குறிஞ்சிப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

மலைபடுகடாம்

சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.

திருமுருகாற்றுப்படை

பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்

பொருநராற்றுப்படை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

சிறுபாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

பெரும்பாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

முல்லைப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

மதுரைக்காஞ்சி

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

நெடுநல்வாடை

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பட்டினப்பாலை

பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

குறிஞ்சிப்பாட்டு


காவலன் எய்திய அம்பினால் சினமடைந்த யானை

பாடல் வரிகள்:- 153 - 169

இருவி வேய்ந்த குறுங்கால் குரம்பைப்
பிணை ஏர் நோக்கின் மனையோள் மடுப்ப,
தேம்பிழி தேறல் மாந்தி மகிழ் சிறந்து, . . . .[155]

சேமம் மடிந்த பொழுதின், வாய்மடுத்து
இரும் புனம் நிழத்தலின், சிறுமை நோனாது,
அரவு உறழ் அம் சிலை கொளீஇ, நோய்மிக்கு
உரவுச்சின முன்பால் உடல் சினம் செருக்கிக்
கணை விடு புடையூக் கானம் கல்லென . . . .[160]

மடி விடு வீளையர் வெடிபடுத்து எதிரக்
கார்ப் பெயல் உருமிற் பிளிறிச் சீர்த் தக
இரும்பிணர்த் தடக்கை இரு நிலம் சேர்த்திச்
சினம் திகழ் கடாஅம் செருக்கி மரம் கொல்பு
மையல் வேழம் மடங்கலின் எதிர்தர, . . . .[165]

உய்வு இடம் அறியேம் ஆகி, ஒய்யென
திருந்து கோல் எல் வளை தெழிப்ப, நாணு மறந்து,
விதுப்புறு மனத்தேம் விரைந்து அவற் பொருந்திச்
சூர் உறு மஞ்ஞையின் நடுங்க,............ . . . .[153 - 169]

பொருளுரை:

தினை அரிந்த தாளால் செய்த குறுகிய கால்களையுடைய குடிலில் பெண் மானின் அழகிய நோக்கினையுடைய மனைவி குடிக்கக் கொடுக்க, ஒருவன் தேனால் செய்த கள்ளினைக் குடித்து, மிகவும் மகிழ்ச்சி அடைந்து, தினைப்புனத்தின் காவலை நிறுத்திய பொழுது, ஒரு யானை பெரிய புனத்தில் தினையை உண்டு அழித்ததால், சிறிய அளவு தினையையும் பெறாது, பாம்பைப் போன்ற அழகிய வில்லில் நாணை ஏற்றி, வருத்தம் மிகுந்ததால் மிகுந்த சினம் கொண்டு, வலிமையுடன், உடலில் சினத்திற்குரிய அடையாளங்கள் தோன்ற, அம்பைச் செலுத்தி, தன்னுடன் பணி புரியும் இளைஞர்களுடன் சேர்ந்து தட்டை முதலியவற்றை தட்டி ஒலி உண்டாக்கி, காட்டில் கல்லென்ற ஒலி பிறக்கும்படி அவர்களுடன் வாயை மூடி சீழ்க்கையடித்து மிக்க ஒலியை உண்டாக்கி அவன் யானையை விரட்ட, கார்கால இடியைப் போலப் பிளிறி, தன் தலைமைக்குத் தக்க கரிய சருச்சரை உடைய பெரிய தும்பிக்கையைப் பெரிய நிலத்தில் சேர்த்துச் சினம் திகழ்வதற்குக் காரணமான மதத்தால் செருக்குடன் மரங்களை முறித்துப் போட்டது, அந்தக் கலக்கமடைந்த யானை. அது கூற்றுவனைப் போல் எங்களை நோக்கி வர, தப்பிக்க இடம் அறியாது, விரைவாக, எங்கள் திருத்தமான திரண்ட ஒளியுடைய வளையல்கள் ஒலிக்க, எங்களின் நாணத்தை மறந்து, விரைந்து, நடுங்கும் மனது உடையவர்களாக, அவனை அடைந்து, கடவுள் ஏறிய மயிலைப் போல நாங்கள் நடுங்க,

