குறிஞ்சிப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

மலைபடுகடாம்

சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.

திருமுருகாற்றுப்படை

பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்

பொருநராற்றுப்படை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

சிறுபாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

பெரும்பாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

முல்லைப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

மதுரைக்காஞ்சி

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

நெடுநல்வாடை

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பட்டினப்பாலை

பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

குறிஞ்சிப்பாட்டு


தலைவனின் எழில்

பாடல் வரிகள்:- 107 - 127

எண்ணெய் நீவிய சுரி வளர் நறும் காழ்த்
தண் நறும் தகரம் கமழ மண்ணி,
ஈரம் புலர விரல் உளர்ப்பு அவிழா,
காழ் அகில் அம் புகை கொளீஇ, யாழிசை . . . .[110]

அணி மிகு வரி மிஞிறு ஆர்ப்பத் தேங்கலந்து
மணி நிறம் கொண்ட மா இருங் குஞ்சியின்,
மலையவும், நிலத்தவும், சினையவும், சுனையவும்,
வண்ண வண்ணத்த மலர் ஆய்பு விரைஇய
தண் நறும் தொடையல், வெண் போழ்க் கண்ணி, . . . .[115]

நலம் பெறு சென்னி நாம் உற மிலைச்சி,

பொருளுரை:

எண்ணெய் தடவிய, சுருண்டு வளர்ந்த, கருமை நிறமுடைய கூந்தலில், குளிர்ந்த நறுமணமான சாந்தினை மணம் கமழ பூசி, ஈரம் உலர விரலால் அலைத்து, பிணைப்பை அவிழ்த்து, கரிய அகிலின் அழகிய புகையை ஊட்டி, யாழ் இசையைப் போன்று அழகு மிகுகின்ற தேனீக்கள் ஒலிக்க, இனிமை கலந்து, நீலமணியின் நிறத்தைக் கொண்ட பெரிய கருமையான மயிரின்கண், மலையிலிருந்தும், நிலத்திலிருந்தும், மரத்தின் கிளைகளிலிருந்தும், சுனையிலிருந்தும், பல நிறங்களில் மலர்களைத் தேர்ந்து தொடுத்த, குளிர்ச்சியுடைய நறுமணமான மலர் மாலையையும், வெள்ளை பனை மடலின் கண்ணியாலும் அழகாக தலையில் கண்டோர் அச்சம் உண்டாகுமாறு அணிந்து,

குறிப்பு:

பேம் நாம் உரும் என வரூஉம் கிளவி ஆ முறை மூன்றும் அச்சப் பொருள (தொல்காப்பியம், உரியியல் 69). அவிழா - அவிழ்த்து என்பது பொருள். செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது.

சொற்பொருள்:

எண்ணெய் நீவிய - எண்ணெய் தடவிய, சுரி வளர் - சுருண்டு வளர்ந்த, நறும் - நறுமணமான, காழ் - கருமை நிறமுடைய, தண் நறும் தகரம் - குளிர்ந்த நறுமணமான சாந்து, கமழ - மணம் கமழ, மண்ணி - பூசி, ஈரம் புலர - ஈரம் உலர, விரல் உளர்ப்பு - விரலால் அலைத்து, அவிழா - பிணைப்பை அவிழ்த்து, காழ் அகில் - கரிய அகில், அம் புகை - அழகிய புகை, கொளீஇ - கொளுத்தி (சொல்லிசை அளபெடை), யாழ் இசை - யாழ் இசை, அணி மிகு வரி - அழகு மிகுகின்ற, மிஞிறு - தேனீ, ஆர்ப்ப - ஒலிக்க, தேம் கலந்து - இனிமை கலந்து (தேம் தேன் என்றதன் திரிபு), மணி நிறம் கொண்ட - நீலமணியின் நிறத்தைக் கொண்ட, மா இரு குஞ்சியின் - பெரிய கருமையான மயிரின்கண், மலையவும் - மலையிலிருந்தும், நிலத்தவும் - நிலத்திலிருந்தும், சினையவும் - மரத்தின் கிளைகளிலிருந்தும், சுனையவும் - சுனையிலிருந்தும், வண்ண வண்ணத்த மலர் - பல நிறங்களில் மலர்கள், ஆய்பு - தேர்ந்து, விரைஇய - தொடுத்த, தண் நறும் தொடையல் - குளிர்ச்சியுடைய நறுமணமான மலர் மாலை, வெள் போழ்க் கண்ணி - வெள்ளை பனை மடலின் கண்ணி, நலம் பெற - அழகாக, சென்னி - தலை, நாம் உற - அச்சம் உண்டாக, மிலைச்சி - அணிந்து

