சிறுபாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

பொருநராற்றுப்படை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நெடுநல்வாடை

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

மதுரைக்காஞ்சி

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

மலைபடுகடாம்

சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.

திருமுருகாற்றுப்படை

பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்

பெரும்பாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

முல்லைப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

குறிஞ்சிப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

பட்டினப்பாலை

பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

சிறுபாணாற்றுப்படை


அழகு மிக்க விறலியருடன் இளைப்பாறும் இரவலன்

பாடல் வரிகள்:- 013 - 040

ஐது வீழ் இகு பெயல் அழகு கொண்டு அருளி,
நெய் கனிந்து இருளிய கதுப்பின், கதுப்பு என
மணிவயின் கலாபம் பரப்பி பலவுடன் . . . .[15]

மயில் மயில் குளிக்கும் சாயல், சாஅய்
உயங்கு நாய் நாவின் நல் எழில் அசைஇ,
வயங்கு இழை உலறிய அடியின் அடி, தொடர்ந்து
ஈர்ந்து நிலம் தோயும் இரும் பிடித் தடக் கையின்
சேர்ந்து உடன் செறிந்த குறங்கின், குறங்கு என . . . .[20]

மால் வரை ஒழுகிய வாழை, வாழைப்
பூ எனப் பொலிந்த ஓதி
நளிச்சினை வேங்கை நாள் மலர் நச்சி
களிச் சுரும்பு அரற்றும் சுணங்கின், சுணங்கு பிதிர்ந்து
யாணர்க் கோங்கின் அவிர் முகை எள்ளிப் . . . .[25]

பூண் அகத்து ஒடுங்கிய வெம்முலை, முலை என
வண்கோட் பெண்ணை வளர்த்த நுங்கின்
இன் சேறு இகுதரும் எயிற்றின், எயிறு என
குல்லை அம் புறவில் குவி முகை அவிழ்ந்த,
முல்லை சான்ற கற்பின், மெல் இயல், . . . .[30]

மட மான் நோக்கின், வாணுதல் விறலியர்

பொருளுரை:

பாலை நெடுவழியில் முல்லை சான்ற கற்பினளாகிய பாணனின் மனைவியும் செல்கிறாள். பாலை நிலத்து மரங்களில் இலைகள் உதிர்ந்து விட்டன. அவற்றின் அடியில் வரி வரியாகக் கிடக்கும் அருநிழலில் ஆங்காங்கே உட்கார்ந்து இளைப்பாறிய பின் செல்கிறாள்.

அவளது கூந்தல், மேனியின் சாயல், உள்ளங்கால், காலின் தொடை, தலையில் போட்டிருக்கும் ஓதிக் கொண்டை, மேனியின் பொலிவைக் காட்டும் பொன்னிறத் தேமல், மார்பகப் பெண்பாலுறுப்பு, பல் ஆகிய உறுப்புக்கள் பொலிவுடன் பூத்துக் குலுங்குவதால் அவள் மாரிக் காலத்து மழைத்துளி பட்டவுடன் பூத்துக் குலுங்கி மணக்கும் குல்லை என்னும் குட்டிப் பிலாத்திப் புதர்ச்செடி போல் பொலிவு பெற்றிருக்கிறாள்.

கதுப்பு – அவளது கூந்தலில் எண்ணெய் கனிந்துள்ளது. அதுபோலத் தூறல் மழையில் நனைந்தாடும் மயிலின் தோற்றத்தைத் தருகிறது.

சாயல் – மயில் தன் நீல நிறத் தோகையை விரித்துக்கொண்டு ஆடுவது போல் அவளது மேனியின் பொலிவழகு துவண்டு ஆடுகிறது. இவள் பெண்மயில். அது ஆண்மயில். எந்தச் சாயலழகு எந்தச் சாயலழகில் குளிக்கிறது என்று தெரியாத வியப்புநிலை அது.

அடி – சாயல் நிழலில் இளைப்பு வாங்கும் நாயின் நாக்கைப் போல் அவளது உள்ளங்கால், அழகு, அமைப்பு, மென்மை போன்றவற்றால் அவளது அடியானது நாயின் நாக்கைப் போல் இருந்தாலும், அவளது காலில் மருதாணி பூசி மலர்ந்து போய் இழைக்கோடுகள் இருப்பதால் இவளது அடியின் பொலிவுக்கு நாயின் நாக்கு ஈடாகாது.

