குறிஞ்சிப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
மலைபடுகடாம்
சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.
திருமுருகாற்றுப்படை
பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்
பொருநராற்றுப்படை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
சிறுபாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
பெரும்பாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
முல்லைப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
மதுரைக்காஞ்சி
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
நெடுநல்வாடை
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பட்டினப்பாலை
பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
குறிஞ்சிப்பாட்டு

தோழி செவிலியை அணுகி வேண்டுதல்
பாடல் வரிகள்:- 001 - 008
ஒலி மென் கூந்தல் என் தோழி மேனி
விறல் இழை நெகிழ்த்த வீவு அரும் கடு நோய்,
அகலுள் ஆங்கண் அறியுநர் வினாயும்,
பரவியும், தொழுதும், விரவு மலர் தூயும், . . . .[5]
வேறு பல் உருவில் கடவுள் பேணி,
நறையும் விரையும் ஓச்சியும், அலவுற்று,
எய்யா மையலை, நீயும் வருந்துதி . . . .[1 - 8]
லொலிமென் கூந்தலென் றோழி மேனி
விறலிழை நெகிழ்த்த வீவருங் கடுநோ
யகலு ளாங்க ணறியுநர் வினாயும்
பரவியுந் தொழுதும் விரவுமலர் தூயும் . . . .[05]
வேறுபல் லுருவிற் கடவுட் பேணி
நறையும் விரையு மோச்சியு மலவுற்
றெய்யா மையலை நீயும் வருந்துதி
பொருளுரை:
தாயே நீ நீடு வாழ்வாயாக! நான் கூறுவதைக் கேட்பாயாக! ஒளியுடைய நெற்றியையும் அடர்ந்த மென்மையான கூந்தலையும் உடைய என் தோழியின் மேனியில் அணிந்த சிறப்பான அணிகலன்களை நழுவச் செய்த அழிக்க முடியாத கொடூர நோயைக் கண்டு, அகன்ற ஊரில் உள்ள, நடக்கப்போவதை அறிவிக்கும் கட்டுவிச்சி வேலன் முதலியோரைக் கேட்டும், வெவ்வேறு உருவங்களில் உள்ள கடவுளைப் பேணியும், பாராட்டியும், வணங்கியும், பல நிற மலர்களைக் கலந்து தூவியும், அகில் முதலிய நறுமணப் புகையையும், சந்தனம் முதலிய நறுமணப் பொருட்களையும் செலுத்தி, கலக்கமுற்று, காரணம் அறியாது, மயக்கமுடையவளாக நீயும் வருந்துகின்றாய்.
குறிப்பு:
வேறு பல் உருவில் கடவுள் பேணி (6) - நச்சினார்க்கினியர் உரை - வேறுபட்ட வடிவங்களையுடைய பல தெய்வங்களை, பொ. வே. சோமசுந்தரனார் உரை - பலவாகிய ஒன்றனை ஒன்றொவ்வாது வேறுபட்ட வடிவங்களில் எல்லாம் உள்ளுறையும் இறைவன். அன்னை வருந்துதல்: அகநானூறு 156 - கள்ளும் கண்ணியும் கையுறையாக நிலைக் கோட்டு வெள்ளை நாள் செவிக் கிடாஅய் நிலைத் துறைக் கடவுட்கு உளப்பட ஓச்சித் தணி மருங்கு அறியாள் யாய் அழ மணி மருள் மேனி பொன் நிறம் கொளலே. அகநானூறு 48 -அன்னாய் வாழி வேண்டு அன்னை நின் மகள் பாலும் உண்ணாள் பழங்கண் கொண்டு நனி பசந்தனள் என வினவுதி, நற்றிணை 351 - இளமை தீர்ந்தனள் இவள் என வள மனை அருங்கடிப்படுத்தனை ஆயினும் சிறந்து இவள் பசந்தனள் என்பது உணராய் பல் நாள் எவ்வ நெஞ்சமொடு தெய்வம் பேணி வருந்தல் வாழி வேண்டு அன்னை.
சொற்பொருள்:
அன்னாய் வாழி - தாயே நீ நீடு வாழ்வாயாக, வேண்டு அன்னை - நான் கூறுவதைக் கேட்பாயாக, ஒள் நுதல் - ஒளியுடைய நெற்றி, ஒலி மென் கூந்தல் - அடர்ந்த மென்மையான கூந்தல், என் தோழி மேனி - என் தோழியின் மேனி, விறல் இழை - சிறப்பான அணிகலன்கள், நெகிழ்த்த - நழுவச் செய்த, வீவு அரும் கடு நோய் - அழிக்க முடியாத கொடூர நோய், அகலுள் - அகன்ற ஊரில், ஆங்கண் - அங்கே, அறியுநர் - நடக்கப்போவதை அறிபவர்கள் (கட்டுவிச்சி வேலன் முதலியோர்), வினாயும் - கேட்டும், பரவியும் - பாராட்டியும், தொழுதும் - வணங்கியும், விரவு மலர் தூயும் - பல நிற மலர்களைக் கலந்து தூவியும், வேறு பல் உருவில் கடவுள் பேணி - வேறு பல உருவங்களில் உள்ள கடவுளைப் பேணி, நறையும் - அகில் முதலிய நறுமணப் புகையும், விரையும் - சந்தனம் முதலிய நறுமணப் பொருட்களும், ஓச்சியும் - செலுத்தியும், அலவுற்று - கலக்கமுற்று, எய்யா - காரணம் அறியாமை, மையலை - மயக்கமுடையாய், நீயும் - நீயும், வருந்துதி - வருந்துகின்றாய்