குறிஞ்சிப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

மலைபடுகடாம்

சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.

திருமுருகாற்றுப்படை

பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்

பொருநராற்றுப்படை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

சிறுபாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

பெரும்பாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

முல்லைப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

மதுரைக்காஞ்சி

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

நெடுநல்வாடை

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பட்டினப்பாலை

பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

குறிஞ்சிப்பாட்டு


அறம் உரைக்கும் தலைவியின் ஆற்றொணாத் துன்பம்

பாடல் வரிகள்:- 013 - 026

“முத்தினும், மணியினும், பொன்னினும், அத்துணை
நேர்வருங் குரைய கலங்கெடின் புணரும்,
சால்பும், வியப்பும், இயல்பும் குன்றின், . . . .[15]

மாசறக் கழீஇ வயங்கு புகழ் நிறுத்தல்
ஆசறு காட்சி ஐயர்க்கும் அந்நிலை
எளிய என்னார் தொல் மருங்கு அறிஞர்,
மாதரும் மடனும் ஓராங்குத் தணப்ப
நெடுந்தேர் எந்தை அருங்கடி நீவி, . . . .[20]

இருவேம் ஆய்ந்த மன்றல் இதுவென
நாம் அறி உறாலின் பழியும் உண்டோ?
ஆற்றின் வாரார் ஆயினும் ஆற்ற
ஏனை உலகத்தும் இயைவதால் நமக்கென”,
மான் அமர் நோக்கம் கலங்கிக் கையற்று, . . . .[25]

ஆனாச் சிறுமையள் இவளும் தேம்பும் . . . .[13 - 26]

பொருளுரை:

என் தோழி கூறுகின்றாள், “முத்தினாலும் மணியினாலும் பொன்னினாலும், அளவுக்கு ஏற்றபடி இணைத்து இயற்றப்பட்ட அணிகலன்கள் பாழ்பட்டால், அவற்றைச் சேர்த்து இணைக்க முடியும். சான்றான்மையும் பெருமையும் ஒழுக்கமும் கெட்டால், மாசற்ற விளங்கும் புகழை பழைய நிலைக்குக் கொண்டு வருதல், குற்றமில்லாத காட்சியை உடைய சான்றோர்க்கும் அது எளிமையான செயல் என்று கூற மாட்டார்கள், பழைய நூல்களை அறிந்த அறிஞர்கள். பெற்றோரும் அவர்கள் தேர்ந்தெடுப்பவர்க்கு என்னைக் கொடுக்க எண்ணுவதையும் என்னுடைய மடமையும், ஒரு சேரக் கெட, உயர்ந்த தேரை உடைய என் தந்தையின் அரிய காவலைக் கடந்து, இருவரும் தேர்ந்த, களவு மணம் இது என நாம் தாயிடம் கூறுமிடத்து, பழியும் உண்டோ? அறிவுறுத்திய பின்னர், இசைந்து வாராது இருப்பினும், பொறுத்திருக்க, இம்மை மாறி மறுமை அடைந்த பொழுது நான் அடைய வேண்டும்”.

மானைப் போன்ற அமர்ந்த நோக்கத்தை உடைய என் தோழி வருந்தி, செயலற்று, ஆற்ற முடியாத நோய் உடையவளாகத் தேம்புகின்றாள்.

குறிப்பு:

ஆய்ந்த மன்றல் (21) - பொ. வே. சோமசுந்தரனார் உரை - யானும் தலைவனுமே தேர்ந்துகொண்ட களவு மணம், நச்சினார்க்கினியர் உரை - இந்த மணம் தலைவனும் யானும் பெருமையும் உரனும் அச்சமும் நாணும் நுணுகிய நிலையால் பிறந்த கந்தருவ மணமென்று.

சொற்பொருள்:

முத்தினும் மணியினும் பொன்னினும் - முத்தினாலும் மணியினாலும் பொன்னினாலும், அத்துணை நேர்வரும் - அளவுக்கு ஏற்றபடி இணைத்து இயற்றுதலால் தோன்றும், குரைய - ஓர் அசை, கலங்கெடின் - அணிகலன் பாழ்பட்டால், புணரும் - சேர்க்க முடியும், சால்பும் வியப்பும் இயல்பும் குன்றின் - சான்றான்மையும் பெருமையும் ஒழுக்கமும் கெட்டால், மாசறக் கழீஇய - அழுக்கு இல்லாது கழுவி, வயங்கு புகழ் - விளங்கும் புகழ், அந்நிலை நிறுத்தல் - பழைய நிலை உண்டாக நிற்கச் செய்தல், ஆசு அறு காட்சி ஐயர்க்கும் - குற்றமில்லாத காட்சியை உடைய சான்றோர்க்கும், அந்நிலை எளிய என்னார் - அது எளிமையான செயல் என்று கூற மாட்டார்கள், தொல் மருங்கு அறிஞர் - பழைய நூல்களை அறிந்த அறிஞர்கள், மாதரும் - பெற்றோரும், மடனும் - மடமையும், ஓராங்கு - ஒன்று சேர, தணப்ப - கெட, நெடுந்தேர் எந்தை - உயர்ந்த தேரை உடைய என் தந்தை, அருங்கடி நீவி - அரிய காவலைக் கடந்து, இருவேம் ஆய்ந்த - இருவரும் தேர்ந்த, மன்றல் - களவு மணம், இது என - இது என, நாம் அறி உறாலின் - நாம் தாயிடம் கூறுமிடத்து, பழியும் உண்டோ - பழியும் உண்டோ, ஆற்றின் - அறிவுறுத்திய பின்னர், வாரார் ஆயினும் - இசைந்து வாராது இருப்பினும், ஆற்ற - பொறுத்திருக்க, ஏனை உலகத்தும் இயைவதால் நமக்கென - இம்மை மாறி மறுமை அடைந்த பொழுது தான் நமக்கு எய்துவதாக உள்ளது (இயைவதால் - ஆல் அசை நிலை), மான் அமர் நோக்கம் - மானைப் போன்ற அமர்ந்த நோக்கம், கலங்கிக் கையற்று - வருந்தி செயலற்று, ஆனா சிறுமையள் - ஆற்ற முடியாத நோய் உடையவள், இவளும் தேம்பும் - என் தோழி தேம்புகின்றாள்