குறிஞ்சிப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
மலைபடுகடாம்
சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.
திருமுருகாற்றுப்படை
பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்
பொருநராற்றுப்படை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
சிறுபாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
பெரும்பாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
முல்லைப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
மதுரைக்காஞ்சி
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
நெடுநல்வாடை
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பட்டினப்பாலை
பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
குறிஞ்சிப்பாட்டு

தலைவன் நாட்டின் சிறப்பு
பாடல் வரிகள்:- 186 - 199
பழு மிளகு உக்க பாறை நெடுஞ்சுனை
முழு முதற் கொக்கின் தீங்கனி உதிர்ந்தென,
புள் எறி பிரசமொடு ஈண்டி, பலவின்
நெகிழ்ந்து உகு நறும் பழம் விளைந்த தேறல், . . . .[190]
நீர் செத்து அயின்ற தோகை, வியல் ஊர்ச்
சாறு கொள் ஆங்கண் விழவுக் களம் நந்தி
அரிக்கூட்டு இன்னியம் கறங்க ஆடுமகள்
கயிறு ஊர் பாணியின் தளரும், சாரல்
வரையர மகளிரின் சாஅய் விழைதக, . . . .[195]
விண் பொரும் சென்னிக் கிளைஇய காந்தள்
தண் கமழ் அலரி தாஅய் நன் பல
வம்பு விரி களத்தின், கவின் பெறப் பொலிந்த
குன்று கெழு நாடன்................ . . . .[186 - 199]
பழுமிள குக்க பாறை நெடுஞ்சுனை
முழுமுதற் கொக்கின் றீங்கனி யுதிர்ந்தெனப்
புள்ளெறி பிரசமொ டீண்டிப் பலவி
னெகிழ்ந்துகு நறும்பழம் விளைந்த தேற . . . .[190]
னீர்செத் தயின்ற தோகை வியலூர்ச்
சாறுகொ ளாங்கண் விழவுக்கள நந்தி
யரிக்கூட் டின்னியங் கறங்க வாடுமகள்
கயிறூர் பாணியிற் றளருஞ் சாரல்
வரையர மகளிரிற் சாஅய் விழைதக . . . .[195]
விண்பொருஞ் சென்னிக் கிளைஇய காந்தட்
டண்கம ழலரி தாஅய் நன்பல
வம்புவிரி களத்திற் கவின்பெறப் பொலிந்த
குன்றுகெழு நாடனெம் விழைதரு பெருவிற
பொருளுரை:
அங்கு, பழுத்த மிளகு உதிர்ந்து கிடக்கின்ற பாறை ஒன்றின் மேல் உள்ள பெரிய சுனையில், பெரிய அடிப்பகுதியை உடைய மாவின் இனிய கனிகள் உதிர்ந்தன. அதனுடன் வண்டுகள் சிதறியத் தேனும், பலா மரத்தின் வெடித்து தேன் சொரியும் நறுமணமான பழங்களின் சாறும் கலந்து, விளைந்த கள்ளாகியது. அதனை நீர் என்று எண்ணி குடித்த மயில் ஒன்று, பெரிய ஊரின் விழாக் களத்தில் மிகுந்து அரித்து எழும் ஓசையைக் கூட்டிய இனிய இசைக் கருவிகள் ஒலிக்க, கயிறாடும் பெண் கயிற்றில் ஏறி தாளத்திற்கு ஏற்ப ஆடி பின் தளர்ந்தது போல் தளர்ந்தது. மலையில் உள்ள பெண் கடவுள்கள் ஆடுவதால், காண்பவர் விரும்பும்படி விண்ணைத் தொடும் மலை உச்சியில் உள்ள குளிர்ச்சியுடைய மணம் வீசும் மலர்களைக் கொண்ட, கிளையுடைய காந்தள் செடிகள் கீழ் நிலத்தில் படர்ந்து, சிறிது கெட்டாலும், நல்ல பல துணிகளை விரித்த களத்தைப் போன்று அழகாகப் பொலிந்த மலை பொருந்திய நாட்டின் தலைவன்,