குறிப்பு:

குடித்த பின் காவலை மறந்து: தேம்பிழி தேறல் மாந்தி மகிழ் சிறந்து சேமம் மடிந்த பொழுதின் 155-156, அகநானூறு 348 - பாப்புக் கடுப்பு அன்ன தோப்பி வான் கோட்டுக் கடவுள் ஓங்கு வரைக்கு ஓக்கிக் குறவர் முறித் தழை மகளிர் மடுப்ப மாந்தி அடுக்கல் ஏனல் இரும் புனம் மறந்துழி. வீளையர் 161 - வை. மு. கோபாலகிருஷ்ணமாச்சாரி உரை - மனையோள் என்னும் ஒருமை சுட்டிய பெயர், மேல் வீளையர் என வருதலால் பன்மை சுட்டியவாறுமாம், பொ. வே. சோமசுந்தரனார் உரை - இளைஞர் சீழ்க்கையராய்.

சொற்பொருள்:

இருவி வேய்ந்த - தினை அரிந்த தாளால் செய்த, குறுங்கால் குரம்பை - குறுகிய கால்களையுடைய குடில், பிணை ஏர் நோக்கின் மனையோள் - பெண் மானின் அழகிய நோக்கினையுடைய மனைவி, மடுப்ப - கொடுக்க, தேம்பிழி தேறல் மாந்தி - தேனால் செய்த கள்ளினைக் குடித்து, மகிழ்சிறந்து - மிகவும் மகிழ்ச்சி அடைந்து, சேமம் மடிந்த பொழுதில் - காவலை நிறுத்திய பொழுது, வாய் மடுத்து இரும்புனம் நிழத்தலின் - யானை பெரிய புனத்தில் தினையை உண்டு அழித்ததால், சிறுமை நோனாது - எஞ்சி இருந்த சிறிய அளவையும் பெறாது, அரவு உறழ் - பாம்பைப் போன்று, அம் சிலை - அழகிய வில், கொளீஇ - நாண் ஏற்றி, நோய் மிக்கு உரவுச்சின - வருத்தம் மிகுந்ததால் மிகுந்த சினம் கொண்டு, முன்பால் - வலிமையுடன், உடல் சினம் செருக்கி - உடலில் சினத்திற்குரிய அடையாளங்கள் தோன்ற, கணை விடுபு - அம்பைச் செலுத்தி, புடையூ - தட்டை முதலியவற்றைத் தட்டி ஒலி உண்டாக்கி, கானம் கல் என - காட்டில் கல்லென்ற ஒலி பிறக்கும்படி, மடி விடு வீளையர் - வாயை மூடி சீழ்க்கையடித்தவர்களாய், வெடிபடுத்து எதிர - மிக்க ஒலியை உண்டாக்கி யானையை விரட்ட, கார்ப் பெயல் உருமின் பிளிறி - கார்கால இடியைப் போல பிளிறி, சீர் தக இரும் பிணர்த் தடக்கை இரு நிலம் சேர்த்தி - தன் தலைமைக்கு தக்க கரிய சருச்சரை உடைய பெரிய தும்பிக்கையை பெரிய நிலத்தில் சேர்த்து, சினம் திகழ் கடாம் - சினம் திகழ்வதற்கு காரணமான மதம், செருக்கி மரம் கொல்பு - செருக்குடன் மரங்களை முறித்து, மையல் வேழம் - கலங்கிய யானை, மடங்கலின் எதிர்தர - கூற்றுவனைப் போல் எங்களை நோக்கி வர, உய்விடம் அறியேம் ஆகி - தப்பிக்க இடம் அறியாது, ஒய்யென - விரைவாக, திருந்து கோல் எல் வளை - திருத்தமான திரண்ட ஒளியுடைய வளையல்கள், தெழிப்ப - ஒலிக்க, நாணு மறந்து - நாணத்தை மறந்து, விதுப்பு உறு மனத்தேம் விரைந்து - நடுங்கும் மனதுடையவர்களாக, அவற் பொருந்தி - அவனை அடைந்து, சூர் உறு மஞ்ஞையின் நடுங்க - கடவுள் ஏறிய மயிலைப் போல நடுங்க,