சிறுபாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
பொருநராற்றுப்படை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
நெடுநல்வாடை
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
மதுரைக்காஞ்சி
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
மலைபடுகடாம்
சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.
திருமுருகாற்றுப்படை
பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்
பெரும்பாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
முல்லைப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
குறிஞ்சிப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
பட்டினப்பாலை
பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
சிறுபாணாற்றுப்படை
எயிற்பட்டினத்தில் கிடைக்கும் பொருள்கள்
பாடல் வரிகள்:- 146 - 163
தலை நாள் செருந்தி தமனியம் மருட்டவும்,
கடுஞ்சூல் முண்டகம் கதிர் மணி கழாஅலவும்,
நெடுங்கால் புன்னை நித்திலம் வைப்பவும்,
கானல் வெண் மணல் கடல் உலாய் நிமிர்தர, . . . .[150]
பாடல் சான்ற நெய்தல் நெடு வழி
மணி நீர் வைப்பு மதிலொடு பெயரிய
பனி நீர்ப் படுவின் பட்டினம் படரின் . . . .[146 - 153]
தலைநாட் செருந்தி தமனிய மருட்டவுங்
கடுஞ்சூல் முண்டகங் கதிர்மணி கலாஅலவு
நெடுங்காற் புன்னை நித்திலம் வைப்பவுங்
கானல் வெண்மணற் கடலுலாய் நிமிர்தரப் . . . .[150]
பாடல் சான்ற நெய்த னெடுவழி
மணிநீர் வைப்பு மதிலொடு பெயரிய
பனிநீர்ப் படுவிற் பட்டினம் படரி
பொருளுரை:
நீங்கள் நல்லியக்கோடன் ஊருக்குச் செல்லும் வழியில் எயிற்பட்டினத்தின் வழியாகச் செல்ல வேண்டி இருக்கும். அதனை அடைய நெய்தல்நிலப் பெருவழியில் செல்ல வேண்டி வரும். அங்கே அலைமோதும் நீரில் தாழம்பூ அன்னப்பறவை போல் பூத்திருக்கும்.
அன்று பூத்த செருந்திப் பூக்கள் பொன் கொட்டிக் கிடப்பதுபோல் கிடந்து மருட்சியூட்டும்.
முண்டகப் ப்பூக்களைக் கதிர்மணிகள் என்று எண்ணிக் கடல் அலைகள் கழுவிக்கொண்டிருக்கும். புன்னைமரம் பூத்து முத்துக்களைத் தலையில் வைத்திருக்கும். கடற் கானல் வெண்மணலில் கடல்லை வந்து உலாவிக் கொண்டிருக்கும்.
அந்த நெய்தல் நிலப் பொருவழியில் சென்றால் கடலின் மணிநீர் சார்ந்த நிலத்தில், பனிநீர்ப் (நன்னீர்) பள்ளத்தில் இருக்கும் பட்டினம் ஒன்றை அடையலாம். அது மதிலொடு பெயரிய பட்டினம். (மதில் = எயில் | மதிலின் பெயர் இணைந்துள்ள பட்டினம் | எயிற்பட்டினம்). அங்குச் சென்றால்,
வீங்கு திரை கொணர்ந்த விரை மர விறகின், . . . .[155]
கரும் புகைச் செந்தீ மாட்டிப் பெருந்தோள்
மதி ஏக்கறூஉம் மாசு அறு திருமுகத்து
நுதி வேல் நோக்கின் நுளைமகள் அரித்த
பழம் படு தேறல் பரதவர் மடுப்ப,
கிளை மலர்ப் படப்பைக் கிடங்கில் கோமான், . . . .[160]
தளை அவிழ் தெரியல் தகையோற் பாடி
அறல் குழல் பாணி தூங்கியவரொடு,
வறல் குழல் சூட்டின் வயின்வயின் பெறுகுவீர் . . . .[146 - 163]
வீங்குதிரை கொணர்ந்த விரைமர விறகிற் . . . .[155]
கரும்புகைச் செந்தீ மாட்டிப் பெருந்தோண்
மதியேக் கறூஉ மாசறு திருமுகத்து
நுதிவே னோக்கினு ளைமக ளரித்த
பழம்படு தேறல் பரதவர் மடுப்பக்
கிளைமலர்ப் படப்பைக் கிடங்கிற் கோமான் . . . .[160]
றளையவிழ் தெரியற் றகையோற் பாடி
யறற்குழற் பாணி தூங்கி யவரொடு
வறற்குழற் சூட்டின் வயின்வயிற் பெறுகுவிர்
பொருளுரை:
நுளைமகள் என்பவள் மீனவப் பெண். அவள் ஒட்டகம் தூங்கி எழுந்தது போல் வரும் அலைகள் கொண்டு வந்த மணம் கமழும் விறகுகளைக் கொண்டு சமைப்பாள். கரும்புகையும் செந்தீயும் கமகமக்கச் சமைப்பாள். அவள் பருத்த தோளழகு உடையவள்.
வானத்து நிலா இவள் முகத்தைப் பார்த்துத் தனக்கு இப்படிப்பட்ட அழகு இல்லையே என ஏங்கும் முக அழகினைக் கொண்டவள். அதில் வேலின் கூர்மை போல் நோக்கும் கண்பார்வை கொண்டவள்.
சமைக்கும்போது பருத்த தோள்களைக் கொண்ட அவள் முகத்தைக் கரும்புகை கவ்வும். என்றாலும் கொழுந்து விட்டு எரியும் செந்தீ அவளது முகத்துக்கு ஒளி உண்டாக்கும். இந்த முக அழகைப் பார்க்க வானத்திலுள்ள மதியம் ஏங்கிக் கிடக்கும்.
காரணம் அவள் முகத்தில் கூர்மையான வேல் போன்ற கண்கள் இருந்தன. (வானத்து மதிக்கு மேகம் புகை. விண்மீன் நெருப்புக் கட்டிகள் நிலாவுக்கு வெளிச்சம் தரும் நெருப்புத் தணலின் கட்டிகள்).
அவள் பழமைப்பட்டு நுரைத்து வரும் தேறலைப் பரதவர்களுக்குத் தருவாள். அப்போது நீங்கள் கிடங்கில் கோமானைப் பாடவேண்டும். ஒருவர் குழல் ஊதுகையில் மற்றவர் அவன் புகழைப் பாடவேண்டும். தன் அரசனின் புகழ் கேட்டு உங்களுக்கும் அரியல் தேறல் தருவாள்.
பரதவர்களோடு சேர்ந்து உங்களையும் உண்ணுமாறு செய்வாள். அத்துடன் கருவாட்டையும் சுட்டுத் தருவாள். இந்த விருந்தினை நீங்கள் ஆங்காங்கே பெறுவீர்கள். கிடங்கில் என்பது இப்போதுள்ள திண்டிவனம். கிடங்கில் கோமான் என்பவன் நல்லியக்கோடன்.
எயில்பட்டினம் அவன் நாட்டுத் துறைமுகம். உண்டபின் அவர்களோடு சேர்ந்து நீங்களும் கிடங்கின் கோமகனாகிய நல்லியக் காடனைப் பாடுங்கள். குழல் ஊதுங்கள். அவன் கட்டவிழும் பூமாலை அணிந்திருப்பதைப் பாடுங்கள்.