குறங்கு – அவளது அடியிலிருந்து உயர்ந்து, பெண்யானையின் நிலத்தைத் தொடும் துதிக்கை போன்று அவளது தொடை இருக்கிறது. யானைக்குத் துதிக்கை ஒன்றுதான். இவளுக்கோ நெருக்கமான இரண்டு தொடைகள்.

ஓதி – அவளது தொடையைப் போல் மலைவாழைத் தண்டு இருக்கிறது. அந்த வாழையின் பூவைப்போல அவளது கொண்டை இருக்கிறது.

சுணங்கு – அவள் கொண்டை பூத்திருக்கும் கொத்துக் கொத்தாக வேங்கை பூத்திருக்கிறது. வேங்கை பூத்திருப்பது போல் அவள் முலைமுகத்தில் சுணங்குத் தேமல் பூத்திருக்கிறது. தேன் உண்ட வண்டுகள் களிப்பினால் தேமலையும் பூ என்று மயங்கி மொய்த்துத் தேன் இல்லாத்தால் அரற்றி ஓலமிடுகின்றன.

முலை – அவளது தேமல் போல் கோங்கமரம் புதிய பூவை அவிழ்த்து வைத்திருக்கிறது. கோங்கம் பூ மொட்டுப் போல் அவளுக்கு முலை.

பல் – அவளது முலையைப் போன்ற தேங்காயுடன் தென்னை நிமிர்ந்துள்ளது (அவளது முலையைப் போன்ற காயுடன் பனை பருவம் கொண்டுள்ளது). தேங்காய்க்குள்ளே இருக்கும் தேங்காயைப் போல் அவளுக்குப் பல். (பனை நுங்கு போல் பல்) இனிமையாலும் ஈரத்தாலும் இளந் தேங்காயும், பனை நுங்கும் அவளது பல்லை ஒத்திருந்தன.

குல்லை - அவளது பல்லைப் போல் குல்லை (குட்டிப் பிலாத்தி) பூத்திருக்கிறது.

முல்லை = கற்பு – மாரியின் மழைத்துளிக்கு மட்டுமே பூக்கும் குல்லை போல் முல்லை பூத்திருக்கிறது. முல்லை என்னும் காத்திருக்கும் கற்புநெறி கொண்டவள் பாணன் மனைவியாகிய விறலி.

நடை மெலிந்து அசைஇய நல்மென் சீறடி,
கல்லா இளையர் மெல்லத் தைவரப்
பொன் வார்ந்தன்ன புரியடங்கு நரம்பின்
இன்குரல் சீறியாழ் இடவயின் தழீஇ, . . . .[35]

நைவளம் பழுநிய நயந்தெரி பாலை
கைவல் பாண்மகன், கடன் அறிந்து இயக்க,
இயங்கா வையத்து வள்ளியோர் நசைஇ,
துனிகூர் எவ்வமொடு, துயர் ஆற்றுப்படுப்ப,
முனிவு இகந்து இருந்த, முதுவாய் இரவல . . . .[13 - 40]

பொருளுரை:

விறலியருக்கு மானைப்போல் மருண்டு பார்க்கும் கண் நடந்து நடந்து சோர்ந்து போயிருந்த அவர்களது சிறிய காலடிகளை இளைஞர்கள் தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். மேலும் பாண்மகன் தனது சீறியாழை மீட்டிப் பாடியும் விறலியரை மகிழ்வித்துக் கொண்டிருந்தான்.

அந்த யாழை அவன் தன் இடப்பக்கத் தோளில் மாட்டிக் கொண்டு மீட்டி இசைத்தான். பாலைப் பண்ணில் நைவளத் திற இசையைக் கூட்டிப் பாடினான். அப் பண்ணை மீட்டுவதில் அவன் கைத்திறம் பெற்றவன்.

வையம் என்னும் உலக வண்டி நாம் இயக்க இயங்காத வண்டி. இந்த வையத்தில் வள்ளல்களைப் பார்க்கும் ஆசையில் பாணன் சென்று கொண்டிருந்தான். உள்ளத்தில் இருக்கும் சலிப்பும், உடலை வாட்டும் எவ்வமும் (துன்பமும்) துயரமாக மாறிப் பிறர் கொடுப்பதை ஏற்கும்படி அவனை ஆளாக்கி வழி நடத்திக் கொண்டிருந்தன.