நாலடியார்

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

நான்மணிக்கடிகை

நான்மணிக்கடிகை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள், ஒன்று. இது ஒரு நீதி நூல். விளம்பி நாகனார் என்னும்

இனியவை நாற்பது

பூதஞ்சேந்தனார் இயற்றியது இனியவை நாற்பது. 40 வெண்பாக்களைக் கொண்டது. நான்கு பாடல்களில் இன்பம் தருவன

இன்னா நாற்பது

இன்னா நாற்பதில் கடவுள் வாழ்த்து நீங்கலாக நாற்பது பாடல்கள் உள்ளன. ஒவ்வொரு பாடலிலும் நான்கு கருத்துக்களைக் கொண்டு

திரிகடுகம்

திரிகடுகம் என்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். இந்நூல் நல்லாதனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகும். திரிகடுகம் என்பது

ஆசாரக் கோவை

மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத ஆசாரங்களை அதாவது ஒழுக்கங்களை எடுத்துக்கூறும் ஒரு நூல் ஆசாரக்கோவை. பண்டைக்காலத்

சிறுபஞ்சமூலம்

சிறுபஞ்சமூலம் என்பது ஐந்து சிறிய வேர்கள் என்று பொருள்படும். அவையாவன சிறுவழுதுணை வேர், நெருஞ்சி வேர், சிறுமல்லி வேர், பெருமல்லி வேர்

முதுமொழிக்காஞ்சி

முதுமொழி என்பது பழமொழி என்னும் சொற்பொருளோடு தொடர்புடையது. காஞ்சி என்பது மகளிர் இடையில் அணியும் ஒருவகை அணிகலக் கோவையையும்

பழமொழி நானூறு

பழமொழி நானூறு சங்கம் மருவிய காலத் தமிழ் நூல் தொகுப்பான பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. அதன் சிறப்புப் பாயிரத்தையும், கடவுள்

ஏலாதி

'ஏலாதி' என மருத்துவ நூல்களில் கூறப்படுவது ஏலம் ஆதியான ஆறு பொருள்கள் சேர்ந்த ஒரு வகைச் சூர்ணம். ஏலம் ஒரு பங்கு, இலவங்கப்பட்டை இரண்டு பங்கு,

திருக்குறள்

திருக்குறள் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் வரிசையில் "முப்பால்" என்னும் பெயரோடு விளங்குகின்றது. அறம், பொருள், இன்பம்

கார் நாற்பது

கார் நாற்பது அகப்பொருள் பற்றிய கீழ்க்கணக்கு நூல்களில் சிறியது. கார் காலத்தின் தோற்றம் ஒவ்வொரு செய்யுளிலும் கூறப்படுகின்றமையாலும்,

ஐந்திணை ஐம்பது

'ஐந்திணை ஐம்பது' முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல் என்ற ஐந்திணைக்கும் பத்துப் பாடல்களைப் பெற்றுள்ளமையால் 'ஐந்திணை ஐம்பது' எனப் பெயர் பெற்றது.

திணைமொழி ஐம்பது

திணைமொழி ஐம்பது குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்னும் ஐந்திணைகளுக்கும் பத்துப் பாடல்கள் வீதம் உள்ளன. அதனால் இந்நூல்

ஐந்திணை எழுபது

ஐந்திணை எழுபது ஐந்திணைகளில் ஒவ்வொன்றிற்கும் பதினான்கு பாடல்களைக் கொண்டு, எழுபது பாடல்களில் இந்நூல் அமைந்துள்ளது. இந் நூலின் முதலில் விநாயகரைக்

திணைமாலை நூற்றைம்பது

திணைமாலை நூற்றைம்பது பண்டைத் தமிழ் நூற் தொகுப்பான பதினெண்கீழ்க்கணக்கில் அடங்கியது. 153 பாடல்களைக் கொண்ட இது ஒரு அகப்பொருள் சார்ந்த நூல்.

கைந்நிலை

'கை' என்பது ஒழுக்கம் என்றும் பொருள்படும். ஐந்திணை ஒழுக்கம் பற்றியதே இந்நூலாகும். ஒவ்வொரு திணைக்கும் பன்னிரண்டு பாடலாக அறுபது பாடல்கள் இந் நூலில் உள்ளன.

களவழி நாற்பது

களவழி நாற்பது போர்க்களம் பற்றிய பாடல்களின் தொகுதியாகும். இந் நூலில் உள்ள பாடல்கள் எல்லாம் களத்து என்ற சொல்லை இறுதியில் கொண்டு முடிதல் கவனிக்கத் தக்கது.

