானத்தில் கல்லென்று ஒலி எழும்பவும், பறவைகள் ஆரவாரிக்கவும், சினமுடைய மன்னன் போருக்குச் செல்வதைப் போல விரைதலையுடைய மாலைப் பொழுது நெருங்கி வருதலைக் கண்டு,

குறிப்பு:

பாம்பு மணியைக் கக்குதல் - புறநானூறு 294, அகநானூறு 72, 92, 138, 192, 372, குறுந்தொகை 239 and நற்றிணை 255. ஆ மன்றத்தில் புகுதல்: அகநானூறு 14 - கன்று பயிர் குரல மன்று நிறை புகுதரும், அகநானூறு 63 - கன்று காணாது புன்கண்ண செவி சாய்த்து மன்று நிறை பைதல் கூரப் பல உடன் கறவை, அகநானூறு 64 - மன்று நிறை புகுதரும் ஆ, அகநானூறு 253 - கன்றுடைப் பெரு நிரை மன்று நிறை தரூஉம், கலித்தொகை 119 - கன்று அமர் விருப்பொடு மன்று நிறை புகுதர, புறநானூறு 387 - மன்று நிறையும் நிரை, குறிஞ்சிப்பாட்டு 217 - ஆன் கணம் கன்று பயிர் குரல மன்று நிறை புகுதர. துனை - கதழ்வும் துனைவும் விரைவின் பொருள் (தொல்காப்பியம், உரியியல் 19).

சொற்பொருள்:

எல்லை செல்ல - பகல் நேரம் போகும்படி, ஏழ் ஊர்பு இறைஞ்சி - ஏழு குதிரைகள் உடைய தேரைச் செலுத்தி, பல் கதிர் மண்டிலம் - பல கதிர்களையுடைய கதிரவன், கல் சேர்பு மறைய - மலையை அடைந்து மறையவும், மான் கணம் - மான் கூட்டம், மரம் முதல் - மரத்தின் அடியில், தெவிட்ட - திரளவும், அசையிடவும், ஆன் கணம் - பசுக்கூட்டம், கன்று பயிர் குரல - கன்றுகளை அழைக்கும் குரலை உடையவையாய், மன்று நிறை புகுதர - கொட்டில்கள் நிறையுமாறு புகவும், ஏங்கு ஒங்கு வயிர் இசைய - ஊதுகின்ற கொம்பைப் போல் இசையை உடைய, கொடுவாய் அன்றில் - வளைந்த வாயையுடைய அன்றில் பறவை, ஓங்கு இரும் பெண்ணை அக மடல் - உயர்ந்த கரிய பனை மரத்தின் உள் மடல், அகவ - தன் துணையை அழைக்கவும், பாம்பு மணி உமிழ - பாம்பு மணியைக் கக்கவும், பல்வயின் கோவலர் ஆம்பல் தீங்குழல் தெள் விளி பயிற்ற - பல இடங்களில் இடையர்கள் ஆம்பல் என்னும் பண்ணினை இனிய குழலில் ஊதவும், ஆம்பல் ஆய் இதழ் கூம்பு விட - ஆம்பல் மலர்களின் அழகிய இதழ்கள் கூம்பவும், வள மனை பூந்தொடி மகளிர் சுடர்தலைக் கொளுவி - செல்வமுடைய இல்லங்களில் உள்ள அழகிய வளையல்களை அணிந்த பெண்கள் விளக்கை ஏற்றவும், அந்தி அந்தணர் அயர - அந்தணர்கள் அந்திக் கடனை ஆற்றவும், கானவர் - காட்டில் வாழ்பவர்கள், விண் தோய் பணவை மிசை - வானத்தைத் தீண்டும் பரண் மேல், ஞெகிழி பொத்த - தீக்கடையும் கோலால் நெருப்பை பிறப்பித்து எரிப்பவும், வானம் மாமலைவாய் சூழ்பு கறுப்ப - முகில்கள் பெரிய மலையிடத்தே சூழ்ந்து கருமை அடையவும், கானம் கல்லென்று இரட்ட - கானத்தில் கல்லென்று ஒலி எழும்பவும், புள்ளினம் ஒலிப்ப - பறவைகள் கூவவும், சினைஇய வேந்தன் செல் சமம் கடுப்ப - சினமுடைய மன்னன் போருக்குச் செல்வதைப் போல, துனைஇய மாலை - விரைதலையுடைய மாலைப் பொழுது, துன்னுதல் காணூஉ - நெருங்கி வருதலைக் கண்டு