குறிப்பு:
நச்சினார்க்கினியர் உரை - (187-191) - மிளகு உக்க பாறை அந்நிலத்து மாக்கள் உறைகின்ற ஊராகவும், நெடுஞ்சுனை தலைவன் குடியாகவும், மாம்பழத்தாலும் பலாப்பழத்தாலும் விளைந்த தேறல் தந்தையாலும் தாயாலும் உளனாகிய தலைவனாகவும், பிரசம் இவரைக்கூட்டின பால்வரை தெய்வமாகவும், அதனை உண்ட மயில் உயர்ந்த தலைவனைத் தன் குலத்திற்கு ஓத்தானாகக் கருதி நுகர்ந்த தலைவியாகவும், அத் தேறலில் பிறந்த களிப்பு களவொழுக்கத்திற் பிறந்த பேரின்பமாகவும், மயில் ஆடவாற்றாத் தன்மை வருந்திக் குறைந்த தன்மையாகவும் உள்ளுறை உவமம் கொள்க. நச்சினார்க்கினியர் உரை (196-199)- உயர் நிலத்தே நின்று மணக்கின்ற காந்தள் வரையர மகளிராற் கீழ் நிலத்தே பரந்து அவ்விடத்தைக் கச்சு விரித்தாற்போல் அழகு பெறுத்தும் என்றதனால் நம்மில் உயர்ச்சியுடைய தலைவன் நமது நல்வினையால் தனது பெருமைதானும் ஒழிந்து இவ்விடத்தே வந்து கூடி நமக்கும் உயர்ச்சியுளதாக்கி நம்மை அழகு பெறுத்துகின்றான் என்று உள்ளுறை உவமம் எய்திற்று. அகநானூறு 2 - கோழ் இலை வாழைக் கோள் முதிர் பெருங்குலை ஊழுறு தீங்கனி உண்ணுநர்த் தடுத்த சாரல் பலவின் சுளையொடு ஊழ்படு பாறை நெடுஞ்சுனை விளைந்த தேறல் அறியாது உண்ட கடுவன் அயலது கறி வளர் சாந்தம் ஏறல் செல்லாது நறு வீ அடுக்கத்து மகிழ்ந்து கண்படுக்கும்.
சொற்பொருள்:
அவ்வழி - அங்கு, பழு மிளகு - பழுத்த மிளகு, உக்க பாறை - உதிர்ந்து கிடக்கின்ற பாறை, நெடுஞ்சுனை - பெரிய சுனை, முழு முதல் - பெரிய அடிப்பகுதி, கொக்கின் தீம் கனி உதிர்ந்தென - மாவின் இனிய கனிகள் உதிர்ந்தனவாக, புள் எறி - வண்டுகள் சிதறிய, பிரசமொடு - தேனுடன், ஈண்டு - கூடி, பலவின் - பலா மரத்தின், நெகிழ்ந்து உகு - விரிந்து தேன் சொரியும், நறும் பழம் - நறுமணமான பழம், விளைந்த தேறல் - விளைந்த கள், நீர் செத்து - நீர் என்று எண்ணி, அயின்ற தோகை - குடித்த மயில், வியல் ஊர் சாறு கொள் - பெரிய ஊரில் விழா கொள்ளும், ஆங்கண் - அங்கு, விழவுக் களம் - விழாக் களம், நந்தி - மிக்கு, அரி கூட்டு இன் இயம் கறங்க - தாளத்தின் எழும் ஓசையை கூட்டிய இனிய இசைக் கருவிகள் ஒலிக்க, அரித்து எழும் ஓசையை கூட்டிய இனிய இசைக் கருவிகள் ஒலிக்க, ஆடுமகள் கயிறு ஊர் பாணியின் - ஆடும் பெண் கயிற்றில் ஏறி ஆடுகின்ற தாளத்தினால், தளரும் - தளரும், சாரல் - மலைச் சரிவு, வரையர மகளிரில் - மலையில் உள்ள பெண் கடவுள்கள், சாஅய் - சிறிது கெட்டு, விழை தக - விரும்பும்படி, விண் பொரும் - விண்ணைத் தொடும், சென்னி - சிகரங்கள், கிளைஇய காந்தள் - கிளையுடைய காந்தள் செடிகள், தண் கமழ் அலரி - குளிர்ச்சியுடைய மணம் வீசும் மலர்கள், தாஅய் - படர்ந்து, நன் பல - நல்ல பல, வம்பு விரி களத்தின் - துணியை விரித்த களத்தைப் போன்று, கவின் பெற பொலிந்த - அழகாக பொலிந்த, குன்று கெழு நாடன் - மலை பொருந்திய நாட்டின் தலைவன்