பொருட்பால்

பொதுவியல்


கயமை

பாடல் : 011
ஆர்த்த அறிவினர் ஆண்டிளையர் ஆயினும்
காத்தோம்பித் தம்மை அடக்குப மூத்தொறூஉம்
தீத்தொழிலே கன்றித் திரிதந்து எருவைபோல்
போத்தறார் புல்லறிவி னார். 351

பொருளுரை:

நிறைந்த அறிவுள்ளவர், வயதிலே இளையராயினும் தம் புலன்களை அடக்கித் தீய நெறி செல்லாது ஒழுக்கத்துடன் இருப்பர். ஆனால், புல்லறிவினையுடைய கயவரோ வயது முதிருந்தோறும் தீய தொழிலிலேயே உழன்று கழுகு போல் திரிந்து, குற்றம் நீங்கப் பெறார். (கழுகு பிணத்தை விரும்புவது போல், கயவர் தீயவை விரும்புவார் என்பது கருத்து).

பாடல் : 012
செழும்பெரும் பொய்கையுள் வாழினும் என்றும்
வழும்பறுக்க கில்லாவாம் தேரை; - வழும்பில்சீர்
நூல்கற்றக் கண்ணும் நுணுக்கமொன்று இல்லாதார்
தேர்கிற்கும் பற்றி அரிது. 352

பொருளுரை:

நீர் நிறைந்த பெரிய குளத்திலே வாழ்ந்தாலும் தவளைகள் தம் மேல் உள்ள வழுவழுப்பான அழுக்கை நீக்கிக் கொள்ளமாட்டா. அதுபோல, குற்றமில்லாத சிறந்த நூல்களைக் கற்றாலும், நுண்ணறிவு சிறிதும் இல்லாதவர்கள், அந்நூல்களின் பொருளை உணர்ந்து கொள்ளமாட்டார்கள்.

பாடல் : 013
கணமலை நன்னாட! கண்ணின்று ஒருவர்
குணனேயும் கூறற்கு அரிதால் - குணன் அழுங்கக்
குற்றம் உழைநின்று கூறும் சிறியவர்கட்கு
எற்றால் இயன்றதோ நா. 353

பொருளுரை:

நெருங்கிய மலைகள் உள்ள நாட்டுக்கு அரசனே! ஒருவர் எதிரில் நின்று, அவரது குணங்களைக் கூறுதற்கும் நா எழுதல் அரிதாகும். அப்படியிருக்க அவர் குணம் கெடும்படி குற்றத்தையே எடுத்துக்கூறும் கயவரின் நாக்கு எப்படிப்பட்ட பொருளால் (இரும்பால் அல்லது கல்லால்) செய்யப்பட்டதோ?

பாடல் : 014
கோடேந்து அகல் அல்குல் பெண்டிதர்தம் பெண்ணீர்மை
சேடியர் போலச் செயல்தேற்றார்; - கூடிப்
புதுப்பெருக்கம் போலத்தம் பெண்ணீர்மை காட்டி
மதித்திறப்பர் மற்றை யவர். 354

பொருளுரை:

பக்கங்கள் உயர்ந்து அகன்ற அல்குலையுடைய நற்குல மகளிர் விலைமகளிரைப் போல் தமது பெண் தன்மையை ஒப்பனை செய்துகொள்ள அறியார். ஆனால் பொது மகளிரோ புதிய வெள்ளம் போல் ஆடவருடன் கூடிக் கலந்து தமது பெண்தன்மை மேம்படப் புனைந்து காட்டி அவர்களிடம் உள்ள பொருளைக் கவர்ந்து கொண்டு விலகிச் செல்வர். (கயவர் வேசியர் போல் வஞ்சித்துப் பொருள் கொள்வர் என்பது கருத்து).

பாடல் : 015
தளிர்மேலே நிற்பினும் தட்டாமற் செல்லா
உளிநீராம் மாதோ கயவர்; - அளிநீரார்க்கு
என்னானுஞ் செய்யார் எனைத்தானும் செய்பவே
இன்னாங்கு செய்வார்ப் பெறின். 355

பொருளுரை:

தளிர்மேலே நின்றாலும் ஒருவர் (கொட்டாப்புளி அல்லது மரத்தாலான சுத்தியல்) தட்டினாலன்றி, அத்தளிரைத் துளைக்காத உளி போல்வர் கயவர். அவர்கள் கருணை இயல்புடையார்க்கு ஓர் உதவியும் செய்யார்; தம்மைத் தாக்கித் துன்புறுத்துவார்க்கு எல்லா உதவிகளையும் செய்வர்.

