குறிஞ்சிப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
மலைபடுகடாம்
சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.
திருமுருகாற்றுப்படை
பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்
பொருநராற்றுப்படை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
சிறுபாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
பெரும்பாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
முல்லைப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
மதுரைக்காஞ்சி
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
நெடுநல்வாடை
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பட்டினப்பாலை
பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
குறிஞ்சிப்பாட்டு

மழை பொழிந்த நண்பகல் நேரம்
பாடல் வரிகள்:- 046 - 053
நிறை இரும் பெளவம் குறைபட முகந்து கொண்டு
அகல் இரு வானத்து வீசு வளி கலாவலின்,
முரசு அதிர்ந்தன்ன இன் குரல் ஏற்றொடு,
நிரை செலல் நிவப்பின் கொண்மூ மயங்கி, . . . .[50]
இன்னிசை முரசின் சுடர்ப் பூண் சேஎய்
ஒன்னார்க்கு ஏந்திய இலங்கு இலை எஃகின
மின் மயங்கு கருவிய கல் மிசைப் பொழிந்தென, . . . .[46 - 53]
நிறையிரும் பௌவங் குறைபட முகந்துகொண்
டகலிரு வானத்து வீசுவளி கலாவலின்
முரசதிர்ந் தன்ன வின்குர லேற்றொடு
நிரைசெல னிவப்பிற் கொண்மூ மயங்கி . . . .[50]
யின்னிசை முரசிற் சுடர்ப்பூட் சேஎ
யொன்னார்க் கேந்திய விலங்கிலை யெஃகின்
மின்மயங்கு கருவிய கன்மிசைப் பொழி்ந்தென
பொருளுரை:
வானத்தில் பறக்கும் பறவைகள் தாங்கள் விரும்பும் கூடுகளுக்குச் செல்லுமாறு, நீர் நிறைந்த பெரிய கடல் குறையுமாறு, முகில் கூட்டங்கள் நீரை அள்ளிக் கொண்டு, அகன்ற வானத்தில் வீசுகின்ற காற்றுடன் கலப்பதால், முரசு அதிர்ந்தாற்போன்ற இனிய குரலை உடைய இடியுடன் கூடி வரிசையாக மேலே சென்று கலங்கி, இனிய இசையை உடைய முரசினையும் ஒளியுடைய அணிகலன்களையும் உடைய முருகன், பகைவர்களைக் கொல்லும்பொருட்டு, கையில் கொண்ட விளங்கும் இலையையுடைய வேல் ஆயுதத்தைப் போன்று உள்ள மின்னலுடனும் இடியுடனும் கூடிய தொகுதியுடையதாக, மலை மீது பொழிந்தன.
குறிப்பு:
கருவிய (53) - இடி மின்னல் முதலிய தொகுதிகளையுடைய முகில்கள். கருவி - கருவி தொகுதி (தொல்காப்பியம், உரியியல் 50).
சொற்பொருள்:
விசும்பு ஆடு பறவை - வானத்தில் பறக்கும் பறவைகள், வீழ் பதிப் படர - தாங்கள் விரும்பும் கூடுகளுக்குச் செல்ல, நிறை இரும் பெளவம் - நிறைந்த பெரிய கடல், குறைபட முகந்து கொண்டு - குறையுமாறு நீரை அள்ளிக் கொண்டு, அகல் இரு வானத்து - அகன்ற வானத்தில், வீசு வளி - வீசுகின்ற காற்று, கலாவலின் - கலப்பதால், முரசு அதிர்ந்தன்ன - முரசு அதிர்ந்தாற்போல், இன் குரல் - இனிய குரல், ஏற்றொடு - இடியுடன், நிரை செலல் - வரிசையாக செல்லல், நிவப்பின் - மேலே, கொண்மூ - முகில், மயங்கி - கலங்கி, இன்னிசை முரசின் - இனிய இசையை உடைய முரசினையும், சுடர்ப்பூண் - ஒளியுடைய அணிகலன்கள், சேஎய் - முருகன், ஒன்னார்க்கு - பகைவர்க்கு, ஏந்திய - கையில் கொண்ட, இலங்கு இலை எஃகின் - விளங்கும் இலையையுடைய வேலைப் போன்று (எஃகின் - இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), மின் மயங்கு கருவிய - மின்னலுடனும் இடியுடனும் கூடிய தொகுதியுடையதாக, கல் மிசைப் பொழிந்தென - மலை மீது பொழிந்ததால்