பைங்கால் பித்திகத்து ஆய் இதழ் அலரி
அம் தொடை ஒரு காழ் வளைஇச் செந்தீ
ஒண் பூம் பிண்டி ஒரு காது செரீஇ,
அம் தளிர்க் குவவு மொய்ம்பு அலைப்பச் சாந்து அருந்தி . . . .[120]

மைந்து இறை கொண்ட மலர்ந்து ஏந்து அகலத்து,
தொன்று படு நறும் தார் பூணொடு பொலிய,
செம் பொறிக்கு ஏற்ற வீங்கு இறைத் தடக் கையின்
வண்ண வரிவில் ஏந்தி அம்பு தெரிந்து,
நுண் வினைக் கச்சைத் தயக்கு அறக் கட்டி, . . . .[125]

இயல் அணிப் பொலிந்த ஈகை வான் கழல்
துயல்வருந்தோறும் திருந்தடிக் கலாவ, . . . .[107 - 127]

பொருளுரை:

பச்சைக் காம்பையுடைய பிச்சி மலரின் அழகிய இதழ்களால் அழகாக தொடுத்த ஒரு மாலையைத் தலைமயிரில் சுற்றி, சிவப்பு நெருப்பைப் போன்ற ஒளியுடைய பிண்டி பூக்களை அழகிய தளிருடன் ஒரு காதில் சொருகி, அத் தளிர் அவனுடைய திரண்ட தோளில் அலைப்ப, சாந்தைத் தடவிய வலிமை கொண்ட உயர்ந்த மார்பில் தொன்றுதொட்டு அணியும் மரபாகிய நறுமணமான மாலையை அணிகலன்களுடன் பொலிய அணிந்து, சிவப்பு பொறிகள் பொருந்திய பெரிய முன்னங்கையை உடைய பெரிய கைகளில், நிறமுடைய வரிந்த வில்லை ஏந்தி, அம்பை ஆராய்ந்து பிடித்து, நுண்ணிதாக செய்த கச்சையை அசையாதபடி கட்டி, இயல்பாக அழகாக பொலிந்த பொன்னினால் ஆன உயர்ந்த வீரக்கழல்கள் அவன் திருத்தமாக அடியெடுத்து நடக்கும் பொழுதெல்லாம் உயர்ந்தும் தாழ்ந்தும் அசைய,

சொற்பொருள்:

பைங்கால் பித்திகத்து - பச்சைக் காம்பையுடைய பிச்சி மலரின், ஆய் இதழ் - அழகிய இதழ்கள், நுண்ணிய இதழ்கள், அலரி - மலர்கள், அம் தொடை - அழகாக தொடுத்த, ஒரு காழ் - ஒரு சரம், வளைஇ - வளைத்து (சொல்லிசை அளபெடை), செந்தீ - சிவப்பு தீ, ஒண் பூம் பிண்டி - ஒளியுடைய பிண்டி மலர்கள், ஒருகாது செரீஇ - ஒரு காதில் சொருகி (செரீஇ - சொல்லிசை அளபெடை), அம் தளிர் - அழகிய தளிர், குவவு மொய்ம்பு அலைப்ப - திரண்ட தோளில் அலைப்ப, சாந்து அருந்தி - சாந்தைத் தடவி, மைந்து இறை கொண்ட - வலிமை கொண்ட, ஏந்து அகலத்து - உயர்ந்த மார்பில், தொன்று படு - தொன்று தொட்டு அணியும், நறும் தார் - நறுமணமான மாலை, பூணொடு பொலிய - அணிகலன்களுடன் பொலிய, செம் பொறிக்கு ஏற்ற - சிவப்பு பொறிகளுக்கு ஏற்ப, வீங்கு இறை - பெரிய முன்னங்கை, தடக் கையின் - பெரிய கைகளில், வண்ண வரி வில் ஏந்தி - நிறமுடைய வில்லை ஏந்தி, அம்பு தெரிந்து - அம்பை ஆராய்ந்து, நுண் வினைக் கச்சை - நுண்ணிதாக செய்த கச்சை, தயக்கு அற - அசைவு இல்லாமல், கட்டி - கட்டி, இயல் அணிப் பொலிந்த - இயல்பாக அழகாக பொலிந்த, ஈகை - பொன், வான் கழல் - உயர்ந்த வீரக்கழல், துயல்வருந்தொறும் - அசையும் தோறும், திருந்தடி- திருத்தமான அடிகள், கலாவ - உயர்ந்தும் தாழ்ந்தும் அசைய