குறிஞ்சிப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

மலைபடுகடாம்

சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.

திருமுருகாற்றுப்படை

பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்

பொருநராற்றுப்படை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

சிறுபாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

பெரும்பாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

முல்லைப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

மதுரைக்காஞ்சி

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

நெடுநல்வாடை

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பட்டினப்பாலை

பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

குறிஞ்சிப்பாட்டு


பாறையில் மலர் குவித்த பாவையர்

பாடல் வரிகள்:- 061 - 098

............................... வள் இதழ்
ஒண் செங்காந்தள், ஆம்பல், அனிச்சம்
தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி,
செங்கொடுவேரி, தேமா, மணிச்சிகை,
உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம், . . . .[65]

எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம்
வடவனம், வாகை, வான் பூங் குடசம்,
எருவை, செருவிளை, மணிப்பூங் கருவிளை,
பயினி, வானி, பல்லிணர்க் குரவம்,
பசும்பிடி, வகுளம், பல்லிணர்க் காயா, . . . .[70]

விரி மலர் ஆவிரை, வேரல், சூரல்,
குரீஇப் பூளை, குறுநறுங்கண்ணி,
குருகிலை, மருதம், விரிபூங் கோங்கம்,
போங்கம், திலகம், தேங்கமழ் பாதிரி,
செருந்தி, அதிரல், பெருந்தண் சண்பகம், . . . .[75]

கரந்தை, குளவி, கடிகமழ் கலிமாத்
தில்லை, பாலை, கல்இவர் முல்லை,
குல்லை, பிடவம், சிறுமாரோடம்,
வாழை, வள்ளி, நீள் நறு நெய்தல்
தாழை, தளவம், முள் தாள் தாமரை . . . .[80]

ஞாழல், மௌவல், நறுந்தண் கொகுடி,
சேடல், செம்மல், சிறுசெங்குரலி
கோடல், கைதை, கொங்கு முதிர் நறுவழை,
காஞ்சி, மணிக்குலைக் கள் கமழ் நெய்தல்,
பாங்கர், மராஅம், பல்பூந் தணக்கம், . . . .[85]

ஈங்கை, இலவம், தூங்கு இணர்க் கொன்றை,
அடும்பு, அமர் ஆத்தி, நெடுங்கொடி அவரை,
பகன்றை, பலாசம், பல்பூம் பிண்டி,
வஞ்சி, பித்திகம், சிந்து வாரம்,
தும்பை, துழாஅய் சுடர்ப்பூந் தோன்றி, . . . .[90]

நந்தி, நறவம், நறும் புன்னாகம்,
பாரம், பீரம், பைங்குருக்கத்தி,
ஆரம், காழ்வை, கடிஇரும் புன்னை,
நரந்தம், நாகம், நள்ளிருள்நாறி,
மாஇருங் குருந்தும், வேங்கையும் பிறவும் . . . .[95]

அரக்கு விரிந்தன்ன பரு ஏர் அம் புழகுடன்
மால் அங்கு உடைய மலிவனம் மறுகி
வான்கண் கழீஇய அகல் அறைக் குவைஇ . . . .[61 - 98]

பொருளுரை:

அரக்கை விரித்தாற்போல் உள்ள பருத்த அழகிய மலை எருக்கம்பூவுடன், பிற மலர்களின் அழகிலும் மயங்கியதால், விருப்பத்துடன் திரிந்து அவற்றைப் பறித்து, மழை பெய்து கழுவிய அகன்ற பாறையில் குவித்தோம். இந்த மலர்கள் - பெரிய இதழுடைய ஒளியுடைய செங்காந்தள், ஆம்பல், அனிச்சம், குளிர்ந்த குளத்தின் குவளை, குறிஞ்சி, வெட்சி, செங்கொடுவேரி, தேமா, மணிச்சிகை, தனக்கு உரித்தாக நாறும் விரிந்த கொத்துக்களையுடைய உந்தூழ், கூவிளம், தீயைப் போன்ற எறுழம், சுள்ளி, கூவிரம், வடவனம், வாகை, வான் பூங் குடசம், எருவை, செருவிளை, மணிப்பூங் கருவிளை, பயினி, வானி, பல கொத்துக்களையுடைய குரவம், பசும்பிடி, வகுளம், பல கொத்துக்களையுடைய காயா, விரிந்த மலராகிய ஆவிரை, வேரல், சூரல், குரீஇப் பூளை, குறுநறுங்கண்ணி, குருகிலை, மருதம், விரிபூங் கோங்கம், போங்கம், திலகம், தேனின் மணத்தையுடைய பாதிரி, செருந்தி, அதிரல், பெரிதும் குளிர்ச்சியுடைய சண்பகம், கரந்தை, குளவி, நறுமணம் கமழும் மா, தில்லை, பாலை, பாறைகளில் படர்ந்த குல்லை, பிடவம், சிறுமாரோடம், வாழை, வள்ளி, நீண்ட நறுமணமான நெய்தல், தாழை, தளவம், முள்ளுடைய காம்பையுடைய தாமரை, ஞாழல், மௌவல், நறுமணமான குளிர்ந்த கொகுடி, சேடல், செம்மல், சிறுசெங்குரலி, கோடல், கைதை, கொங்கு முதிர் நறுவழை, காஞ்சி, மணிக்குலைக் கள் கமழ் நெய்தல், பாங்கர், மராஅம், பல பூக்களையுடைய தணக்கம், ஈங்கை, இலவம், தொங்கும் கொத்துக்களையுடைய கொன்றை, அடும்பு, அமர் ஆத்தி, நெடுங்கொடி அவரை, பகன்றை, பலாசம், பல பூக்களையுடைய பிண்டி, வஞ்சி, பித்திகம், சிந்து வாரம், தும்பை, துழாஅய், சுடர்ப்பூந் தோன்றி, நந்தி, நறவம், நறும் புன்னாகம், பாரம், பீரம், பைங்குருக்கத்தி, ஆரம், காழ்வை, கடிஇரும் புன்னை, நரந்தம், நாகம், நள்ளிருள்நாறி, கருமையான பெரிய குருந்தும், வேங்கையும் பிறவும்,