பாடல் : 016
மலைநலம் உள்ளும் குறவன்; பயந்த
விளைநிலம் உள்ளும் உழவன்; சிறந்தொருவர்
செய்நன்று உள்ளுவர் சான்றோர்; கயந்தன்னை
வைததை உள்ளி விடும். 356

பொருளுரை:

குறவன் தான் வாழும் மலை வளத்தை நினைந்து மகிழ்வான்; உழவன் தனக்குப் பயன் தந்த விளை நிலத்தை நினைந்து உள்ளம் உவப்பான்; சான்றோர், தமக்குப் பிறர் செய்த நன்றியை நினைந்து இன்புறுவர்; ஆனால் கயவனோ, தன்னை ஒருவன் இகழ்ந்ததையே நினைத்துப் பகை கொள்வான்.

பாடல் : 017
ஒருநன்றி செய்தவர்க்கு ஒன்றி எழுந்த
பிழைநூறுஞ் சான்றோர் பொறுப்பர்; - கயவர்க்கு
எழுநூறு நன்றிசெய்து ஒன்றுதீது ஆயின்
எழுநூறும் தீதாய் விடும். 357

பொருளுரை:

தமக்கு ஒரு நன்மை செய்தவர் தொடர்ந்து நூறு குற்றங்கள் செய்தாலும் சான்றோர் பொறுத்துக்கொள்வர். ஆனால் கயவர்க்கு எழுநூறு நன்மைகளைச் செய்து, தவறிப்போய் ஒன்று தீமையாய் நேர்ந்து விடினும், முன்செய்த எழுநூறு நன்மைகளும் தீமையாகவே ஆகிவிடும். (தீமையை மறப்பது சான்றோர் இயல்பு; நன்மையை மறப்பது கயவர் இயல்பு

பாடல் : 018
ஏட்டைப் பருவத்தும் இற்பிறந்தார் செய்வன
மோட்டிடத்தும் செய்யார் முழுமக்கள்; - கோட்டை
வயிரம் செறிப்பினும் வாட்கண்ணாய்! பன்றி
செயிர்வேழம் ஆகுதல் இன்று. 358

பொருளுரை:

வாள்போன்ற கண்ணையுடையளே! பன்றியின் கொம்பிலே, வயிரம் இழைத்த பூணினைப் பூட்டினாலும் அது சினம் மிக்க யானை ஆகிவிடாது. அதுபோல, வறுமையுற்ற காலத்தும் நற்குடிப் பிறந்தவர்கள் செய்யும் உதவிகளை, கயவர் தமக்கு மிகுந்த செல்வம் உண்டான காலத்தும் செய்யார். (மேலோர் இயல்பும் கயவர் இயல்பும் எப்போதும் மாறாதவை என்பது கருத்து).

பாடல் : 019
இன்றாதும் இந்நிலையே ஆதும் இனிச்சிறிது
நின்றாதும் என்று நினைத்திருந்து - ஒன்றி
உரையின் மகிழ்ந்துதம் உள்ளம்வே றாகி
மரையிலையின் மாய்ந்தார் பலர். 359

பொருளுரை:

இன்று செல்வம் உடையவர் ஆவோம்; இப்பொழுதே ஆவோம்; இன்னும் சில நாட்களில் ஆவோம்' எனச் சிந்தித்துக்கொண்டேயிருந்து, அப்படிச் சொல்வதிலே மகிழ்ந்து, அது நிறைவேறாத போது உள்ளம் உடைந்து, பின் தாமரை இலைபோல மாய்ந்தவர் பலராவர். (கயவர், கற்பனை உலகில் திரிந்து காலத்தை வீணாக்குவர்).

பாடல் : 020
நீருட் பிறந்து நிறம்பசிய தாயினும்
ஈரங் கிடையகத் தில்லாகும்; - ஓரும்
நிறைப்பெருஞ் செல்வத்து நின்றக் கடைத்தும்
அறைப் பெருங்கல் அன்னார் உடைத்து. 360

பொருளுரை:

நீரிலே தோன்றிப் பசுமை மிக்க நிறத்துடன் இருப்பினும், நெட்டியின் உள்ளே ஈரம் இல்லையாகும். அதுபோல நிறைந்த பெரும் செல்வத்திலே இருந்தாலும், பாறையாகிய பெரிய கல் போன்றவர்களை (ஈர நெஞ்சம் இல்லாதவர்கள்) இவ்வுலகம் பெற்றிருக்கிறது.