குறிஞ்சிப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
மலைபடுகடாம்
சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.
திருமுருகாற்றுப்படை
பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்
பொருநராற்றுப்படை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
சிறுபாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
பெரும்பாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
முல்லைப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
மதுரைக்காஞ்சி
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
நெடுநல்வாடை
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பட்டினப்பாலை
பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
குறிஞ்சிப்பாட்டு

தலைவியின் சொல்லை எதிர்பார்த்து நின்றான் தலைவன்
பாடல் வரிகள்:- 142 - 152
சொல்லேம் ஆதலின், அல்லாந்து கலங்கிக்
“கெடுதியும் விடீஇர் ஆயின் எம்மொடு
சொல்லலும் பழியோ மெல்லியலீர்” என . . . .[145]
நைவளம் பழுநிய பாலை வல்லோன்
கை கவர் நரம்பின், இம்மென இமிரும்
மாதர் வண்டொடு சுரும்பு நயந்து இறுத்த
தாது அவிழ் அலரித் தா சினை பிளந்து,
தாறு அடு களிற்றின் வீறு பெற ஓச்சி, . . . .[150]
கல்லென் சுற்றக் கடுங்குரல் அவித்து, எம்
சொல்லற் பாணி நின்றனன் ஆக . . . .[142 - 152]
சொல்லே மாதலி னல்லாந்து கலங்கிக்
கெடுதியும் விடீஇ ராயி னெம்மொடு
சொல்லலும் பழியோ மெல்லிய லீரென . . . .[145]
நைவளம் பழுநிய பாலை வல்லோன்
கைகவர் நரம்பி னிம்மென விமிரு
மாதர் வண்டொடு சுரும்புநயந் திறுத்த
தாதவி ழலரித் தாசினை பிளந்து
தாறடு களிற்றின் வீறுபெற வோச்சிக் . . . .[150]
கல்லென் சுற்றக் கடுங்குர லவித்தெஞ்
சொல்லற் பாணி நின்றன னாக
பொருளுரை:
நாங்கள் அதற்குப் பதில் கூறவில்லை. அதனால் அவன் வருந்தி, கலங்கி, “என்னிடமிருந்து தப்பிய விலங்கை நீங்கள் காட்டாவிட்டாலும், என்னுடன் பேசுவது உங்களுக்குப் பழியாகுமா, மென்மையானவர்களே?” என்று நட்ட ராகம் முற்றுப் பெற்ற பாலை யாழில் வல்லவன் தன் கையினால் தெறித்த நரம்பைப் போல இம்மென்று இசைக்கும், காதலுடைய பெண் வண்டுகளுடன் ஆண் வண்டுகள் விரும்பி வந்து தங்கும் பூந்தாது உடைய மலர்கள் மலர்ந்த தழைத்து படர்ந்த மரக்கிளையை ஒடித்து, பாகனின் பரிக்கோலை மீறிய களிற்று யானையைப் போல், அக் கிளையை வெற்றியுண்டாக வீசி, ஓசையுண்டாகக் குரைக்கும் தன்னுடைய வேட்டை நாய்களின் குரைத்தலை அடக்கி, எங்கள் விடைக்காகக் காத்து நின்றான்.
குறிப்பு:
குறிஞ்சிப்பாட்டு 146 - நைவளம் பழுநிய பாலை வல்லோன், சிறுபாணாற்றுப்படை 36 - நைவளம் பழுநிய நயந்தெரி பாலை.
சொற்பொருள்:
அதன் எதிர் சொல்லேம் - நாங்கள் அதற்கு பதில் கூறவில்லை, ஆதலின் - அதனால், அல்லாந்து கலங்கி - வருந்தி கலங்கி, கெடுதியும் விடீஇர் ஆயின் - என்னிடமிருந்து தப்பிய விலங்கை நீங்கள் காட்டாவிட்டாலும், எம்மோடு - என்னுடன், சொல்லலும் பழியோ - பேசுவது உங்களுக்கு பழியாகுமா, மெல்லியலீர் - மென்மையானவர்களே, என - என்று, நைவளம் பழுநிய பாலை வல்லோன் - நட்ட ராகம் முற்றுப் பெற்ற பாலை யாழில் வல்லவன், கை கவர் நரம்பின் - தன் கையினால் தெறித்த நரம்பைப் போல, இம்மென இமிரும் - இம்மென்று இசைக்கும், மாதர் வண்டொடு - காதலுடைய வண்டுகளுடன், சுரும்பு நயந்து இறுத்த - ஆண் வண்டுகள் விரும்பி வந்து தங்கி, தாது - பூந்தாது, அவிழ் - விரிந்த, அலரி - மலர்கள், தா சினை - தழைத்து படர்ந்த மரக்கிளை, பிளந்து - பிளந்து, தாறு அடு களிற்றின் - பரிக்கோலை மீறிய களிற்று யானையைப் போல், அங்குசத்தை மீறிய களிற்று யானையைப் போல் (களிற்றின் - இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), வீறு பெற ஓச்சி - வெற்றியுண்டாக வீசி, கல்லென் சுற்றம் - ஓசையுண்டாகக் குரைக்கும் நாய்கள், கடுங்குரல் அவித்து - குரைத்தல் அடங்கி, எம் சொல்லற் பாணி நின்றனன் ஆக - எங்கள் விடைக்காகக் காத்து நின்றான்