சொற்பொருள்:

1. செங்காந்தள், 2. ஆம்பல் - அல்லி, 3. அனிச்சம், 4. குவளை, 5. குறிஞ்சி, 6. வெட்சி, 7. செங்கொடுவேரி, 8. தேமா - மாமரம், 9. மணிச்சிகை, 10. உந்தூழ் - பெருமூங்கில், 11. கூவிளம் - வில்வம் மரம், 12. எறுழம்பூ, 13. சுள்ளி, 14. கூவிரம், 15. வடவனம், 16. வாகை - மரம், 17. குடசம், 18. எருவை - நாணல், 19. செறுவிளை, 20. கருவிளம், 21. பயினி, 22. வானி, 23. குரவம், 24. பசும்பிடி - பச்சிலை மரம், 25. வகுளம் - மகிழ் மரம், 26. காயா - காசாமரம், 27. ஆவிரை - செடி, 28. வேரல் - சிறுமூங்கில், 29. சூரல் - சூரை செடி, 30. குரீஇப்பூளை, சிறுப் பூளை - களை, 31. குறுநறுங்கண்ணி - குன்றி, குன்னி முத்து, 32. குருகிலை, 33. மருதம் - மருதமரம், நீர்மருது, கருமருது, 34. கோங்கம் - இலவு மரம், 35. போங்கம் - மரம், 36. திலகம், 37. பாதிரி - மரம், 38. செருந்தி - மரம், 39. அதிரல் - மல்லிகைவகை, 40. சண்பகம் - மரம், 41. கரந்தை, 42. குளவி - பன்னீர் பூ, மரமல்லிகை, 43. மா - மாமரம், 44. தில்லை - மரம், 45. பாலை, 46. முல்லை, 47. கஞ்சங்குல்லை, 48. பிடவம், 49. சிறுமோரோடம், செங்கருங்காலி, 50. வாழை, 51. வள்ளி - கிழங்கு கொடி, 52. நெய்தல், 53. தாழை, 54. தளவம் - மஞ்சள் முல்லை, 55. தாமரை, 56. ஞாழல் - புலிநகக்கொன்றை, 57. மௌவல், 58. கொகுடி - முல்லைக்கொடி வகை, 59. சேடல் - பவளமல்லிகை, 60. செம்மல் - சாதிப்பூ, முல்லைப்பூ வகை, 61. சிறுசெங்குரலி, 62. கோடல் - வெண் காந்தள், 63. கைதை - தாழ், தாழம்பூ, 64. வழை - சுரபுன்னை, 65. காஞ்சி - பூவரச மரம், 66. கருங்குவளை - மணிக் குலை, குவளை வகை, 67. பாங்கர் - ஓமை, உவாமரம், 68. மரவம் - வெண்கடம்பு, 69. தணக்கம் - நுணா என்னுங் கொடி, 70. ஈங்கை - ஈங்கு செடி, 71. இலவம் - மரம், 72. கொன்றை - சரக்கொன்றை, 73, அடும்பு - கொடி, 74. ஆத்தி - மரம், 75. அவரை - கொடி, 76. பகன்றை - சிவதை கொடி, 77. பலாசம் - புரசமரம், 78. பிண்டி, 79. வஞ்சி, இலுப்பை மரம், 80. பித்திகம் - பித்திகை, 81. சிந்துவாரம் - கருநொச்சி, 82. தும்பை - செடி, 83. துழாய், 84. தோன்றி - செங்காந்தள், 85. நந்தி - நந்தியாவட்டம், 86. நறவம் - நறுமணக்கொடி, 87. புன்னாகம் - சிறு மரம், 88. பாரம் - பருத்தி செடி, 89. பீரம் - பீர்க்கு, 90. குருக்கத்தி - மாதவிக்கொடி, 91. ஆரம் - சந்தனம், 92. காழ்வை - அகில், 93. புன்னை - மரம், 94. நரந்தம் - நாரத்தை, 95. நாகப்பூ, 96. நள்ளிருணாறி - இருவாட்சி, 97. குருந்தம் - புனவெலுமிச்சை, 8. வேங்கை, 99. புழகு - அரக்கு விரிந்தன்ன - அரக்கை விரித்தாற்போல், பரு ஏர் அம் புழகுடன் - பருத்த அழகிய மலை எருக்கம்பூவுடன், மால் அங்கு உடைய - நாங்கள் மயங்கினோம், மலிவனம் - அவா மிகுந்து, மறுகி - திரிந்து (பறித்து), வான்கண் கழீஇய - மழை பெய்து கழுவிய (கழீஇய - சொல்லிசை அளபெடை), அகல் அறை - அகன்ற பாறை, குவைஇ - குவித்து (சொல்லிசை அளபெடை),